Sunday, October 1, 2017

பண்டிகைகள் வியாபாரிகளின் பிடியிலா?

நவராத்திரி ஒன்பது நாளும் உபவாசத்துடன் அம்பிகையை வழிபடுவோர் பலர் . வீடுகளிலும்,கோயில்களிலும் இப்பண்டிகை  ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களின் ஆர்வத்தையும், நம்பிக்கையையும்,பக்தியையும்  தங்களுக்குச்  சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகளைக் காணும் போது வருத்தமும்  ஏமாற்றமும் ஏற்படுகிறது.  வேறு எந்தப் பண்டிகை வந்தாலும் இதே நிலை தொடர்கிறது.    பூஜை செய்வதற்குப் பூவும் நீரும் இருந்தாலே அதனை செய்து விடலாம். அவ்வளவு எளிதாக நமக்குப் புண்ணியம் கிடைக்க விடுவார்களா நமது வியாபாரிகள்? நாளைக்கு ஒரு பண்டிகை வருகிறது என்றால் அதைக் காரணமாகக் கொண்டு விலையைக் கடுமையாக உயர்த்தி விடுகிறார்கள். பூ வரத்து குறைந்து விட்டதாம். இவர்களுக்கு மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் வானளவு லாபம் வந்தே தீர வேண்டும். அமோக விளைச்சலால் விலை சரிந்து விட்டால் விவசாயிகள் வேதனை என்றுதானே செய்தி வெளியிடுகிறார்கள்! பாமரர்கள் வேதனைப் படுவதற்கு யார் கவலைப் படப் போகிறார்கள்? 

நவராத்திரி கொலு பொம்மை விஷயத்திற்கு வருவோம். இந்த ஆண்டு பொம்மை வாங்கப்போனவர்களுக்குத் தெரியும், எத்தனை கடுமையாக விலையை ஏற்றி விற்கிறார்கள் என்பது. ஒரு சாண் அளவு கூட இல்லாத பொம்மைகளை சுமார் எண்ணூறு ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் ஜீ.எஸ்.டி வரியை அபத்தமாகக் காரணம் காட்டுகிறார்கள். எப்படியும் நம் வழிக்கு வந்து பொம்மைகளை வாங்கத்தானே வேண்டும் என்ற தைரியத்தால் இவ்வாறு விற்கப்படுகிறது.


இங்கு நீங்கள் காணும் இரண்டடி உயர பொம்மையின் விலையைக் கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். முதலில் அது என்ன பொம்மை என்று பலருக்குப் புரியாத நிலையில், கையில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியின் பொம்மை அது என்றார் ஒருவர். விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். பதினெட்டாயிரமாம்! என்னதான் வேலைப்பாடாக இருந்தாலும்  ஊரை உலையில் போட்டுப் பணம் சம்பாதிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு ஏழையோ, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரோ வாங்க முடியாதபடி பொம்மையின் விலை எட்டாக் கனி ஆக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுத பூஜை என்றால் நெருங்க முடியாத அளவுக்குப் பழங்களின் விலையும்,பூக்களின் விலையும்  ஏறி விடுகின்றன. பாவம் மக்கள்! ஆண்டுக்கு ஒரு முறை தானே என்று இந்த விலை உயர்வை சகித்துக் கொண்டு வாங்குகிறார்கள். முதலில் ஆயுதங்களுக்குப் பூஜை என்று ஆரம்பித்து, சைக்கிள், பைக்,கார் என்று எல்லாவற்றிற்கும் வாழை ,தோரணம்,பூ ஆகியவற்றைக் கட்ட ஆரம்பித்து விட்டதால், வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம் தானே! 

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது என்று சொல்லிக்கொண்டு,இப்படி ஏற்றிக்கொண்டே போனால் ஒரு நாள் தாங்கவே முடியாத நிலை வந்து, இந்த பூஜைகளுக்குக் குந்தகம் வராது என்பது என்ன நிச்சயம்? மக்களும் இன்று பூத்து நாளை வாடும் மலருக்கு சேர் ஆயிரம் என்று கொடுத்து வாங்குவதை முடிந்த வரை தவிர்த்து, விலை குறைவான பிறவற்றை வாங்கினால் இவர்களின் கொட்டம் கொஞ்சமாவது அடங்கும். இல்லாவிட்டால், தெரு ஓரம் முளைத்துக் கிடக்கும் அருகம் புல்லையும், எருக்கம் பூவையும் பறித்துக் கொண்டு வந்து விட்டு, சிறிய ஒரு கூறையும் பத்து ரூபாய்க்கு விற்றாலும் அதனை  வாங்கும் நிலை தொடரும். பூஜை செய்யும் அன்பர்கள் சிந்திப்பார்களா? இப்பொழுதாவது வீட்டில்,காய்கறி, பூ ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்பத் தொட்டிகளில் பயிரிடலாம். அதை விட்டுவிட்டு, அரசாங்கத்தையும், வியாபாரிகளையும் நம்புவதோ,குறைகூறுவதோ எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

No comments:

Post a Comment