Wednesday, March 29, 2017

சம்பிரதாயத்தை மீறுவது சரியா?

ஆப்த சிநேகிதர் ஒருவருடன் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திருநள்ளாற்றுக்குச்  சென்றிருந்தபோது ஒரு தம்பிரான் சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. சிநேகிதர் அந்த சுவாமிகளுக்கு முன்னரே அறிமுகம் ஆனவர். ஆகவே, அவரே நமது நண்பருடன் , ஒவ்வொரு சன்னதியாகக்  கூடவே வந்து தரிசிக்க உதவினார். ஒரு சன்னதியில் சிவாசார்யரின்  மகன் கற்பூர தீபாராதனை செய்வித்தான். அவனுக்கு வயது ஏறத்தாழ பதினைந்து இருக்கலாம் என்று ஞாபகம். அந்தச் சிறுவன் சன்னதிக்கு வெளியில் வந்து விபூதி பிரசாதம் கொடுத்தபோது தம்பிரான் அவனிடம்," ஏன் ருத்திராக்ஷம் அணியவில்லை" என்று கேட்டார். அதற்கு அவன் தன்னிடம் சிறிய மணிகள் கொண்ட மாலைதான் இருக்கிறது என்றான். சுவாமிகள் விடுவதாக இல்லை. " சின்னதோ பெரிசோ ருத்ராக்ஷம் ருத்ராக்ஷம் தானே? அதை அணியாமல் பூஜை செய்வதும்,விபூதி வழங்குவதும் தவறு அல்லவா? நமது முன்னோர்கள் வகுத்த பாதையிலிருந்து மாறுவது ஆகி விடுமே" என்றார். அவருக்கு நமது மரபின் மீதிருந்த அசையாத பிடிப்பே அப்படிப் பேச வைத்தது. அவர் அத்துடன் நிறுத்தவில்லை. மேலும் தொடர்ந்தார்: " நீங்கள் அணிவதைப் பார்க்கும் சேவார்த்திகள்,தாங்களும் விபூதி-ருத்ராக்ஷம் அணிய வேண்டும் என்று ஆசைப் படலாம் அல்லவா? அதனால் தான் அப்படிக் கூறினேன்." என்றார்.  மகனைத் திருத்தும் தந்தையின் கண்டிப்பையே அங்கு கண்டோம். 

அறுபத்து மூவரில் மூர்த்தி நாயனார் என்பவர்  ருத்ராக்ஷம் அணிவதில் எத்தனை சிரத்தையுடன் இருந்தார் என்பதைப் பெரிய புராணம் காட்டுகிறது. சிவ புராணங்கள் விபூதி ருத்ராக்ஷம் அணிவதன் மகிமையை விவரமாகக் கூறுகின்றன. பல ஊர்க் கோயில்களில் மூலவர் சன்னதியில் ருத்ராக்ஷப் பந்தல் அமைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

வேத பாடசாலைகளிலும்,தேவார பாட சாலைகளிலும் பயில்வோர், கழுத்தில் ஒரு ருத்ராக்ஷ மணி அணிந்திருப்பதைப் பார்க்கலாம். அது எப்போதும் கழுத்தோடு இருப்பதால் கண்ட ருத்ராக்ஷம் எனப்படுகிறது. பூஜா காலங்களில் ருத்ராக்ஷங்களால் ஆன மாலையை அணிந்தே சிவ பூஜை செய்வார்கள். இப்படிப் பயபக்தியுடன் பூஜைக்கும் ஜபத்திற்கும் உகந்த மாலையை ஒரு போதும் உதாசீனப்படுத்தக் கூடாது.  

காங்கேயத்திற்கு அருகில் உள்ள சிவன் மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்க இருக்கும் நிகழ்ச்சி சூசகமாக வெளிப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ருத்ராக்ஷம் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பொருள் தெரியவில்லை என்றாலும் நன்மையே நடைபெறும் என ஜபமாலை தந்த சற்குருநாதனான வேலவனை வேண்டுவோம். 

ருத்ராக்ஷ மகிமையை அறிந்தவர்களில் சிலர் அதனை அணியாமல் வெறும் கழுத்தோடு வெளியில் வருவதைப் பார்க்கும்போது, உலகிற்கு வழி காட்ட வேண்டியவர்களே இப்படி மாறிவிட்டார்களே என்று மனம் வேதனைப் படுகிறது. இவர்களது குருநாதர்களோ,பிற மகான்களோ செய்யாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இது தொடர்ந்தால் எவரும் இவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத நிலை ஏற்பட்டுவிடும். நமது தர்மத்தையும் பண்பாட்டையும் பேசுபவர்கள் தாங்களே அவற்றைச் செய்து காட்டினால் தான் பிறர் அவற்றைப் பின்பற்றுவர். காலக்  கோளாறு எல்லோரையும் மாற்றிவிடக் கூடாது. 

சிலவற்றை சிலர் சொன்னால் தான் மக்கள் மத்தியில் எடுபடும். பிரபலங்கள் மூலம் பலவகைப் பிரசாரங்கள் நடைபெறுவதைப் போலத்தான் இதுவும்! அப்படிச் சொல்ல வேண்டிய கடமை மேற்கொண்டவர்கள் பாதையிலிருந்து மாறலாமா? பூஜா காலங்களில் மட்டும் ருத்திராக்ஷம் அணிந்தால் இல்லறத்தார்களுக்கும் துறவிகளுக்கும், என்ன வித்தியாசம்?அவர்களை ஒன்றுக்கும் பற்றாத நாம் குறை கூறக் கூடாதுதான். இருந்தாலும் காலம் இவர்களையும் விட்டு வைக்கவில்லையே என்ற ஏக்கமும் மனக் குமுறலுமே இவ்வாறு சிந்திக்க வைக்கிறது. 

திருநெல்வேலிப்  பகுதியில் பல  சைவக் குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விபூதி -ருத்திராக்ஷம் துலங்கக் காட்சி அளிப்பதைக் காணும் போது நமது மரபு இன்னமும் காக்கப் படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.   ஆகவே பாதை மாறியவர்கள் தாங்களாகவே முன்வந்து பழையபடி சம்பிரதாயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மக்கள் அவர்களைப் புறக்கணிப்பர். ஏனென்றால் இவர்களது வழி காட்டுதல் இல்லாமலேயே, ஆன்மிகம் தழைக்க ஆரம்பித்திருப்பதை அனைவரும் அறிவார்கள்.