Saturday, July 13, 2013

மாறாத செல்வம்

என்றைக்குமே மங்காத செல்வமாக மங்கையர் செல்வத்தைக் கருதினார்கள். காரணம், வீட்டின் வளர்ச்சிக்கும்,நாட்டின் வளர்ச்சிக்கும்,சமய மறுமலர்ச்சிக்கும் பெண்கள் ஆற்றிய தொண்டு பற்றியே இக்கருத்து நிலவியது. ரிஷிகள் காலம் தொட்டே , ரிஷிபத்தினிகளுக்கும் இதில் முக்கிய பங்கு இருந்துவந்ததாக அறிகிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரும். பாண்டி மாதேவியும் ஆன மங்கையர்க்கரசி யின் பெருமுயற்சியால் சைவம் திருஞானசம்பந்தர் மூலமாக  மீண்டும் நிலைநிறுத்தப் பட்டது என்பதைப் பெரியபுராணம் மூலம் அறிந்து கொள்கிறோம். எனவே , மங்கையர்க்கரசியாரை, "எங்கள் குல தெய்வம்" என்று போற்றுகிறார் சேக்கிழார்.

இன்றைய நிலையைப் பார்க்கும்போது சற்றுக் கவலை ஏற்படுகிறது. இந்த எந்திர காலத்தில் பஞ்சேந்திரியங்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை! இளம் வயதினர் தான் அதன் வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்றால் வயதானவர்களும் இப்படியா! அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள்ளாக இப்படி ஒரு மாறுதலா!

முன்பெல்லாம் பிரதோஷத்தன்று காப்பரிசியும் கையுமாக நந்தியைச் சுற்றிலும் நின்ற பெண்மணி -களின் கூட்டம்   இப்போது எங்கே போயிற்று? தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் ஜப மாலையும் கையுமாக இருந்த பாட்டிகள் இப்போது எங்கே போனார்கள்? விபூதி ருத்ராக்ஷம் தரித்துக் கொண்டு பூஜை பெட்டியோடுபல ஊர்களுக்கும்  பிரம்மோற்சவ காலங்களில் சென்று, சுவாமி தீர்த்தம் கொடுக்கும் போது, தானும் ஸ்நானம் செய்து ஆனந்தப்பட்ட அன்பு உள்ளங்களைத் தேடினாலும் கிடைப்பது அரிதாக ஆகிவிட்டதே!

தேசாந்திரிகள் முன்பின் தெரியாதவர்கள் எத்தனை பேர் வந்தாலும் முகம் கோணாமல் வரவேற்று அன்னமிட்டு உபசரிக்கும் உயர்ந்த பண்பு ஏன் மறைந்து விட்டது? விலைவாசி ஏறிவிட்டது என்று காரணம் சொல்வார்களா? அக்காலத்தில் வசதி இல்லாதவர்களும் இந்த தர்மத்தைப் பண்ணி வந்தபோது நாம் மட்டும் ஏன் காரணம் கற்பிக்கிறோம்?

காலை- மாலைகளில்  வீட்டு வாசலில் லக்ஷ்மிகளை சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது போய் இப்போது எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது தேவைப் படுவதெல்லாம் சொகுசான வாழ்க்கை மட்டுமே. இதற்கு வயோதிகர்களும் ஏன் பலி ஆக வேண்டும் என்று புரியவில்லை! அறுபது வயதைத் தாண்டிய பிறகாவது கொஞ்சம் விவேகம் ஏற்பட்டால் நல்லது. அந்த வயதிலும் இளம் வயதினருக்கு சமமாகத் தானும் தொலைக் காட்சிக்கு அடிமையாவதைப் பல வீடுகளில் காண்கிறோம்.
மாலை நேரங்களில் நெற்றியில் விபூதி - குங்குமம் தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்தும், சிவாலய தரிசனம் செய்து கொண்டும் வாழ்ந்தது போய், சீரியல்களைத் தினமும் தவறாமல் பார்ப்பவர்களை   என்ன சொல்வது! அந்த வேளையில் சீரியலில் காட்டப் படும் அமங்கலமான நிகழ்ச்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! கோவிலின் சன்னதித் தெரு மற்றும் நான்கு வெளி வீதிகளில் இருப்பவர்களாவது சுவாமி தரிசனத்திற்குச்  செல்லக் கூடாதா?  கோவில்கள் இப்படியா வெறிச்சோடிக் கிடக்க வேண்டும் ?

ஆண் வர்க்கம் பாரம்பர்ய உடைகளைக் கைவிட்டபோதும் பெண் மணிகளில் பலர் அப்படிச் செய்யாமல் இருந்து வந்தனர். தற்போது அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இதையெல்லாம் யார் கேட்க முடியும்? எங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று பதில் வரும். அவரவர்களாகவே சிந்திக்கத் தொடங்கினால் மட்டுமே நல்லது. ஆண் வர்க்கத்தைக் குறிப்பிடும் போது ஆண்கள் என்று மட்டும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெண்களைக் குறிக்கும்போது,      பெண்மணிகள் என்றே சொன்னார்கள். ஆண்மணிகள் என்று யாரும் சொல்வதில்லை. ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பாரத தேசத்தில் ஒரு மணி யாகத் திகழ வேண்டும்.

ஸ்திரீ தர்மம் நிலைக்கும் வரை சனாதன தர்மத்திற்கு ஒரு ஆபத்தும் வந்து விடாது. சக்தியின் அம்சமான அவர்களை நாடு போற்ற வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். சிவனடியார்களே எங்கள் கணவராக வரவேண்டும் என்று பாவை நோன்பு நோற்றார்கள். இந்த வரத்தை எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் கிழக்கே உதித்தால் என்ன அல்லது மேற்கே உதித்தால் என்ன என்கிறார்கள் திருவாசகம் காட்டிய பெண்மணிகள். அதே பாரம்பர்யம் இனியும் தொடர வேண்டும். எக்காலத்தும் இதிலிருந்து மாறாத பெண்மணிகளாகத்  தாய்க்குலம் திகழ்ந்து உலகைக் காக்கவேண்டும் என்று அன்பில் பிரியாத பிராட்டியை ஒரு பாகம் வைத்த அகிலாண்ட நாயகனைப் பிரார்த்திப்போமாக.
   

1 comment:

  1. Ayya, As a woman i too agree ur words. I too feel the same at many times. Even i can see more men in temple than the woman. " I pray to Siva, will give wisdom to them and save our world" Oh Namashivaya!!!.

    ReplyDelete