Friday, October 4, 2013

வேலியே பயிரை மேயலாமா?

பயிர்களைக் காப்பதற்கு வேலிஅமைப்பார்கள்.  பயிர்களைப் பிற மனிதர்களோ, விலங்கினங்களோ அண்டாமல் பாதுகாப்பது அந்த வேலி . இப்படி அரண் போல இருந்து காப்பதை வேலி என்பார்கள். எனவே, வேலி என்பது காவலாக அமைவது. தனது அடியானுக்காக நெல்லை வேலியிட்டுக் காத்து அருளியதால் நெல்லையப்பர் என்ற பெயர் ஈச்வரனுக்கு வந்தது. ஊரைச் சூழ்ந்து ஓடும் நதியும் இவ்வாறு வேலி ஆவதை, " ... சாம வேதம் பாடிய பாணியாலே ஆடினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே." என்கிறார் அப்பர் சுவாமிகள்.   கெடிலம் வேலி போலத் தோன்றினாலும், அனைத்து உலகங்களுக்கும் வேலி போல நின்று காப்பவன் பரமேச்வரன். நாம் அமைக்கும் வேலியும் நிரந்தரம் அல்ல. அவ்வப்போது அதனைச் சீர்திருத்த வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் , கிடைக்கும் இடைவெளி மூலமாகப் பிறர் புக ஏதுவாகிறது. அப்போது தேவையான அளவு நெருக்கமாக இல்லாததால் வேலி இருந்தும் பயிர் மேயப்படுகிறது. சாஸ்வதமான இருப்பவனே  அனைவரையும் காக்கும் ஒரே வேலி. மற்றதெல்லாம் வேலி போலத் தோன்றினாலும் உண்மையில் வேலி ஆகா.

வேலியைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு என்று தோன்றும். தர்மத்தை அரசர்கள் காத்து வந்தாலும், அவற்றை நேரிடையாகக் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்திருந்தார்கள். தங்களால் ஏற்படுத்தப்பட்ட நிபந்தங்கள் ஆலயங்களுக்கு உரிய முறையில் போய்ச் சேருகின்றனவா என்பதில் அவர்கள் காட்டிய அக்கறையே அலாதியானது. தென்காசி ஆலயத்தைக் கட்டிய மன்னன், " இதைத் திருப்பணிகள் செய்து  பராமரிப்போரது திருப்பாதங்கள் அடியேனது சிரத்தில் இருக்கக் கடவது" என்று கல்வெட்டில் எழுதினான்.   ஆனால் இன்று நடப்பது என்ன? அடியார்கள் இடும் காணிக்கைகளைக் களவாடுகிறார்கள் என்ற   அதிர்ச்சித் தகவல்களை செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம்.

உண்டியல்கள் உடைக்கப்பட்டுக் காணிக்கைகள் களவாடப்படுவது நடைபெற்றபோதிலும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் உண்டியல்கள்  பல இடங்களில் களவாளப்படுகின்றன. அறநிலையத்துறையின் கோயில்களில் உண்டியல் எண்ணப்படும்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? எல்லாக் கோயில்களிலும் கேமிராக்கள் பொருத்தப்  படாத நிலையில் முறைகேடு நடக்காது என்பது என்ன நிச்சயம்? நேரம் கிடைத்த போதும், அதிகாரிகள் அதை எண்ணுவதற்கு மனமுவந்து (!) வரும்போதுமே  பெரும்பாலும் உண்டியல்கள் திறக்கப்படுகின்றன. அதிக வருவாய் வந்து உண்டியல் நிரம்பி வழிந்தாலும் கண்டு கொள்ளாமல் செளகரியப்பட்டபோது திறந்தால் போதுமானது என்று இருந்தால் திருடன் விட்டு வைப்பானா?   இது போன்ற நிலையில் மாதம் ஒரு முறை எண்ணுவது என்றில்லாமல் அடிக்கடி எண்ணினால் திருடப்படும் பணமும் ஓரளவாவது காக்கப்படும்.

மதுரை மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை முடிந்து சில வாரங்கள் கழித்து அதிகாரிகள் உண்டியலை எண்ணியபிறகு, கணக்கை சரிபார்க்கும்போது சில லட்சங்கள் களவாடப்பட்டிருப்பது தெரியவே, உயர் அதிகாரி மூலம் வீடியோ பதிவைப் பார்க்கும்போது ஒரு அதிகாரியே, பணத்தைக்  கைக்குட்டையால் மூடி எடுத்து வைத்துக் கொள்வது தெரிய வந்ததாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இப்படி ஒரு அதிர்ச்சித் தகவலை தினசரிச்  செய்தித் தாள்கள் வெளியிட்டுள்ளன. பக்தர்கள் தங்களது காணிக்கை இறைபணிக்கே போய்ச்சேருகிறது என்ற நம்பிக்கையில்தானே அதை  உண்டியலில் செலுத்தியிருப்பார்கள் ? அந்த நம்பிக்கை வீண் போகலாமா? அறத்தைக் காக்கும் கடமை கொண்ட அறநிலையத் துறை அதிகாரியே இப்படி செய்திருப்பாரேயானால் பிறகு ஆலய சொத்துக்களை யார் பாதுகாப்பது? வேலியே பயிரை மேய்வதாக அல்லவா முடியும்?  சந்தன மகாலிங்கத்திற்கே வெளிச்சம்.
  

No comments:

Post a Comment