



கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்பவர்கள் சிவானந்தம்பெறுவதாகத் திருமூலர் என்ற சித்தர் சொல்கிறார் தற்காலத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஜபம் செய்பவர்களைப் பார்த்து என்ன சொல்வது? ஜபம் என்பது மனத்தை லயப்படுத்தி நிர்மலம் ஆக்குவது. இப்போதெல்லாம் அதை எப்படி செய்வது என்று பணம் கொடுத்துக் கற்றுக்கொள்கிறார்கள். நாம் இதை த்யான சுலோகம் சொல்லி அந்த தெய்வத்தின் உருவத்தை மனதில் த்யானித்து மந்திரம் மூலம் திரும்பத் திரும்பத் த்யாநிக்கிறோம். இந்த ஜபத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று செய்ய ஆரம்பிக்கிறோம்.
நாம் முதன்முதலில் உபதேசம் பெறுவது தகப்பனாரிடமிருந்து காயத்ரி மந்திரத்தையே.ஆகவே தகப்பனார் முதல் குரு ஆகிறார். எந்த ஒரு உபதேச மந்திரமும் கொஞ்ச நாள் மட்டும் பண்ணிவிட்டு விட்டுவிடுவதற்கு அல்ல. ஆயுள் முழுவதும் செய்ய வேண்டியது மந்திர ஜபம். தனது குமாரனுக்கும் தகப்பனரே காயத்ரியை உபதேசிக்கிறார். நாம் தினமும் செய்யத் தவறியதை குமாரனுக்கு உபதேசம் செய்ய என்ன யோக்யதை இருக்கிறது என்று சந்த்யா வந்தனம் செய்யாத ஒவ்வொரு தகப்பனும் எண்ணிப் பார்க்கவேண்டும். சந்த்யை செய்யவேண்டும் என்று புத்திரனைப் பார்த்து அவன் சொன்னால் நீங்கள் மட்டும் பண்ணாமல் இருக்கலாமா என்று பதில் வரும். உபநயனம் செய்து தரும் வாத்யாரும் பிரம்மோபதேசம் ஆனவுடன் தக்ஷினையை வாங்கிக்கொண்டு புறப்படுவதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர உபதேசம் பெற்ற வடுவுக்கு சந்த்யா மந்திரங்களை சொல்லிக்கொடுக்காமல் சென்று விடுகிறார். அந்தப் பையனின் நிலையோ பரிதாபம். சொல்லிக்கொடுப்பவரைத் தேடி அலைகிறான். வீட்டில் யாரும் சந்த்யாதி கர்மாக்களைப் பண்ணாவிட்டால் தானும் செய்யாமல் விட்டு விடுகிறான். நேரம் இல்லை என்ற சாக்கு வேறு. ரிடையர் ஆனவர்களுக்கே சந்த்யை செய்ய நேரம் இல்லாமல் இருக்கும் போது படிக்கும் குழந்தை சாக்கு சொல்வதில் ஆச்சர்யமில்லை. இதற்காகத்தான் பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்து காட்ட வேண்டியது முக்கியம் ஆகிறது.
ஆவணி அவிட்டம் காயத்ரி ஜபம் வந்தால் வேறு வழி இல்லையே என்று மனதில் திட்டிக்கொண்டு வேண்டா வெறுப்போடு பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுகிறான். ஒரு சமயம் பார்த்தால் இப்படி வேஷம் போடுகிறார்களே என்று வேதனையாக இருக்கிறது.கண்டதுக்கு எல்லாம் லீவு போட முடிகிறது.உபாகர்மா அன்று மட்டும் லீவு போட மனம் இல்லை. வாத்தியார்களும் இந்த அவசரத்திற்கு உடந்தை.ஹோமம் செய்யாமல் பூணலை மாட்டி விட்டு ஆபீசுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எப்படியோ தக்ஷிணை வந்தால் சரி.
இதை எல்லாம் ஹாச்யத்துக்காக எழுதுவதாக நினைக்க வேண்டாம். பிராயச்சித்த கர்மாவை இப்படி வீணடித்து விட்டார்களே என்ற ஆதங்கத்தால் எழுத வேண்டி இருக்கிறது. இனிமேலும் பெரியவர்களை திருத்த முனைந்து நேரத்தை வீணடிக்காமல் அடுத்த வாரிசுகளுக்கு நல்ல வழியைக் காட்டுவோம். பெரியவர்கள் பிரதோஷ வேளையிலும் டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கட்டும். குழந்தைகளாவது விழித்துக்கொண்டு நம் தர்மத்தைக் காப்பாற்ற முன் வரும்படி வேத மாதா அனுக்ரகம் செய்ய வேண்டும்.
நாளைய தினம் காயத்ரி ஜபம் செய்யும்போது ஸ்ரீ பரமேச்வரனிடம் இந்த பிரார்த்தனையை எல்லோரும் செய்ய வேண்டும்.
मंगलम दिशतुमे विनायको मंगलम दिशतुमे षडाननः
मंगलम दिशतुमे महेश्वरी मंगलम दिशतुमे महेश्वरः
-- Sri Skaandha Maha Puranam
உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து , காத்து ,அருளி ,கருணையால் முக்தி வரம் தந்து உய்விக்கும் முழுமுதல் கடவுளை நாம் அறிய முயல்வது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல ஆகும். தெய்வத்தை ஆராய்ச்சியின் மூலம் அறியமுடியாது. அனுபவத்தாலும் அவன் அருளாலும் மட்டுமே உணர முடியும். எல்லாவற்றிலும் நிறைந்து விளங்கும் இறைவனை இப்படிப்பட்டவன் என்று வரையறைக்குள் கொண்டுவர முடியாது.
இறைவன் உருவமும் அருவமும் உருவாருவமும் ஆனவன் என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அருவமாக இருக்கும் பரம்பொருள் நமக்கு எளிமையாக உருவம் கொண்டு காட்சி அளிக்கிறான். எத்தனையோ கடவுள் வடிவங்களில் தோன்றுவதைக் கண்டு இத்தனை கடவுள் வடிவங்கள் எதற்காக என்று கேட்பது அறியாமை. அவரவர்களது பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி வடிவம் கொண்டு விளங்குகிறான் என்பதே நாம் அறிய வேண்டுவதாகும்.
சிறு வயதிலிருந்தே ஏற்படும் பக்தி வளரக்கூடியது. நிலைத்து நிற்பது. குழந்தைகளும் விரும்பும் வடிவில் இறைவன் விநாயகர் வடிவில் அருளுகிறான். ஆகவே அக்குழந்தை தெய்வம் பெரியவர்களையும் தன்னிடம் ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை. குழந்தைகள் அப்பால கணபதியைத் தங்களைப்போல் ஒரு குழந்தையாக பார்ப்பார்கள். பெரியவர்களோ அவனிடம் எல்லாத் தத்துவங்களையும் பார்ப்பார்கள். குழந்தைகளுக்குத் தத்துவமோ மந்திரமோ தெரியாவிட்டாலும் பெரியவர்களுக்கே இல்லாத கள்ளம் கபடம் இல்லாத மனம் இருப்பதால் தானோ என்னவோ அவர்களுக்கு இறைவன் எளியவனாகிறான்.
சிதம்பரத்துக்கு அருகில் திருநாரையூர் என்று ஒரு ஊர். அங்கே உள்ள சிவாலயத்தில் பூஜை செய்பவர் வெளியூர் சென்றதால் அவரது பிள்ளை பூஜை செய்யப் போனான். பிள்ளையார் நைவேத்தியத்தை சாப்பிடுவர் என்று நம்பினான் அந்த நம்பி. தனது பூஜையில் ஏதோ குறை இருப்பதாலேயே பிள்ளையார் சாப்பிடவில்லை என்று நினைத்து தன் தலையை அருகிலிருந்த கல்லில் மோதிக்கொள்ள ஆரம்பித்தான். அப்போது காட்சி தந்த விநாயகர் அவன் அளித்த மோதகாதிகளைத் தும்பிக்கையால் எடுத்து சாப்பிட்டதோடு அந்தக் குழந்தைக்கு எல்லாக் கலைகளையும் உபதேசித்தார். சிதம்பரத்தில் திருமுறை சுவடிகள் இருக்கும் இடத்தையும் நம்பிக்கு அருளியவர் இந்த விநாயக வள்ளல்.
ஆதிதம்பதிகளான பார்வதி பரமேஸ்வர குமாரனாக கணபதி தோன்றியதைக் குறிக்கும் கதைகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஞானப்பழத்தைப் பெறுவதற்காக முருகன் மயிலேறி உலகை வலம் வரும் முன்பு தந்தையையும் தாயையும் வலம் வந்து பழம் பெற்றார் பிள்ளையார். உலக வலம் முடிந்த தம்பியை அப்பழத்தை தந்து சமாதானமும் செய்கிறார். உமாமகேச்வரர்களுக்குள் உலகத்தை கண்டவர் விநாயகர். உலகத்தையே உமாமகேச்வர வடிவமாகக் கண்டவர் முருகப்பெருமான்.
இனிக் கதைகளை விட்டுக் கொஞ்சம் விநாயக வடிவங்களையும் சில அடிப்படைத் தத்துவங்களையும் பற்றிக் காண்போம்.
அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் இந்த குழந்தை சுவாமி அணுவுக்குள் அணு வாகவும் இருப்பவர்.மஞ்சளில் பிடித்துவைத்து மகா கணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி என்றால் அதற்குள் காக்ஷி அளிக்கிறார். அதே சமயத்தில் 32 விதமான ரூபங்களும் அவருக்கு உண்டு. shreeganesh.com என்ற இணைய தளத்தில் இம் மூர்த்தி ரூபங்களை காணலாம்.
விநாயகருக்குள் சிவசக்தி அம்சங்களையும் மனித மிருக ரூபங்களில் கலப்பையும் காண முடிகிறது. மகேச்வர புத்திரன் என்பதற்காக பின் வலது கையில் மழு (பரசு) வும் உமா புத்திரன் என்பதற்காக பின் இடது கையில் பாசமும் வைத்திருக்கிறார்.நெற்றியில் இளம் சந்திர கலை விளங்குவதால் பால சந்திரர் என்று போற்றப்படுகிறார். (பாலம் என்றால் நெற்றி என்பது பொருள்).
தலைக்கு மேல் மிருகத்தையும் கீழே மனித உடலும் உள்ள சங்கமமாக காக்ஷி தருகிறார். வலது புறம் உள்ள தந்தத்தை (மகா பாரதம் எழுதவும் /அசுரனை அழிக்கவும்) கையில் ஏந்தியுள்ளார். இடது முன்கையில் மாம்பழம்/மோதகம் இருக்கிறது. தும்பிக்கையில் தாய் தந்தையை பூஜிக்க அபிஷேக கலசம் ஏந்தியுள்ளார். எல்லா அண்டங்களும் இவருக்குள் அடக்கம் என்று காட்ட வயிறு பெரிதாகத் தோன்றுகிறது. மொத்தத்தில் இவர் உருவம் ஓம்கார வடிவில் விளங்குகிறது. இவரே மூலாதார மூர்த்தி.
கணேச மகிமை தொடரும்