Thursday, November 29, 2018

பொன் மாணிக்கவேல் ஐயா பதவிக்காலம் நீடிக்கட்டும்

பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள்.  நன்றி: வலைத்தளம் 
தமிழக போலீஸ் துறை அதிகாரி ஐ. ஜி. திரு. பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களின் பதவிக்காலம்  நவம்பரில் முடிவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. நேர்மையான அதிகாரிகளுள் என்றும்  மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் மாமனிதர் இவர். உலக அளவில் நடைபெறும் கொள்ளைகளை அறிந்து அபாரமாகச் செயல் புரிந்த இவரது அரும் பணிக்காக அரசும்,மக்களும் தலை வணங்கியே ஆக வேண்டும். சிலை மீட்ட செம்மல் போன்ற பட்டங்கள் கொடுத்துப் பாராட்டி விட்டுப் பொன்னாடைகள் போடுவதைக்காட்டிலும், அவரது துறையைச் சேர்ந்தவர்கள் இவருடைய  அடிச் சுவட்டில் பணியாற்றுவதே இவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

1960 களிலிருந்தே சிலைக் கடத்தல்கள் நடைபெறுவதாகக் கண்டறிந்த இவர் முனைப்பாகச் செயலாற்றியதால் தான் பல கொள்ளை போன விக்கிரகங்கள் மீட்கப் பட்டன. இன்னும் அவர் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருந்தும், பதவிக்கால நிறைவானது குறுக்கிடுவது பெரும் தடையாக இருக்கிறது. இன்னும் அவரது பதவிக்காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது நீடிக்கப்பட வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்களின் அவா. நிறைவேற்ற வேண்டியது அரசின் கையில் தான் உள்ளது. கடத்தல் வாதிகளுக்குத் துணையாக அரசு அதிகாரிகளோ ஆட்சி வர்க்கத்தைச் சார்ந்த பிறரோ ஒருபோதும் துணை போய் விடக் கூடாது. நேர்மையான அதிகாரியின் செயல்பாட்டுக்கு இடையூறாக அரசியல் புகுந்து விட்டால் நேர்மையின் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய் விடும். 

ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு ஐயா அனுபவங்கள் பலவற்றை நிச்சயமாகச் சந்தித்திருக்கக் கூடும். அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடானது என்றும், ஆபத்துக்கள் நிறைந்தது என்றும், அவர் நன்றாக அறிவார். இத்தனையையும் மீறிச்  செயல் பட்டார் என்றால், அவருக்குத் துணிவும், ஆண்டவன் அருளுமே துணையாக நின்றன என்று நிச்சயமாகக் கூறலாம். 

பரபரப்பான தகவல்களுக்காகவே தவம் கிடக்கும் மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் அவரிடமே கேள்வி கேட்பார்கள். மீட்டுக் கொண்டு வந்த சிலையின் சந்தை விலை என்ன என்பார்கள். அதையே தலைப்புக் கட்டித் தொலைக் காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடுவதோடு, கொள்ளை அடித்தவனை " சர்வதேசக் கடத்தல் மன்னன் " என்று வர்ணிப்பார்கள் அந்த மானம் கெட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் நமது ஐயா பாடுபட்டு சிலைகளை மீட்டு வந்ததைப பாராட்ட மனம் இருக்கிறதோ இல்லையோ, வெளியிடுவதற்குச் சூடான தகவல் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். 

பதுக்கி வைத்த கற்சிலைகளை ஐயா மீட்ட பிறகு அவற்றைப்  பாது காப்பாக வைக்க ஒரு இடம் கூடத் தரவில்லை நமது அரசு. அதற்கும் தளராமல் தமது அலுவலகத்திலேயே அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கொள்ளைக் காரர்கள் வெளி நாட்டவர்களது கைக்கூலியாகச் செயல் பட்டு நமது மூர்த்திகளைத் திருடிச் சென்றதைத் தான் நாம் கேள்விப் பட்டு வந்தோம். வேலியே பயிரை மேய்வது போல அறநிலையத்துறையின் கோயில் மூர்த்திகள் பாதுகாப்புக்காக ( ??? )  வேறு கோயிலில் வைக்கப் பட்டது போக, அக்கோயிலில் பணியாற்றும் அறநிலையத்துறை ஊழியர்களும், மேலதிகாரியின் துணையோடு  களவாடிச் சென்று விற்றதை  நமது ஐயா அவர்கள் கண்டறிந்து அனைவருக்கும் வெளிப்படுத்தியவுடன்  ஆன்மீக உலகே அதிர்ச்சி அடைந்தது. விக்கிரகத்தையே மாற்றி ஏமாற்றிய  கேடு கேட்ட பிழைப்புக்கு ஸ்தபதி ஒருவரும் உடந்தை என்பது மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது.

ஐயா அவர்களின் சீரிய தொண்டால் அறநிலையத்துறையின் ஒழுங்கீனங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத் துவங்கியுள்ளன. ஆயிரத்திற்கும் மேலான அறநிலையத் துறை கோயில்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டமை அம்பலமாகி உள்ளன. 

அரும்பாடு பட்டு ஐயா அவர்கள் மீட்டுத் தந்த மூர்த்திகள் உரிய கோயில்களில் தகுந்த பாதுகாப்பு வசதிகளோடு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூஜை செய்ய வழி வகுத்தால் தான் அவருடைய அயரா உழைப்புக்கு நாம் தரும் நன்றிக் கடன் ஆகும். ஆனால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகமோ, பணியாளர்களோ,  உள்ளூர் வாசிகளோ தொடர்ந்து அலட்சியம் காட்டுவது வேதனைக்கு உரியது. 

ஏதும் பொறாதவற்றுக்கெல்லாம் போராட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவிக்கும்  உள்ளூர் வாசிகளும் பிற ஊர் அன்பர்களும் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ? நமது தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும் அவ்வளவு தானா ? வெறும் வாய்ப் பேச்சில் வல்லவர்களா நாம் ?  

2 comments:

  1. அவர் பெயர் அமைந்ததே இறைவன் சித்தம் என தோன்றுகிறது. தீயவை வளர வளர இறைவன் தோன்றி அழிப்பான். இவரும் அதுபோன்ற அம்சமோ.

    ReplyDelete
  2. Sri Chandrasekaran is right. He seems to have the attributes of an instrument of Murugap perumaan.

    ReplyDelete