Sunday, March 11, 2012

பத்திரிகைகளின் பிடியில் ஆன்மிகம்


           இந்து மதத்தைக் கேவலமாக சித்தரிப்பது ஒரு சில அரசியல் வாதிகளுக்கு வாடிக்கையாக இருக்கலாம். அவர்களும் தேர்தல் காலங்களில் அடக்கி வாசித்துத் தன் இரட்டை வேடத்தை நிரூபிப்பார்கள். பத்திரிகை உலகமும் இதே பாணியில் செயல் படுவது வேதனையிலும் வேதனை. ஒரு சில எதிர்ப்புக் குரல்களே ஒலிப்பதால் தங்கள் சமூகக் கடமையை(!) தொடர்ந்து செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நம்மை யாரும் திட்டாதவரையில் நாம் எதற்குக் கவலைப் படப்  போகிறோம்? ஊருக்கு ஊர் சத்  சங்கங்களும் ,அடியார் கூட்டங்களும் இருந்து என்ன பயன்? இத்தனை கேலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கே உரியது அல்லவா?

               சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கவர வேண்டி ஒவ்வொரு நாளும் ஒரு இணைப்பு மலரை வெளியிடும் தமிழ் நாளிதழ்கள் , ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. காரணம், ஆன்மிகம், வார பலன்,மாத பலன் என்றெல்லாம் வெளியிட்டால் மக்கள் விரும்பிப் படிப்பதே. இது போதாது என்று வார மலர் என்ற மசாலா வேறு. அடுத்தவர் மனதைப் புண் -படுத்தாதவரை எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். ஆனால் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நையாண்டி செய்வதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

                 உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தமிழ் நாளிதழ் ஒரு உண்மை நிகழ்ச்சியை(?) வெளியிட்டுள்ளது. அது உண்மையாக நடந்ததா  இல்லையா என்பதை அக்கட்டுரையை  எழுதியவரிடமே விட்டுவிடுவோம். சென்னை புரசவாக்கம் கங்காதரேச்வரர் கோவிலில் சாயரட்சை  பூஜையைக் காணத் தன் மனைவியுடனும், நான்கு வயது மகனுடனும் வந்திருந்தாராம் இப்"பாக்கிய"சாலியான கட்டுரை ஆசிரியர். பூஜை முடிவில் ஓதுவார் ஒரு பாடல் பாடி முடித்ததும் நிசப்தம் நிலவிய சில வினாடிகளில் இவரது நான்கு வயது பிள்ளை பாடின பாடல் என்ன தெரியுமா? " வா வாத்யாரே வூட்டாண்டே..." என்ற சினிமாப் பாடல். இதைக் கேட்ட பக்தர்களுக்கு சிரிப்பு வந்து விட்டதாம். ஆளுக்கொரு பாட்டு பாட வேண்டும் என்று குழந்தை நினைத்து இப்படிப் பாடி விட்டான் என்ற வியாக்கியானம் வேறே! அதை விடக் கொடுமை என்ன தெரியுமா? " கங்காதரேச்வரர் காதில் கட்டாயமாக ஒரு நேயர் விருப்பப் பாட்டு விழுந்து விட்டது." என்று எழுதியிருப்பது. அது மட்டுமல்ல. " குழந்தை பாடியதால் அதை அவர்  பக்திப் பாட்டாக எடுத்துக் கொண்டிருப்பார்" என்று அருகிலிருந்த பெரியவர் சொன்னாராம் ! திருஞானசம்பந்தர்,மார்கண்டேயர்,சண்டிகேஸ்வரர்,துருவன்,பிரகலாதன் போற தெய்வீகக் குழந்தைகள் தோன்றிய புனித மண்ணிலா இப்படி?

               நம் வீட்டிலும் தான் குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர்கள் அங்கே சினிமாப் பாடல்களையா பாடுகிறார்கள்? இதற்குத் தான் வளர்க்கும் விதம் முக்கியம் என்றார்கள் பெரியோர்கள். ஆனால் சினிமாப்பாடல்களைக் குழந்தைகள் பாடச் சொல்லிக் கேட்டுப் புளகாங்கிதம் அடையும் சீதாப் பாட்டிகளும் அப்புசாமிகளும் அதை வீட்டோடு நிறுத்திக் கொள்ளலாமே. தெய்வீகப் பாடல்களைக் குழந்தைகளுக்குப் பெரியோர்கள் சொல்லிக் கொடுத்த காலம் போய் இவ்வாறு சினிமாப் பாடல்களைப் பாடும் நிலை வந்துவிட்டது! இவை  உண்மையோ கற்பனையோ நாம் அறியோம். பிரபல எழுத்தாளர் எழுதிவிட்டார் என்பதற்காக இதை வெளியிட்டுள்ள நாளிதழை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படி முன்வருவோர்  யாரும் இல்லாதவரை இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும்  நிலை நீடிக்கும்.

Saturday, March 10, 2012

மடங்கள் நிர்வாகத்தில் ஆலயங்கள்


இந்து அறநிலையத்துறை துவக்கப்பட்டபோது, வருவாய் இல்லாத கிராமக் கோவில்களும் உபரி வருமானத்தைக் கொண்டு பராமரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உண்டியல் வருமானம் அதிகமாக உள்ள கோயில்களே கவனிக்கப்பட்டு, மற்றவை புறக்கணிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. உண்டியல் வருமானம் சொற்பமாக இருந்தாலும் ஆலயத்திற்குச்  சொந்தமான நிலங்களிலிருந்து வருமானம் வந்தாலே போதும், அவற்றை நன்றாக நிர்வகிக்க முடியும். யாரிடமும் கை எந்த வேண்டிய நிலை ஒருபோதும் இருக்காது. ஆலய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல் படாமல் இருந்தாலே போதும், எல்லா ஆலயங்களும் தங்கள் வருமானத்திலேயே திருப்பணியும் கும்பாபிஷேகமும் செய்துகொள்ள முடியும். இதில் முதலாவதாக, சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் முனைந்து செயல் பட வேண்டும்.

கோயில்களின் விவசாய நிலங்களின் வருமானம் பறிபோன நிலையில் பரிதவிக்கும் போது, கோயில்களுக்கு உள்ளேயே ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. சுற்றுச் சுவர் இடிந்து பல ஆண்டுகள் திரும்பக்கட்டப் படாத நிலையில் உள்ள கிராமக்கோவில்களின் உள்ளே வீடுகளைக் கட்டிக்கொண்டு அக்கிரமம் செய்கிறார்கள். கேட்பார் இல்லை! நிர்வாக அதிகாரிகள் பலர் இதுபோன்ற கோயில்களின் பக்கமே  தலை காட்டுவதில்லை. வந்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா என்ன? கோயில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளிலிருந்து சரிவர வாடகை வசூலிக்கப் படுவதில்லை. அப்படி ஒருக்கால் வசூலித்தாலும் அது பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வாடகையாகத் தான் இருக்கும்.
பல ஊர்களில் உற்சவ மூர்த்திகள் களவு போவதைக் காரணம் காட்டி , பாதுகாப்பு போதுமான அளவு உள்ள கோயில்களும் நமக்கு ஏன் வம்பு என்று அம்மூர்த்திகளை அருகிலுள்ள பெரிய ஊர்க் கோயில்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்துப் பூட்டி விடுகின்றன. இதற்காகவா அவற்றை  அரும் பாடுபட்டுச் செய்து வைத்தார்கள்?  பாதுகாப்பு அறைகளையும் காவலர்களையும் அந்த அந்த ஊர்களிலேயே ஏன்  அமைத்துத் தருவதில்லை? பூஜையும் அபிஷேகமும் இல்லாமல் பாசிபிடித்து ,காற்றுப் புகாத அறைகளில் அடைக்கலம் அடைந்த அவற்றைக் காண்போர் மனம் நிச்சயம் உருகும்.

ஒரு காலத்தில் சுத்தமாகவும் பொலிவாகவும் விளங்கிய ஆலயங்களைக் கண்டால் , இன்ன மடத்தால் நிர்வகிக்கப்படும் ஆலயமாக இருக்கலாம் என்று மக்கள்  நினைத்தனர். ஆனால் அவற்றின் இன்றைய நிலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதில் சுவர்கள் இடிந்தும் ,ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் செய்யப்படாமலும், மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் சன்னதியில் ஒழுகியும் , விமானங்களிலும் கோபுரங்களிலும் மரங்கள் முளைத்தும் பேரழிவுக்கு ஆயத்தமாகிவிட்டன  மடத்துக்குச் "சொந்தமான" ஆலயங்கள். அங்கு பணிபுரியும் சிப்பந்திகளின் சம்பளமோ மிகக் குறைவு. அதை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பத்தை நடத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?

மடங்களின் கோயில்களிலும் நிலவருவாய் குறைந்து விட்டது உண்மைதான். அதேசமயம் அதே மடங்களால் நிர்வகிக்கப் படும் சில கோயில்கள் பரிகாரத்தலங்களாக விளங்குவதால் உண்டியல் மூலமும் , பிற கட்டணங்களின் மூலமும் நல்ல வருவாய் ஈட்டுகின்றன.  அதைக் கொண்டு மற்ற தேவஸ்தானக் கோயில்களைச் செப்பனிடவும் குடமுழுக்கு செய்யவும் முடியாதா? யாரோ செய்கிறார்கள் என்பதற்காக இவர்களும் கல்லூரிகள் கட்டி அவற்றை நிர்வகிக்க வேண்டுமா? இப்படிச் செய்வதால் குருபீடத்தின் பிரதான  நோக்கம் கை விடப்படுகிறது. நித்தியபூஜை,ஆலய பராமரிப்பு, தல  யாத்திரை, சிஷ்யர்களுக்கு நன்னெறி காட்டுதல், வடமொழி-தென்மொழி நூல்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்காகவே ஸ்தாபிக்கப்பட்ட அம்மடங்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிப் போக வேண்டுமா? இப்படிச் சொல்வதால் குருபீடங்களைக் குறை கூறுவதாகக் கருதக் கூடாது. அற  நிலையத்துறை செய்யத் தவறியவற்றை மடாலயங்கள் செய்து , முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற ஆவலால் இப்படி எழுத நேர்ந்தது.

மடாலயங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது இது தான். மடத்துத் தம்பிரான் ஸ்வாமிகள்  அல்லது தகுந்த அலுவலர்களைக் கொண்டு ஒவ்வொரு தேவஸ்தானத்தின் நிதி நிலையையும் பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்பு தேவையான அளவு உள்ளதா, ஆலயக் கட்டமைப்பு நன்கு உள்ளதா,திருவிழாக்களும் விசேஷ தினங்களும் நடைபெறுகின்றனவா, குத்தகைக்காரர்களிடம்  பேசி வருவாயைப் பெருக்க முடியுமா, கட்டளைக் காரர்கள் மூலம் , நின்றுபோன விழாக்களைத்  துவங்க முடியுமா, சேவார்த்திகளின் குறைகள் நிவர்த்தி செய்யப் படுகின்றனவா போன்ற வினாக்களுக்குத் தணிக்கை மூலம் விடை கண்டு உடனே ஆவன செய்ய வேண்டும்.அதேசமயம் சில மடத்துக் கோயில்கள் அவ்வப்போது திருப்பணி செய்யப்பட்டும்,விழாக்கள் நடத்தப்பட்டும்,பணியாற்றிவருவதை மறுக்கமுடியாது.

மேலே சொன்னது எல்லாம்  "எல்லாம் சிவன் செயல்" "சும்மா இரு சொல் அற" என்ற வாக்கியங்களை சாதகமாக எடுத்துக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பவர்களைப் பற்றியே.இதனால்  பாதிக்கப்படப்போவது நிலத்தை மட்டுமே நம்பி இருக்கும் கிராமத்து தேவஸ்தானங்களும் ,அவற்றின் சிப்பந்திகளுமே. விரைந்து செயல் பட்டால் மடத்தின் நற்பெயரும் காப்பாற்றப் பட்டுவிடும். இல்லையேல், மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்க நேரிடும்.

Wednesday, February 29, 2012

உருவமும் அருவமும்


 நமக்குத்தான் எத்தனை எத்தனை சந்தேகங்கள்!! அதிலும் ஆன்மிகம் பற்றிய சந்தேகங்கள் அநேகம்! "தேவரீர் என் மனத்துள் எழுந்தருளி ஐயத்தைத் தீர்த்தருள வேண்டும்" என்று இறைவனை வேண்டுவதும் இல்லை. இறைஅருள் பெற்றவர்களை நாடுவதும் இல்லை.  எனவே நமக்கு நம் சமயத்தின் அருமை-பெருமைகள் தெரியாமலே போய் விடுகிறது.  சில சமயங்களில், வேற்றுச் சமயத்தவர்கள் செய்வதையும் பேசுவதையும் பார்த்து, நம்மிடம் அது போல் இல்லையே என்று அங்கலாய்க்கவும் செய்கிறோம். அவர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறார்கள்; நமக்கோ அனேக கடவுளர்கள் என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறோம்.

இதற்கெல்லாம் விடை காண முயலுபவர்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள  வேண்டும். நம்மிடம் அருவ வழிபாடு இல்லை என்பது தவறு. "உருவமும் அருவமும் ஆய பிரான்" என்று சிவபெருமானைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர். முதலில் அவனது உருவம் பற்றிச் சிந்திப்போம். எத்தனையோ உருவங்களில் 64 வடிவங்கள் சிவபிரானுக்குப் பெரிதும் பேசப்படுகின்றன. அவற்றுள் சோமாஸ்கந்தர், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி ,சந்திரசேகரர் போன்ற சாந்த வடிவங்கள் அவனது அருள் வடிவங்கள். பைரவர்,வீரபத்திரர், போன்ற மூர்த்தி வடிவங்கள்  அவனது மறக்  கருணையைக் காட்டுபவை. இவ்வளவு வடிவங்கள் இருந்தும், அவன் வடிவம் இன்னது என்று சொல்லிவிட முடியாது.

"இப்படியன்,இந்நிறத்தன்,இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட" முடியாத பரம்பொருள் என்கிறார் அப்பர் பெருமான். அப்படியானால் இத்தனை வடிவங்களில் வருவானேன்  என்றால், " அருள் காரணத்தால் வருவான்" என்கிறது தேவாரம். பதஞ்சலி- வியாக்கிரபாத முனிவர்களுக்கு ஆடல்வல்லானாகக்  காட்சி அளிக்கும் அதே இறைவன், சனகாதி முனிவர்களுக்கு முன்னர் ஆலின் கீழ் அரு மறை உரைக்கும் குருநாதனாகத் தோன்றினான். சிறுத்தொண்ட நாயனார்க்கு முன்னர் ,ரிஷப வாகனத்தில் சரவணபவனும் உமாதேவியும் உடன் எழுந்தருள, சோமாஸ்கந்த சிவமாகக் காட்சி வழங்குகிறான். இப்படி அவன் ஏற்ற ஒவ்வொரு வடிவங்களும் ஒப்புயர்வற்றவை.

அந்தகனையும், காலனையும் அழிக்கும்போது சூலம் ஏந்திய நிலையிலும், ஐந்து தொழில்களும்  அவனுள் அடக்கம் என்பதை ஆனந்த தாண்டவ வடிவிலும், மான் மழு ஏந்தும் சோமாஸ்கந்த வடிவிலும் பல்வேறாகக் காட்சி அளிக்கும் இறைவன், அருவ  வடிவினன் ஆக இருப்பதைத் தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள். அங்கு உருவத்திருமேனி இருப்பதில்லை. எங்கும்வியாபிக்கும்  சிவ சிதம்பரமாகப்   பொன்னம்பலத்தில் சிதாகாசனாகத் தோற்றமளிக்கிறான்.

உருவ நிலைக்கும் அருவ நிலைக்கும் இடைப்பட்ட நிலையைத்தான் உருவாருவம் என்ற இரண்டும் கலந்த நிலை என்கிறோம். அதுவே சிவலிங்கமாகும். அந்த நிலையில் இதுவே உருவம் என்று சொல்லமுடியாதபடி,பாணம்,ஆவுடையார்,பீடம் என்ற முப்பிரிவுகளாகக்  காண்கிறோம். அதே சமயம் அருவமாக இல்லாதபடி லிங்க வடிவைக் காண்கிறோம். சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் உருவம் காட்டியும், சந்திரமௌளீச்வர ஸ்படிக லிங்கமான உருவாருவம் காட்டியும், பரந்த வெளியான சிதம்பர ரகசியம் எனப்படும் அருவமாகவும் முக்கோலங்களையும்  உணர்த்தும் தத்துவனாவதை நாம் சிந்திக்க வேண்டும்.  எவ்வளவோ பெரிய தத்துவத்தை இப்படி எல்லாம் தெரிந்துவிட்ட மாதிரி விளக்க முற்படுவதே ஒரு வகையில் தப்புதான்.

ஒரு முருக பக்தர் பாடினார்: எமன் வந்து என் உயிரைக் கவர முற்படும்போது நீ என்னைக் காத்து அருளவேண்டும் என்று சொல்ல வந்தவர், வள்ளி தேவானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி, காலால் நடந்து வந்து என் முன்னே வந்தருள வேண்டும் என்று பாடினார். வேண்டுவார் வேண்டுவது  அனைத்தையும் தரும் இறைவன் செவி சாய்க்காமல் இருப்பானா? எந்த உருவில் த்யாநித்தாலும் அந்த உருவில் எழுந்தருளுவதால் பக்தன் மகிழ்வதற்காக இவ்வாறு உருவம் தாங்கி எழுந்தருளுவது  அவனது பெருங் கருணையைக்  காட்டுகிறது.

அதே சமயத்தில் சிறிது சிறிதாக, உருவ வழிபாட்டிலிருந்து உருவருவமான சிவலிங்க வழிபாட்டின் பெருமையை உணர்த்துவதாக, சிவாலயங்களில் அந்த உருவாருவமான மகாலிங்கமே நடு நாயகமாகக் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த நிலையாக , உள்ளம் பெரிய கோவிலாகவும், உடலே ஆலயமாகவும், அருவ நிலையில் உள்ள பெருமானை யோகத்தால் த்யானிப்பது உயர்ந்தது. ஆகவே இம்மூன்று நிலைகளாலும் இறைவனைக் காணலாம்.இதைத்தான்  அருணகிரிநாதரும், "உருவாய் அருவாய்உளதாய் இலதாய்.." என்று பாடினார்.  மற்றவர்கள் படிப்படியாகக்  காட்ட முற்படாததை, அவரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி, மூன்று நிலைகளாகக் காட்டி நல்ல கதிக்கு வழி காட்டுகிறது நம் மதம். இதைப் புரிந்துகொண்டால் தான் நம் பெருமை  நமக்குத் தெரிய வரும்.

அண்மையில் ஒரு அன்பர்  கேட்டிருந்தார்: " நம் கடவுளர்கள் எப்போதும் அதே நிலையில் தான் இருப்பார்களா. அல்லது இவை யாவும் யாராவது கற்பித்ததா" என்று. அக்கேள்விக்கு விடையாகத்தான் இவ்வளவும் எழுதத் திருவருள் கூடியது. சித்தாந்தம் மூலமாக இன்னும் விளக்கங்கள் பெறலாம். அதற்கும் திருவருள் கூட்ட வேண்டுமே!

அடுத்ததாக, எந்த உருவில் இறைவனை வழிபடுவது என்ற சந்தேகமும் கூடவே வந்து விடுகிறது. ஒரு குழந்தை, தன்னை ஒத்த குழந்தைப் போல் தோன்றும் பிள்ளையார் பொம்மையைக் கண் - வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் உண்டு. இஷ்ட தெய்வம் இருந்தாலும் குல தெய்வத்தை மறக்கக் கூடாது. ஆக, எந்த வடிவில் வழிபட்டாலும், இறைவன் அந்த வடிவில் வந்து, அருளுவான். ஒரே வடிவில் இரு மூர்த்திகள் ஒன்றி இருப்பதை,சங்கரநாராயணர் வடிவிலும் அர்த்தநாரீச்வரர் வடிவிலும் ஒன்றிலிருந்து இரு மூர்த்திகள்(பிரம-விஷ்ணுக்கள்)தோன்றுவதை ஏக பாத மூர்த்தி வடிவிலும் காணும் அதே சமயத்தில் பிரளய காலத்தில் எல்லாத் தேவர்களும் சிவத்தோடு ஒடுங்கிவிடுவதை சீர்காழி சட்டைநாதர் வடிவிலும் காண்கிறோம்.இந்த வடிவங்கள் மனிதனின் கற்பனை அல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவன் வெளிப்பட்ட நிலையைக் காட்டுவனவாக  அந்தத் திருவுருவங்கள் காட்சி அளிக்கின்றன.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். நமக்கு எப்பொழுதெல்லாம் சந்தேகங்கள் ஏற்படுகின்றதோ அவற்றை உடனுக்குடன் தீர்த்துக் கொண்டால் , நம்மைப் பிறர் ஏசும்போது பதில் சொல்லத்தெரியாமல் விழிக்கும் நிலை வராது. "வேதாகமம் " "ஜபம்" "கர்த்தா" போன்ற சொற்கள் எந்த மதத்தைச் சேர்ந்தது என்றுகூடத் தெரியாத துர்பாக்கிய நிலைக்கு அல்லவா தள்ளப் பட்டிருக்கிறோம்!!  

Saturday, February 11, 2012

பெற்றோர் கடமை


 சென்ற தலைமுறையில் பெற்றோருக்கு இருந்த கடமைகளைவிட இந்தத்  தலைமுறையில் அவர்களுக்கு இருக்கும் கடமைகள் அதிகம் . நல்ல பள்ளிக் கூடத்தில் குழந்தைகளைப் படிக்கவைத்து விட்டால் மட்டும் போதாது. அவர்களுக்கு நல்ல குணங்கள் கற்றுக்கொடுப்பதில் எத்தனை பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்கள் ? பெரியவர்களுக்கே நல்ல குணங்கள் இல்லாதபோது குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கமுடியும் என்று கேட்கலாம். முதலில் குழந்தைகளுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே பலருக்குத் தெரிவதில்லை. பெற்றோர்களது ஒவ்வொரு செயலையும் இக்காலக் குழந்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். போதாத குறைக்கு வீடு தேடிவரும் படங்களும் பாடல்களும் மூளையைப் பாழாக்கி வருவதோடு சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆக்கிரமிக்கின்றன.

              முன்பெல்லாம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு நீதிக் கதைகளையும் எளிய பக்திப் பாடல்களையும் சொல்லிக் கொடுப்பதோடு , யாராவது விருந்தினர் தங்கள் வீட்டுக்கு  வந்தால் அவர்களுக்கு முன்னால் அக்குழந்தைகளை விட்டுச் சொல்லச் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வார்கள். அண்மையில் ரயிலில் பயணம் செய்த போது, அருகில் அமர்ந்திருந்த பயணிகளில் ஒரு பெண்மணி, தனது நான்கு வயது குழந்தையிடம் என்ன சொன்னாள் தெரியுமா? "எல்லாருக்கும் கொலைவெறி பாட்டு பாடிக்காட்டு" என்றவுடன் அதிர்ந்து போனேன். கொஞ்சம் தயங்கிய குழந்தைக்குத் "தைரியம் " கொடுத்துத், தானே முதல் அடியைப் பாடியும் காட்டினாள் அப்பெண். இக்காலக் குழந்தைகள், " கொலைன்னா என்னம்மா? " என்று கேட்டால் அதற்குப்  பெற்றோர்கள் என்ன பதில் சொல்வார்களோ தெரியவில்லை.

                அதே சமயம் நல்ல பழக்கவழக்கங்களை இக்காலக் குழந்தைகள் சீக்கிரமாகவே கிரகித்துக் கொள்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு இரண்டு வயதுக் குழந்தை ஒரு நாள் மாலையில் வந்திருந்தபோது, அவனது நெற்றியிலும் கைகளிலும் விபூதி இட்டுவிட்டதால் மீண்டும் மாலை நேரங்களில் வரும்போதெல்லாம் அவனாகவே பூஜை அறைக்குள் சென்று விபூதி டப்பாவை எடுத்து வந்து கையில் தருகிறான். முழுமையாகப் பேச்சு இன்னும் வராவிட்டாலும் தனது கைகளால் நெற்றியைச் சுட்டிக்காட்டி அந்த இடத்தில் விபூதியை இட்டுவிடும் படி சைகையால் காட்டுகிறான். குழந்தைகள் நல்ல வழியைக் கடைப் பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள். முதலில் பெரியவர்கள் அதற்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும். குடிப் பழக்கமும், புகைப் பழக்கமும் உள்ள தகப்பனைப் பார்க்கும் குழந்தை, பிற்காலத்தில் அதே வழியில் செல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

                 இன்னும் சில பெற்றோர்கள் தேவைக்கு மீறிய செல்லம்  கொடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். இதை குழந்தைகளும் நன்றாகவே பயன் படுத்திக் கொள்கிறார்கள். அடம் பிடித்து  வேண்டியதை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கூடம் போய் வர டூ வீலர் வாங்கித்தருவது,விலை உயர்ந்த செல் போன் வாங்கித்தருவது என்று தாராளமாக இருந்து விட்டுப் பிற்காலத்தில் பெற்றோர்  சொல்வதைக் கேளாமல் பாதை மாறிப் போவதைப் பார்த்துத் துடிப்பதை விட என்ன செய்ய முடியும்? சரிவரப் படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியையைக் கொலை செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் , வன்முறைகள் நிறைந்த ஒரு ஹிந்திப் படத்தை , செல்லிலும் சீடி யிலும் வீட்டில் பலமுறை பார்த்தவன் என்று அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.பணம் ஒன்றே குறியாகக் கொண்டு இளம் தலைமுறையை நாசம் செய்யும் இப்படிப்பட்ட படங்களை இனியாவது புறக்கணிக்க முன்வரவேண்டும். அரசாங்கமும் தனிக்கையைத் தீவிரமாக்க வேண்டும். கேளிக்கை வரி விலக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அறிவிக்க வேண்டும்.

                   இத்தனைக்கும் நடுவில் நடக்கும் சில அபூர்வமான விஷயத்தையும் இங்கு சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள முதியவர்களும் சீரியல்களையும் படங்களையும் பார்த்துக்கொண்டு டி.வீ யே கதி என்று இருக்கும் போது எத்தனையோ இளைஞர்கள் ஆலயங்களைச்  சுத்தம் செய்தும் , பிரதோஷ காலத்தில் சுவாமியை ரிஷப வாகனத்தில் தோள்களில் வைத்துத் தூக்கிக் கொண்டும் , இன்னும் சிலர் ருத்ரம், சிவபுராணம் ஆகியவற்றை சொல்லிக் கொண்டு ஸ்வாமியோடு கோவிலை வலம் வருவதையும் பார்க்கும் போது, இதைப் பார்த்தாவது வீட்டிலுள்ள  முதியவர்கள் திருந்த மாட்டார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. சில தினங்களுக்கு முன் ஒரு இளைஞர் தொலைபேசியில் கேட்டார்: " நானும் என் நண்பர்களுமாக ஆறு பேர் தேவாரம் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறோம். கற்றுத்தருவீர்களா?" என்றவுடன் உடனே சம்மதித்தேன். அதற்கு அவர், " நாங்கள் எத்தனை தக்ஷிணை தர வேண்டும் " என்றார்.  "நீங்கள்  காட்டும்  ஆர்வம்  இருக்கிறதே, அது மட்டுமே எனக்குத் தரும் தக்ஷிணை" என்றேன். நம் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பிற குழந்தைகளுக்கும் நல்வழி காட்டும் பாக்கியத்தைக்  கொடுத்த பரமேச்வரனுக்குப் பிரதியாக என்ன செய்ய முடியும்? "யான்  இதற்கு இலன் ஓர்  கைம்மாறே." என்ற திருவாசக வரிகளே நினைவுக்கு வருகிறது

Tuesday, January 31, 2012

மகாதேவன் சேவை மூலம் மக்கள் சேவை

                             இந்து சமயத்தின் பழமையையும் பெருமைகளையும் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் , மக்களுக்கு அது ஆற்றும் சேவைகளை  அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் நான்காவது ஆண்டாக, இம்முறை, சென்னையில் இந்து சமய ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி விமரிசையாக நடந்தது. 150 -க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர்  இதற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

பொருள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிக்கும் ஆன்மீகக் கண்காட்சிக்கும் உள்ள வேற்றுமை நன்றாகவே தெரிந்தது. இங்கு வந்தவர்களின் ஆன்மீக தாகம் நன்றாகவே வெளிப்பட்டது. என்னதான் வைத்திருக்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பவர்களை விட, தங்களுக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களே அதிகம் காணப்பட்டார்கள். சிலருக்குத்தான் எத்தனை எத்தனை சந்தேகங்கள்! ஒரு பெண்மணி ருத்ராக்ஷம் அணிவதைப் பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார். ' பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா; எவ்வளவு பெரிய அளவு வரை அணியலாம். தாலியோடு இணைத்து அணியலாமா; படுப்பதற்கு முன் கழற்றி வைத்து விட வேண்டுமா; ஒரிஜினல் ருத்ராக்ஷத்தை எப்படித் தெரிந்து கொள்வது; எத்தனை முகம் கொண்ட ருத்ராக்ஷம் அணியலாம் " இப்படி ஏராளமான கேள்விகள். இவ்வளவுக்கும் பதில் தெரிந்து கொண்ட பிறகு அவர்களாகவே முன்வந்து ருத்ராக்ஷம் வாங்கிச் சென்றபோது அவர்கள் முகத்தில் திருப்தி நிலவியது. ஒரு ஸ்டாலில் இலவசமாகவே ருத்ராக்ஷம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஓரிடத்தில் பழைய சிவாலயங்களில் திருப்பணி செய்ய வேண்டியது பற்றியும் ,மற்றொறு இடத்தில் அச்சிவாலயங்களில் தீபம் ஏற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். வேறொர் இடத்தில் ஒரு செடியின் இலையைக் கொண்டே தீபம் ஏற்ற முடியும் என்று சொல்லி, அச் செடியை விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில முக்கியப் பிரமுகர்களும் வருகை தந்திருந்தார்கள்.

இவ்வளவுக்கும் இடையில் www.shaivam.org அமைத்திருந்த அரங்கம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் சிவத்தொண்டு ஆற்றும் இணைய தளம் இது. 5000 த்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அருமையாக வடிக்கப் பெற்றுள்ளன. மாநிலங்களில் உள்ள சிவாலயங்கள் பற்றிய முழுத் தகவல்கள், பன்னிரு திருமுறைகள்,சைவ சித்தாந்த நூல்கள்,புராணங்கள் ஆகியவற்றின் மூல பாடங்கள், தமிழிலும் வட மொழியிலும் உள்ள துதிப் பாடல்கள், பதிவு செய்யப்பட பாடல்கள், வீடியோ காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட 24 மணி நேர ரேடியோ -- இப்படிச்  சிவனருளை வாரி வழங்குகிறது இந்த இணைய தளம். இராப்பகலாக இதற்கு உழைப்பவர்கள் இக்கண்காட்சியில் அந்த இணைய  தள நிகழ்ச்சிகளையும் பதிவுகளையும் காட்டி அருமையாக விளக்கியது பாராட்டுக்குரியது. இதை மற்றவர்களும் வீட்டிலிருந்தே கண்டு பயன் பெறுவது ஒன்றே அவர்களுக்குச்  செய்யும் கைம்மாறு.

ஒரு பெண்மணி கண்ணீர் மல்கத் தனது குறையையும் வெளியிட்டார்: " எனக்கு 60 வயது ஆகிறது.குழந்தைகள் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள். நானோ கோயில்களில் தொண்டு செய்வதில் பெரிதும் ஆர்வம்  காட்டுபவள். இதைக் கண்டு என் குடும்பத்தோர் பரிகாசம் செய்கிறார்கள். எனக்குத் தேவாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தோர் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்வேன்" இப்படி அப்பெண்மணி புலம்பியது நெகிழ வைத்தது. உலகத்தவர்கள் தன்னைப் பித்தன் என்று எள்ளி நகையாடியது பற்றிக் கவலைப் படாத மாணிக்கவாசகர் தன் நெஞ்சில் இறைவனை  நீங்காமல் கண்டதுபோல் நமக்குப் பக்குவம் ஏற்படவில்லையே. இறைவா, நீயே இதற்குத் துணை செய்ய வேண்டும்.  

Saturday, January 14, 2012

என்றும் புதியது


வேதமே தர்மத்திற்கு மூலம் என்றும் அதை ரக்ஷித்தால், அது நம்மை ரக்ஷிக்கும் என்று சொல்லுவார்கள். ரக்ஷிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை நசிப்பதையும் , கேவலப் படுத்துவதையும் அல்லவா பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! அதிலும் திரை உலகம் இச் செயலைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்தபோதிலும் கண்டிப்பவர்களைக் காணோம். அண்மையில் ஒரு திரைப் படத்தில் கதாநாயகனைக் காட்டும்போது புருஷ சூக்தம் ஒலிக்கப் படுவதாக ஒரு இணைய தளத்தில் வெளியான செய்தியை ஒரு பெண் சுட்டிக் காட்டியிருந்தார். பெண்ணாக இருந்தாலும் வேத தர்மத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை மற்றவர்களும் காட்டினால் நல்லது.

முன்பெல்லாம் கூடுமானவரையில் ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது கேட்பார் இல்லாமல் போனதால்  கோயில் வளாகத்துக்குள் ஆடல் (?) பாடல் (?) காட்சிகள் படமாக்கப் படுகின்றன. இவ்வளவு ஏன்? கோயில் மேல் தளக் கூரையில் இவற்றை எடுக்கிறார்கள். சின்னத்திரைக்காட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் மிகப் பெரிய கொடுமை என்ன என்றால், கோயிலுக்கு வரும் பக்தர்களை படப்  பிடிப்பு நடப்பதால் விரட்டி அடிப்பதே. இதற்கெல்லாம் அனுமதி அளிக்கும்  கோயில் நிர்வாகிகள் இந்தப் பாவத்திற்குத் துணை போகிறார்கள்.கும்பாபிஷேகம் செய்வது கோவிலைப் புனிதப் படுத்துவதற்கு என்று சொல்லிக்கொண்டு கூடவே இப்பாவங்களையும் அனுமதிப்பதால் அக்குடமுழுக்கு செய்தும் பலன் ஏதும் இருக்காது. கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? அதிலும் கேவலமான நடனங்களும், கோவிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத பாடல்களும் படமெடுக்கும் போ து நமது பண்பாடு எங்கே ஒளிந்து கொண்டது? தொட்டதற்கெல்லாம் நாகரிகம், பண்பாடு என்று முழங்குபவர்கள் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?   இது அடுத்தவர்களின் வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகத்  தோன்றவில்லையா? மத நம்பிக்கையையும் சடங்குகளையும் இழிவு படுத்துவதை  சட்டம் எப்படித் தடுக்கப் போகிறது? இதற்கு நீதிமன்றங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

இன்னும் ஒரு மனித உரிமை செயலை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. போகி பண்டிகையின் போது ,பழையன போக்கலும் புதியன புகுத்தலும் என்று சொன்னாலும் சொன்னார்கள் , தற்போது அதை அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்கள் , தங்கள் வீட்டிலுள்ள பழைய துணிமணிகளையும் வேண்டாத சாமான்களையும் விடியற்காலையில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்தத் தீயில் , ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்களும் அடங்கும். ஊரே புகைமண்டலம் ஆகி விடுகிறது.வெளியில் போனால் மூச்சு திணறுகிறது. மாசுக் கட்டுப் பாடு வாரியமும் ,காவல் துறையும் என்ன செய்வார்கள் ,பாவம்! ஊ த வேண்டுமே என்று சங்கை ஊ துகிறார்கள். இப்படி அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் நமது பண்பாடா? சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வெறும் குரல் கொடுத்தால் போதாது. இக்குரல் உதட்டளவில் நில்லாமல் உள்ளத்திலிருந்து வர வேண்டும்.

தற்கால நிலையைப் பார்க்கும் போது வேறு விதமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது. பழைய நல்ல பழக்க வழக்கங்களைப் போக்காமல், புதியன என்று சொல்லிக்கொண்டு நம் கலாசாரத்தைப் புதைக்கும் திரைப்படங்களையும்,சீரியல்களையும் , ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே இப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக ஆக்கும். தீய எண்ணங்களை எரிப்பதும் ,பழையதாகத் தோன்றினாலும் என்றும் புதியதாக நிற்கும் நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றி, ஒளிவீசச் செய்வதுவே  நம்மைப் புனிதப்படுத்தும். குப்பைகளைக் கொளுத்தும் தீயாக போகிப் பண்டிகை நின்று விடக்கூடாது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற விலைமதிக்கமுடியாத சிந்தனைகளைப் புடம் போட்டுப் பார்க்கும் ஞானத் தீயாக அது இருக்கட்டும்.வேதமும் வேள்வியும் ஆன ஞான பரமேச்வரன் இப்படிப்பட்ட ஞானத்தை நம் எல்லோருக்கும் வழங்கி அருள வேண்டும்.

Tuesday, January 10, 2012

"பத்திரிகை தர்மம்"


                               "தர்மம்" என்ற வார்த்தையைத்தான் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்!  " யுக தர்மம்" , "யுத்த தர்மம்" என்பதுபோலப் பத்திரிகைகாரர்களும் "பத்திரிகை தர்மம்" என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறார்கள்.   இந்த "தர்மம்" அந்த பத்திரிகையை நடத்துபவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். சமூகத்திற்குப் பிடித்ததாகவோ,பயன் படுவதாகவோ இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. "சமூக நீதி" என்று ஒரு சொல் இருக்கிறதே தவிர, அதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். வாசகர்கள் எழுதும் கருத்துக்களோ,கட்டுரைகளோ இந்த "தர்மத்தை" ஒட்டியிருந்தால் ஒரு வேளை பிரசுரிக்கப் படலாம்.

   மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய  செய்திகள் எவை என்பதில் ஒரு காலத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மறந்தும் தீய எண்ணங்களை மக்கள் மனத்தில் ஊன்றி விடக் கூடாது என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல் பட்டார்கள். சமூகத்தில் நடைபெறும் குற்றம்,குறைகளை  சுருக்கமாக வெளியிடுவார்களே தவிர , அதற்குக் கண்ணும் காதும் வைத்து எழுதமாட்டார்கள். இப்பொழுதோ, "உரத்த சிந்தனை" என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதித் தங்கள் கருத்துக்கு ஒத்து வெளிவரும் செய்தித்தாள்களிலும் , பத்திரிகைகளிலும் அச்சேற்றுகிறார்கள்.  இதற்குப் பெயர், "வித்தியாச சிந்தனை"யாம். "எதார்த்தமாம்.

    வித்தியாசமாக எழுதினால் மட்டுமே மக்கள் வரவேற்பார்கள் என்பது தவறான கருத்து. நல்ல எழுத்துக்களுக்கு என்றும் மதிப்பு உண்டு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய புத்தகங்களை இன்றும் எவ்வளவு பேர் விரும்பி வாங்குகின்றனர் என்பதைச்  சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். ஆன்மீகக் கட்டுரை எழுதினால் ,"சிலிர்ப்பூட்டும் அனுபவம்"   என்று எழுத வேண்டும் என்பதில்லை. உண்மையான பக்தனுக்கு அவை தாமாகவே சிலிர்ப்பூட்டுபவை அல்லவா?

   சுற்றி வளைத்துக் கடைசியில் விஷயத்திற்கு வருவோம். வழிபாட்டு முறைகளிலும் ,அவை நடைபெறும் கோயில்களிலும் மக்கள் கூட்டம் சேரும் போது ஆர்வத்தின் காரணமாகச் சில கருத்து வேறுபாடுகளும் ,தள்ளு - முள்ளுகளும் ஏற்படுவது இயற்கை. இவற்றையெல்லாம்  சம்பந்தப் பட்டவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர , பெரிதாக்கக் கூடாது. தாரை-தம்பட்டைகளை பூஜை நேரத்தில் பெரிதாக ஒரு கோஷ்டியினர்  சிதம்பரம்  நடராஜர் சன்னதியில் ஒலிக்கச் செய்ததாகவும் , தீட்சிதர்கள் அதற்கு ஆக்ஷேபித்ததாகவும் ,அதைத்  தொடர்ந்து "தள்ளு-முள்ளு " ஏற்பட்டதாகவும், ஜனவரி பத்தாம் தேதியிட்ட செய்தித் தாள்  வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தித்தாளின் "பத்திரிகை தர்மம்"தான் என்ன? இது உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறார்களா? படிப்பவர்களுக்கு ,இப்படித் தடுத்துவிட்டர்களே என்ற அனுதாபமும் , தடுத்தவர்கள் மீது கோபமும் வர வேண்டும் என்பது நோக்கமா?  உண்மை, உண்மையாக இருக்கும் வரை உரைகல்லே தேவை இல்லை. இது  போன்ற சலசலப்புகள் எந்த மதத்தில் தான் இல்லை? அவை எல்லாம் வெளி வருகின்றனவா ?

பூஜை நேரத்தில் தில்லையில் ஒலிக்கப் படும் பெரிய மணியின் நாதமும் , நந்தி அருகில் அன்பர் பலர் ஒலிக்கும் சிறு சலங்கைகளின் ஒலியும் அந்த சூழலைச் சிவலோகம் என ஆக்கும் போது , மேன்மேலும்  ஒசைகள் தேவையா என்று யோசிப்பது நல்லது. இதனால் இசைக்குழு அன்பர்கள் மன வருத்தம் அடையாமல் பெரூமான் தேரில் வீதி வலம் வரும்போது தாரை -தம்பட்டை போன்ற வாத்தியங்களை வாசிக்கலாம். பக்தர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதுகூட, பாரம்பர்யமாக இறைவன் முன் வாசிக்கப் படும் நாதஸ்வர இசைக்குப் பங்கம் வராமல் ,சற்றுத் தொலைவில் இருந்து ஒலிக்கலாம்.

    சன்னதியில் பக்தி பரவசம் ஏற்படுவதற்கு அருகிலுள்ள சூழ்நிலையும் ஒரு காரணம். அவை நமது பக்தியை மேலும் வளர்க்கத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாக ஒரு போதும் அமைந்து விடக்கூடாது. இன்னிசை வீணையும் ,யாழும், வேத ஒலியும், தோத்திர  ஒலியும் , அன்பர்களை மெய்மறக்கச்செய்து இறைவனோடு ஒன்றாக்கும் அற்புதத்தைத் திருவாசகம் நமக்குக் காட்டுகிறது. ஆகவே, சைவ அன்பர்கள் தங்களால் இயன்ற சிவப் பணியை  பிற அன்பர்களும் விரும்பும் வகையில் ஆற்றி வந்தால் எந்த வேறுபாடுகளும் தோன்றாது. சூடான செய்திகளுக்குக் காத்திருக்கும் மீடியாக்களும் மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும் செய்திகள் வெளியாவதைத் தவிர்த்து, ஒற்றுமைக்கு வித்திட வேண்டும்.  மக்கள் ஒற்றுமையும் நலனுமே தேச நலன் என்ற ஒரே தர்மத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். அதுவே உண்மையான " பத்திரிகை தர்மம் " ஆகும்.