Tuesday, February 9, 2010

கயிலையில் மகாசிவராத்திரி


கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார் நக்கீரர். அதில் ஒரு பாட்டு கயிலையைப் பற்றியும் அடுத்த பாட்டு காளத்தியைப்பற்றியும் மாறி மாறி வரும். கயிலைக்கு நிகரான ஸ்தலம் என்பதால் தக்ஷிண கைலாசம் எனப்படும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்கப் பல்லாயிரம் ஜனங்கள் இங்கு வருகிறார்கள்.


சிலந்தி,பாம்பு,யானை,கண்ணப்பர் ஆகியோரது பூஜையை ஏற்றுக் கொண்டுள்ள காளத்திநாதனைமூவரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள். சாந்த்ர மாதக் கணக்கில் இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 12 தேதி மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.(தமிழ் நாட்டில் சௌரமாதக் கணக்கு அனுசரிப்பதால் மார்ச் 13 அன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது).


29 ஆண்டுகளாக தேவகோட்டை ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாசிவராத்திரியை தரிசித்து வந்தார். அப்போது ஆலய குருக்களாக இருந்தவருக்கு 20 வருஷங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட செட்டியார்,அந்த ஆண்டு மகாசிவராத்திரி ஆறு கால பூஜை செலவுகளையும் தானே ஏற்று விரதம் இருந்து குருக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை வீண் போக வில்லை.பரமேச்வரனுடைய கருணையால் பிள்ளைக் குழந்தை பிறந்தது.


செட்டியார் மகா சிவபக்தர் ஆதலால் காளத்தி நாதனின் கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரமாண்டமான அத்திருப்பணி ஒன்பது லட்சத்தைத் தாண்டியதாம். 1912 ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்தார் செட்டியார். அதனால் மக்கள் அவரைத் திருப்பணிச் செட்டியார் என்று அழைத்தார்கள்.


தனது முப்பதாவது ஆண்டு மகாசிவராத்திரியைக் கொண்டாட 1942 ல் அங்கு சென்ற செட்டியார் காலம் தோறும் தன் மனைவியுடன் சுவாமியின் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்துவிட்டு ஆறாவது காலத்தின் இறுதியில் அருகே நின்ற மனைவியிடம் தாலியைக் கழற்றி ஸ்ரீ ஞானப்ப்ரசூனாம்பிகையின் கழுத்தில் அணிவிக்கும்படிக் குருக்கள் கையில் கொடுக்கச் சொன்னார். அம்பாளுக்கு அது சார்த்தப் பட்டுக் கற்பூர தீபம் நடந்தது. தனது இடத்தை வந்து அடைந்ததும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே விபூதி இட்டுக் கொண்டவுடன் மனைவி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் ஒருமுறை சிவசிவ என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடினார். அடுத்த நிமிடம் அவரது ஜீவன் ஸ்ரீ காளத்தி நாதனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. இன்றும் கோயில் வாயிலில் சிலாரூபமாகத் திருப்பணிச் செட்டியார் கைகளைக் கூப்பியபடிக் காட்சி அளிக்கிறார்.


தன் நினைவாகவே இருக்கும் பக்தர்களைக் கடைசி வரையிலும் கூட இருந்து என்றும் காப்பாற்றும் பரமேச்வரன் சர்வ மங்களங்களையும் அளிக்க வேண்டும்படி ஸ்ரீ மகாசிவராத்திரி தினத்தில் பிரார்த்திப்போமாக.

No comments:

Post a Comment