Friday, August 16, 2013

இணைய தளம் நட்புப்பூங்காவாகட்டும்

இணைய தளம் என்பது தகவல்களைப் பரிமாறும் இடமாக மட்டும் இல்லாமல் மக்களை ஒன்றாக இணைக்கும் தளமாக இருக்க வேண்டும். விவாத மேடையாகவோ , காழ்ப்பு உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவோ அது அமைந்து விடக்கூடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது ,விவேகத்தையும் நட்பையும் ஊக்குவிக்கும் பாலமாக இருக்கவேண்டும். பல தகவல்கள் இணையதளத்தில் பகிரப்படும்போது வரம்புகள் மீறப்படுவதைக் காணும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒருவரது கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் தெரிவிக்கட்டும். மாறாக, தனக்குத் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தெரியும்படி அதைப் பகிர்ந்து கொள்வது அவசியம் தானா? சிந்திக்க வேண்டும்.

நமக்குப் பிடித்ததெல்லாம், நமக்குச் சரி என்று தோன்றுவதெல்லாம் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று இக்காலத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறர் குறைகளை சுட்டிக் காட்டத் தயாராக இருக்கும் நாம் , நமது குறைகளைப் பிறர் சுட்டிக் காட்டும் போது  பொங்கி எழுவது ஏன் என்று புரியவில்லை. குறைகள் இல்லாதவர் நம்மில் யார் உளர்? ஆனால் இறைவனோ நமது குறைகளையும் குற்றங்களையும் பாராது குணம் ஒன்றையே கொள்பவன். இதனை,"குறை உடையார் குற்றம் ஒராய் ; கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்றார் ஞானசம்பந்தர் .

ஒரு பயனுள்ள தகவலை ஒரு அன்பர் பகிர்ந்துகொள்ளும் போது அதைப் படிப்பதோ அல்லது பிறரிடம் பகிர்ந்து கொள்வதோ தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அதற்குப் புதுச் சாயம் பூசி  உள்நோக்கம் கற்பிப்பவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அண்மையில் ஓர் அன்பர் , சைவப்பெரியார் திரு CKS அவர்கள் எழுதிய பெரியபுராண உரையைக் கணினிமூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முகவரியைத் தெரிவித்திருந்தார். அதனை விலை கொடுத்து வாங்குவதானால் சுமார் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகலாம். இந்நிலையில் இந்தச் சேவை இறைவன் தந்த வரப்பிரசாதமே. இச்செய்தியை ஒரு குழுவுக்கே அந்த அன்பர் தெரிவித்திருந்தார். இதைக் கண்ட மற்றொரு அன்பர் வடமொழியில் இருக்கும் பக்த விஜயத்தைச்  சிலர் உரையாற்றி வருவதால், பிற்காலத்தில்சேக்கிழார் அருளிய   பெரியபுராணம்  அந்த வடமொழி நூலின் மொழியாக்கமே என்று கூறி விடுவர் என்றும் கூறியதோடு, கடும் சொற்களால் தாக்கி இருந்தார்.
உண்மையில் பார்த்தால் தகவலைப் பரிமாறியவரும், அதற்கு விடை கூறியவரும் நிரம்பப் படித்தவர்கள். நிறைய ஆலயங்களைத் தரிசித்தவர்கள். நியமத்தோடு இருப்பவர்கள். சமயத்தின் லக்ஷக்கணக்கானத் தூண்களில் இவர்களும் அடங்குவர். இறைவனையோ சமயத்தையோ யாராவது பழித்தால் உள்ளம்  வெதும்புபவர்கள்.இப்படி இருக்கும்போது உட்பூசல்கள் தேவை தானா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் இவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது இப்படிச் சர்ச்சைகளில் ஈடுபடலாமா?

கடவுளே இல்லை என்று நாத்தழும்பேற நாத்திகம் பேசுபவர்களைக் கூட மறந்துவிட்டு, நம்மவர்களையே நாம் ஏசிக்கொள்வது எந்த வகையில் நியாயம்? இந்த ஏக்கமும் தாக்கமும் , கோயில் நிலங்களின் குத்தகைப் பாக்கி வைத்துள்ளவர்கள் மீதோ, இடிந்த கோயில்களைப் பாராது இருக்கும் அற நிலையத்துறை மீதோ காட்டப்படுவதில்லையே! ஒரு கால பூஜைக்கே தவிக்கும் ஏராளமான கோயில்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பலாம் அல்லவா?

ஒவ்வொருவரும் தங்கள் பணியில் நின்று இறைவனுக்குத் தொண்டாற்றுவர். பணி செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். பணிகள் பலவிதம். திருப்பள்ளி எழுச்சியும் அதைத்தானே உணர்த்துகிறது. வீணை வாசிப்பது, வேதமும் தோத்திரமும் இயம்புவது, தொடுத்த மலரோடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வணங்குவது, உழவாரப்பணி செய்வது, அடியார்களைப் போற்றுவது போன்ற எத்தனையோ பணிகள் இதில் அடங்கும். இவற்றில் எந்தப் பணியும் ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்தது அல்ல . பெரிய புராணத்தை ஆழ்ந்து வாசித்தவர்களுக்கு அது நன்றாகப் புரியும். " எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசனைக் குறுகிய வட்டத்துக்குள் அடக்கிக் கொள்ள முயற்சிப்பது வீணான செயல். மொழிகள் இறைவனது வடிவம் என்பர்  பெரியோர். இதில் எந்த மொழி இறைவனின் சொந்த மொழி என்றும் , எது முதலில் தோன்றியது என்றும், எந்த நூல் முந்தியது என்றும் வாதிட்டுக் காலத்தை வீணாக்காமல் ஈசன் திறமே பேணிப் பணியும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியப்பரைக் காணலாம் அன்றோ?  

இணையதளத்தில் வாதிடும் சகோதரர்களே ! உங்களிடம் சமய உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. உங்கள் அருந்தொண்டு திசை மாறலாகாது. உங்களது சமய நம்பிக்கை இணையற்றது. அதனை ஆக்கபூர்வமாக அடியார்களுக்கு அளித்து உதவுங்கள். சமயம் பற்றி அறிய வேண்டுமானால் மக்கள் பத்திரிகைகளையே நாட வேண்டிய  இத்  தருணத்தில் தாங்கள் முன்வந்தால் எத்தனையோ மக்களுக்கு வழிகாட்ட முடியும் என்பது நிச்சயம். அதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் . திருவருள் துணை நிற்பதாக.
  

4 comments:

  1. அய்யா தங்களுடைய சிவ பக்தியும் ஆன்மீக உணர்வும் பாராட்டத்தக்கது உங்களுடைய சிவ சேவை மேன்மேலும் தொடர அந்த ஈசன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  2. Civayanama. Aiya,Right message in a right time.


    Adiyen.Arumugam Raju.

    ReplyDelete
  3. Sorry I cannot write in Tamil. If our Saint Gnanasambandar could 'wipe' off two Pura Chamayams in just a decade, what is the need to worry or fear.

    Namashivaya

    ReplyDelete
  4. நல்ல பதிவு. ஈகோ என்று ஆட்டி வைக்கிறது. என்ன செய்ய. இப்போதெல்லாம் வாதிடுவதே இல்லை!

    ReplyDelete