




நவக் கிரக தேவதைகளை பரமேச்வரன் நியமித்து நமது பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ற படி இன்ப-துன்பங்களை வழங்குகிறார். எல்லா தேவர்களும் ஸ்தலங்கள் தோறும் அவரை பூசிப்பது போலவே நவக் கிரகங்களும் அவரை ஒன்பது ஸ்தலங்களில் வழிபட்டதோடுஅங்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் துன்பங்களின் தாக்கம் சற்றுக் குறையுமாறு அருளுகிறார்கள். சிவனடியார்களுக்கு நவக் கிரகங்களும் நல்லதே செய்யும் என்று சம்பந்தரின் கோளறு பதிகம் குறிப்பிடுகிறது. எனவே, நாமும் அதனைப் பாராயணம் செய்தும் நவக் கிரகங்களால் வழிபடப்பெற்ற சிவாலயங்களைத் தரிசித்தும் பாவ வினைகள் நீங்கப் பெறலாம்.
நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன தெரியுமா? திருநள்ளாறு தர்பாரன்யச்வாமி கோவிலை சனீஸ்வரன் கோயில் என்று சொல்வதும் ,ஆலங்குடியை குரு ஸ்தலம் என்பதும், நாகேஸ்வர சுவாமி கோவிலை ராகு ஸ்தலம் என்பதும் , கீழப் பெரும்பள்ளத்தைக் கேது ஸ்தலம் என்பதும் வழக்கமாகிவிட்டது. உண்மையில் இவை எல்லாவற்றையும் சிவஸ்தலம் என்று தான் குறிப்பிட வேண்டும். கிரகங்களால் மூர்த்திக்குப் பெருமை இல்லை. மூர்த்தியால் தான் கிரகங்களுக்குப் பெருமை. இப்படிச் சொல்வதால் கிரக வழிபாடு வேண்டாம் என்று சொல்வதாக நினைக்கக் கூடாது. எந்த மூர்த்திக்குப் ப்ராதான்யம் (முக்கியத்துவம்) கொடுக்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் நவக்ரகங்களை மட்டும் சுற்றிவிட்டு மூலவரைத் தரிசிக்காமல் வருபவர்களுக்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்னொரு முக்கியமான விஷயம்: வியாழக்கிழமை அன்று தக்ஷிணா மூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரமும் கொண்டைகடலை மாலை போடுவதுமான தவறான பழக்கம் பல ஊர்களில் காணப் படுகிறது. இவற்றை எல்லாம் நவக் கிரகங்களுள் ஒருவரான குருவுக்கு (பிரஹச்பதிக்கு) அணிவிக்க வேண்டும். ஆதி குருவான பரமேச்வரனுக்குப் போடக் கூடாது. இதை எல்லாம் அந்த ஆலயங்களில் உள்ள சிவாச்சார்யார்களே சொல்லி மக்களைத் திருத்த வேண்டும். செய்வதை தவறு இல்லாமல் செய்ய வேண்டும் அல்லவா?
மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் செய்யப்படுவது இக்கர்மா. தீட்டு வந்த போது கூட இதைச் செய்ய வேண்டும். ஸ்ரீ பரமேச்வரன் இதைச் செய்ததாக குமார சம்பவத்தில் கவி காளிதாசன் குறிப்பிடுகிறார். இதைச் செய்யாமல் வேறு எந்தக் கர்மாவை செய்தாலும் பலன் தராது. வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யும் இடம், தேவ பூஜை செய்யும் இடம்,பசுமாடு கட்டும் கொட்டகை,துளசி மாடம் ஆகியவற்றின் அருகில் காயத்ரி ஜபம் செய்வது அதிகப் பலனைத்தரும். ஹோமமாகச் செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் காரிய சித்தியும் பாப நிவர்த்தியும், இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும்.
அர்த்தம் தெரியாததால் இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவை விட்டு விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஆ சத்யேன எனத் தொடங்கும் மந்த்ரம் தீர்காயுளைப் பிரார்த்திக்கிறது. அதன் சுருக்கமான பொருளாவது: " நூறு வருஷம் உதய காலத்தில் சூரிய மண்டலத்தைத் தரிசிப்போம்.நூறு வருஷம் ஜீவிப்போம். நூறு வருஷம் புத்திர பௌத்ராதிகளோடு இருப்போம்.நூறு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம். அப்பொழுது நல்ல சொற்களையே பேசுவோம். நல்ல சொற்களையே கேட்போம்.சத்ருக்கள் யாரும் எங்களை ஜெயிக்கப்படாதவர்கள் ஆவோம். " என்று ப்ரத்யக்ஷ தெய்வமான சூர்யனிடம் வேண்டப்படுகிறது.
இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவைப் பண்ணாமல் ஆயுளை வீணாகக் கழிக்கக் கூடாது. விடுமுறை நாட்களில் அதிக ஆவர்த்தி ஜபம் பண்ண முடியும். ரிடையர் ஆனவர்கள் இத்தனை வருஷம் பண்ணமுடியாமல் போயிருந்தாலும் இனிமேலாவது அதிக சிரத்தையுடன் செய்ய ஆரம்பிக்கவேண்டும். இதனால் குடும்பம் க்ஷேமம் அடைவதோடு,லோக க்ஷேமமும் உண்டாகும். நமது எல்லா அபராதங்களையும் மன்னிக்கும் வேத மாதா இதற்கு அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.
நன்றாக யோசித்துப் பார்த்தால் நமது பிரபலமான கோயில்களில் சான்னித்தியம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும். கோயில்களில் உள்ள மூர்த்திகள் , தேவர்களாலோ முனிவர்களாலோ மிகச் சிறந்த பக்தர்களாலோ அல்லது பறவை விலங்குகள் ஆகியவற்றாலோ வழிபடப் பட்டவை. தெய்வங்களை பய பக்தியோடு அணுக வேண்டியது போய்ஏதோ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் ஆகிவிட்டது துரதிருஷ்டமே. எதில் தான் வியாபார நோக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஆலயங்களை படப்பிடிப்பு குழுக்கள் விலைக்கு வாங்கி விடாத குறையாக ஆக்கிரமிக்கின்றனர். வழிபாட்டு இடங்களில் இவர்களை அனுமதிப்பதால் ஏதாவது வருமானம் வராதா என்ற எண்ணம் இதற்கு வழி விடுகிறது.
கோயில்களுக்கு வருபவர்களின் செய்கைகளோ சொல்லும்படி இல்லை. என்ன வேண்டுமானாலும் உடுக்கலாம்,பேசலாம் என்று ஆகிவிட்டது. இடைத் தரகர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லோருக்கும் முன்னால் சென்று சீக்கிரம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற சுய நலம் வேறு. சில இடங்களில் ஆலய சிப்பந்திகளும் இதற்கு உடந்தையாக இருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சுய விளம்பரத்திற்காக தங்க கதவுகளையும் மேல் கூரைகளையும் சிலர் செய்து கொடுக்கிறார்கள். இதனால் கவனம் பூராவும் பணத்தின் மேலேயே போய் விடுகிறது. முக்கியப் புள்ளிகள் வந்தால் ஆலய சட்ட திட்டங்கள் காற்றில் விடப் படுகின்றன.
அரசாங்கமும் முதல் வேலையாக உண்டியல் வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் வரும் பணமோ பல வழிகளிலும் செலவழிக்கப் படுகிறது. கோயில்களின் பூஜைகள் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவை வருமானம் இல்லாத ஊர்களில் கேள்விக் குறியாகவே ஆகிவிட்டது. இதற்காகக் கவலைப் படுவோர் மிகச் சிலரே!
இதையெல்லாம் உத்தேசித்துதான் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை திருப்பணி,கும்பாபிஷேகம் ஆகியவற்றை செய்து சாந்தித்யம் நிலைக்கும்படி செய்தார்கள். தவறுகளைத் திருத்துபவர்களைக் காணோம். பல கும்பாபிஷேகம் நடந்த கிராமத்துக் கோயில்களில் தொடர்ந்து பூஜை நடத்த வழி வகைகள் செய்யப் படுவதில்லை. வறுமையால் வாடும் ஆலய சிப்பந்திகள் வேறு ஊர்களை நாடிச் செல்கிறார்கள். இவர்களுக்காக வருத்தப் படுபவர்கள் எத்தனை பேர்? புரட்சி ,மறுமலர்ச்சி என்றெல்லாம் பேசுபவர்கள் ஆலய மறுமலர்ச்சிக்காக ஏதும் பெரிய அளவில் செய்வதில்லை.
இதற்கெல்லாம் ஒரே வழி ,மக்கள் திருந்தவேண்டும். தானாகத் திருந்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.சிவமே அவர்களது சிந்தையைத் திருத்தவேண்டும். கோயில்களின் சாந்தித்யம் கூட வேண்டும். இறைவனது உறைவிடமாகத் திகழவேண்டும். அப்பொழுதுதான் தேசம் நன்மை அடையும். கலங்காமல் காத்த கணபதியையும் , திருபுவனத்தில் உள்ள நடுக்கம் தீர்த்த நாதரையும் ,சரப மூர்த்தியையும் பிரார்த்திப்போமாக.