Wednesday, January 8, 2014

சிதம்பர நீதி

இந்திய உச்சநீதிமன்றம் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தைப் பொது தீக்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மதிப்பிற்குரிய நீதிபதிகள் வழங்கியுள்ள இத்தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு உரியனவாகும். பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அம்சங்களாவன வருமாறு:

* "சுற்றி வளைத்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
* அப்படியே நிர்வாகத்தவறுக்காகக் கோவில் நிர்வாகத்தை அரசு கையில் எடுத்துக்கொண்டாலும் அந்தத் தவறைத் திருத்திய உடனேயே மீண்டும் நிர்வாகத்தைத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும்.
* அதை மீறி அரசே தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பது அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது.
* நிர்வாகத் தவறுகளைச்  சரி செய்ய மட்டுமே அரசு எடுத்துக்கொள்ளலாம் .
* காலம் குறிப்பிடப்படாமல் நிர்வாகத்தை அரசு வைத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது.
* சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பொது தீட்சிதர்கள் கட்டியிருக்காவிட்டாலும் , அது அவர்களது சொந்த சொத்தாக இல்லாவிட்டாலும் , பல நூற்றாண்டுகளாக அதை அவர்கள் நிர்வகித்ததால் அவர்களை வெளியேற்றமுடியாது.   இதை மறுபரிசீலனை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை."

நீதி மன்றங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதோடு, அப்பிழைகள் மீண்டும் சமுதாயத்தில் வராமல் எச்சரிக்கும் தீர்ப்புக்களை வழங்குவதால், யாருக்கு வெற்றி என்பது முக்கியமில்லை. எதிர் தரப்பு வாதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்பதை நீதித்துறை  சுட்டிக்காட்டியுள்ளது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு தரப்பினர் வெற்றி என்று கொண்டாடினால் மறு தரப்பினருக்கு அவர்கள் மீது துவேஷமே ஏற்படும்.     அகில உலகங்களுக்கும் நீதிபதியான நடராஜப்பெருமான் வழங்கிய தீர்ப்பாகக் கொண்டு அனைவரும் அதை மதித்துப் போற்றி  , ஏற்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காழ்ப்பு உணர்ச்சி மேலிடக்கூடாது. பிறர் நம்மை  எள்ளி நகையாடும்படி நமக்குள் பிளவு ஏற்படக்கூடாது.

மனித உரிமைகள் என்ற பெயரில், சிதம்பரம் கோயில் கலாசாரப் பண்பாட்டுச் சின்னம் என்றும் அதை தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமை ஆக்கக் கூடாது என்ற  கண்டக்குரலும் எழுப்புகின்றனர்.  தமிழ் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கலாசாரச் சின்னங்கள் கேட்பாரின்றி இடிந்து கிடப்பது இவர்கள் கண்ணில் படவில்லையா? அப்படியானால் அதற்காகக் கவலைப்படுபவர்களாக அவர்களை எப்படிக் கருத முடியும்? சிதம்பரம் கோவில் மட்டுமே இவர்களின் கண்களை உறுத்துகிறது என்றால் அதன் உண்மையான காரணம் வேறு இருக்கலாம் அல்லவா? முதலில் நீதி மன்றங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீதிக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும். தீர்ப்பை விமர்சிப்பதோ குறை கூறுவதோ தவறு என்பதை உணர வேண்டும். சிதம்பர ரகசியம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சிதம்பர நீதியையும் இப்போது தெரிந்து கொள்கிறோம். தான் ஆனந்த நடனம் ஆடுவதோடு அனைவரையும் ஆட்டுவிப்பவனும் அச்சிதம்பர நாதன் அல்லவா? " ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே" என்கிறது அப்பர் தேவாரம்.

நீதிமன்றத்தீர்ப்புக்கள் நமது செயல்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. இத்தீர்ப்பால் அறநிலையத்துறையின் செயல்பாடுகளும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோயில்களை ஏற்றுக்கொண்டதால் நிர்வாகம் சீரடைந்துள்ளதா? இடிந்த கோயில்கள் இடிந்தபடியே பராமரிப்பின்றிக்  கிடக்கவில்லையா? கோயில்களின்  பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களும் சொத்துக்களும் மீட்கப்படாமலும்,குத்தகை பாக்கி வசூலிக்கப்படாமலும் , முறைகேடுகள் சரிசெய்யப்படாமலும் இருக்கும் நிலை இன்னமும் தொடர்கிறதே! இப்படி இருக்கும்போது, அரசே பிழைகளைத் திருத்தாமல் எத்தனை காலம் தான் கோயில்களை  நிர்வாகம் செய்யப்போகிறது? தவறுகள் திருத்தப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. உச்ச நீதி மன்றமும் இதனைத் தெளிவுபடுத்தி விட்டது. இனி, முடிவு , அரசின் கையில்தான். 

1 comment:

  1. "நீதிமன்றத்தீர்ப்புக்கள் நமது செயல்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன"

    I have seen photos of Sivasri Parameswara Dikshitar visiting Hawaii in The HImalayan Academy site. (The esteemed Andhanar leaving our shores forget that they should not leave Thillai. I have seen another Andhanar with photos of logos of the current political party. The only party is Lord Nataraja, Lord Nataraja and no else.

    May Lord Nataraja shower his grace on everyone and a lot more on Dikshitars to save Thillai. We have to pray only for that

    "Tillai vazh andanar tam adiyArkum adiyEn"

    ReplyDelete