Wednesday, October 2, 2013

பத்திரிகை உலகம் சிந்திக்குமா?

ஹிந்து சமயத்தின் அடிப்படை நோக்கமே மீண்டும் பிறவாத பேரின்ப முக்தியை அடைவது என்பது. முக்தியை அடையப் பல மகான்கள் அவதரித்துப் பல்வேறு மொழிகளிலும் நூல்கள் அருளித் தங்களது உபதேசங்களால் முக்தி அடைய வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். "பிறவாமை வேண்டும்" என்று முக்தி தரவல்ல மூர்த்தியைக் காரைக்கால் அம்மையார் வேண்டியதாகப் பெரிய புராணம் கூறும். பல ஸ்தலங்களில் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்ற திருநாமம் இருப்பதையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டும். பல்வேறு நூல்கள் வெவ்வேறு தெய்வங்களிடம் நம்மை ஆற்றுப் படுத்தினாலும், அனைவருக்கும் பொதுவான இலக்கு என்பது மீண்டும் பிறவா முக்தி நிலை என்பதில் ஐயமில்லை.ஒவ்வொருவரும் அம்மகான்கள் காட்டிய பாதையை ஏற்று அவர்கள் அருளிய நூல்களை ஓதி முக்தி வரம் பெறலாம் என்பது கோட்பாடு. " விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்..." என்று திருநாவுக்கரசரும், அனைத்துத் தெய்வ வழிபாடுகளும் மாதொரு பாகனையே சென்று அடையும் என்று சைவ சித்தாந்த சாஸ்திரமும் குறிப்பிடுவதை எடுத்துக் காட்டலாம்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர்  பேசியதாக அக்டோபர்  2 ம்  தேதியிட்ட தினசரி பத்திரிகையில் வெளியான செய்தி வியப்புக்குரியதாக இருக்கிறது. பேச்சாளர்கள் பெரும்பாலும் நிகழ்ச்சி நாயகர்களையோ, நூல்களையோ முன்னிலைப்படுத்திப் பேசுவது வழக்கம். அது நியாயமும் கூட! ஆனால் பிறரையோ அல்லது பிறரது நம்பிக்கைகளையோ அது பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒருக்கால் யாராவது வருத்தம் தெரிவித்தால், பேச்சாளர் தான் அப்படிப் பேசவில்லை என்றும் பத்திரிகை அதைத் திரித்து எழுதிவிட்டது என்றும் மறுப்பு தெரிவிப்பதும் உண்டு. எனவே, நாம் பத்திரிகையில் வெளியான செய்தியைக் கொண்டே இங்கு சில வார்த்தைகள் எழுத வேண்டியிருக்கிறது.
முன்னாள் அமைச்சரின் பேச்சை வெளியிட்டு அந்நாளிதழ் , " தமிழ் மொழிக்கு வைணவமும் திருவருட்பாவும் இரண்டு கண்கள் " என்று தலைப்பு கொடுத்திருக்கிறது. இனி, அந்த அமைச்சர் கூறியதாக வெளியான செய்தியை  இங்கு தருகிறோம்:-  " .... வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை. தமிழ் மொழிக்கு வைணவமும் திருவருட்பாவும் இரண்டு கண்கள்." இவ்வாறு பேசியதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழுக்கு இரு கண்கள் இருக்கும் விளக்கத்தை இப்போது தான் புதிதாகக்  காண்கிறோம். தமிழில் உள்ள தெய்வ இலக்கியங்களுக்குச் சைவமும் வைணவமும் இரு கண்கள் என்று சொல்வதும் பொருத்தமே. சைவத்தை நீக்கி விட்டுத் திருவருட்பாவை ஒரு கண்ணாகக் கொண்டது நிகழ்ச்சி அமைப்பாலர்களைத் திருப்தி படுத்துவதற்காகத்தான் இருக்கக் கூடும் என்று நம்புகிறோம். சைவத்தையும் சைவ சமய குரவர்களையும் போற்றியுள்ள இராமலிங்க அடிகளுக்கே இதில் உடன் பாடு இராது என்றும் நம்புகிறோம்.

மேலும், வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை என்று எக்காரணம் பற்றி, எந்தப் பொருளில் அமைச்சர் பேசினார் என்று தெரியவில்லை. " ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்  புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே." என்ற திருஞானசம்பந்தரின் வாக்கில் திடமான நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்கள் முக்தி அடைவதில்லையா?  மூலன் உரைத்த மூவாயிரம் தமிழையும் காலை எழுந்து உள்ளன்போடு கருத்து அறிந்து  ஓதினால் ஞாலத்தலைவனான சிவபெருமானின் சேவடிகளை அடையலாம் என்று  திருமூலர் அருளுவதை நம்பி வாழ்பவர்கள் முக்தி அடைவதில்லையா? " முக்தியே சேர்வதற்கு அருள்வாயே "என்று அருணகிரிநாதர்  வேண்டியதை நமக்காக வேண்டியதாகக் கொண்டு திருப்புகழை அனுதினமும் பாராயணம் செய்பவர்கள் கந்தக் கடவுளின் கழலிணை களை அடைவதில்லையா?

ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு மார்கத்தில் பற்று இருக்கத்தான் வேண்டும். வள்ளலாரின் வாக்கைப் பின்பற்றினால் மோட்சம் கிடைக்கும் என்று சொல்லட்டும். ஆனால் "வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை" என்று சொன்னால், பிற நூல்கள் மூலம் இறையருளை அடைய முற்படுவோரது மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சிந்திக்க வேண்டும். அதேபோல் நாம் பின்பற்றும் சைவம் , தமிழுக்கு ஒரு கண் இல்லையா என்று நினைக்கவும் இப்பேச்சு வகை செய்கிறது.

ஒரு அரங்கத்தில் கூடியுள்ள மக்கள் முன் இது போன்ற பேச்சுக்கள் எத்தனை எத்தனையோ ! அவை மக்களை இணைப்பதாக இருந்தால் பத்திரிகையில் வெளியிடலாம். பிரிப்பதாகவோ, ஒரு சாராரை மனவருத்தத்திற்கு  உள்ளாக்குவதாகவோ இருந்தால் அது போன்ற செய்திகள் அரங்கத்தொடு இருந்து விட்டுப் போகட்டும். அனைத்து மக்களும் அறியும்படி செய்திதாளில் வெளியிட வேண்டுமா? பத்திரிகை உலகம் சிந்திக்குமா?  

No comments:

Post a Comment