Wednesday, August 24, 2016

ஆலயத் திருப்பணியும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பும்

மனுநீதி சோழர் காலத்தில் நீதி கேட்டு ஆராய்ச்சி மணி ஒலிக்கப்பட்டது போல, இந்நாளிலும் நீதி வழங்குமாறு உச்ச நீதி மன்றம் வரை சென்று நீதியின் கதவுகள் மக்களால் தட்டப்படுகின்றன. காலதாமதத்தையும் பொருட்படுத்தாமல் நீதியின் பேரில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அது காட்டுகிறது. அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் துறைகள் மீதும் வழக்குகள் தொடரப்படுகின்றன. கடந்த  பல ஆண்டுகளாகவே  இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இருந்துவரும் ஆலயங்களின் பராமரிப்பு மற்றும்  திருப்பணி குறித்துப் பரவலாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது சம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது.  அறநிலையத்துறை நிர்வகிக்கும்  ஆலயங்களில் முன் அனுமதி பெற்றால்தால் திருப்பணி செய்யலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.முற்றிலும் இடிந்த கோயிலின் திருப்பணிக்கு மட்டும் இதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

உச்ச நீதி மன்ற அறிக்கையை முழுவதும் படித்தால் மட்டுமே அதன் நிலைப்பாடு தெளிவாகத் தெரிய வரும். அது வரையில் மேலெழுந்த வாரியாகப் படித்து விட்டு அனுமானத்தின் மூலம் நமக்குள் ஒரு அபிப்பிராயம் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்ட சிந்தனையால் எழுந்ததே இப்பதிவு. 

உதாரணத்திற்கு அறநிலையத்துறையால் பல்லாண்டுகளாகக் கவனிக்கப்படாத / திரும்பிக்கூடப் பாக்கப்படாமல் அலட்சியப்படுத்தப் பட்ட ஒரு சிவாலயத்தின் இன்றைய நிலையை இங்குள்ள படங்களில் காண்கிறீர்கள். 

ஒருகாலத்தில் பிரமாண்டமாக விளங்கிய இவ்வாலயம் மரங்கள் ஊடுருவிப் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. சுற்றிலும் வயல் வெளிதான். எல்லாவற்றையும் பறி  கொடுத்து விட்டு ஓட்டுக் கொட்டகையில் மூர்த்திகள்  தகுந்த பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருக்கும் அவலத்தை அறநிலையத் துறைதான் கண்டு கொள்ள வில்லை என்றால் மற்றவர்களாவது இரங்கக் கூடாதா? கலை, கல்வெட்டு என்றெல்லாம் வானளாவப் பேசும் ஆர்வலர்கள் எங்கே போனார்கள்?  கருத்துக் கூறுவதோடு ஒதுங்கிக் கொள்ளும் இவர்கள் ஆலயத்தைப் புனரமைப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்?  கால ஆராய்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கடவுளிடம் ஈடுபாடு இல்லாமல் போவதால் ஏற்பட்ட  விளைவே இது. 

நடைமுறையில் பார்த்தால் , ஒரு கோயிலின் திருப்பணி துவங்கும் முன்பாக ஊரார் ஒரு குழு அமைத்துத்  திருப்பணிக்காக அக்கோயிலின் நிர்வாக அதிகாரியை அணுகுகின்றனர். அவரது ஒப்புதலின் படியே திருப்பணிகள் நன்கொடையாளர்கள் மற்றும் ஊராரின் உதவியுடன் துவக்கப் படுகின்றன. இத்திருப்பணியில் அறநிலையத்துறையின் பங்கு சுமார் இருபது சதவீதமே ! அந்த உதவியின் மூலம் சுற்றுச் சுவர் அமைத்தல், தரை சீரமைத்தல் போன்ற பணிகள் கோயிலில் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை உதவி செய்யாததால், திருப்பணிக் குழுவினர்   நன்கொடையாளர்கள் மூலம் அதனை நடத்துகின்றனர். 

நிலைமை இவ்வாறு இருக்கும்போது நீதி மன்றத்திற்குப் போவானேன் என்று சிலர் கேட்கலாம். திருப்பணி என்ற பெயரில் பழமை அடியோடு மாற்றப்படுகிறது என்ற புகார்கள் பல ஊர்களில் எழுப்பப்படுகின்றன. உண்மைதான். கல்வெட்டுக்களைக் கூட அவற்றின் அருமை தெரியாமல் அகற்றியும் அவற்றின் மீது வர்ணம் பூசியும் மாற்றி விடுகிறார்கள். புதிய சன்னதிகள் வசதி என்ற பெயரில் ஏற்படுத்தப்படுகின்றன. பிராகாரங்கள் கடை வீதிகள்  ஆகின்றன. ஐம்பது அறுபது ஆண்டுகளாகத் திருப்பணி செய்யாமல் இருந்து விட்டு, ஒருவழியாகத் திருப்பணி செய்யப்பெறும் ஆதீனக்  கோ யில்களிலும் இத்தகைய மாற்றத்தைக் காண்கிறோம். பிராகாரங்கள் சிமென்ட் மேற் கூரைகளால் மூடப்படுகின்றன. கருங்கல் தரைகள் அகற்றப்பட்டு  கிரானைட் கற்கள் பொருத்தப்படுகின்றன. மூலத்தானத்தில் டைல்ஸ் கற்கள் பொருத்தக் கூடாது என்று அறநிலையத்துறை அறிவித்திருந்தும் எவ்வளவு பேர் அதைப் பொருட் படுத்துகிறார்கள்?  ஆங்காங்கே கருங்கல் தூண்களும் சுவர்களும் துளையிடப்படுகின்றன. பண்டைய ஓவியங்கள் மறைக்கப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றன. 

அனுமதி வழங்கப்பட்டும் இத்தகைய விதி மீறுதல்கள் நடக்கக் காரணம் என்னவாக இருக்கும்? நமக்குத் தெரிந்த வரையில் , அனுமதி வழங்கிய நிர்வாக அதிகாரி திருப்பணி நடக்கும் போது பார்வை இடாமல் எல்லாம் முடிந்த பிறகு வருகை தருவதால் ஏற்படும் விபரீதம் என்றே கருதுகிறோம். இத்தகைய நிலை கிராமக் கோயில்களில் தொடர்கிறது. நேரமின்மையைக்  காரண மாகக் காட்டுவதை ஏற்க இயலாது. முடியாமல் போகும் பட்சத்தில் அனுமதி வழங்குவதன் நோக்கம் தான் என்ன ? 

இப்போது நீதி மன்றத் தீர்ப்புக்கு வருவோம். நிர்வாக அதிகாரி அனுமதி வழங்கி விட்டுத் திருப்பணிகளைக் கூடவே இருந்து கண்காணிக்காதது ஏன் என்ற கேள்வி உச்ச நீதி மன்றத்தில் எழுப்பப்பட்டதா என்று தெரியவில்லை. அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதால் அக்கேள்வி எழவில்லை என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கக் கூடும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. 

மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கப்பெறும் திருப்பணி ஒப்புதல், காலம் தாழ்த்தப்பட்டு வழங்க சாத்தியம் ஆகலாம். " நீங்கள்      தாராளமாகத் திருப்பணி செய்து கொள்ளுங்கள்   அறநிலையத் துறையின்  உதவித் தொகைக்கு மேல் நன்கொடையாளர்கள் மூலம் திருப்பணியை நிறைவேற்றிக்  கும்பாபிஷேகம் செய்து கொள்ளுங்கள்" என்று தற்போது ஒதுங்கும் நிர்வாக அதிகாரிகள் இனிமேல் நமக்கேன் வம்பு என்று, அனுமதி கேட்டு வந்த விண்ணப்பத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டுத் தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் இருந்து விடுவர். அனுமதி கிடைக்க மக்கள் அலைய வேண்டிய நிலை வரலாம். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் திருப்பணி - கும்பாபிஷேகம்  காணாமல் மரம் முளைத்துப் போன ஆலயங்கள் மேலும் இயற்கைச் சீற்றத்தால் சீரழிய வாய்ப்பு ஏற்பட்டு விடும். இவற்றை நீதி மன்றத்தின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. நமது புராதன ஆலயங்கள் எவ்வாறு புனரமைக்கப்படவேண்டும் என்றும் அதற்கான கால வரையறை எவ்வளவு இருக்கலாம் என்றும் திட்ட வட்டமாக அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று நம்புகிறோம். 

எனினும் நமது  ஆதங்கத்தை இறைவனது திருச் செவிகளுக்குக் கொண்டு சேர்ப்போம். அனைத்து உலகங்களுக்கும் மேலான நீதிபதியான மகேசனின் தீர்ப்பே இறுதியானதும் வணங்கத் தக்கதும் ஆகும்.