Thursday, September 5, 2013

இறைவா ஏன் இந்த சோதனை ?

சிவ பூஜை என்று சொன்னாலே அபிஷேகம் தான் முதல் இடம் வகிக்கிறது. அதற்குப் பிறகு பெருமானுக்கு மலர்களாலும் வில்வம் போன்ற இலைகளாலும்   செய்யப்படும்  அர்ச்சனை. இதனைத் திருமூலரும்,                       " புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீர் உண்டு " என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். இவ்வளவும் அன்பு கலந்து செய்யப்படுவது. " இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்..." என்கிறது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பூக்களையும் அபிஷேக நீரையும் சுமந்து செல்பவர்களின் பின்னால் ஆலயத்தை அடைவேன் என்றார் அப்பரும். "பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய்..." என்று சம்பந்தரும் அடியார்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கிறார்.

பூஜை என்பது நியமத்தோடு செய்யப்படுவது.  அதற்குத் தேவையான பசும்பால், மலர்கள் போன்றவற்றின் விலை  இப்போது எட்டாத அளவுக்கு உயர்ந்திருகிறது.  நகரங்களில் பசுக்களைப்  பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், பாக்கெட் பாலே பல இடங்களில் அபிஷேகத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது. ஆகவே, பசும்  பால், பசுந்   தயிர் ஆகியவை சுத்தமாக இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பூ  வாங்கினாலும்  இதே நிலை. பழைய  பூக்களைக் கூடத் தொடுத்து , முழம்  ரூபாய் இருபது, இருபத்தைந்து என்று விற்கிறார்கள். லாபம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை. அதற்காக இப்படியா? பூக்கள் வரத்து குறைந்து விட்டது என்றும், லாரி வாடகை அதிகரித்து விட்டது என்றும் , பண்டிகை  நாள் என்றும் முகூர்த்த நாள் என்றும் பல  காரணங்கள் சொல்லி  விலையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.  பண்டிகை நாட்களின் போது மல்லிகைப் பூவை சேர் ஆயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். வேறு வழி இல்லாமல்  நான்கு முழம் வாங்கப் போய் , விலையைப் பார்த்து  அதிர்ச்சி அடையும் மக்கள் ஒரு முழம் மட்டும் வாங்கி வருகிறார்கள். எப்படிப் போனால் என்ன. வியாபாரிகளுக்கு அவர்கள் நிர்ணயித்த விலையில் பூக்கள் அத்தனையும் வியாபாரம் ஆகி விடுகிறது. கேட்பார் அற்றுக்கிடக்கும் எருக்கம்பூக்களை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே பறித்து வந்துவிட்டுக் காசாக்குகிறார்கள். எந்த மூல தனமும் இல்லாமல் கிடைத்த பொருள் தானே? அதைக் கூடவா மலிவாக விற்க மனம் வரவில்லை? பழத்தையோ கிலோ கணக்கில் விற்கிறார்கள்! நிலைமை இப்படிமோசமாக  இருக்கும்போது, தினமும் வீட்டில் பூஜை செய்பவர் என்ன செய்வார்!

அபிஷேகத்திற்குத் தூய நீராவது கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை தான்! கிணறுகள் வற்றிப்போன நிலையில் குழாய்த் தண்ணீரே  கிடைக்கிறது. அப்பழந் தண்ணீரில் எத்தனை எத்தனையோ அசுத்தங்கள்! ஆழ்குழாய் நீரைப் பயன் படுத்தலாம் என்றால் உப்பு கலந்ததாக இருக்கிறது. ஒரு சில ஊர்களில் அருகாமையில் காவிரி போன்ற புனித நதிகள் ஓடக் கூடும். ஐம்பது ஆண்டுகள் முன்வரை அவற்றின் புனிதமும் தூய்மையும் காப்பாற்றப்பட்டு வந்தது. இப்போது அவற்றில் கலக்கப்படாத அசுத்தமே இல்லை எனலாம்!

இப்படியாகப் பூஜை செய்யக் குந்தகம் ஏற்பட்டுள்ள வேளையில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற சிந்திக்க வேண்டியிருக்கிறது. விநாயக சதுர்த்தி என்று எடுத்துக் கொண்டால், நாமே சிறிய அளவில் களிமண்ணால் பிள்ளையார் செய்து பூஜை செய்யாலாம். விலை கொடுத்து வாங்கினால் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக விற்பதில்லை. காகிதத்தால் ஆன குடையையும் நாமே செய்ய முடியும். இதுவும் வாங்கினால் குறைந்தது பத்து ரூபாய் ஆகிறது. முதல் நாளே அக்கம் பக்கம் சென்றால் நிறைய எருக்கம் பூக்களைப் பறித்து வந்து மாலையாகத் தொடுத்துச் சார்த்தலாம். அருகம் புல்லும் இப்படியே.

வீட்டில்  மல்லிகை,முல்லை,நந்தியாவட்டை,அரளி, பாரிஜாதம் போன்ற பூச்செடிகளை வளர்த்தால் பூஜைக்கும் குறைவு வராது. அதேசமயம்  தூயனவும், அன்றைய தினம் மலர்ந்தனவும் ஆகிய பூக்களைக் கொண்டு பூஜை செய்யலாம். வில்வம்,கிளுவை,நொச்சி போன்ற இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இப்படிச் செய்துவந்தால் பூஜைக்கான பூக்களை விலை கொடுத்து வாங்குவதில்லை என்ற நிலை ஏற்படும்.

விலை அதிகம் ஆகிவிட்டது என்பதால் 108 அல்லது 1008 நாமாக்களால் செய்யப்படும் அர்ச்சனையைக் கையில் இருந்த மலர்கள் குறைவாக இருப்பதால் எப்படிச் செய்ய முடியும்? நியமத்துடன் 1008 தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் சக்கரம் பெற வேண்டித் திருமால் சிவபூஜை செய்தபோது, ஒரு மலர் குறையவே, தாமரைக்குச் சமமான தனது கண்ணையே ஈசன் திருவடிக்குச் சாத்தினார்  என்று புராணம் சொல்கிறது அல்லவா? ஆகவே, புஷ்பத்தாலோ , வில்வ இலைகளாலோ அர்ச்சனை செய்தால் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
இதற்கும் சௌகரியப்படாதவர்கள் உண்டு. வீட்டில் இடமே இல்லாதபோது பூச்செடிகளை எங்கே வளர்ப்பது என்கிறார்கள். அடுக்குமாடிகளில் குடியிருப்போர் நிலை பரிதாபத்திற்குரியது. அங்கு வளர்க்கப்படும் செடிகள் பெரும்பாலும் காட்சிப் பொருள்கள் தான்! நித்திய பூஜை செய்யாதவர்கள்,  அருகில் யாராவது செய்தால் அதைப் பார்ப்பதோடு இயன்ற உதவியும் செய்யலாம். கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொடுத்து ஆலய மூர்த்திகளுக்குச் சார்த்தச் சொல்லலாம்.

ஆனால் வீட்டில் நித்திய பூஜை செய்பவர் நல்ல பசும்பாலோ , மலர்களோ, இலைகளோ கிடைக்காமல் படும் சிரமம் சொல்லுக்கு அடங்காது.  
 " ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் உன்னைப் பூஜிக்க ஆசைப் படுகிறேன், அதைத் தேவரீர் அருள மாட்டீரா, ஏன் இந்த சோதனை " என்று கண்ணீர் பெருக்குவதைத் தவிர என்ன செய்ய முடியும்?  ஒருவாறு மனத்தைத்  தேற்றிக்கொண்டு, " அர்ச்சனை பாட்டே ஆகும் " என்று சொல்லியிருப்பதால் தேவார திருவாசகங்களைப் பாடலாம். ஆனால் அத்தோத்திரங்களிலேயே, இறைவனைத் தூய காவிரியின் நன்னீர் ஆட்டி, சந்தனக் குழம்பும் இண்டை மாலையும்  சார்த்தி, தொடுத்த பூவொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வழிபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறபடியால்  அப்படிப்பட்ட பூஜை செய்யும் பாக்கியத்தை அப்பெருமான் அல்லவா அருள வேண்டும்!  

1 comment:

  1. பூஜை செய்யும் பாக்கியத்தை அப்பெருமான் அல்லவா அருள வேண்டும்!

    இறைவனை வணங்கவும் சோதனை..!

    ReplyDelete