Thursday, September 5, 2013

இறைவா ஏன் இந்த சோதனை ?

சிவ பூஜை என்று சொன்னாலே அபிஷேகம் தான் முதல் இடம் வகிக்கிறது. அதற்குப் பிறகு பெருமானுக்கு மலர்களாலும் வில்வம் போன்ற இலைகளாலும்   செய்யப்படும்  அர்ச்சனை. இதனைத் திருமூலரும்,                       " புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீர் உண்டு " என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். இவ்வளவும் அன்பு கலந்து செய்யப்படுவது. " இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்..." என்கிறது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பூக்களையும் அபிஷேக நீரையும் சுமந்து செல்பவர்களின் பின்னால் ஆலயத்தை அடைவேன் என்றார் அப்பரும். "பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய்..." என்று சம்பந்தரும் அடியார்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கிறார்.

பூஜை என்பது நியமத்தோடு செய்யப்படுவது.  அதற்குத் தேவையான பசும்பால், மலர்கள் போன்றவற்றின் விலை  இப்போது எட்டாத அளவுக்கு உயர்ந்திருகிறது.  நகரங்களில் பசுக்களைப்  பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், பாக்கெட் பாலே பல இடங்களில் அபிஷேகத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது. ஆகவே, பசும்  பால், பசுந்   தயிர் ஆகியவை சுத்தமாக இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பூ  வாங்கினாலும்  இதே நிலை. பழைய  பூக்களைக் கூடத் தொடுத்து , முழம்  ரூபாய் இருபது, இருபத்தைந்து என்று விற்கிறார்கள். லாபம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை. அதற்காக இப்படியா? பூக்கள் வரத்து குறைந்து விட்டது என்றும், லாரி வாடகை அதிகரித்து விட்டது என்றும் , பண்டிகை  நாள் என்றும் முகூர்த்த நாள் என்றும் பல  காரணங்கள் சொல்லி  விலையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.  பண்டிகை நாட்களின் போது மல்லிகைப் பூவை சேர் ஆயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். வேறு வழி இல்லாமல்  நான்கு முழம் வாங்கப் போய் , விலையைப் பார்த்து  அதிர்ச்சி அடையும் மக்கள் ஒரு முழம் மட்டும் வாங்கி வருகிறார்கள். எப்படிப் போனால் என்ன. வியாபாரிகளுக்கு அவர்கள் நிர்ணயித்த விலையில் பூக்கள் அத்தனையும் வியாபாரம் ஆகி விடுகிறது. கேட்பார் அற்றுக்கிடக்கும் எருக்கம்பூக்களை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே பறித்து வந்துவிட்டுக் காசாக்குகிறார்கள். எந்த மூல தனமும் இல்லாமல் கிடைத்த பொருள் தானே? அதைக் கூடவா மலிவாக விற்க மனம் வரவில்லை? பழத்தையோ கிலோ கணக்கில் விற்கிறார்கள்! நிலைமை இப்படிமோசமாக  இருக்கும்போது, தினமும் வீட்டில் பூஜை செய்பவர் என்ன செய்வார்!

அபிஷேகத்திற்குத் தூய நீராவது கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை தான்! கிணறுகள் வற்றிப்போன நிலையில் குழாய்த் தண்ணீரே  கிடைக்கிறது. அப்பழந் தண்ணீரில் எத்தனை எத்தனையோ அசுத்தங்கள்! ஆழ்குழாய் நீரைப் பயன் படுத்தலாம் என்றால் உப்பு கலந்ததாக இருக்கிறது. ஒரு சில ஊர்களில் அருகாமையில் காவிரி போன்ற புனித நதிகள் ஓடக் கூடும். ஐம்பது ஆண்டுகள் முன்வரை அவற்றின் புனிதமும் தூய்மையும் காப்பாற்றப்பட்டு வந்தது. இப்போது அவற்றில் கலக்கப்படாத அசுத்தமே இல்லை எனலாம்!

இப்படியாகப் பூஜை செய்யக் குந்தகம் ஏற்பட்டுள்ள வேளையில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற சிந்திக்க வேண்டியிருக்கிறது. விநாயக சதுர்த்தி என்று எடுத்துக் கொண்டால், நாமே சிறிய அளவில் களிமண்ணால் பிள்ளையார் செய்து பூஜை செய்யாலாம். விலை கொடுத்து வாங்கினால் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக விற்பதில்லை. காகிதத்தால் ஆன குடையையும் நாமே செய்ய முடியும். இதுவும் வாங்கினால் குறைந்தது பத்து ரூபாய் ஆகிறது. முதல் நாளே அக்கம் பக்கம் சென்றால் நிறைய எருக்கம் பூக்களைப் பறித்து வந்து மாலையாகத் தொடுத்துச் சார்த்தலாம். அருகம் புல்லும் இப்படியே.

வீட்டில்  மல்லிகை,முல்லை,நந்தியாவட்டை,அரளி, பாரிஜாதம் போன்ற பூச்செடிகளை வளர்த்தால் பூஜைக்கும் குறைவு வராது. அதேசமயம்  தூயனவும், அன்றைய தினம் மலர்ந்தனவும் ஆகிய பூக்களைக் கொண்டு பூஜை செய்யலாம். வில்வம்,கிளுவை,நொச்சி போன்ற இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இப்படிச் செய்துவந்தால் பூஜைக்கான பூக்களை விலை கொடுத்து வாங்குவதில்லை என்ற நிலை ஏற்படும்.

விலை அதிகம் ஆகிவிட்டது என்பதால் 108 அல்லது 1008 நாமாக்களால் செய்யப்படும் அர்ச்சனையைக் கையில் இருந்த மலர்கள் குறைவாக இருப்பதால் எப்படிச் செய்ய முடியும்? நியமத்துடன் 1008 தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் சக்கரம் பெற வேண்டித் திருமால் சிவபூஜை செய்தபோது, ஒரு மலர் குறையவே, தாமரைக்குச் சமமான தனது கண்ணையே ஈசன் திருவடிக்குச் சாத்தினார்  என்று புராணம் சொல்கிறது அல்லவா? ஆகவே, புஷ்பத்தாலோ , வில்வ இலைகளாலோ அர்ச்சனை செய்தால் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
இதற்கும் சௌகரியப்படாதவர்கள் உண்டு. வீட்டில் இடமே இல்லாதபோது பூச்செடிகளை எங்கே வளர்ப்பது என்கிறார்கள். அடுக்குமாடிகளில் குடியிருப்போர் நிலை பரிதாபத்திற்குரியது. அங்கு வளர்க்கப்படும் செடிகள் பெரும்பாலும் காட்சிப் பொருள்கள் தான்! நித்திய பூஜை செய்யாதவர்கள்,  அருகில் யாராவது செய்தால் அதைப் பார்ப்பதோடு இயன்ற உதவியும் செய்யலாம். கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொடுத்து ஆலய மூர்த்திகளுக்குச் சார்த்தச் சொல்லலாம்.

ஆனால் வீட்டில் நித்திய பூஜை செய்பவர் நல்ல பசும்பாலோ , மலர்களோ, இலைகளோ கிடைக்காமல் படும் சிரமம் சொல்லுக்கு அடங்காது.  
 " ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் உன்னைப் பூஜிக்க ஆசைப் படுகிறேன், அதைத் தேவரீர் அருள மாட்டீரா, ஏன் இந்த சோதனை " என்று கண்ணீர் பெருக்குவதைத் தவிர என்ன செய்ய முடியும்?  ஒருவாறு மனத்தைத்  தேற்றிக்கொண்டு, " அர்ச்சனை பாட்டே ஆகும் " என்று சொல்லியிருப்பதால் தேவார திருவாசகங்களைப் பாடலாம். ஆனால் அத்தோத்திரங்களிலேயே, இறைவனைத் தூய காவிரியின் நன்னீர் ஆட்டி, சந்தனக் குழம்பும் இண்டை மாலையும்  சார்த்தி, தொடுத்த பூவொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வழிபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறபடியால்  அப்படிப்பட்ட பூஜை செய்யும் பாக்கியத்தை அப்பெருமான் அல்லவா அருள வேண்டும்!  

Saturday, August 24, 2013

தமிழ் எழுத்துக்களின் நிலை

தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிப் பேசும்போதுமட்டும் எல்லோருக்கும் தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள் பற்றிய ஞாபகம் வந்துவிடும். தமிழ்  வளர்ச்சிக்குப்   பக்தி இலக்கியங்கள் ஆற்றிய தொண்டைப் பற்றி மட்டும் ஏனோ நினைப்பதில்லை. ஏராளமான  நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் அவற்றைப் போற்றுவார் சிலரே. நல்ல வேளையாகச் சில உயர்ந்த உள்ளங்களின் பெருமுயற்சியால் பல நூல்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுக் காப்பாற்றப் படுகின்றன.

வரலாற்று ஆய்வாளர்களும் யார் காலத்துக் கல்வெட்டு என்பதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர, அம்மன்னர்கள் காட்டிய இறை வழிபாடு, கோயில் பாதுகாப்பு,கோயில் திருப்பணி ஆகியவற்றில் மக்களின் கவனத்தை ஈர்க்க முற்படுவதில்லை. வரலாறு பற்றி இவர்கள் எழுதிய புத்தகங்கள் வரலாற்றைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக அமைகின்றன.

வட்டெழுத்துக் காலம் மாறிய பின்னர்  மக்களின் பயன்பாட்டுக்கான எழுத்துக்கள் ஓரளவு சீரடைந்த காலத்தில் ஆட்சியாளர்களின் விருப்பத்தின் பேரில் எழுத்துக்கள் பல நீக்கப்பட்டும் புது வடிவம் பெற்றும் மாற்றப்பெற்றன.
விஞ்ஞானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி (??) ஆங்கிலச் சொற்கள் பல மொழியாக்கம்  செய்யப்பட்டன.  இருப்பினும் ,பல ஆங்கிலச் சொற்கள் தொடர்ந்து மக்களால் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக," பஸ் " எப்போது வரும் என்று பாமரன் கூடக் கேட்கும் போது, "பேருந்து" எப்போது வரும் என்று கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், " பஸ்" என்று சொல்லிவிட்டதால் தமிழின் மீது ஆர்வம்  இல்லாதவன் என்ற முடிவுக்கும் வந்து விடக் கூடாது.

பிற மொழிகளில் இருந்து சொற்களைத் தமிழாக்கம் செய்ய முனைகிறார்கள். சமீபத்தில் 35 வார்த்தைகள் அவ்வாறு  மொழிபெயர்க்கப்பட்டதாகப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது. அயல் நாட்டவர்கள் புகுத்தும் சொற்கள் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே. அவற்றை அப்படியே வழங்குவதே குழப்பத்தைத் தவிர்க்கும். "பேஸ்புக் " என்பதை "முக நூல்" என்று கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். இன்னும் பார்த்தால்,அதில் வரும் "பே" என்ற எழுத்துக்கு முன்  ஆயுத எழுத்து பயன் படுத்த வேண்டும். ஆனால் இப்பொழுது ஆயுத எழுத்து போன இடம் தெரியவில்லை. பயன் படுத்துவாரும் இல்லை.
ஆயுத எழுத்தின் உபயோகத்தைத் தமிழ் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சிலவற்றையாவது காண்போம்:( துரதிருஷ்ட வசமாக கூகுளிலும், ஆயுத எழுத்தைக் காணோம். எனவே ஆயுத எழுத்து வருமிடத்தில் இடைவெளி விட்டிருப்பதைக் காண்க)

 ௧)திருக்குறளில் அறத்துப்பாலில் திருவள்ளுவர், "வெ    காமை" என்ற ஒரு அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களிலும் ஆயுத எழுத்தைக் கையாண்டிருக்கிறார்.
௨) " அ    தாஅன்று..."   _ நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
௩) "  கண்ணில் நல்ல    துறும் கழுமல வள நகர்.."  - தேவாரம்
௪) " யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு  அ     திலான்" --- திருவாசகம்
௫)  திரு வெ      கா -   காஞ்சியில் உள்ள ஒரு வைணவத்தலத்தின் பெயர்.

"ஔவையார்"  என்பதை அவ்வையார் என்று எழுதுகிறார்கள். "ஔ" என்ற எழுத்தும் "அவ்"  என்ற  எழுத்தும்  உச்சரிப்பில் ஒன்று இல்லாத போது எதற்காக " ஔ " நீக்கப்படுகிறது என்று புரியவில்லை.

எழுத்துக்களைக் குறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பல எழுத்துக்களைக் கால் வாங்கி நம் உயிரையும் சேர்த்து வாங்குகிறார்கள். திருவண்ணாமலை என்பதில் ணகரமும் லகரமும் மாற்றம் பெற்றதால் கை ஓடிவதுதான் மிச்சம்! தமிழில் தேர்வு எழுதும் குழந்தைகள் இப்படிக் கால் வாங்குவதால் , எழுதும் நேரம்  வீணடிக்கப்படுகிறது. யாராவது  சிந்திக்கப்போகிறார்களா  தெரியவில்லை.  வேறு வழி இல்லாமல் நாமும் அதையே பின்பற்ற வேண்டியிருக்கிறது.

தமிழில் வழக்கத்தில் இல்லாத சொற்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் காணோம்! " மச்சி" போன்ற சொற்கள் தான் புகுத்தப்படுகின்றன. வெட்கப்பட வேண்டிய விஷயம் இது.

வழக்கத்தில் இருந்த "ஷ" "ஸ" "ஹ" "க்ஷ" "ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை நீக்கினார்கள். கவனம் என்ற சொல்லில் இருக்கும் "க" வும் கல்வி என்ற சொல்லில் உள்ள "க"வும் ஒரே மாதிரியா உச்சரிக்கப்படுகின்றன?

"அழித்துப் பிறக்க வொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழை இன்றிக் கற்கிலீர்.. "
என்று இதனால் தான்  அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடினாரோ?

 பிற திராவிட மொழிகளில் இப்படி இல்லையே! தமிழ் அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். எழுத்தைக் குறைப்பதில் உள்ள ஆர்வம் , இருக்கும் சொற்களை ஆழப் படுத்துவதில் இல்லையே!  அப்போது தான் நமக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து கற்கும் பழக்கம் வரும்.  அது வரையில் "தமிழ் வாழ்க" என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சாகவே  முடியும். 

Friday, August 16, 2013

இணைய தளம் நட்புப்பூங்காவாகட்டும்

இணைய தளம் என்பது தகவல்களைப் பரிமாறும் இடமாக மட்டும் இல்லாமல் மக்களை ஒன்றாக இணைக்கும் தளமாக இருக்க வேண்டும். விவாத மேடையாகவோ , காழ்ப்பு உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவோ அது அமைந்து விடக்கூடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது ,விவேகத்தையும் நட்பையும் ஊக்குவிக்கும் பாலமாக இருக்கவேண்டும். பல தகவல்கள் இணையதளத்தில் பகிரப்படும்போது வரம்புகள் மீறப்படுவதைக் காணும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒருவரது கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் தெரிவிக்கட்டும். மாறாக, தனக்குத் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தெரியும்படி அதைப் பகிர்ந்து கொள்வது அவசியம் தானா? சிந்திக்க வேண்டும்.

நமக்குப் பிடித்ததெல்லாம், நமக்குச் சரி என்று தோன்றுவதெல்லாம் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று இக்காலத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறர் குறைகளை சுட்டிக் காட்டத் தயாராக இருக்கும் நாம் , நமது குறைகளைப் பிறர் சுட்டிக் காட்டும் போது  பொங்கி எழுவது ஏன் என்று புரியவில்லை. குறைகள் இல்லாதவர் நம்மில் யார் உளர்? ஆனால் இறைவனோ நமது குறைகளையும் குற்றங்களையும் பாராது குணம் ஒன்றையே கொள்பவன். இதனை,"குறை உடையார் குற்றம் ஒராய் ; கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்றார் ஞானசம்பந்தர் .

ஒரு பயனுள்ள தகவலை ஒரு அன்பர் பகிர்ந்துகொள்ளும் போது அதைப் படிப்பதோ அல்லது பிறரிடம் பகிர்ந்து கொள்வதோ தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அதற்குப் புதுச் சாயம் பூசி  உள்நோக்கம் கற்பிப்பவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அண்மையில் ஓர் அன்பர் , சைவப்பெரியார் திரு CKS அவர்கள் எழுதிய பெரியபுராண உரையைக் கணினிமூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முகவரியைத் தெரிவித்திருந்தார். அதனை விலை கொடுத்து வாங்குவதானால் சுமார் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகலாம். இந்நிலையில் இந்தச் சேவை இறைவன் தந்த வரப்பிரசாதமே. இச்செய்தியை ஒரு குழுவுக்கே அந்த அன்பர் தெரிவித்திருந்தார். இதைக் கண்ட மற்றொரு அன்பர் வடமொழியில் இருக்கும் பக்த விஜயத்தைச்  சிலர் உரையாற்றி வருவதால், பிற்காலத்தில்சேக்கிழார் அருளிய   பெரியபுராணம்  அந்த வடமொழி நூலின் மொழியாக்கமே என்று கூறி விடுவர் என்றும் கூறியதோடு, கடும் சொற்களால் தாக்கி இருந்தார்.
உண்மையில் பார்த்தால் தகவலைப் பரிமாறியவரும், அதற்கு விடை கூறியவரும் நிரம்பப் படித்தவர்கள். நிறைய ஆலயங்களைத் தரிசித்தவர்கள். நியமத்தோடு இருப்பவர்கள். சமயத்தின் லக்ஷக்கணக்கானத் தூண்களில் இவர்களும் அடங்குவர். இறைவனையோ சமயத்தையோ யாராவது பழித்தால் உள்ளம்  வெதும்புபவர்கள்.இப்படி இருக்கும்போது உட்பூசல்கள் தேவை தானா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் இவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது இப்படிச் சர்ச்சைகளில் ஈடுபடலாமா?

கடவுளே இல்லை என்று நாத்தழும்பேற நாத்திகம் பேசுபவர்களைக் கூட மறந்துவிட்டு, நம்மவர்களையே நாம் ஏசிக்கொள்வது எந்த வகையில் நியாயம்? இந்த ஏக்கமும் தாக்கமும் , கோயில் நிலங்களின் குத்தகைப் பாக்கி வைத்துள்ளவர்கள் மீதோ, இடிந்த கோயில்களைப் பாராது இருக்கும் அற நிலையத்துறை மீதோ காட்டப்படுவதில்லையே! ஒரு கால பூஜைக்கே தவிக்கும் ஏராளமான கோயில்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பலாம் அல்லவா?

ஒவ்வொருவரும் தங்கள் பணியில் நின்று இறைவனுக்குத் தொண்டாற்றுவர். பணி செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். பணிகள் பலவிதம். திருப்பள்ளி எழுச்சியும் அதைத்தானே உணர்த்துகிறது. வீணை வாசிப்பது, வேதமும் தோத்திரமும் இயம்புவது, தொடுத்த மலரோடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வணங்குவது, உழவாரப்பணி செய்வது, அடியார்களைப் போற்றுவது போன்ற எத்தனையோ பணிகள் இதில் அடங்கும். இவற்றில் எந்தப் பணியும் ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்தது அல்ல . பெரிய புராணத்தை ஆழ்ந்து வாசித்தவர்களுக்கு அது நன்றாகப் புரியும். " எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசனைக் குறுகிய வட்டத்துக்குள் அடக்கிக் கொள்ள முயற்சிப்பது வீணான செயல். மொழிகள் இறைவனது வடிவம் என்பர்  பெரியோர். இதில் எந்த மொழி இறைவனின் சொந்த மொழி என்றும் , எது முதலில் தோன்றியது என்றும், எந்த நூல் முந்தியது என்றும் வாதிட்டுக் காலத்தை வீணாக்காமல் ஈசன் திறமே பேணிப் பணியும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியப்பரைக் காணலாம் அன்றோ?  

இணையதளத்தில் வாதிடும் சகோதரர்களே ! உங்களிடம் சமய உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. உங்கள் அருந்தொண்டு திசை மாறலாகாது. உங்களது சமய நம்பிக்கை இணையற்றது. அதனை ஆக்கபூர்வமாக அடியார்களுக்கு அளித்து உதவுங்கள். சமயம் பற்றி அறிய வேண்டுமானால் மக்கள் பத்திரிகைகளையே நாட வேண்டிய  இத்  தருணத்தில் தாங்கள் முன்வந்தால் எத்தனையோ மக்களுக்கு வழிகாட்ட முடியும் என்பது நிச்சயம். அதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் . திருவருள் துணை நிற்பதாக.
  

Sunday, August 11, 2013

பிரதோஷ வேளையில் அன்ன தானமா?

ஆன்மீக வளர்ச்சியில் ஆன்மீகப் பத்திரிகைகளுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதான். பல கோயில்களின் இருப்பிடமே தெரியாதவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இவை அமைகின்றன. மேலும் பல ஆலயங்களின் திருப்பணிகள் துவங்கவும் எழுச்சியை ஏற்படுத்த முனைகின்றன. திரும்பிப் பார்க்கவே ஆள் இல்லாத நிலை மாறி, மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. பரபரப்பாகவும்,வித்தியாசமாகவும் எழுத வேண்டும் என்ற வகையில் ," ஊருக்கே படி அளக்கும் ஈசன் ஓலைக் குடிசையில் இருக்கலாமா ? "  " சிலிர்ப்பூட்டும் சிங்காரவேலர் " போன்ற தலைப்புக்களைக் கொடுக்கிறார்கள். பிரபலங்களின் பூஜை அறையையும் விட்டு வைப்பதில்லை. ( இதற்கும் பிரபலம் ஆக வேண்டியது முக்கியம் போல் இருக்கிறது! ) பல சமயங்களில் கற்பனா சக்தி என்னும் குதிரையையும் தட்டி விடுகிறார்கள். ஒரு பிரபலத்தை விட்டுக் கேள்வி பதில் பகுதியில் புரட்சிகரமான விளக்கம் வேறு! சிறிது நாட்கள் கழித்து அது புத்தகமாக ஆக்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் ஜோதிடப் பகுதி இல்லாவிட்டால் எப்படி ? அதுவும் கூடவே தரப்படுகிறது.

 என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் பக்கத்தை நிரப்புவது என்ற நிலை மாத்திரம் வந்து விடக்கூடாது. ஒரு சிலர் மட்டுமே எழுத வேண்டும் என்பது வேண்டுமானால் அவர்களது பத்திரிகை தர்மமாக இருக்கலாம். அதே நேரத்தில், தவறான செய்திகள் மக்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்ற உண்மையான பத்திரிகை  தர்மமும் கூடவே இருக்க வேண்டும் அல்லவா?  ஒருவேளை, தவறான செய்தி வெளியிடப்பட்டு, அதை வாசகர் யாராவது சுட்டிக்காட்டினால் அந்தத் திருத்தத்தை அடுத்த இதழிலேயே வெளியிடவேண்டும் என்ற பெருந்தன்மை எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கின்றன?

தக்ஷிணாமூர்த்திக்கும் நவக்ரஹத்தில் ஒருவரான குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மஞ்சள் வஸ்திரமும் கொண்டைக் கடலை மாலையும் தக்ஷிணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளின் பரிந்துரை வேறே!

நவக்கிரகங்கள் வழிபட்ட நலம் தரும் கோயில்களைக் குறிப்பிடும்போது சனீஸ்வரன் கோயில், குரு ஸ்தலம் என்றெல்லாம் தலைப்புக் களைத் தந்து மக்களைக் குழப்புகிறது பத்திரிகை உலகம். சனைச்சரன் (மெல்ல  சஞ்சரிப்பவன்) என்ற பெயரை சனீஸ்வரன் ஆக்கி, ஈஸ்வர பட்டம் பெற்றதாகக் கதையும் எழுதி விடுகிறார்கள்.

பழைய விக்கிரகங்களில் புள்ளிகள் காணப்படுவது இயற்கையே. ஒரு ஊர்க் கோவிலில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய விக்கிரகத்தில் இவ்வாறு இருந்ததை, அவர் அங்கு வந்தபோது அம்மை நோய் தாக்கியதால் ஏற்பட்ட வடுக்கள் என்று குருக்கள் சொன்னதாகத் திருத் தலங்களை யாத்திரை செய்த ஒருவர், வார பத்திரிகை ஒன்றில்  எழுதினர். அது தவறு என்று சுட்டிக்காட்டியும் திருத்திக் கொள்ள முன் வரவில்லை. மக்களுக்குத் தவறான தகவல் போனது போனதுதான்!

இதேபோல் மற்றொரு பத்திரிகையில் சிறுத்தொண்ட நாயனார்,  தான் செய்த செயற்கரிய செயலைப் பிறர் செய்ய முடியாது என்று அகம்பாவம் கொண்டதாகத் தான் கேள்விப்பட்ட தகவலை அப்படியே வெளியிட்டிருந்தார் பத்திரிகை ஆசிரியர். பெரிய புராண ஆதாரம் காட்டி அதை மறுத்து எழுதியும் பலன் இல்லை.

பிரதோஷ மகிமையைப் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டு எத்தனையோ பேர் அன்றைய தினம் சிவாலயங்களுக்குச் செல்கிறார்கள். ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி எல்லா உலகங்களையும் காப்பாற்றிய நாள் ஆதலால் , அன்று உபவாசம் இருந்து, சிவ பூஜை செய்வதும்  சிவாலய வழிபாடு செய்வதும்  முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொருநாள் மாலை நேரமும் வரும் நித்திய பிரதோஷ வேளைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது வழக்கம். இப்படி இருக்கும்போது, அந்த வேளையில் பல கோவில்களில் அன்ன தானம் செய்யப்பட்டு வருகிறது! பத்திரிகைகளும் இதற்குத் தூபம் போடுவதைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. கையில் பிரசாதம் கொடுப்பது , தொன்னையில் தருவது , அன்னதானம் செய்வது போன்றவற்றை உபவாச தினங்களில் செய்வதைத் தவிர்க்கலாமே!  அன்ன தானத்திற்கு ஈடு இணை இல்லைதான். அதையும் முறையாகச் செய்தால் உரிய பலன் கிடைக்கும் அல்லவா? " பிரதோஷ வைபவத்தின் போது அன்னதானமாக வழங்க வழங்க நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும்." என்று அர்த்தமற்ற முறையில் தவறாக விளக்கம் தரப்பட்டுள்ளது ஒரு ஆன்மீகப் பத்திரிகையில்! பத்திரிகை ஆசிரியர்  ஆன்மீகத்தில் தோய்ந்தவராக இருந்தால் இத்தகைய தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. எழுதத் தெரிந்து விட்டால் மட்டும் போதும் என்பது கதைகள் எழுதுபவருக்கு மட்டும்தான்.  காரணம் என்ன என்றால் , அதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் ஆன்மீகக் கட்டுரை எழுதும்போது, தவறில்லாமல் தகவல் தரப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்வதே  சிறந்த பத்திரிகைக்கான  அடையாளம்.

Friday, August 2, 2013

தெய்வத் திருவுருவம்

தெய்வத்திருமேனிகளைத் தரிசிக்கும்போது  அவற்றை ஒரு கணம் அசையாதவண்ணம் இருந்தபடியே உற்று நோக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திருவுருவம் நமது உள்ளத்தில் பதிந்து நீங்காது நிற்கும். மேலெழுந்தவாரியாக நோக்கினால் பல செய்திகள்  புலப்படாமல் போய்விடும். தூண்களில் காணப்படும் சிற்பங்களிலும் பல புராணச் செய்திகளும் நாம் இதுவரை  கேள்விப்படாத வரலாறுகளும் தெரிய வாய்ப்பு உண்டு.

உண்மையில் நாம் அவ்வாறு தரிசனம் செய்கிறோமா என்று பார்த்தால் நேரம் இல்லாதததைக் காரணம் காட்டி இல்லை என்றே பதில்சொல்கிறோம். நேரம் இருக்கும் போதாவது அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். மூர்த்தியின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில்  இன்ன மூர்த்தி என்று எல்லா மூர்த்திகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. யானை முகமாக இருந்தால் விநாயகர் என்றும் ஆறு முகத்தோடு இருந்தால் சண்முகர் என்றும் நான்கு முகத்தோடு இருந்தால் பிரமன் என்றும் எளிதாகக் கூற முடியும். ஆனால் ஒரு முகமும் நான்கு திருக் கரங்களும் கொண்ட மூர்த்தியைப் பார்த்தால் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதற்கு ஒரே வழி, அம்மூர்த்தியின் பின் இரண்டு கரங்களிலும் என்ன இருக்கிறது என்று உற்று நோக்க வேண்டும். சூலமும் வஜ்ரமும் இருந்தால் முருகன் என்றும், சங்கும் சக்கரமும் இருந்தால் திருமால் என்றும் மானும்  மழுவும் இருந்தால் சிவன் என்றும் சொல்கிறோம்.

சில சமயங்களில் பின் இரு கரங்களில் உள்ளவற்றைக்  கொண்டு ஊகித்தாலும், பிற அம்சங்களை நோக்கும் போது எந்த அவசரத்தில் இத திருக்கோலம் ஏற்பட்டது என்று புராண ரீதியில் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு நிலை சென்னைக்கு அருகிலுள்ள திருசூலத்தில் உள்ள திருசூல நாதர் ஆலயத்தில் தரிசிக்கும்போது  நேர்ந்தது. சோழர் காலக் கல்வெட்டுக்களைக் கொண்ட இந்த ஆலயத்தின் முக மண்டபத் தூண் ஒன்றில் உள்ள சிற்பம் தான் இவ்வாறு நம்மைக் கவர்ந்தது.

பின்னிரு கரங்களில்  மான் மழு ஏந்தி நிற்கின்றார் பெருமான். அவரது முன் இரு கரங்களில் நரசிம்மர்  துவண்டு கிடக்கிறார். அதைப்  பார்த்த மாத்திரத்தில் அம்மூர்த்தி சரபர் என்று சொல்லிவிடுவார்கள். ( ஆலய அர்ச்சகரும் அப்படித்தான் சொல்கிறார்.) இப்பொழுது சந்தேகத்துக்கு வருவோம். சரபருக்குப் பொதுவாக இறக்கைகளும் சிங்க முகமும் உண்டு அல்லவா? ஆனால் இச் சிற்பத்திலோ இறக்கைகளும் இல்லை. சிங்க முகமும் இல்லை. இரண்டு முகங்கள் இருக்கின்றன. இரு முகம் கொண்ட சரப நிலை தியானத்துடன் இருக்கிறதா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் விளக்கினால் பலரும் பயன் பெறுவர்).

தூண் தானே என்று பாராமல் சென்றுவிட்டால் இது போன்ற புராண வரலாறுகள் தெரியாமல் போய் விடும். பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆலயத்தை வலம் வரும் போது இது போன்ற செய்திகள் திருவருளால் நமக்குப் புலப்படும். நந்தியாகட்டும்,துவார பாலகர்கள் ஆகட்டும், பூத கண வரிசை ஆகட்டும் , மகர தோரணங்கள் ஆகட்டும் -- இவை எல்லாம் எத்தனையோ தகவல்களை நமக்குச் சொல்லக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைத் தரிசிக்கும் பாக்கியம் இருக்க வேண்டும்.

Sunday, July 28, 2013

ஆலயப் புனிதம் காப்போம்

இறைவன் உறையும் இடம் என்ற எண்ணம் வந்தவுடன் நம்மை அறியாமலேயே கைகள் கூப்பி அஞ்சலி செலுத்தியவாறே ஆலயத்திற்குள் நுழைகிறோம். அதற்கு முன்பாக வெளியில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்கிறோம். சில கோவில்களில் கை-கால்களை நீரால் சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும் வசதியும் இருக்கிறது. பயபக்தி எப்பொழுது குறைகிறதோ அப்போது அலட்சியமும் அகம்பாவமும் தலை தூக்குகின்றன.

பல கோவில்களில் நிர்வாக அலுவலகம் உள்ளே இருக்கிறது. அதில் பணி செய்பவர்கள் அலுவலக வாயில் வரை காலணிகளை அணிந்து செல்கிறார்கள்!இரண்டு சக்கர வாகனங்களும் கூடவே உள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது.கோபுர வாயில் வழியே நுழைந்து, முடிந்த வரையில் உள்ளே செல்லுவதற்கு ஆட்டோக்களும் அனுமதிக்கப் படுகின்றன.சிதம்பரம் போன்ற பெரிய கோவில்களில் ஒரு வீதியிலிருந்து மறு வீதிக்குச் செல்லும் பிற மதத்தினர்கள் கூடத் தங்கள் காலணிகளைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வெளிப் பிராகாரத்தின் வழியாகச் செல்வதைக் காணும் போது, நம்மவர்கள் காலணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் கண்டால்  வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.அன்பர் சிவகுமார் அவர்கள்,  தான் கண்ட காட்சியைப் புகைப்படம் எடுத்து அனுப்பித் தன் ஆதங்கத்தைத்  தெ ரியப்படுத்தி  இருந்தார்கள்.  இதுபோலக் கவலைப் படுபவர்கள் மிகச் சிலரே!

சுத்தம்,சுகாதாரம் பற்றி அக்கறை உள்ளவர்கள் கோவில்களுக்கு உள்ளேயும் வெளியிலும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமே! வழிபாட்டுக்கு உரிய இடம் என்பது ஏனோ பலருக்கு மறந்து விடுகிறது போல் இருக்கிறது. அடிப்படையான பக்தி இல்லாவிட்டால் இப்படித்தான்! எதையும் செய்யத் துணியும் திமிர் வந்துவிடுமோ என்னவோ. கேட்பதற்கு யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் இப்படிப் பல அத்துமீறல்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வெளியிலாவது, மற்றவர்களும் அசுத்தப்படுத்துகிறார்கள் என்றால், உள்ளேசெல்லும் பக்தர்களுமா இப்படி?

ஆலயத்திற்குள் செய்யத்தகாதவை இவை என்று பட்டியலிட்டுப் பல கோவில்களில் பலகை அமைத்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வழிபாட்டை முறைப்படி செய்ய வேண்டியவற்றையே வலியுறுத்துவதாக இருக்கும். நினைக்க முடியாத செயல்களையும் மக்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காததால் பட்டியலில் அவற்றைக் காண முடியாது.

திருவிழாக் காலங்களில் வருபவர்கள் செய்யும் செயல்களை எழுதவே கை கூசுகிறது. உள்ப்ராகாரங்கள் தவறாகப் பயன் படுத்தப் படுகின்றன. அதனால் எழும் துர்நாற்றம் சகிக்க முடியாமல் வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. இதையெல்லாம் கூடவா கண்காணித்துத்  திருத்த வேண்டும்? பஸ் நிலையங்களில் தான் இந்த நிலை என்றால் கோயில்களிலும் கூடவா? மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்த லட்சணத்தில் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் வேறு! முதலில் கோவில்களின் புனிதத்தைக் காக்க முன் வரட்டும். சட்டையைக் கழற்றிவிட்டுப் பயபக்தியுடன் கோவிலுக்குச் செல்லும் மலையாளிகள் எங்கே; நாம் எங்கே! நமக்கு வேண்டியதெல்லாம் உரிமையும் மரியாதையும் மட்டுமே! இப்பொழுது மட்டும் என்னவாம்! நந்தியைக் கட்டிக் கொண்டு ரகசியம் பேசுகிறார்கள்.தாங்களே மாலை அணிவிக்கிறார்கள். தீபம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும்போது தட்டுக் காசு கண்ணை உறுத்துகிறதோ என்று தோன்றுகிறது. தட்டு வருமானம் இல்லாத கோயில்களுக்கு எத்தனை பேர்  போவார்களாம்? பலிபீடத்தில் அகந்தையைப் பலியாக்கிவிட்டு நுழையாதவரை இப்படிதான்.இத்தனைக்கும் மூல காரணம் , ஆலயத்தின் புனிதத்தை நாமும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தான்!  

Saturday, July 13, 2013

மாறாத செல்வம்

என்றைக்குமே மங்காத செல்வமாக மங்கையர் செல்வத்தைக் கருதினார்கள். காரணம், வீட்டின் வளர்ச்சிக்கும்,நாட்டின் வளர்ச்சிக்கும்,சமய மறுமலர்ச்சிக்கும் பெண்கள் ஆற்றிய தொண்டு பற்றியே இக்கருத்து நிலவியது. ரிஷிகள் காலம் தொட்டே , ரிஷிபத்தினிகளுக்கும் இதில் முக்கிய பங்கு இருந்துவந்ததாக அறிகிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரும். பாண்டி மாதேவியும் ஆன மங்கையர்க்கரசி யின் பெருமுயற்சியால் சைவம் திருஞானசம்பந்தர் மூலமாக  மீண்டும் நிலைநிறுத்தப் பட்டது என்பதைப் பெரியபுராணம் மூலம் அறிந்து கொள்கிறோம். எனவே , மங்கையர்க்கரசியாரை, "எங்கள் குல தெய்வம்" என்று போற்றுகிறார் சேக்கிழார்.

இன்றைய நிலையைப் பார்க்கும்போது சற்றுக் கவலை ஏற்படுகிறது. இந்த எந்திர காலத்தில் பஞ்சேந்திரியங்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை! இளம் வயதினர் தான் அதன் வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்றால் வயதானவர்களும் இப்படியா! அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள்ளாக இப்படி ஒரு மாறுதலா!

முன்பெல்லாம் பிரதோஷத்தன்று காப்பரிசியும் கையுமாக நந்தியைச் சுற்றிலும் நின்ற பெண்மணி -களின் கூட்டம்   இப்போது எங்கே போயிற்று? தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் ஜப மாலையும் கையுமாக இருந்த பாட்டிகள் இப்போது எங்கே போனார்கள்? விபூதி ருத்ராக்ஷம் தரித்துக் கொண்டு பூஜை பெட்டியோடுபல ஊர்களுக்கும்  பிரம்மோற்சவ காலங்களில் சென்று, சுவாமி தீர்த்தம் கொடுக்கும் போது, தானும் ஸ்நானம் செய்து ஆனந்தப்பட்ட அன்பு உள்ளங்களைத் தேடினாலும் கிடைப்பது அரிதாக ஆகிவிட்டதே!

தேசாந்திரிகள் முன்பின் தெரியாதவர்கள் எத்தனை பேர் வந்தாலும் முகம் கோணாமல் வரவேற்று அன்னமிட்டு உபசரிக்கும் உயர்ந்த பண்பு ஏன் மறைந்து விட்டது? விலைவாசி ஏறிவிட்டது என்று காரணம் சொல்வார்களா? அக்காலத்தில் வசதி இல்லாதவர்களும் இந்த தர்மத்தைப் பண்ணி வந்தபோது நாம் மட்டும் ஏன் காரணம் கற்பிக்கிறோம்?

காலை- மாலைகளில்  வீட்டு வாசலில் லக்ஷ்மிகளை சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது போய் இப்போது எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது தேவைப் படுவதெல்லாம் சொகுசான வாழ்க்கை மட்டுமே. இதற்கு வயோதிகர்களும் ஏன் பலி ஆக வேண்டும் என்று புரியவில்லை! அறுபது வயதைத் தாண்டிய பிறகாவது கொஞ்சம் விவேகம் ஏற்பட்டால் நல்லது. அந்த வயதிலும் இளம் வயதினருக்கு சமமாகத் தானும் தொலைக் காட்சிக்கு அடிமையாவதைப் பல வீடுகளில் காண்கிறோம்.
மாலை நேரங்களில் நெற்றியில் விபூதி - குங்குமம் தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்தும், சிவாலய தரிசனம் செய்து கொண்டும் வாழ்ந்தது போய், சீரியல்களைத் தினமும் தவறாமல் பார்ப்பவர்களை   என்ன சொல்வது! அந்த வேளையில் சீரியலில் காட்டப் படும் அமங்கலமான நிகழ்ச்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! கோவிலின் சன்னதித் தெரு மற்றும் நான்கு வெளி வீதிகளில் இருப்பவர்களாவது சுவாமி தரிசனத்திற்குச்  செல்லக் கூடாதா?  கோவில்கள் இப்படியா வெறிச்சோடிக் கிடக்க வேண்டும் ?

ஆண் வர்க்கம் பாரம்பர்ய உடைகளைக் கைவிட்டபோதும் பெண் மணிகளில் பலர் அப்படிச் செய்யாமல் இருந்து வந்தனர். தற்போது அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இதையெல்லாம் யார் கேட்க முடியும்? எங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று பதில் வரும். அவரவர்களாகவே சிந்திக்கத் தொடங்கினால் மட்டுமே நல்லது. ஆண் வர்க்கத்தைக் குறிப்பிடும் போது ஆண்கள் என்று மட்டும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெண்களைக் குறிக்கும்போது,      பெண்மணிகள் என்றே சொன்னார்கள். ஆண்மணிகள் என்று யாரும் சொல்வதில்லை. ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பாரத தேசத்தில் ஒரு மணி யாகத் திகழ வேண்டும்.

ஸ்திரீ தர்மம் நிலைக்கும் வரை சனாதன தர்மத்திற்கு ஒரு ஆபத்தும் வந்து விடாது. சக்தியின் அம்சமான அவர்களை நாடு போற்ற வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். சிவனடியார்களே எங்கள் கணவராக வரவேண்டும் என்று பாவை நோன்பு நோற்றார்கள். இந்த வரத்தை எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் கிழக்கே உதித்தால் என்ன அல்லது மேற்கே உதித்தால் என்ன என்கிறார்கள் திருவாசகம் காட்டிய பெண்மணிகள். அதே பாரம்பர்யம் இனியும் தொடர வேண்டும். எக்காலத்தும் இதிலிருந்து மாறாத பெண்மணிகளாகத்  தாய்க்குலம் திகழ்ந்து உலகைக் காக்கவேண்டும் என்று அன்பில் பிரியாத பிராட்டியை ஒரு பாகம் வைத்த அகிலாண்ட நாயகனைப் பிரார்த்திப்போமாக.