Tuesday, September 18, 2012

கோயில் கட்டணங்கள்


உண்டியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத் துறை நுழைந்ததும் செய்த முதல் வேலை, உண்டியல் அமைத்ததுதான்! எங்கும் வசூல்,எதிலும் வசூல் என்பதைத்தான் காண நாம் பழகிவிட்டோம் இல்லையா? நுழைவு கட்டணம், சிறப்பு தரிசனக் கட்டணம், அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், மொட்டை அடிக்கக் கட்டணம், காது குத்தக் கட்டணம், கல்யாணம் செய்ய கட்டணம், தேர் இழுக்கக் கட்டணம் என்று எத்தனையோ வகையான கட்டணங்கள்! இவ்வளவும் போதாதுஎன்று மூலைக்கு மூலை ஆள் உயர  உண்டியல்கள். அதில் மட்டுமே எவ்வளவு வகை தெரியுமா? பிரார்த்தனை உண்டியல், திருப்பணி உண்டியல், தேர் கட்டுமான உண்டியல், விமானத்தில் தங்க/வெள்ளி கலசம் பொருத்த உண்டியல், அன்னதான உண்டியல் என்று இப்படிப் பலவகைகளைக் காண்கிறோம்.

தர்ம தரிசனம் என்பது பெரிய கோயில்களில் ஏதோ "தர்மத்துக்காக " நடப்பதைப் போலத் தோன்றுகிறது. கட்டணம் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று பழகிப் போனவர்களுக்குத் தரும தரிசனத்தில் கால் கடுக்க நிற்பவர்களைப் பற்றி நினைவு கூட வருவதில்லை. சன்னதியை மறைத்துக் கொண்டு நிற்பார்கள். கட்டணம் செலுத்தியதால் தெய்வத்தையே விலை கொடுத்து வாங்கி விட்டதாக நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஊரின் பெயரை சொல்லாமல் விஷயத்துக்கு மட்டும் வருவோம். அந்தக் கோயிலில் கட்டுமலை மீது இருக்கும் முக்கிய சன்னிதி எத்தனையோ ஆயிரம் குடும்பங்களுக்குக் குலதெய்வ சன்னிதியாகக் கருதப்படுவது. படிக்கட்டுக்கள் மேல் ஏறிச்  சென்று தரிசிக்க வேண்டுமானால் ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். வெளியூர் காரர் இதைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. உள்ளூர் பக்தர்கள் தினமும் தரிசிப்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. கீழே நின்றபடியே விமானத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு பிராகாரத்தை வலம் வருகிறார்கள்.

இதற்கு நடுவில், சந்நிதியை மறைத்துக் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி, சீரியல் ஷூட்டிங் ஆகியவற்றை செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் வரும் வருமானம் வேறு. பரிகாரத் தலங்களில் கோயிலுக்கு வெளியில் கார், வேன் ஆகியவற்றை நிறுத்தப் பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். கேட்டால் கோயில் நிர்வாகம் அதற்குக் "காண்ட்ராக்ட்" விட்டிருப்பதாகக்  கூறுகிறார்கள்.

வழக்கம் போல இந்த ஆண்டும் குல தெய்வமான சுவாமிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப் போனபோது ஆலயக் கட்டணங்கள் அதிகரித்து விட்டதாகச் சொன்னார்கள். 750 ரூபாயாக இருந்த அபிஷேகக் கட்டணம் 1500 ரூபாயாக உயர்த்தப் பட்டு விட்டது. இப்படி உயர்த்திக் கொண்டு போக  வேண்டிய அவசியம் என்ன  என்று புரியவில்லை. நிர்வாகச் செலவுகள் அதிகரித்து விட்டதாகச்  சொல்வார்கள் போலும்! நிர்வாக அதிகாரி ,துணை/இணை கமிஷனர் போன்ற அதிகாரிகளின் சம்பளம் வேண்டுமானால் உயர்ந்து கொண்டே போனாலும், ஆலய சிப்பந்திகளின் சம்பளம் சொல்லிக் கொள்ளும் அளவில் உயர வில்லையே! உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், ஆபரணங்கள் முதலியவை முறையாகச் செலவழிக்கப் படுகின்றனவா? இல்லாத கோயில்களின் திருப்பணிக்குக் கொடுக்கப்படுகிறது என்பார்கள். உண்மை என்ன என்றால் அது போன்ற "இல்லாத" கோயில்களுக்கும் திருப்பணிக்கு ஆகும் செலவில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக செலவுகளுக்கு ஒரு துரும்பு கூட நகர்த்தப் படுவதில்லை. நன்கொடையாளர்களே இதையும் ஏற்றுக் கொண்டால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும் என்ற நிலை.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று அன்னதானத்தின் பெருமை அந்தக் காலத்தில் பேசப் பட்டது. தற்கால உண்டியோ (உண்டியலோ) கோயிலுக்கு வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு மட்டும் அமைக்கப் பட்டுள்ளதாகக் கருத வேண்டியிருக்கிறது. ஆள் உயர உண்டியல்களை நிரப்ப நாம் தயாராக இருக்கும் போது அமைத்தவர்களுக்கு என்ன கவலை? உண்டியல் வருமானம் சொற்பமே உள்ள கோயில்களைப் பற்றியும் எவ்வளவு பேர்  கவலைப் படப் போகிறார்கள் ?  

3 comments:

  1. Dear Sir:
    Your comments regarding temple Hundi and collection methods are highly commendable. Some times I seriously think as to where we are leading. Is there anything called "Dharma" being observed in Holy temples. Greed, selfishness, tendency to amass wealth is dominating the minds of people and they don't seem to fear even God,the Almighty!. May be that is the reason all the rivers are drying up, nature is erratic and a situation has come whereby even water has become precious and we have to pay a price for it. I think Kali Yuga is in FULL form.
    thanks for your observations.
    vidyasagar

    ReplyDelete
  2. Reasonable and while listening to your observations I am also of the same feeling of similar to Shree Vidyasekar .May Siva bring back normalcy soon.SIVAYANAMAHA.

    ReplyDelete
  3. OHM NAMASIVAAYAA
    SOME TEMPLES LIKE PARIKAARA STHALAM ARCHAKARKAL COLLECT FOR MONEY TO JENMA NATCHATHIRA ARCHANAI .BUT THEY ARE NOT SEND PRASAADAM,MY OWN EXPERIENCE IN KEELA PERUMPALLAM,THILLAI&LALITHAMBIGAI KOYIL IN THIRUMEEYETCHUR,ALSO IN ALANGUDI, SAHASRA NAMA ARCHANAI TICKET VAANGINAAL ASTHOTHRAM KOODA SOLVATHILLAI,THIRUVIDAI MARUTHUR BRAMHA HATHI THOSA NIVARTHI SARIYAAHA SEIVATHILLAI,BUT 100 THATCHINAI+650,ETHANAAL MAKKAL KOYIL ENPATHU EMAATRUM IDAM ENRU NINAIKKIRAARKAL.ADIKKADI YATHIRAI SELLUM NAANA ADIPATTULLEN.
    THIRUCHITRAMBALAM

    ReplyDelete