Sunday, August 13, 2017

தரைமட்டம் ஆக்கப்பட்ட மானம்பாடி சிவாலயம்

மானம்பாடி ஆலயம் - பழைய படம் 
கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பெருவழியில் சாலை ஓரமாகவே இருப்பது மானம்பாடி என்ற ஊரில் உள்ள ( இருந்த ?? ) சிவாலயம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசீய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி இக்கோயிலின் மதிலை இடித்து விட்டுப்  பிராகாரத்தின் ஒரு பகுதியையும் சாலையோடு இணைக்க முன்வந்தார்கள் நெடுஞ்சாலைத் துறையினர். மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இக்கிராமத்தில் இதனைத் தட்டி கேட்க முடியாது போகவே, வெளியூர் அன்பர்களின் பெரு  முயற்சியால் கோயில் காப்பாற்றப்பட்டது. 

பழைய முன்புறத் தோற்றம் 
அந்த நாட்களில் கோயில் பல இடங்களில் சிதிலமாகியும், விமானங்கள் வேரோடியதால் முன் மண்டபம் பிளவு ஏற்பட்டும் மேற்புறம் புதர்களோடு காணப்பட்டது. ஒரு கால பூஜையே நடந்து வந்த நிலையில் யாரும் திருப்பணி செய்ய முன்வரவில்லை. வரலாறு மற்றும் கல்வெட்டு ஆர்வலர்கள் இக்கோயில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்று கட்டுரை எழுதினார்களே ஒழிய, திருப்பணிக்கான முயற்சியை எவரும் மேற்கொள்ளவில்லை. 

பழுதடைந்த விமானம் 
ஒரு வழியாகத்  திருப்பணியானது சுமார் ஓராண்டு முன் நடை பெறத் தொடங்கியது.  அந்த சமயத்தில் கோயிலுக்குச் சென்ற போது , ஆலய நிர்மாணக் கற்களை எண்களிட்டு ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து இடைவெளியில் ஊடுருவியிருந்த வேர்களை அகற்றியபின், உரிய எண்ணின் படி, கற்களை அதே இடங்களில் அமைத்துக் கட்டப்போவதாகத் தெரிவித்தனர். 

சில மாதங்கள் முன்பு அந்த வழியில் போகும் போது பார்த்தால், அங்கே கோயில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது தெரிய வந்தது. கோஷ்டத்தில்  இருந்த  மூர்த்திகளும், மூல மூர்த்திகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் தமிழ் நாட்டிலுள்ள புராதனக் கோயில்களின் தற்போதய நிலை பற்றி யுநெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கோயில் தரை மட்டமாக ஆக்கப்பட்டதைப் பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கு இந்து அறநிலையத் துறையும், தொல்பொருள் துறையும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். சாலை விரிவாக்கத்தின்போது தான் மௌனிகளாக இருந்தார்கள். இப்போதாவது வாயைத் திறக்கக் கூடாதா? தமிழர் பண்பாடு, கலை,  நாகரீகம், வரலாறு, கல்வெட்டு என்றெல்லாம் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொள்பவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள் ?  இராஜேந்திரனின் ஆயிரமாண்டைக் கொண்டாடுவதாகக் கூறிக் கொண்டு பலனை அனுபவித்தவர்கள் ஆயிற்றே ! ஆகவே சிவனடியார்களது மனம் மட்டுமே வேதனைப் படுகிறது. 

தரை மட்டமாக இடித்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் அதே கற்களைக் கொண்டு பழமை மாறாமல் கட்டுவார்களா? அப்படியானால் வேலை எப்பொழுது துவங்கி எப்பொழுது நிறைவு பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெறும்? அதிகாரிகள் யாராவது பதில் சொல்ல முன் வருவார்களா? 
    

No comments:

Post a Comment