Monday, May 20, 2013

ஒரு கால பூஜை !


ஒரு கால பூஜையை மேலும் விஸ்தரிப்பதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு காலம் கூட ப்  பூஜை நடைபெறாமல் இருக்கும் கோயில்களுக்கான ஏற்பாடு இது. இதன்படி, ரூ பத்தாயிரத்தை  ஊரார்கள் செலுத்தினால், அரசாங்கம் தன் பங்காக, ரூ தொண்ணூறாயிரம் செலுத்தி, மொத்தம் ஒரு லக்ஷ ரூபாயை அக்  கோவிலின் வங்கிக்கணக்கில்  வைப்பு நிதியை ஏற்படுத்தும். இதனால் வரும் வட்டித்தொகை, ஒருகால பூஜைக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டின்படி,மாதம் தோறும் ரூ ஆயிரத்திற்கும் குறைவாகவே  வட்டி வரும். இதை வைத்துக்கொண்டு, நைவேத்திய சாமான்கள் வாங்கவும், அர்ச்சகரது  மாதாந்திர சம்பளத்திற்கும் ஒருபோதும் இவ்வட்டித்தொகை போதுமானதாக இருக்காது. அதிலும் ஒரு கால பூஜையை பல கிராமக் கோ யில்களில் அருகிலுள்ள ஊர்களிளில் இருந்து சைக்கிளிலும்,நடந்து வந்தும் செய்து விட்டுப் போகிறார்கள். இதற்குக் கொடுக்கப்படும் மாதாந்திர சம்பளமோ சில நூறுகளே! பல ஊர்களில் தங்கள் சொந்த செலவில் அர்ச்சகர்களே பழுதான மின்சார பல்புகளை மாற்றிக்கொள்ள  வேண்டியிருக்கிறது.

கோவில் நிலங்களிளிருந்தும், கட்டட வாடகை போன்ற வற்றிலிருந்தும் வருவாய் ஒழுங்காக வந்துகொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அரசாங்கமும் மக்களும் யோசிக்க வேண்டும். சுயாட்சி நிறுவனமாக விளங்கவேண்டிய கோயில்கள், பிறரிடம் கைஎந்தவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் யார்? அற நிலையத் துறை சட்டம் இதற்கு வகை செய்யாவிட்டால் தகுந்த சட்ட -மாற்றங்கள் ஏன் கொண்டு வரப் படுவதில்லை? சட்ட சபை நடக்கும் போது, இந்த அவலநிலையை ஏன் விவாதிக்க முன் வருவதில்லை? சலுகைகள் பலருக்கும் வாரி வழங்கப்படும்போது ஆலய சிப்பந்திகள் மட்டும் விதி விலக்காவது ஏன்? ஆலய நிர்வாகத்திற்கென்றே ஒரு அமைச்சகம் இருந்தும், பல்லாண்டுக் கணக்கில் இன்னும் தீர்வு ஏற்படாதது ஏன்?

அரசாங்கத்தைக் குறை கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் அவரவர் பங்கைச் செய்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கிராமங்களில்  இன்னமும் வாழ்பவர்களானாலும் , வெளியூருக்கு இடம் பெயர்ந்து வாழ்பவர்களானாலும் கோயில் பக்கம் வந்து பார்த்தால் பிரச்சினைக்கு ஒரு முடிவு பிறக்கும். குத்தகைக்காரர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் மனசாட்சி உண்டு அல்லவா? கோவிலை ஏமாற்றினால் கேட்பார் இல்லை என்ற எண்ணம் வரலாமா? சிவ சொத்து குல நாசம் என்பதை அவர்கள் கேட்டிருப்பார்களே! அவ்வாறு ஏமாற்றியவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதையும் பார்த்துமா இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள்?அதனால் தான் காவிரி பொய்த்து விட்டதோ? தெய்வக்குற்றத்திற்கு ஆளாகாமல் ,செய்த பிழைக்கு வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால், அவர்களது குற்றங்களை எல்லாம் அவன் பொறுத்து, நலம் மிகக் கொடுப்பான் என்பது உறுதி.

அரசாங்கமோ , குத்தகைக் காரர்களோ மனம் வைக்கும் வரையில் கோவில்களை அப்படியே விட்டுவிட முடியாது. அவரவர்கள் வசிக்கும் கிராமங்களிலாவது, பூஜை நடைபெறச் செய்ய வேண்டும். அர்ச்சகர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும். இவ்வளவு தெய்வ குற்றங்கள் நடை பெறும் போதும் கருணைக் கடலான கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை. இயற்கை சீற்றங்கள் வந்தபோதிலும் அதிக பாதிப்பு ஏற்படாத வண்ணம் நாம் காக்கப்படுகிறோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அண்மையில் தோன்றிய "மாகேசன்" புயலும் மகேசன் அருளால் திசை மாறிச் சென்றது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களிலும் பூஜை நடத்துவது சிரமாக இருக்கிறது. திருப்பணிக்கு வசூல் செய்பவர்கள், நித்திய பூஜைக்கு வழி செய்யாததே இதற்குக் காரணம். இவ்வளவு சிரமமான கால கட்டத்திலும், அன்புள்ளம் கொண்டவர்கள் மூலமாகப் பூஜைகளை ஏற்றுக்கொள்கிறான் இறைவன். மாதாந்திர பூஜை செலவுகளை ஏற்க முன் வருகிறார்கள். நமது சபை அன்பர்களும் அப்பணியில் முன்னிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, திருவருளால் அன்பு உள்ளங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை உணருகிறோம்.இதற்கு மேலும் இறைவனிடம் கேட்க என்ன வரம் இருக்கிறது? "உனக்குப் பணி செய்ய உந்தன்னை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா.." என்ற வாக்கை நினைத்து மனம் நெகிழ்வோமாக.

No comments:

Post a Comment