Tuesday, November 19, 2013

காவிரித் தாயைப் போற்றுவோம்

நெடு நாட்களாகவே ஒரு ஆசை. ஹரித்வார்,காசி போன்ற ஊர்களில் கங்கை நதிக்குத் தினமும் மாலையில் ஆரத்தி எடுப்பதுபோல் நாமும் காவிரித் தாய்க்கு வழிபாடு செய்யலாமே என்பதுவே அது . கங்கைக் கரையில் பெருந்திரளான  மக்கள் இந்த ஆரத்தியைக் காண வருகிறார்கள். அடுக்குத் தீபங்கள் ஏற்றப்படுவதும் கங்கை ஆற்றில் தீபங்களை மிதக்க விடுவதும் கண் கொள்ளாக் காட்சி . கங்கா மாதா என்று அன்போடும் பக்தியோடும் அவர்கள் அந் நதியை அழைக்கிறார்கள்.  நம் ஊரில் ஏன் அதுபோல் இல்லை என்பது குறையாகவே இருக்கிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட த் தினமும்  ஆரத்தி எடுக்கப்படாவிடினும், காவிரியைப் பயபக்தியோடு வழிபாட்டு வந்தார்கள். காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது தம் ஊருக்கு வருவதைக் காண்பதில் அக்காலத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார்கள். சில சமயங்களில் இரவு நேரங்களிலும் அப்படி வரும். பக்கத்து ஊரில் காவிரி நீர் வந்து விட்டது என்ற தகவல் வந்தவுடன், காவிரிக் கரையில் நீர் வருவதைக் காணக் காத்திருப்பார்கள்.  பள்ளங்களை நிரப்பியவாறு மெதுவாகத் தவழ்ந்து வரும் அழகே அழகு ! அப்படி வரும்போது, காவிரி மணலில் நின்றவாறு, காவிரித் தாயை அம்மணலில் விழுந்து வணங்குவார்கள். சிறிது சிறிதாக நீர் மட்டம் உயர ஆரம்பித்தவுடன் கரைக்கு வந்து விடுவார்கள். நொங்கும் நுரையுமாகக் காவிரி ஆறு செல்ல ஆரம்பிப்பதைப் பார்த்துச் சிறுவர்கள் குதூகலிப்பார்கள். மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பெரியவர்கள் படிக்கரையில் தேங்காய் உடைத்து காவேரி அம்மனுக்குப் பூஜை செய்வார்கள். சில வாரங்களில் வரும் ஆடிப் பெருக்கன்று வீடுகளில் செய்யப்பட்ட சிறிய சப்பரங்களைச் சிறுவர்கள் காவேரிக் கரைக்குக் கொண்டு வருவார்கள். பூஜை முடிந்ததும் அவரவர்கள் தாங்கள் கொண்டு வந்த பலவகை உணவு வகைகளைக் காவேரிக்கு நைவேத்தியம் செய்து விட்டுக் கரையில் அமர்ந்தபடியே சாப்பிடுவார்கள்.

மாசி மாதம் முதலாகவே நீர் வரத்து குறைந்து விடுவதால், மக்கள் அதில் இறங்கி அக்கரைக்குப் போவார்கள். சித்திரை வந்து விட்டாலோ மணல் பரப்பே இருக்கும். அப்போது காவேரிப் படுகையைக் கடப்பவர்கள், வெயிலாக இருந்தாலும் அந்தச் சுடு மணலில் காலணிகளைக் கையில் ஏந்தியபடியே நடப்பார்கள். நமக்கு உணவுக்கு ஆதாரமான அந்தத் தெய்வ நதியை   செருப்புக் காலோடு கடப்பது பாவம் எனக் கருதி வந்தார்கள். நாளடைவில் இந்த நம்பிக்கைகள் குறைவதோடு, கழிவு நீர் ,குப்பை போன்ற அசுத்தங்களையும் கலக்கத் துணிந்து விட்டார்கள் ! போதாக் குறைக்குத் தொழிற்சாலைகளின் பங்கு வேறு ! ஐப்பசி மாதத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் கண்ட கண்களால் முழங்கால் அளவு நீரைக் காணும்போது வேதனைப் படத்தான் முடிகிறது. பாட்டில்களும் ப்ளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்து கிடக்கும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

காவிரி டெல்டாவில் ஏராளமான விளைச்சல் நிலங்கள் தரிசாகவோ , மனைப்பிரிவுகளாகவோ காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீரும் கீழ் நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. ஐப்பசி மாதத்தில் கிணற்றில் கையால் நீரை எடுத்த காலம் போய் ஆழ துளைக்  குழாய்களை நம்ப வேண்டியிருக்கிறது.  ஆறு வற்றிவிட்டாலோ மணல்  எடுப்பவர்களுக்குக் கொண்டாட்டம். நாடு நலம் பெற வேண்டும் என்ற எண்ணம் போய் சுயநலம் தலை விரித்து ஆடுகிறது.
இவ்வளவுக்கும் நடுவில் காவிரி ஆற்றைத் தெய்வ ஆற்றல் உடையதாகக் கருதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கும்பகோணம் போன்ற ஊர்களில் காவிரிக்கு வழிபாடுகள் நடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்தியத்  துறவிகள் அமைப்பின் சார்பில் தலைக்காவிரியில் துவங்கி , காவேரி அம்மனின் திருவுருவச் சிலையை பொன்னி நதி ஓடும் வழியிலுள்ள முக்கியத் தலங்களுக்கு எடுத்துச் சென்று நதிக் கரையில் அபிஷேக ஆராதனைகள் செய்து, அதன் புனிதத்தைக் காப்பாற்றும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். மயிலாடுதுறைக்குக் கடை முக உற்சவம் காணச் சென்றிருந்தபோது , நல்வினைப்பயனாக அன்றைய தினம் அக்குழுவினர் அம்மனின் திருவுருவச் சிலையோடு அங்கு எழுந்தருளியிருந்ததைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அதற்கு முன்னதாக அருகிலுள்ள வதான்யேச்வர சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டு வந்தார்கள்.

காவிரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பல துறவிகளும் பிரமுகர்களும் உரை ஆற்றினார்கள். தலைமை உரை ஆற்றிய திருவாவடுதுறை குரு மகா சந்நிதானம் அவர்கள் , காவிரியின் புனிதம் பற்றியும் அதன் தூய்மையைக் காக்கவேண்டியது பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். படித்துறையில் காவேரி அம்மன் விக்கிரகத்திற்கு அபிஷேகங்கள் செயவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் ஆரத்தி நடைபெற்றது. பெண்மணிகள், விளக்கேற்றி வழிபாட்டு, அவற்றை நதியில் மிதக்க விட்டார்கள். அவை மிதந்து செல்லும் காட்சி இருளை அகற்ற வல்ல தெய்வீக ஒளியாக அமைந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை வழிபடுவதோடு நிறுத்தி விடாமல் வட இந்தியாவில் நடப்பதுபோல் தினமும் வழிபாடு நடை பெற வேண்டும். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்பது அப்போது மெய்யாகும். இவ்வாறு ஆண்டுக்கொருமுறை நடப்பதைக் காண  ஊர் மக்கள் தவறாது வந்து கலந்து கொள்ளவேண்டும். கழிவுகள் கலக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த கூவம் நதி  தற்போது சாக்கடைக் கால்வாய் ஆகி விட்டது போல ஆகி விடும். இப்போதாவது மக்களும் அரசாங்கமும் விழித்துக் கொள்வார்களா?  

3 comments:

  1. Very good article. The attitude of Gratitude must be followed to bestow goodness and this act of Arathi is a very good example.

    Admin - GnanaBoomi.com

    ReplyDelete
  2. quote///அப்போது காவேரிப் படுகையைக் கடப்பவர்கள், வெயிலாக இருந்தாலும் அந்தச் சுடு மணலில் காலணிகளைக் கையில் ஏந்தியபடியே நடப்பார்கள். நமக்கு உணவுக்கு ஆதாரமான அந்தத் தெய்வ நதியை செருப்புக் காலோடு கடப்பது பாவம் எனக் கருதி வந்தார்கள்/// 60 ஆண்டுகக்ளுக்கு முன்பு பள்ளிக்கு செல்லும் போது மாயவரம் துலாக்கட்டத்தில் கைகளில் செருப்பை எடுத்துக்கொண்டு காவிரியை கடக்கும் பொழுது இதே உணர்ச்சிதான் இருந்தது. சுமார் 5-6 வருடம் முன்பு நான் கைகளில் செருப்பை எடுத்துக்கொண்டு அதேமாதிரி நடந்த பொழுது வியப்பாக பார்த்தார்கள் உள்ளூர் வாசிகள். காவிரி மணல் அசிங்கமாக இருந்தது என்பது வேறு விஷயம்.

    ReplyDelete