Thursday, January 11, 2018

கோயில்களில் அராஜகம் நடக்க விடலாமா?

குறிச்சி சிவாலயம் 
நல்லதொரு குடும்பப்பின்னணி இருந்தால் , ஒழுக்கம்,அடக்கம், கடவுளிடத்து பக்தி ஆகியவை இயல்பாகவே அமைந்து விடும். பிற்காலத்தில் கெட்ட சகவாசத்தால் பிள்ளைகள் தவறான வழிக்குப் போவதுமுண்டு. அப்போது அவர்களைப் பெற்றோர்கள் திருத்த முடியாமல் போய் விடுகிறது. தவறுகளைத் தெரிந்தே, தைரியமாகச் செய்யும் திமிர் பிடித்தவர்களாக மாறி விடுகிறார்கள். பார்ப்பவர்களுக்கும் அவர்களிடம் நெருங்கவே பயம் ஏற்படுகிறது. சமூக விரோதிகள் வேறு எங்கேயாவது தொலைந்து சீரழிந்து போகட்டும். ஆலயத்திற்குள் பிரவேசித்து அக்கிரமங்கள் செய்யலாமா? 

அண்மையில் திருப்பனந்தாளிலிருந்து பந்தநல்லூர் செல்லும் வழியிலுள்ள குறிச்சி என்ற கிராமத்திலுள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். சிறிய கோயில் தான். ஒரே பிராகாரம். செடிகளும் ,புதர்களும் மண்டிக் கிடந்தன. விமானங்களின் மீது பெரிய அரச மரங்கள் முளைத்து, வேரூன்றியிருந்தன. அதனால் ஆலயச் சுவற்றின் பல பகுதிகள் பிளவு பட்டிருந்தன. 

அராஜகம் 
ஜாக்கிரதையாகப்  பிராகாரத்தை வலம் வரும் போது கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காலி செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் அங்கு கிடந்ததைக் கண்டு பதறினோம். பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறாத அந்த ஆலயத்தை இப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் சமூக விரோதிகள். ( துரோகிகள் என்று கூடச் சொல்லலாம். ) 

அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரைக் கேட்ட போது, ஆலயத்திற்குச் சுற்றுச் சுவர்  பல இடங்களில் இல்லாமல் இருப்பதால், இவ்வாறு குடிக்கவும், மலஜலம் கழிக்கவும் கயவர்கள் உள்ளே நுழைந்து பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  சுற்றுச் சுவர் கட்டாத வரையில் இந்த அராஜகங்கள் தொர்ந்து நடக்கும் என்றும்  கவலை தெரிவித்தார். ஆலயத்திற்குச் செல்லும் வழியில் பால் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தார் மனம் வைத்தால் ஆலயத்தைத் தூய்மைப் படுத்தி , சுற்றுச் சுவர் அமைக்கலாம். எப்போது மனம் வைப்பார்களோ தெரியவில்லை. தினசரி பூஜைகளுக்கு வழி இல்லாததால் ஒரு அன்பர் தினமும் சன்னதியில் விளக்கு ஏற்றிச் செல்கிறார். ஆனால், புத்தி கெட்டுப்போய் ஆலயத்தைச்  சீரழிக்கும் ஈனப் பிறவிகளைத் திருத்துபவர் யார் ? 

இவ்வாறு கைவிடப்பட்ட ஆலயங்களை வெளியூர் நபர்கள்  தூய்மைப்படுத்தித்  திருப்பணி செய்து கொடுத்தாலும்   , உள்ளூர் வாசிகளிடம் அக்கறை இல்லா விட்டால் அத்தனையும் வீணாகிப் போகிறது. தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள் இல்லாத வரையில் கோயில்கள் வௌவால்களுக்கும் பாம்புகளுக்கும் புகலிடமாக மாறி விடுகின்றன. 

இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவது. (பராமரிப்பின் கீழ் வருவது என்று இங்கு குறிப்பிட மனம் வரவில்லை.) பராமரிப்பே இல்லாமல் அழிவை நோக்கிச் செல்லும் ஆலயத்தைக்  காப்பாற்றிப்   பராமரிக்கத்தவறி  விட்டது அறநிலையத்துறை. நிர்வாக அதிகாரி எப்போதாவது இந்தப் பக்கம் வந்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி என்றால் எதற்காக அவர்களிடம் இக்கோயிலை வைத்துக் கொண்டு இப்படி அழியச் செய்கிறார்கள்? ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பதில் சொல்லட்டுமே பார்ப்போம். 

3 comments:

  1. The drunkards will say HRCE Office Gajendran thiruvadigal potri potri

    ReplyDelete
  2. N.Balasubramanyam
    what a sorry state of affair in spite of being under the HREC Board. They will only go to the rich temples to make money. this is why our Tamil Nadu has become regressive. Hope the authorities will look into it.

    ReplyDelete
  3. Extrely sorry to know all these
    Easwar Has to Protect and I pray Sivaya Namaha

    ReplyDelete