Monday, July 5, 2010

தீர்த்த மகிமை


ஸ்தலத்திற்கும் மூர்த்திக்கும் எவ்வளவு மகிமை உண்டோ அந்த அளவு பெருமை அங்கு உள்ள தீர்த்தத்திற்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் தீர்த்தமே சிவ ஸ்வரூபம் தான். "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று அப்பர் தேவாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காஞ்சிப் புராணத்தில் வாரம் ஏழு நாட்களில் காஞ்சிபுரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டிய தீர்த்தங்கள் அமைந்துள்ள கோயில்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்தந்தக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதை காஞ்சி மகா பெரியவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்ரீ கச்சபேச்வரசுவாமி ஆலயத்தில் உள்ள இஷ்ட சித்தி தீர்த்தத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்நானம் செய்யும் பொழுது ஸ்ரீ பெரியவர்கள் , அந்தக் குளக்கரையில் இருந்த கல்வெட்டுக்களைப் பார்த்து, அது சூரிய சதகத்தில் வரும் ஸ்லோகங்கள் என்று கண்டுபிடித்தார்கள். அதைப் பாராயணம் செய்து வந்தால் கண் சம்பந்தமான உபாதைகள் நீங்கும் என்றும் சொன்னார்கள்.


திருவெண்காடு என்ற க்ஷேத்திரத்தில் கோயிலுக்குள் மூன்று தீர்த்தங்கள் உண்டு.அவை சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்குப் பேய் பிடித்திருந்தால் விலகிவிடும் என்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோர்க்கு அந்த வரம் கிடைக்கும் என்றும் திருஞான சம்பந்தர் அந்த ஊர் தேவாரத்தில் பாடியிருக்கிறார். இதில் சந்தேகப் படுபவர்கள் எந்தக்காலத்திலும் இருப்பார்கள் அல்லவா? அதனால் தான் ,"ஐயுற வேண்டா " (சந்தேகப்பட வேண்டாம்) என்றும் அதோடு சொல்லியிருக்கிறார். இதில் நம்பிக்கை வைத்துப் பாராயணம் செய்ததோடு, திருவெண்காடு சென்று மூன்று குளங்களிலும் ஸ்நானம் செய்த அச்சுத களப்பாளர் என்ற சிற்றரசருக்கு மகனாக சிவஞானபோதம் அருளிய மெய்கண்டார் அவதரித்தார் என்றால், அந்த தீர்த்தங்களின் மகிமையை யாரால் சொல்ல முடியும்?


ஆனால் ஆலய தீர்த்தங்களின் தற்போதய நிலை பரிதாபத்திற்கு உரியது. கோவிலின் வெளியில் இருக்கும் தீர்த்தங்கள் பலவகையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. குப்பை கொட்டும் இடங்களாகவும் மாறி வருகின்றன.வறண்டு போன தீர்த்தங்கள் தூர் வாரப் படுவதில்லை. ஆலயத் திருப்பணியே மிகவும் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் திருக் குளங்களை சீரமைக்க முடிவதில்லை. கிராமக் கோவில்கள் திருப்பணி செய்யப் படும்போது,அந்த ஊர் பஞ்சாயத்தில் ஏதாவது ஒரு வேலை வாய்ப்புத்திட்டத்தின் பேரில் குளங்களைத் தூர் வாரலாம்.இதனால் அந்தக் கிராமத்தில் சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். செய்ய முன்வரவேண்டுமே? நிலத்தடி நீரைப் பற்றிப் பேசுவதோடு சரி. புதியதாகக் குளங்களா வெட்டப் போகிறார்கள்? நம் முன்னோர்கள் சிவ தர்மமாக ஏற்படுத்திக்கொடுத்ததைக் காப்பாற்றவே நாம் தயங்குகிறோம்.


"காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்பார் சம்பந்தர். நந்தவனங்கள் அமைத்தும் , குளங்கள் பல உண்டாக்கியும் சிவ தர்மங்கள் செய்தால் பாவ வினைகள் நம்மை நெருங்காது என்பது அவரது உபதேசம். குரு உபதேசத்தை இனியாவது ஏற்று இருக்கிற நந்தவனம் மற்றும் திருக் குளங்களை அழியாமல் காப்போமாக.

Tuesday, June 8, 2010

கலங்காமல் காப்பாய்

சமீபத்தில் பிரபல ஆலயங்களில் நடந்த அசம்பாவிதங்கள் எல்லோரையும் கலங்க அடித்திருப்பது ஏன்என்பது நியாயமான சந்தேகம் தான். தனக்குத் தெரிந்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இதனால் ஊருக்கும் நாட்டுக்கும் கெடுதல் ஏற்படும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.அதற்குஏற்ற மாதிரி பல இடங்களில் நடக்கும் ஏராளமான அகால மரணங்கள் கலக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன.

நன்றாக யோசித்துப் பார்த்தால் நமது பிரபலமான கோயில்களில் சான்னித்தியம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும். கோயில்களில் உள்ள மூர்த்திகள் , தேவர்களாலோ முனிவர்களாலோ மிகச் சிறந்த பக்தர்களாலோ அல்லது பறவை விலங்குகள் ஆகியவற்றாலோ வழிபடப் பட்டவை. தெய்வங்களை பய பக்தியோடு அணுக வேண்டியது போய்ஏதோ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் ஆகிவிட்டது துரதிருஷ்டமே. எதில் தான் வியாபார நோக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஆலயங்களை படப்பிடிப்பு குழுக்கள் விலைக்கு வாங்கி விடாத குறையாக ஆக்கிரமிக்கின்றனர். வழிபாட்டு இடங்களில் இவர்களை அனுமதிப்பதால் ஏதாவது வருமானம் வராதா என்ற எண்ணம் இதற்கு வழி விடுகிறது.

கோயில்களுக்கு வருபவர்களின் செய்கைகளோ சொல்லும்படி இல்லை. என்ன வேண்டுமானாலும் உடுக்கலாம்,பேசலாம் என்று ஆகிவிட்டது. இடைத் தரகர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லோருக்கும் முன்னால் சென்று சீக்கிரம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற சுய நலம் வேறு. சில இடங்களில் ஆலய சிப்பந்திகளும் இதற்கு உடந்தையாக இருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சுய விளம்பரத்திற்காக தங்க கதவுகளையும் மேல் கூரைகளையும் சிலர் செய்து கொடுக்கிறார்கள். இதனால் கவனம் பூராவும் பணத்தின் மேலேயே போய் விடுகிறது. முக்கியப் புள்ளிகள் வந்தால் ஆலய சட்ட திட்டங்கள் காற்றில் விடப் படுகின்றன.

அரசாங்கமும் முதல் வேலையாக உண்டியல் வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் வரும் பணமோ பல வழிகளிலும் செலவழிக்கப் படுகிறது. கோயில்களின் பூஜைகள் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவை வருமானம் இல்லாத ஊர்களில் கேள்விக் குறியாகவே ஆகிவிட்டது. இதற்காகக் கவலைப் படுவோர் மிகச் சிலரே!

இதையெல்லாம் உத்தேசித்துதான் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை திருப்பணி,கும்பாபிஷேகம் ஆகியவற்றை செய்து சாந்தித்யம் நிலைக்கும்படி செய்தார்கள். தவறுகளைத் திருத்துபவர்களைக் காணோம். பல கும்பாபிஷேகம் நடந்த கிராமத்துக் கோயில்களில் தொடர்ந்து பூஜை நடத்த வழி வகைகள் செய்யப் படுவதில்லை. வறுமையால் வாடும் ஆலய சிப்பந்திகள் வேறு ஊர்களை நாடிச் செல்கிறார்கள். இவர்களுக்காக வருத்தப் படுபவர்கள் எத்தனை பேர்? புரட்சி ,மறுமலர்ச்சி என்றெல்லாம் பேசுபவர்கள் ஆலய மறுமலர்ச்சிக்காக ஏதும் பெரிய அளவில் செய்வதில்லை.

இதற்கெல்லாம் ஒரே வழி ,மக்கள் திருந்தவேண்டும். தானாகத் திருந்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.சிவமே அவர்களது சிந்தையைத் திருத்தவேண்டும். கோயில்களின் சாந்தித்யம் கூட வேண்டும். இறைவனது உறைவிடமாகத் திகழவேண்டும். அப்பொழுதுதான் தேசம் நன்மை அடையும். கலங்காமல் காத்த கணபதியையும் , திருபுவனத்தில் உள்ள நடுக்கம் தீர்த்த நாதரையும் ,சரப மூர்த்தியையும் பிரார்த்திப்போமாக.

Friday, May 14, 2010

சிவ தர்ம ரக்ஷணம்


ஸ்ரீ சுவாமிநாத சுவாமியின் மீது பாடப்பட்டுள்ள திருவேரக நவரத்னமாலையில் ஒரு பாடல், பலவகையான துரோகங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. மனத்தில் கொஞ்சம்கூடப் பயம் இல்லாமல் அதர்ம வழியில் சென்று சிவதுரோகம் செய்பவர்கள் இதில் அடங்குவர். கோயில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கோவிலுக்குரிய நெல்லைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் பலர். ஆலயங்களில் உள்ள பொருள்களைக் கொள்ளை அடிப்பவர்கள் பலர். கோயில் நிலங்களில் உள்ள வீடுகளில் வசித்துக்கொண்டு வாடகை தராமல் ஏமாற்றுபவர்களும் உண்டு. பலர் நெடுங்காலமாக அவற்றில் இருந்துகொண்டு ரூ பத்து முதல் முப்பது வரை வாடகை கொடுப்பவர்களும் உண்டு. முக்கிய நகரங்களின் பிரதான இடங்களில் கோவில் வீடுகளில் இப்படி ஆக்கிரமித்துக்கொண்டும் ,வாடகையை நிர்வாகம் கேட்டால் ,கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுமாக அநியாயங்கள் தொடர்கின்றன. கோயில் வீடுகளை அவற்றில் வசிப்பவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்கள். கோயில் நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்கத் துணிந்துவிட்டார்கள்.

தெய்வத்தை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் இப்படிப்பட்ட பாவங்களை செய்ய முன்வருகிறார்கள். இவர்களை " மாபாவம் செய்த கொடிய பஞ்சமாபாவிகள்" என்கிறார் நவரத்தின மாலை ஆசிரியர். சிவன் சொத்து குல நாசம் என்று ஒரு பழமொழி உண்டு. சிவசொத்தை அபகரித்தவர்களின் குடும்பங்கள் வேரோடு அழிந்து நாசமாவதைப் பலர் கண்டும் கேட்டும் இருக்கலாம்.

கோட்புலி நாயனார் என்ற சிவபக்தர் திருவாரூருக்கு அருகிலுள்ள நாட்டியாத்தாங்குடி என்ற ஊரில் வசித்து வந்தார். சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்தார். யுத்த காலத்துக்கு அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார்,இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும் ,சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் விருஷப வாகனத்தில் உமா தேவியோடு ஸ்ரீ பரமேச்வரன் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் உய்யக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

எனவே, இனிமேலாவது, சிவத்ரோகம் செய்யாமல் தர்ம வழியிலேயே சம்பாதித்து, அதன் பயனாக சிவ தர்மங்கள் செய்ய , தவறு செய்தவர்கள் மனம் திருந்தி முன் வரவேண்டும். "குற்றம் பொறுத்த நாதர்" என்று கருப்பறியலூர் என்ற ஸ்தலத்தில் சுவாமிக்குப் பெயர் உண்டு. பிழை பொறுக்கும்படி மனம் உருகி வேண்டினால் நிச்சயமாக மன்னிப்பும் பெறலாம்.

Wednesday, April 14, 2010

வேண்டும் வரம்


சுவாமியிடம் தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்பது ஒரு வகை. தனக்கு எப்பொழுது என்ன தர வேண்டும் என்று சுவாமிக்குத் தெரியாதா என்ன என்று ஸ்வாமியிடமேவிட்டுவிடுவது இன்னொரு வகை. குழந்தைகள் தாயார் தகப்பனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்வதைப்போலஉலகத்துக்கே மாதாபிதாவாக விளங்கும் உமா மகேச்வரர்களிடம் வேண்டிக்கொள்வதில்தவறு இல்லை தான். ஆனால் ஒன்று மட்டும் முக்கியமாகச் சொல்லத் தோன்றுகிறது. நியாயமானவைகளை மட்டுமாவது பிரார்த்திக்கலாம் என்பதே அது.இதைத்தான் "வேண்டத்தக்கது" என்றார் மாணிக்கவாசகர்.


வேண்டுவது அத்தனையும் சுவாமி அருளுவார் என்பதால், சூரபத்மனைப்போல் வரம் கேட்கக்கூடாது. கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்று கூட சிலர் வேண்டுவதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. இன்ன பலன் கிடைக்கும் என்பதால் மட்டுமே பாராயண நூல்களைப் படிப்போர் பலர். அப்படியாவது படிக்கிறார்களே என்றுதான் சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது. இத்தனை தடவை வந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்று கோயில்களுக்கு வருபவர்களும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவற்றில் சுயநலமே ஓங்கி இருப்பதைப் பார்க்கலாம்.


லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று பூஜை முடிவில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்காகவும் பிரார்த்திப்பது உண்டு. தமிழிலும்,"குறைவு இல்லாது உயிர்கள் வாழ்க " என்றும் "வையகமும் துயர் தீர்கவே" என்றும் பிரார்த்திப்பார்கள். நடைமுறையில் ஒன்றை அனுபவ ரீதியில் சொல்கிறேன். பிறருடைய கஷ்டங்கள் நிவர்தியாகும்படி பிரார்த்தித்தால் பலன் கை மேல் கிடைப்பதையும் நமக்காக மட்டும் வேண்டிக் கொண்டால் காலம் தாழ்ந்தோ அல்லது பலன் தராமலோ போவதைப் பார்க்கலாம்.


ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவர். ஒரு சமயம் மழை இல்லாமல் கடும் பஞ்சம் வந்தது. அருகில் இருந்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியிடம் நாயனார் என்ன வேண்டிக்கொண்டார் தெரியுமா? இந்தப் பஞ்சம் நீங்கும் படி மழை பெய்வித்தால் கோவிலுக்கு நிலம் தருவதாக வேண்டிக்கொண்டார். மழையும் நிறையப் பெய்தது. ஆனால் கூடவே வெள்ளமும் வந்து பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் நின்றால் மீண்டும் நிலம் தருவதாகப் பிரார்த்தித்தார் கலிக்காம நாயனார். வெள்ளமும் நிற்கும்படி அருளினார் சுவாமி. இப்படியாக,பன்னிரண்டுவேலி நிலத்தைக் கோயிலுக்கு வழங்கினாராம் நாயனார். இது நடந்தபிறகு அங்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரது சிவபக்தியை சிறப்பித்து திருப்புன்கூர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.


தனக்காகப் பிரார்த்தனை செய்வதிலும் உயர்ந்தவை சிலவற்றை சொல்லலாம். காரைக்கால் அம்மையார் செய்த பிரார்த்தனையே முதலில் நினைவுக்கு வருகிறது. "உன்னிடம் இறவாத /மாறாத/மறையாத பக்தி வேண்டும். பிறவாத நிலை ஏற்படவேண்டும். ஒருவேளை பிறந்துவிட்டால் உன்னை என்றும் மறவாத வரம் தந்து அருள வேண்டும். அந்தப்பிறவியில் நான் உன்னைப் பாடவேண்டும்.அப்பாடலைக் கேட்டுக் கொண்டே நீ ஆடும்போது உன்னுடைய தூக்கிய திருவடியின் கீழ் நான் இருக்க வேண்டும் . " என்பதே அவர் வேண்டிய வரம். இதற்குமேல் உயர்ந்த பிரார்த்தனை இருக்கமுடியுமா?


கடல் போலவும் நதி போலவும் பகவானின் கருணை வெள்ளம் இருக்கும்போது அதை வாரி விழுங்கிக்குடிக்காமல் நாய் நக்கிக் குடிப்பதுபோல இருக்கிறேனே என்று மனம் உருகிப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இக பர சௌபாக்கியம் அத்தனையும் தரும் ஈச்வரனிடம் நாமும் உலகத்திலுள்ள அல்ப சுகங்களை வரமாகக் கேட்காமல் எல்லோரும் இன்புற்று வாழவும் பிறப்பு-இறப்பு இல்லாத மோக்ஷத்தைப் பெறவும் பிரார்த்திப்போமாக.

Tuesday, March 16, 2010

சாக்ஷிநாதன்

ஸ்ரீ பரமேச்வரனே சாக்ஷி சொன்னதாகச் சில ஸ்தல புராணங்களில் இருந்து தெரிந்து கொள்கிறோம். வன்னி மரமும் கிணறும் சுவாமியுடன் வந்து சாட்சியாக நின்றதைத் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. அம்பாளும் திருவாமாத்தூர் என்ற ஸ்தலத்தில் சத்யத்தை நிலை நாட்டி இருக்கிறாள். தம்பியை ஏமாற்றி அத்தனை நாணயங்களையும் ஒரு மூங்கில் குழாய்க்குள் போட்டுவிட்டு ஏமாற்றினானாம் அண்ணன். தம்பிக்கோ முக்தாம்பிகையைத் தவிர சாட்சி சொல்ல யாரும் இல்லை. எனவே அம்பாள் முன்னால்இப்படிச் சொல்லுவாயா என்று அண்ணனிடம் கேட்க "முக்தாம்பிகை கொத்தி விடுவாளா" என்று அகம்பாவத்தோடு கேட்டானாம். அடுத்த நிமிடமே பூமி பிளந்து ஒரு பாம்பு வெளியில் வந்து அவனைக் கொத்தியதும் அவன் மாண்டான். அவன் ஒளித்துவைத்திருந்த காசுகள் மூங்கில் குழாயிலிருந்து வெளியில் கொட்டின. இப்பொழுதும் எத்தனையோ குடும்பங்களுக்கு அம்பாள் சாட்சியாக இருந்து காப்பாற்றி வருகிறாள்.


தஞ்சாவூருக்குப் பக்கத்தில் அவளிவணல்லூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில் சுவாமிக்கு சாட்சிநாதர் என்று பெயர். அந்த ஆலயத்தில் பூஜை செய்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளை கல்யாணம் பண்ணிக்கொண்டவன் காசிக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தபோது தனது மனைவி வைசூரி போட்டியதால் அழகு இழந்து காணப்பட்டதைக் கண்டு அவளது தங்கையே தனது மனைவி என்று சாதித்தான். இதனால் மிகவும் துக்கம் அடைந்த அர்ச்சகர் சுவாமியிடம் சென்று முறையிட்டுக் கதறினார். அகில உலகங்களுக்கும் சாட்சியாக விளங்கும் ஈச்வரன் தன்னை தினமும் பூஜிக்கும் பக்தனைக் கை விடுவானா? சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சுவாமி தனக்கு முன்னால் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த மூத்த மகளைச் சுட்டிக்காட்டி "அவள் இவள்" என்று சாக்ஷி சொன்னதால் ஊர் பெயரும் அவளிவ நல்லூர் என்று ஆனது. அப்பெண்ணும் கோயில் குளத்தில் (தை அமாவாசை அன்று) ஸ்நானம் செய்தவுடன் முன்னை விட அழகுடன் கரை ஏறினாள்.

அரக்கோணத்திற்கு அருகில் உள்ள திருவாலங்காட்டிலும் சொன்ன சொல்லைக் காக்க வேண்டித் தீப் பாய்ந்த வேளாளர்களுக்கு சுவாமி சாட்சியாக விளங்கி முக்தி தந்து சாக்ஷி பூதேச்வரனாகக் காட்சி அளிக்கிறான்.


தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பாபங்களைத் தினமும் செய்கிறோம். வாக்காலும் மனத்தாலும் செய்யும் பாபங்களுக்கு அளவே இல்லை. தெய்வக் குற்றங்களே செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. தெய்வ சொத்தைத் தனது என்று கோர்ட்டிலும் பொய் சாட்சி செய்யத் துணிந்து விட்டார்கள். தெய்வமாவது தண்டிப்பதாவது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சாட்சிகளின் அடிப்படையிலே நீதி மன்றங்களும் நடைபெறுவதால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.நியாயமாகப் பார்த்தால் இவ்வளவு பாபங்கள் செய்யும் நமக்கு சாப்பாடு கிடைப்பதே சுவாமியின் பரம கருணையை காட்டுகிறது என்று காஞ்சிப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அக்கிரமங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்ளும் பலருக்கு இதுவே பதில். அடுத்தவன் அதிகமாக பாவம் செய்தால் நாம் ஒருக்கால் சற்றுக் குறைவாகப் பாவம் செய்கிறோமோ என்னவோ. குறைவே இல்லாத நிறைவாக ஈச்வரன் ஒருவனே விளங்குகின்றான் என்று திருவாசகம் சொல்கிறது.சுவாமி எல்லோரையும் உடனே தண்டிப்பது என்று ஆரம்பித்தால் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள்? அதனால்தான் வேத மாதா நமக்காகப் பரம கருணையுடன் பரமேச்வரனை வேண்டிக்கொள்கிறாள். "ஹே சம்போ உன்னுடைய கோபத்துக்கு நமஸ்காரம்" என்று ஸ்ரீ ருத்ரம் ஆரம்பிக்கிறது

ம்ருடன் , சங்கரன் என்றெல்லாம் ஆராதிக்கப் படும் பகவானை வேதம் மேலும் கேட்கிறது: "எங்களிடம் நீ பரம கருணையோடு அருளவேண்டும். அதனால் பினாக பாணியான நீ வில்லையும் அம்புகளையும் இறக்கி வைத்துவிட்டு வர வேண்டும். பிரதம வைத்யனான நீ எல்லா நலன்களையும் அருள வேண்டும் " என்றெல்லாம் பிரார்த்திக்கிறது.

Thursday, February 25, 2010

பன்னகாபரணன்


ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பன்னகாபரணன் என்று ஒரு நாமம் உண்டு.திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள திருச்சாட்டியக்குடி என்ற ஊரில் மூலவருக்கு இந்தப் பெயர்தான் வழங்கப்படுகிறது. பல ஊர்களில் மூலவருக்கு வெள்ளியில் நாகாபரணம் சார்த்திப் பார்க்கிறோம். பன்னகம் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று அர்த்தம். ஆதிசேஷனால் சிவராத்திரி பூஜை செய்யப்படும் திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில் மூலவர் மீது பாம்பு சட்டை உரித்துவிட்டுச் சென்றதை சில வருஷங்கள் முன்பு பத்திரிக்கைகளில் பார்த்தோம். திருநாகேஸ்வரத்தில் நாகராஜா (ராகு பகவான்) சன்னதியிலும் இரவில் பாம்பு விட்டுச்சென்ற சட்டையை மறுநாள் காலை அநேகர் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் சென்ற கிரகண தினத்தன்று தேப்பெருமாள் நல்லூர் என்ற ஊரில் நடைபெற்ற அதிசயம் யாரும் கேள்விப் படாததொன்று

கும்பகோணத்திற்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்தின் அருகில் உள்ளது தேப்பெருமாள் நல்லூர் என்ற கிராமம். தேப்பெருமாள் நல்லூர் சிவன் என்ற மகா சிவபக்தரைப் பற்றி காஞ்சிப் பெரியவர்கள் மிகவும் புகழ்ந்துள்ளார்கள். காரணம் தான் ஒருவராகவே கையில் செம்பு ஏந்தியவராகத் திரவியங்களை
சேகரித்து , கும்பகோணத்தில் மரங்கள் முளைத்துக் கிடந்த ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோபுரத்தைத் திருப்பணி செய்ததோடு பல சிவ க்ஷேத்திரங்களில் அன்ன தானம் ஏராளமாக செய்ததால் எல்லோரும் அவரை அன்னதான சிவன் என்றே அழைத்தனர். அப்படிப்பட்ட மகானைத் தந்தது தேப்பெருமாநல்லூர்.

இந்த ஊர் சிவாலயத்தில் சென்ற கிரகணத்தன்று ஒரு நல்ல பாம்பு வில்வ இலைகளை சிவ சன்னதிக்குள் நுழைந்து சுவாமியின் சிரசில் வைப்பதை அர்ச்சகர் பார்த்துவிட்டு, போட்டோ எடுப்பவரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்களைத்தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.


முதல் படத்தில் பிராகாரத்தில் உள்ள வில்வ மரத்தில் பாம்பு வில்வ இலையை எடுப்பதைக் காண முடிகிறது.அடுத்ததாக, அப்பாம்பு,கர்ப்பக்ருகத்தின் கோமுகி வழியாக சுவாமி சன்னதிக்குள் நுழைவதைத் தெளிவாகக் காணலாம். அடுத்த படங்களில் அது மூலவருக்கு முன் வந்துவிட்டதையும்,அதன் வாயில் வில்வ தளம் இருப்பதையும் கவனிக்கலாம். கடைசியாக , சுவாமியின் பாணத்தைச் சுற்றி சிரத்தை அடைந்து வில்வ அர்ப்பணம் செய்துவிட்டுப் படம் எடுத்து நிற்பதையும் பார்க்கும் போது,பரவசம் அடைகிறோம்.
புகைப்படத்தைப்பார்த்தும் நம்பாதவர்கள் இருக்கிறார்கள்.பல ஊர்களில் சுவாமியின் மீது பாம்பு சுற்றிக் கொள்வதையும் சட்டையை விட்டுவிட்டுப் போவதையும் எவ்வளவோ பேர் பார்த்திருந்தும்,போட்டோ எடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். திருக்குரக்குக்கா(வல் ) என்ற பாடல் பெற்ற ஸ்தலம் மாயூரம் அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு குரங்கு (ஊர்ப் பெயருக்கு ஏற்ற மாதிரி) கருவறைக்குள் சென்று இலைகளாலும் மலர்களாலும் சுவாமியை அர்ச்சிக்கிறது. இதைப் படம் எடுத்தாலும் நம்பமாட்டேன் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். பாம்பு,குரங்கு இவற்றிற்கு ஆறறிவு ஏது என்பார்கள். அவை சாதாரண பாம்போ குரங்கோ அல்ல. யாரோ சாப விமோசனத்திற்காக இந்த உருவங்களில் வந்திருக்கக் கூடும். நமது அறிவுக்குத் தெரியாதவற்றை மறுப்பது அறிவீனம்.

யக்ஷர்,கின்னரர்,யமன்,வருணன்,அக்னி,வாயு,சூர்யன்,வசுக்கள்,தேவர்கள்,மனிதர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் ,வானரமும்,நாகமும் அயர்வே இல்லாமல் உன்னை பூஜித்து,வரங்கள் எல்லாம் பெறுவதைக் கண்டு,அடியேனும் உன் திருவடிகளை அடைந்தேன் என்று திருப்புன்கூர் தேவாரப் பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடுவதைப்போல், நாமும் நாகம் செய்யும் பூஜையைப் பார்த்தாவது, ஈச்வரனை வில்வ தளங்களால் பூஜிப்போமாக.

Tuesday, February 9, 2010

கயிலையில் மகாசிவராத்திரி


கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார் நக்கீரர். அதில் ஒரு பாட்டு கயிலையைப் பற்றியும் அடுத்த பாட்டு காளத்தியைப்பற்றியும் மாறி மாறி வரும். கயிலைக்கு நிகரான ஸ்தலம் என்பதால் தக்ஷிண கைலாசம் எனப்படும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்கப் பல்லாயிரம் ஜனங்கள் இங்கு வருகிறார்கள்.


சிலந்தி,பாம்பு,யானை,கண்ணப்பர் ஆகியோரது பூஜையை ஏற்றுக் கொண்டுள்ள காளத்திநாதனைமூவரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள். சாந்த்ர மாதக் கணக்கில் இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 12 தேதி மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.(தமிழ் நாட்டில் சௌரமாதக் கணக்கு அனுசரிப்பதால் மார்ச் 13 அன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது).


29 ஆண்டுகளாக தேவகோட்டை ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாசிவராத்திரியை தரிசித்து வந்தார். அப்போது ஆலய குருக்களாக இருந்தவருக்கு 20 வருஷங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட செட்டியார்,அந்த ஆண்டு மகாசிவராத்திரி ஆறு கால பூஜை செலவுகளையும் தானே ஏற்று விரதம் இருந்து குருக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை வீண் போக வில்லை.பரமேச்வரனுடைய கருணையால் பிள்ளைக் குழந்தை பிறந்தது.


செட்டியார் மகா சிவபக்தர் ஆதலால் காளத்தி நாதனின் கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரமாண்டமான அத்திருப்பணி ஒன்பது லட்சத்தைத் தாண்டியதாம். 1912 ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்தார் செட்டியார். அதனால் மக்கள் அவரைத் திருப்பணிச் செட்டியார் என்று அழைத்தார்கள்.


தனது முப்பதாவது ஆண்டு மகாசிவராத்திரியைக் கொண்டாட 1942 ல் அங்கு சென்ற செட்டியார் காலம் தோறும் தன் மனைவியுடன் சுவாமியின் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்துவிட்டு ஆறாவது காலத்தின் இறுதியில் அருகே நின்ற மனைவியிடம் தாலியைக் கழற்றி ஸ்ரீ ஞானப்ப்ரசூனாம்பிகையின் கழுத்தில் அணிவிக்கும்படிக் குருக்கள் கையில் கொடுக்கச் சொன்னார். அம்பாளுக்கு அது சார்த்தப் பட்டுக் கற்பூர தீபம் நடந்தது. தனது இடத்தை வந்து அடைந்ததும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே விபூதி இட்டுக் கொண்டவுடன் மனைவி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் ஒருமுறை சிவசிவ என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடினார். அடுத்த நிமிடம் அவரது ஜீவன் ஸ்ரீ காளத்தி நாதனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. இன்றும் கோயில் வாயிலில் சிலாரூபமாகத் திருப்பணிச் செட்டியார் கைகளைக் கூப்பியபடிக் காட்சி அளிக்கிறார்.


தன் நினைவாகவே இருக்கும் பக்தர்களைக் கடைசி வரையிலும் கூட இருந்து என்றும் காப்பாற்றும் பரமேச்வரன் சர்வ மங்களங்களையும் அளிக்க வேண்டும்படி ஸ்ரீ மகாசிவராத்திரி தினத்தில் பிரார்த்திப்போமாக.