Thursday, October 11, 2018

கலாச்சாரம் இணைந்த நவராத்திரி

புரட்டாசி மாத பிரதமை முதல் தசமி வரையிலுள்ள பத்து நாட்களும் சாரதா நவராத்ரியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் லக்ஷ்மி- சரஸ்வதி உடனாய ராஜராஜேசுவரியாக  தேவியை வழிபடுவது நமது மரபு. பெண்களை சக்தியின் வடிவமாக வழிபடும் இந்நாட்டில், இந்த தினங்களில் அம்பிகையை வழிபடுவதோடு, கன்னிப் பெண்களையும் , சுமங்கலிப் பெண்களையும் அம்பிகையின் வடிவாகவே வழிபடுவது வழக்கம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரி விழா. முத்தேவிகளின் அருளும் ஒருங்கே பெற வேண்டுவதும் இவ்விழாவின் நோக்கம் என்பதை நினைவு கொள்ள  வேண்டும். 

நவராத்திரி விழாவை நமது கலாச்சாரத்தைப் பறை சாற்றும் விழாவாகக் கொள்ள வேண்டும். அதனால், அதில் காலத்திற்கேற்ற மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் தரலாகாது. தற்போது அதை வியாபாரத்திற்கும் , டாம்பீகத்திற்கும்  இடமளிக்கும் விழாவாக மாற்றிவிடுவது நல்லதல்ல. 


எத்தனை படிகளில் பொம்மை  வைக்கிறோம் என்பதைவிட, வாழ்க்கையில் எத்தனை படிகள் ஏறி முன்னேறியிருக்கிறோம் ;  நல்ல பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தம்மை ஆத்ம சோதனை செய்து கொள்ள  வேண்டிய தருணம் இது. 

இது முத்தேவியர்க்கே முக்கியத்துவம் தரும் விழாவாதலால் அவர்களை மண் பொம்மைகளாகக் கொலுவில் வைத்து வழிபடுகிறோம். ராஜராஜேசுவரியானவள்  கலைமகளும், அலைமகளும் சூழ சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை ஞானக் கண்ணால் காணும் முன்பாக ஊனக் கண்ணாலாவது பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் இவ்வாறு அமைத்துத் தந்தார்கள். அதன் பின்னர், பிற கடவுளர்களின் திருவுருவ பொம்மைகளையும் சேர்த்து வைக்க ஆரம்பித்தனர். 

நாளடைவில் நமது விருப்பத்திற்கேற்றபடி எந்த பொம்மைகளை வேண்டுமானுலும் சேர்த்துக் கொள்வது என்று ஆகி விட்டது. 
குருமார்கள் , அரசியல்  தலைவர்கள்  பொம்மைகளும்  படிகளில் இடம்பெறத் துவங்கிவிட்டன. வித்தியாசம் , அபிமானம் என்ற பெயர்களில் இவை நுழைந்து விட்டதால், முப்பெரும் தேவிகளின் பொம்மைகளைக்  கூட சில வீடுகளில் தேட வேண்டியிருக்கிறது. பிற சமயத்தைச் சேர்ந்தவர்களையும் கொலுவில் வைக்க வேண்டுமா என்று கேட்டால் உங்களுக்குப் பரந்த மனம் இல்லை என்பார்கள். அத்தனை படிகளிலும் ஒரு குருநாதரின் வெவ்வேறு நிலைகளில் உள்ள பொம்மைகளை வைத்து ஒரு கண்காட்சி போல நடத்துகிறார்கள்.


கோயில்களில் வைக்கப்படும் கொலுக்களிலும் அநேகமாக இதே நிலை தான். அதோடு உற்சவர் அம்பிகையை செயற்கைக்  கை-கால்களை வைத்துக் கட்டி அதனை அலங்காரம் என்ற பெயரில் நடத்துகிறார்கள். சிவாலயங்கள் பலவற்றில் சுவாமி- அம்பிகை பற்றிய புராணக் கதைகளை நினைவு படுத்தும் வகையில் அலங்காரங்கள் செய்யலாம். மாறுதலாகச் செய்வதைப் பற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றுதானே என்று வேதாந்தம் பேசுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இக்காலத்தில் யாரையும் எதுவும் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. கேட்டால் நமது மரியாதைதான் கெட்டுப் போகும். பழைய கலாச்சாரங்கள் குறைகிறதே என்று மனதுக்குள்ளே குமுறிக் கொண்டுதான் இருக்க முடிகிறது.


கொலு வைத்த வீடுகளில் காலை நேரத்தில் பெண்மணிகள் அம்பிகைக்கு விளக்கேற்றி , படத்திற்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை குங்குமத்தால் செய்ய வேண்டும் என்றும், பாராயணங்கள் செய்ய வேண்டும் என்றும் பெரியோர்கள் கூறுவர்.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ,  நவராத்திரி நாட்களில் நம்மை அரக்கோணத்திற்கு அருகிலுள்ள திருவாலங்காட்டில் தங்கித்  ,தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்யச் சொன்னார்கள் காஞ்சி மகாபெரியவர்கள் .
கூட்டு சஹஸ்ரநாம பாராயணம் 
நவராத்திரிக்கு வீடுகளுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம்,வளை  கொடுப்பதே முக்கியம். நாளடைவில் அதோடு , பாத்திரங்களையும்,பிளாஸ்டிக் பொருள்களையும் சேர்த்துக் கொடுப்பது என்று ஆகி விட்டது. ஆடம்பரத்தை விட வேண்டும் என்பதை விடப் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்பதையாவது பெண்மணிகள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும். கடைசியில் இதனால் பயன் பெறப் போவது வியாபாரிகள். பாதிக்கப் படப் போவது சுற்றுச் சூழல். நாமாகச் செய்யும் தவறுகளால் பழியானது பண்டிகையின் மீது விழ விடலாமா? 

2 comments:

  1. நாமாகச் செய்யும் தவறுகளால் பழியானது பண்டிகையின் மீது விழ விடலாமா? -------- good infirmation

    ReplyDelete