Tuesday, September 24, 2013

"ஆன்மீக மலரில்" பிழை வரலாமா?

ஆன்மீகப் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிடுவதைப் பலமுறை குறிப்பிட்டிருந்தோம். வழக்கம்போலப் பத்திரிகை உலகம் அவற்றைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை. எப்படியோ பக்கம் நிரம்பி விடுகிறது. யார் இதை எல்லாம் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்ற நினைப்போ என்னவோ! " சீதைக்கு ராமன் சித்தப்பா " என்று கூட எழுதுவார்கள் போலிருக்கிறது! ஆன்மீக மலர் என்ற பகுதியை வெளியிடும் தினசரி செய்தித்தாள்  ஆன்மீகத்தில் பயிற்சியும்,அனுபவமும் பெற்றவர்களை நியமிக்கக் கூடாதா? இதன் மூலம் தவறான செய்திகளோ வரலாறுகளோ மக்களைச் சென்று அடையாதபடி பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
24.9.2013 தேதியிட்ட செய்தித்தாளுடன் வெளியான ஆன்மீக மலரில் (நம்பர்  1 ஆன்மீக இதழ் என்று  போட்டுக்கொள்கிறார்கள்) " யார் இந்த பைரவர்? " என்ற தலைப்பில் வெளியான செய்தி  ஆன்மீக மலரின்  தரத்தை எடைபோடுவதாக இருந்தது.

தக்ஷ யாகத்தில் பங்கேற்ற தேவர்களின் அகந்தையை அடக்க "சிவன் பைரவரை  உருவாக்கினார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு " கதை" தொடர்கிறது. தேய் பிறை அஷ்டமி பரிகார வழிபாடு வேறு இருக்கவே இருக்கிறது!

"யார் இந்த பைரவர்" என்பதை நாம் அவர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஐந்து முகம் கொண்ட பிரமன்  , சிவனுக்கும் அதேபோல் ஐந்து முகங்கள் இருப்பதை ஏளனம் செய்கையில் சிவபெருமானது கோபத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தமே பைரவ மூர்த்தம். அவ்வாறு கோபத்துடன் வெளிப்பட்ட பைரவர், பிரமனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி, அதைக் கபாலமாக ஏற்றார். தஞ்சைக்கு அருகிலுள்ள கண்டியூர் வீரட்டானத் தலபுராணமும், கந்த புராணமும் இதையே சொல்லும்.
இப்போது, தக்ஷ யாகத்திளிருந்து வெளிப்பட்டது யார் என்று தெரிய வேண்டாமா? அவரே வீர பத்திரர்   ஆவார். சிவனை இகழ்ந்த தக்ஷனது தலையைக் கொய்து, சூரியனது பற்களைத் தகர்த்து, சரஸ்வதியின் நாசியையும் அக்னி தேவனின் கரங்களையும் சேதித்து, சிவபெருமானுக்கு யாகத்தின் முதல் அவிசைத் தராததற்கான தண்டனையை வழங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு வீர பத்திரர் தோன்றி தக்ஷ யாகத்தை அழித்ததைத் திருவாசகமும்,

பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண் பட்ட பூதப்படை  வீரபத்திரரால்
புண் பட்டவா பாடிப் பூவல்லி கொய்யாமோ.

என்று கூறுவதைக் காணலாம்.

மயிலாடுதுறையிலிருந்து செம்பனார் கோயில் சென்று அதற்கு அருகிலுள்ள பரசலூர் என்று  வழங்கப்படும் பறியல் வீரட்டானத்தில் தக்ஷ சம்ஹார கோலத்தில் வீர பத்திர மூர்த்தியைத்  தரிசிக்கலாம்.. ஸ்காந்த மகா புராணத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

தவறான சேதிகளைத் தருவதும் ஆன்மீகமா ? அரைகுறையாக ஆன்மிகம் படித்திருந்தாலும் இதுபோல் நேரிடலாம். உண்மையான காரணம் அப்பத்திரிக்கைகளுக்கு மட்டுமே தெரியும்.   

1 comment:

  1. இப்பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் தவிர என்ன "இருக்கிறது" என்று சீர் தூக்கிப் பார்த்தால் நம்பர் 1 இன் லக்ஷணம் தெரிந்து விடும். நல்ல பதிவு.

    ReplyDelete