Sunday, July 12, 2020

பச்சைத் துரோகம்



ஆண்டுக்கணக்கில் மாத சம்பளம் ஆலய சிப்பந்திகளுக்கு வழங்கப்படாமல் உள்ள கிராமக்கோயில்கள் ஏராளம். மக்கள் வருகையாலும், உபயதார்களது உதவியாலும் மட்டுமே அர்ச்சகர்களின் வாழ்க்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கிடையில் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலச்  சித்தரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள்.

உபயதாரர்கள் அளிக்கும் நன்கொடை மூலமே நடைபெறும் அன்னதானமும் , ஒரு கால பூஜை திட்டமும், ஏதோ அறநிலையத்துறையே செய்வது போன்ற தோற்றத்தை உண்டாக்கி விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு கால பூஜை துவங்க கிராமத்தினர் ஒரு லட்சம் வழங்கினால் அற  நிலையத்துறை தனது பங்கை அளிக்க முன் வரும். அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து சுமார் ரூ 750 அர்ச்சகருக்கு மாத சம்பளமும் , பூஜை சாமான்களும் கொடுக்க வேண்டும் என்பதே திட்டம். தற்போது அந்த சொற்பத்தொகையும் பல மாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர்களை நம்பி ஒரு லட்சம் வசூல் செய்து கொடுத்த கிராமத்தினருக்குச் செய்யும் துரோகம் இது.

இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகியும் மாத சம்பளம் தராமல் காலம் தாழ்த்தும் இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாக்கி வைத்துள்ளதா ? வருமானம் வந்தால் தானே சம்பளம் வழங்க முடியும் என்றால், அவ்வாறு வருமானம் இல்லாத ( ? ) கோயில்களின் நிர்வாக (? ) அதிகாரிக்கு மட்டும் மாதம் தோறும் எதற்காக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதே கேள்வி. ஒருவேளை, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டால் தான் பதில் சொல்வார்களோ என்னவோ !

கோயிலுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது யாருடைய கவனக்குறைவு? எதுவும் செய்ய முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு? உண்டியல் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கா ? அறமற்ற செயல்களை செய்வதற்கா ? அந்த நிலங்களின் அருகே கூடச் செல்லாமல் கணக்கு எழுதும் கூட்டம் எதற்கு என்று பலரும் கேட்கிறார்கள். எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

நிலங்களிலிருந்து விளைந்து வராவிட்டால் வருமானம் இல்லை என்று  மூக்கால் அழுதார்கள். விளைந்து வந்த பிறகும் சம்பளம் கொடுக்காத அவலத்தை என்னவென்று சொல்வது? கடந்த தை மாதத்தில் அறுவடை ஆகி சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு வந்து சேர்ந்த நெல் நிர்வாக அதிகாரியின் அலட்சியத்தால் விற்கப்படாமல் மூட்டைகளாகக் கிடைக்கும் கோயில்கள் ஏராளம். விற்கப்போனால் கோயில் பெயரில் ஆதார் கார்டு கேட்கிறார்களாம். ஆதார் கார்டு தனி நபர் பெயரிலேயே கொடுக்கப்படும் போது, எவ்வாறு சுவாமி பெயரில் கொடுக்க முடியும் ? கொஞ்சமாவது யோசித்தார்களா ? புகார் அளித்தால் மதிப்பதே இல்லை. அலட்சியமும் ஆணவமும் மேலோங்குகிறது.

இந்து அறநிலையத் துறை என்பது ஆட்சித் துறை அன்று. நிர்வாகத் துறை என்பதை உணராமல் அதிகாரம் செலுத்துகிறார்கள். நிர்வாக அதிகாரி என்றால் அதிகாரம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்பதவியின்  பெயரை நிர்வாகி என்று மாற்றி அமைக்க வேண்டும். அதிகாரம் செய்ய இவர்கள் யார்? நிர்வாகம் செய்யவே திறமை அற்றவர்களை எவ்வாறு அதிகாரிகளென்பது ?

வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டியதே இவர்களது வேலையே தவிர அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வது அல்ல. நிர்வாகம் சரிவர நடைமுறையில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க அவருக்கு மேல் உள்ளவர் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சிப்பந்திகளை மிரட்டவோ, சம்பளம் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதோ இவர்களாகவே எடுத்துக் கொண்டுள்ள அதிகாரங்கள் .

நிர்வாகி என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை  அவர்கள் தவறுகள் செய்தாலும் ,  சுட்டிக் காட்டுவதிலும் ஒரு நாகரீகத்தைக் கையாள வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தவறு செய்தவரும் தனது தவறுக்கு வருந்தி மீண்டும் அத்தவறை ஒரு நாளும் செய்ய முன்வர மாட்டார்.

சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன். சுமார் 45 ஆண்டுகள் முன் ஒரு கம்பெனியில் பரிசோதனைச் சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை 5 மணி இருக்கும். மத்தியான ஷிப்டில் இருந்தபோது ஒருகண்ணாடி  சிலிண்டரைத் தண்ணீரால் கழுவியபின்னர் அதிலிருந்த ஈரத்தை அகற்ற வேண்டி, அசிட்டோன் என்ற திரவத்தால் சற்றுக் கழுவி, உலர வைக்க வேண்டும். நானோ அசிடோனால் அந்த சிலிண்டருக்குத் தாராளமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் எங்கள் துறையின் தலைவர் (HOD ) நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. இன்னொருவராக இருந்தால் என்னைக்  கடுமையாகத் திட்டியிருப்பார். சந்தேகமே இல்லை. ஆனால் அவரோ , ஆங்கிலத்தில், This is Acetone my dear friend ( இது அசிடோன் நண்பரே ) என்றார். அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்துவிட்டு என் பிழைக்கு வருந்தித் தலை குனிந்தேன். அன்றிலிருந்து கனவிலும் அத்தவறை மீண்டும் செய்ததே இல்லை. இதன் காரணம் அவர் தன்னை ஒருபோதும் அதிகாரி என்று நினைத்ததில்லை. அதிகாரம் செலுத்தியதும் இல்லை. இது போன்ற நற்பண்புகள் நமக்கு இல்லையே என்று இன்றும் நினைப்பது உண்டு.

கொரானாவால் உலகமே திண்டாடிக்கொண்டு இருக்கும்போது ஆலய சிப்பந்திகள் தங்கள் கடமை தவறாமல் பணி  ஆற்றுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முன்வராததோடு, பழி சுமத்தி அவர்களைப் பணி   நீக்கம் செய்வதையும், மிரட்டுவதையுமே  செய்துவருகிறார்கள் அதிகாரிகள். அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோஉள்ளூரில்  எவருமே இல்லாததால்  நிர்வாக அதிகாரி செய்வதே சட்டம் ஆகி விடுகிறது. ஓரிருவரைத் தவிர எவரும் நீதி மன்றத்தை நாடுவதில்லை. நாடாவிட்டாலும், குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக ஓரிரு வார்த்தைகளாவது சொல்ல முன் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெட்கக்  கேடு.

ஊர் நலனுக்காக ஆலய பூஜை செய்பவர்களுக்குத் துணையாக இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களை  நன்றி கெட்டவர்கள் என்றோ பச்சைத் துரோகம் செய்பவர்கள் என்று தானே கூற முடியும் ? 







3 comments:

  1. அதிகாரதுஷ்ப்ரயோகம் செய்வதாலும், நிர்வாகம் செய்யாமல் கோவில் சொத்து பாழாக விடுவதாலும், நிர்வாகி என்று கூட இவர்களை அழைப்பது பாவம்.அதிகாரதுஷ்ப்ரயோகி என்று வேண்டுமானால் அழைக்கலாம். இவர்கள் படுத்தும் பாட்டை எல்லாம் பொறுத்துக் கொண்டு ஈசன் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்தி வரும் அர்ச்சகப் பெருமக்களுக்கு எப்போது விடியும்? சுவாமி தான் திருக்கண் மலர்ந்து அருள் புரிய வேண்டும்!

    ReplyDelete
  2. True. All parts of the society have to act together as one entity to support each other.

    ReplyDelete
  3. யார் நட்டுவாங்கம் என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் ஓராயிரம் ஸம்பாஷனைக்கு நிகர். வயது 90 இல் சபை ஏறினாலும் கூட பதில் அதேதான். மாற்றம் இல்லை. குரு குரு தான் சிஷ்யன் சிஷ்யன் தான்

    ReplyDelete