இந்து மதத்தைக் கேவலமாக சித்தரிப்பது ஒரு சில அரசியல் வாதிகளுக்கு வாடிக்கையாக இருக்கலாம். அவர்களும் தேர்தல் காலங்களில் அடக்கி வாசித்துத் தன் இரட்டை வேடத்தை நிரூபிப்பார்கள். பத்திரிகை உலகமும் இதே பாணியில் செயல் படுவது வேதனையிலும் வேதனை. ஒரு சில எதிர்ப்புக் குரல்களே ஒலிப்பதால் தங்கள் சமூகக் கடமையை(!) தொடர்ந்து செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நம்மை யாரும் திட்டாதவரையில் நாம் எதற்குக் கவலைப் படப் போகிறோம்? ஊருக்கு ஊர் சத் சங்கங்களும் ,அடியார் கூட்டங்களும் இருந்து என்ன பயன்? இத்தனை கேலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கே உரியது அல்லவா?
சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கவர வேண்டி ஒவ்வொரு நாளும் ஒரு இணைப்பு மலரை வெளியிடும் தமிழ் நாளிதழ்கள் , ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. காரணம், ஆன்மிகம், வார பலன்,மாத பலன் என்றெல்லாம் வெளியிட்டால் மக்கள் விரும்பிப் படிப்பதே. இது போதாது என்று வார மலர் என்ற மசாலா வேறு. அடுத்தவர் மனதைப் புண் -படுத்தாதவரை எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். ஆனால் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நையாண்டி செய்வதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தமிழ் நாளிதழ் ஒரு உண்மை நிகழ்ச்சியை(?) வெளியிட்டுள்ளது. அது உண்மையாக நடந்ததா இல்லையா என்பதை அக்கட்டுரையை எழுதியவரிடமே விட்டுவிடுவோம். சென்னை புரசவாக்கம் கங்காதரேச்வரர் கோவிலில் சாயரட்சை பூஜையைக் காணத் தன் மனைவியுடனும், நான்கு வயது மகனுடனும் வந்திருந்தாராம் இப்"பாக்கிய"சாலியான கட்டுரை ஆசிரியர். பூஜை முடிவில் ஓதுவார் ஒரு பாடல் பாடி முடித்ததும் நிசப்தம் நிலவிய சில வினாடிகளில் இவரது நான்கு வயது பிள்ளை பாடின பாடல் என்ன தெரியுமா? " வா வாத்யாரே வூட்டாண்டே..." என்ற சினிமாப் பாடல். இதைக் கேட்ட பக்தர்களுக்கு சிரிப்பு வந்து விட்டதாம். ஆளுக்கொரு பாட்டு பாட வேண்டும் என்று குழந்தை நினைத்து இப்படிப் பாடி விட்டான் என்ற வியாக்கியானம் வேறே! அதை விடக் கொடுமை என்ன தெரியுமா? " கங்காதரேச்வரர் காதில் கட்டாயமாக ஒரு நேயர் விருப்பப் பாட்டு விழுந்து விட்டது." என்று எழுதியிருப்பது. அது மட்டுமல்ல. " குழந்தை பாடியதால் அதை அவர் பக்திப் பாட்டாக எடுத்துக் கொண்டிருப்பார்" என்று அருகிலிருந்த பெரியவர் சொன்னாராம் ! திருஞானசம்பந்தர்,மார்கண்டேயர்,சண்டிகேஸ்வரர்,துருவன்,பிரகலாதன் போற தெய்வீகக் குழந்தைகள் தோன்றிய புனித மண்ணிலா இப்படி?
நம் வீட்டிலும் தான் குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர்கள் அங்கே சினிமாப் பாடல்களையா பாடுகிறார்கள்? இதற்குத் தான் வளர்க்கும் விதம் முக்கியம் என்றார்கள் பெரியோர்கள். ஆனால் சினிமாப்பாடல்களைக் குழந்தைகள் பாடச் சொல்லிக் கேட்டுப் புளகாங்கிதம் அடையும் சீதாப் பாட்டிகளும் அப்புசாமிகளும் அதை வீட்டோடு நிறுத்திக் கொள்ளலாமே. தெய்வீகப் பாடல்களைக் குழந்தைகளுக்குப் பெரியோர்கள் சொல்லிக் கொடுத்த காலம் போய் இவ்வாறு சினிமாப் பாடல்களைப் பாடும் நிலை வந்துவிட்டது! இவை உண்மையோ கற்பனையோ நாம் அறியோம். பிரபல எழுத்தாளர் எழுதிவிட்டார் என்பதற்காக இதை வெளியிட்டுள்ள நாளிதழை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படி முன்வருவோர் யாரும் இல்லாதவரை இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும் நிலை நீடிக்கும்.













