Monday, June 20, 2016

கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டுமே

நமது கோயில்கள் வழிபாட்டுக்கு உரிய இடங்களாகவே மட்டும்  இருக்கவேண்டும். ஆனால் நாம் இன்று காண்பது என்ன ?  ஊர் வம்பு பேசவும் காற்று வாங்கும்  இடங்களாகவும் பலர்  அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மன அமைதியை நாடி வருபவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இந்த நிலை பெரும்பாலும் நகர்ப்புறக்  கோயில்களில் அதிகம். சில கோவில்களில் எழுதி  வைத்திருக்கிறார்கள் , " பரம்பொருளின் நாமத்தைத்தவிர வேறொன்றும்  ஆலயத்தில்  பேச  வேண்டாம் "  என்று.  கேட்டால் தானே?  நான் பேசுவதைக் கேட்க இவர்கள்  யார் என்பார்கள். சன்னதியை மறைத்துக் கொண்டு பிறரைத்  தரிசிக்க விடாமல்  செய்வார்கள். அண்மையில் நடைபெற்ற திருவாரூர் தேர் விழாவின் போது தேர் சக்கரத்தருகில்  எவரும்  நிற்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப ஒலிபெருக்கி  மூலம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு இருந்தார்கள். சக்கரத்திற்கு அருகில் நிற்பது ஆபத்து  என்று சொன்னாலும் கேட்காமல் அடம் பிடிப்பவர்களை என்ன  செய்வது ? கோயில் வழிபாட்டில் கூடவா ஒழுங்கீனத்தைக்  கையாள  வேண்டும் ? 

பல கோயில்களில்  படப்பிடிப்பு தாராளமாக நடத்தப்படுகிறது.  அப்படி நடக்கும்போது தரிசிக்க வருபவர்களை  உள்ளே நுழைய விடாமல்  படப்பிடிப்புக் குழுவினர் தடுக்கிறார்கள். அப்படித் தடுக்க இவர்களுக்கு ஏது அதிகாரம் என்று புரியவில்லை. சின்னத்திரைப் படப்பிடிப்பும் இதேபோல நடந்து வருகிறது. எதிர்ப்பவர்களைக் காணோம். அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு கோயில் பின்னணியில் கண்ட கண்ட நடனங்களைக் கொண்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சில நோட்டுக் கற்றைகளை வீசி  அனுமதி பெற்று விடுகின்றனர். இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ன  என்றால் கோயிலுக்கு வந்தவர்கள்  படப்பிடிப்பை வேடிக்கை  பார்ப்பதுதான். 

அண்மையில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம்  கோவிலில் விக்கிரகங்கள் களவாடுவதை மையக்  கருத்தாகக் கொண்டு இருப்பதாக அறிகிறோம். இந்த  தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சமூகப் பொறுப்பு என்ற ஒன்றே கிடையாதா? நாடு எக்கேடு கேட்டாலும் காசு சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களா? இவர்களுக்கு சிந்திப்பதற்கு வேறு கதையே கிடைக்கவில்லையா? சதித் திட்டம் தீட்டுவதற்கு சின்னத்திரையில் கோயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களைக்  கேட்கிறோம். நீங்கள்  மாறப்போவதில்லை. சின்னஞ் சிறிய வயதினரைப் பாழ் செய்தது போதும். கோவிலில் களவாடக்  கற்றுக்  கொடுக்காதீர்கள். கோடியில் ஒருவன் அதைப் பார்த்து வீணாகப் போனாலும் நாடு  தாங்காது. நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.  

களவு போவது ஒரு பக்கம்  போதாததற்கு விக்கிரகத்தையே மாற்றும்  ஏற்பாடுகள் அற நிலையத்துறையால் செய்யப்படுகிறது. இதைக்  கண்டித்து அடியார்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.  அதோடு நிறுத்தக்கூடாது. கோயில்கள் வியாபாரக் கூடங்களாக மாறுவதையும், படப்பிடிப்பு நிலையங்களாக  ஆவதையும் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும். கேட்பதற்கு யாரும் இல்லாததால் தானே இவ்வாறு படம் எடுக்கத் துணிகிறார்கள்?  அடியார் பெருமக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம். 

1 comment:

  1. Thank you, dear Sekhar, for approving the peaceful demonstration protesting the changing of an old and hallowed utsavamurti. More importantly for your additional advice.கோயில்கள் வியாபாரக் கூடங்களாக மாறுவதையும், படப்பிடிப்பு நிலையங்களாக ஆவதையும் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும்.
    May Bhagavan put some real sense of responsibility in temple Managements.

    ReplyDelete