Thursday, January 11, 2018

வேலியே பயிரை மேயலாமா?


" வேலியே பயிரை மேயலாமா " என்பார்கள். இப்போது அதுவும் நடக்கிறது. அறத்தை நிலை நிறுத்த வேண்டியவர்கள், பாதுகாக்க வேண்டியவர்கள் அறமற்ற செயல்களை செய்யத்துணிந்து விட்டார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பணம் சம்பாதிக்க உலகத்தில் எத்தனையோ வழிகள் இருந்தும் ஆலயத்தையும் அதன் சொத்துக்களையும் கொள்ளையடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் வெளியார்களே இவ்விதக் கொள்ளைகளையும், ஏமாற்று வேலைகளையும் செய்து வந்தார்கள். ஆனால் இப்போதோ அறத்தை நிலைக்கச் செய்ய வேண்டிய உயர் அதிகாரிகளே தெய்வச் சிலைகளைக் கடத்தவும், பக்தர்கள் தரும் தங்கத்தைத் திருடவும் துணிந்து விட்டார்கள். பாதுகாப்புத் தருகிறோம் என்று சிலைகளை எடுத்துக் கொண்டு போய் கடத்தல் காரனிடம் விற்கும் இந்த அற்பர்களை தெய்வம் மன்னித்தாலும் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. 

விக்கிரகங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு அவற்றை வேறு ஒரு கோயிலில் வைத்துப் பூட்டி வைப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள். ஆக, காணாமல் போவதும், இவர்கள் கையில் கொடுப்பதும் ஒன்றோ என்னும்படி ஆகிறது. மொத்தத்தில் அவை உரிய கோயில்களில் இல்லாமல் போய் விடுகின்றன.. 

ஆகம மரபு மாறாமல் நிர்வகிப்பதாக , அற  நிலையத்துறை சொல்வதாக இருந்தால் அவர்களை ஒன்று கேட்கிறோம். உற்சவர் வீதி உலா சென்றால், கோயில்களை மூடி விடுவார்கள். காரணம், மூலவரே, வீதியில் உள்ளவர்களுக்கு அருள் புரிய வேண்டி உற்சவர் வடிவில் செல்வதால் கருவறையில் ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. உற்சவர் மீண்டும் ஆலயத்திற்கு வந்த பின்னரே மூலவருக்குப்  பூஜைகள் துவங்கப்படும். இதுவே ஆகமம் நமக்குக் காட்டும் நெறி. ஆனால் நடப்பது என்ன? உற்சவர்கள் வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் மூலவருக்கு பூஜைகள் நடத்தப் படுகின்றன. இது ஆகம விரோதம் இல்லையா? இதற்காகவா மன்னர்கள் எல்லாக் கோயில்களுக்கும் உற்சவ மூர்த்திகளை வார்த்துக் கொடுத்தார்கள்? 

சமீபத்தில் பந்தநல்லூர் ஆலயத்தில் நடை பெற்ற அதிகார துஷ்ப்ரயோகமும் அதனைத் தொடர்ந்து, அதிகாரியின் துணையோடு, உற்சவர்கள் களவாடப்பட்டதும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. இப்படியும் ஒரு பிழைப்பா இந்த அதிகாரிகளுக்கு!! வெட்கக் கேடு!! கேட்பவர்கள் காறித் துப்புவார்கள். நம்பிக்கைத் துரோகம்  அல்லவா இது!!  இதுபோல எத்தனை மூர்த்திகள் எத்தனை கோயில்களில் களவாடப் பட்டுள்ளனவோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் நல்லவர்களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது. 
உற்சவங்கள், கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெறும் ஆலயங்கள் மட்டும் அந்த நிகழ்ச்சிகளுக்காக உற்சவர்களைத் தங்கள் கோயிலுக்குக் கொண்டு வந்து விட்டு, மறுநாளே பாதுகாப்பு வழங்கும் கோயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதற்குக் குருக்களிடம் உத்தரவாதம் வேறு பெறப்படுகிறது! நிர்வாக அதிகாரியும்  பொறுப்பேற்றுக்  கூட இருந்து நடத்தலாமே ! 

ஆலயத் திருட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில், காமிராக்கள் பொருத்தும் வேலை துரிதமாக  நடைபெற்று வருகிறது. இதனால் என்ன பயன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. திருடர்கள் வருகையைப் பதிவு செய்வதோடு சரி. அடையாளம் காண இயலாதபடித் திருடர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டினால் அப்பதிவினால் எப்படித் துப்புத் துலக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால் அலாரம் பொருத்தினால், மணி ஓசை கேட்டவுடன், திருடுவதைக் கைவிட்டபடியே, வந்தவர்கள் தப்பித்து ஓடத்  துவங்குவர். .

ஒவ்வொரு கோயிலுக்கும் காமிரா பொருத்துவதற்கு குறைந்தது இருபதாயிரம் செலவாகிறது. டெண்டர் விடுவதில் மோசடி நடந்தால் இத்தொகை அதிகமாகும். இந்நாளில் அதுவும் சாத்தியமே.!  உயர் மட்டத்திலிருந்து கீழ் வரை லஞ்சம் புரையோடிக் கிடக்கிறது. இதற்கு அறநிலையத் துறை விதி விலக்காக இருக்க வாய்ப்பு உண்டா?  

அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். சிவசொத்தைக் கொள்ளை அடிப்பதைக்  கயவர்கள் மட்டும் செய்து வந்தது போக , அறம் காக்க வந்தவர்களும் உடந்தை ஆகிறார்கள் என்ற பழி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அற  வழி நின்றால், அதுவே உங்களது பல தலைமுறைகளைக் காக்கும். இல்லையேல், உங்கள் கண்முன்பே குடும்பம் சீரழிவதைக் காண்பீர்கள். இக்கலியுகத்தில் கண்கூடாகக் காணும் பல உண்மைகளுள் இதுவும் ஒன்று. மறந்தும் இத்தவறை மீண்டும் செய்ய வேண்டாம் ஐயா. 

No comments:

Post a Comment