Friday, March 4, 2016

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்

காயத்ரி தேவி- தஞ்சை ஓவியம் 
வேதத்தை எழுதாக் கிளவி என்று தமிழில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது பரம்பரை பரம்பரைகளாக ஏட்டில் எழுதாமல் குரு மூலமாகக் காதால் கேட்டுக் கற்கப்படுவதால் இவ்வாறு அதைக் குறிப்பிட்டு வந்தனர்.  கற்பவர்களும் கற்பிப்போர்களும் நிறைந்த அந்தக் காலத்தில் வேத சம்ரக்ஷணம் என்று தனியாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. வேதம் தான் எல்லோரையும் காப்பாற்றியதே தவிர வேதத்தை நாம் காப்பாற்றவேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. இக்காலச் சூழ்நிலையில் கற்பவர்கள் மிகவும் குறைந்து விட்ட படியால் வேதம் மறைந்து விடாமல் இருக்கப் பல வித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுதாக் கிளவியாகத் திகழ்ந்த வேதம் எழுதப்பட்டு ( அதாவது நூல் வடிவில் அச்சிடப்பட்டு) வருவதும் அம்முயற்சிகளுள் ஒன்று.

வேதத்தை ஒரு பிரிவினர்  பல்லாண்டுகள் தக்க குருவிடம் பயின்று ,பிறர்க்கும் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதால் , வாழ் நாள் முழுவதும் வேத நெறிக்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முடிந்தது. இப்படி எளிய வாழ்க்கை வாழ்வதே போதும் என்ற நிலை அப்போது இருந்தது.

வேதத்தைப் பிறர் படிக்கும் படி அச்சிட்டு வெளியிடக் கூடாதா  என்று கேட்கத் துவங்கியபோது கற்பவர்களும் குறைவதால் வேறு வழி இல்லாமல் அச்சிடும்படி ஆகி விட்டது. அப்படித் தயங்கியதன் காரணம் நமக்குப் புரியாமல் இருந்தது. இப்போது புத்தக வடிவில் வெளி வந்ததோடு கேசட், சி .டி என்றெல்லாம்  ஆகிக்  குரு முகமாகக் கற்க வேண்டிய மந்திரங்கள் பகிங்கரமாக ஒலி  பெருக்கிகள் மூலம்  அலற விடப்படுகின்றன. எல்லாத் தேவதைகளின் மூல மந்திரங்களும், தியானங்களும் புத்தகங்களில் அச்சாகியுள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இப்படி வியாபாரம் செய்கிறார்கள். காலிங் பெல்லை அழுத்தினால் காயத்திரி மந்திரம் ஒலிக்கிறது. அதில் என்ன  தப்பு என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

 என்ன தப்பு என்று இப்போது பார்ப்போம்.  அதனால் மந்திரங்களின் சக்தி வலு இழந்துவிடும் என்று நாம் சொல்லப்போவதில்லை. அப்படிச் சொன்னால் அவற்றை ஏற்றுக்கொள்ளாததோடு ஏளனம் செய்பவர்கள் இருக்கும் இக்காலத்தில் அது எடுபடாது என்று தெரியும். நாம் இங்கு சொல்லப்போவது வேறு. முகநூலில் பார்த்த செய்தி ஒன்றே இதற்குத் தக்க  பதிலாக அமையும் என்பதால் அதைப் பகிரலாம் என்று எண்ணுகிறோம்.

வேற்று மதத்தைச் சார்ந்த ஒரு டைரக்டர்  எடுத்த தமிழ் திரைப் படத்தில் காயத்திரி மந்திரம் கேலிக்கூத்தாக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியே அது. இப்போது சொல்லுங்கள். மந்திரங்களைப் புத்தகமாகவும் எலெக்ட்ரானிக் வடிவிலும் வெளியிட்டதன் விளைவுதானே இது?  குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிப்பவர்கள் இவ்வளவு நடப்பதைக் கண்டும், " எதோ ஒருவன் தவறு செய்வதால் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லலாமா" என்று கேள்வி  எழுப்புவர். இது ஒரு குடம் பாலில் சிந்திய ஒரு துளி விஷம் அல்லவா?   ஒரு துளி தானே என்று கூறுவீர்களா என்று அவர்களைக் கேட்கிறோம். அந்த ஒரு துளிகூட  விழுந்துவிடக் கூடாது என்பதாலும் உலகம் காக்கப்படுவதற்கு வேதங்கள் குரு மூலமாகக் காக்கப் படவேண்டும் என்றும் தீர்க்க தரிசன நோக்குடன் நமது முன்னோர்கள் காட்டிய பாதையைக் குறை சொல்லலாமா?  அதை மீறியதன் விளைவை இப்போதாவது அறிந்து கொண்டு அவர்களது மகிமையை உணர்கிறோமா?     

No comments:

Post a Comment