Friday, June 6, 2014

தாராள நிதி விரைவாக ஒதுக்குக

ஒரு பெரிய பணக்காரர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் எப்படி இருக்கும்! பெயருக்கு மட்டுமே சொத்தை வைத்துக் கொண்டு, பிறரிடம் கை ஏந்தும் அவரது பரிதாப நிலையைப் போன்று நமது திருக்கோயில்களும் முன்னோர் எழுதி வைத்த நிலங்களைப் பெயர் அளவுக்கே வைத்துக் கொண்டு இருக்கின்றன.. நகரங்களிலும் பிரபலமான தலங்களிலும் இருக்கும் கோயில்கள் உபயதாரர்களால் பராமரிக்கப்படுகின்றன. அவற்றைத் திருப்பணி செய்து தருவதில் அறநிலையத் துறையும் தாராளமாக நிதி வழங்குகிறது. ஒரு பிரபலமான கோயிலுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுத் திருப்பணிகள் செய்வதற்குப் பத்து கோடி ரூபாய் வழங்குகிறார்களாம். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்ய இருக்கிறார்களாம். இந்த அளவு தாராளத்தைத் திருப்பணி கண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கும் காட்டலாம் அல்லவா?

முதல் கட்டமாகத் திருப்பணிக்கு மதிப்பீடு செய்வதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேண்டும். அதற்கு முன் நின்று நடத்தித் தர வேண்டிய நிர்வாக அதிகாரி அலட்சியமாக இருந்தால் ஊர்க்காரர்களே அறநிலையத்துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டி மன்றாட வேண்டியிருக்கிறது. அவ்வாறு மதிப்பீடு செய்த பிறகு பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சுமார் ஓராண்டு ஆனதும் ஒதுக்கப்பட்ட தொகை இவ்வளவு என்று தெரிவிப்பார்கள். வேலைக்குத் டெண்டர் விடப்பல மாதங்கள் பிடிக்கும். டெண்டர் எடுத்தவர்கள் செய்யும் வேலையின் தரமோ நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். எங்களால் இவ்வளவு மட்டுமே முடியும். மீதியை நன்கொடையாளர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவர். நன்கொடையாளர்களைத்தேடும் படலம் ஆரம்பமாகிறது. இப்படியே போய், பல ஆண்டுகளுக்குப் பின்னரே திருப்பணி நிறைவு அடைகிறது.

திருப்பணி நிறைவு அடைந்து விட்டால் மட்டும் போதுமா? கும்பாபிஷேகச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் எழுகிறது. அற நிலையத்துறையோ அதற்காக உதவித் தொகை எதுவும் வழங்குவதில்லை. திரும்பவும் கை எந்த வேண்டிய நிலை!

 இத்தகைய காலகட்டத்தில் அற  நிலையத் துறை செய்யக்கூடியது ஒன்றுதான். கும்பாபிஷேகம் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆன கோயில்களின் திருப்பணிக்குத் தாராளமாக நிதி வழங்க வேண்டும். கால தாமதம் ஆகாதவாறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு அடைய வேண்டும். திருப்பணி செலவில் பாதிக்குக் குறையாமல் அற நிலையத் துறை ஏற்க வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்குத் தாமதம் ஏற்படாமல் நிதி வழங்கப்பட வேண்டும். பிரபலக் கோயில்களுக்கு எவ்வாறாவது திருப்பணியும் கும்பாபிஷேகமும் அன்பர்கள் ஆதரவோடு நடந்து விடுகிறது. ஏனைய கோயில்கள் தான் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. பல ஆலயங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.

எவ்விதப்பாகுபாடும் இல்லாமல் நடு நிலையோடு புராதனக் கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையேல் பாரபட்ச நிலை நிலவுவதாக மக்கள் குறை கூறுவர். " ஒரு எருதுக்குப் புல்லும்,மற்றொரு எருதுக்கு வைக்கோலும் போடுவது நடு நிலை ஆகுமா "என்று தில்லை அம்பலவாணனிடம் முறை இடுகிறார் திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான வேணாட்டடிகள் என்பவர்.  ".... இடுவது புல் ஓர் எருதுக்கு ; ஒன்றினுக்கு வை இடுதல் ; நடு இதுவோ திருத்தில்லை நடம் பயிலு நம்பானே. " என்பது அப்பாடலின் ஒரு பகுதி.  நாமும் தில்லைக்கூத்தனிடமே முறையிடுவோம்.  

3 comments:

  1. அற நிலையத் துறை ...இப்படி அறம் துரந்த துறை ஆகிவிட்டதே...

    ReplyDelete