Saturday, May 7, 2016

தவத்திற்கு அழகு

தன்னுடைய சொந்த பந்தங்களைத் துறந்து விட்டுக் காவி உடை தரித்துவிட் ட எல்லோரையுமா உலகம் கொண்டாடுகிறது?  பஞ்சேந்திரியங்களை அடக்கித்  தவம் செய்பவர்களையே மக்கள் நாடுவர். ஆகவே, வெளியில் காவி உடையோடு  சமயச் சின்னங்களைத்  தரித்துக் கொண்டால் மட்டும் போதாது. காவி உடை மேல் பட்டாடைகளை அணிந்தும், வெற்று மார்புடனும்  மக்கள் மத்தியில்  வலம் வரும் துறவிகளைப் ( ? ) பற்றி என்ன  சொல்வது?  அவர்களது சீடர்களும் அதைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகிறார்கள். பிறருக்கு முன் உதாரணமாக இருந்து காட்டவேண்டி யவர்களே நெறி மாறி நடக்கும்போது  மற்றவர்களால் என்ன  செய்ய முடியும்.?

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மூர்த்தி நாயனார் என்பவர்  மதுரைப் பெருமானுக்கு சந்தனம் அளித்துவரும் நியமத்தோடு வாழந்தவர். அவருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் சமணர்கள் செய்துவிடவே, தனது முழங்கையால் சந்தனக் கல்லில் கை நரம்பும் தோலும் கரையும்படி தேய்த்தார். அவரது பக்திக்கு இரங்கிய பரமேசுவரன் அவருக்கு மதுரையை ஆளுமாறு அருளினான். அரசரானபோதும் தனது சந்தனம் அளிக்கும் கைங்கரியத்திலிருந்து அவர் தவறவே இல்லை. அமைச்சர்களை நோக்கிய மூர்த்திநாயனார்," விபூதியே எனக்கு அபிஷேகப் பொருளாகவும், ருத்ராக்ஷமே ஆபரணமாகவும், ஜடாமுடியே கிரீடமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை ஆள்வேன்" என்றார். இந்த மூன்றாலும் ஆண்ட அவரை, சுந்தரர், " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும்  அடியேன் " என்று சிறப்பித்துப்  பாடியிருக்கிறார். . ஓரு அரசர் இவ்வாறு வாழ்ந்து காட்டியபோது, துறவிகள் , தாம் மேற்கொண்ட துறவறத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டியது  எவ்வளவு  அவசியம் என்பதை  சொல்ல வேண்டியதில்லை. .வையகத்தை நல்ல வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசனுக்கும் ஆசானுக்கும் உண்டு. அதை மூர்த்தி நாயனார்  வரலாற்றில் சேக்கிழார் கோடிட்டுக் காட்டுகிறார்:

" வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே
 செய்யும் அபிடேகமும் ஆக; செழுங் கலன்கள்
ஐயன் அடையாளமுமாக; அணிந்து தாங்கும்
மொய்புன் சடை மாமுடியே முடி ஆவது என்றார்."  

உள்ளத்து அழுக்கை நீக்கி இருள் நீக்கி அருள் தர வல்ல குருநாதரை நாடினால் குருவருளால் சிவனருள் எளிதில் பெறலாம். " தவத்திற்கு அழகு  சிவத்தைப் பேணுதல்"  என்பதால் இங்கு பேணுதல் என்பதைத்  தவத்தால் பேணுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு தவம் செய்வதால் குருவினது ஆற்றல் பன்மடங்கு பெருகும். எனவே , " என்பும் உரியர் பிறக்கு" என்றார் வள்ளுவர்.

காஞ்சி பெரியவர்கள் , சேஷாத்ரி சுவாமிகள்,ரமண மகரிஷிகள் போன்றோர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து தவம் செய்து காட்டியவர்கள். " நாட்டில் மக்கள் நெறி தவறி  நடக்கிறார்கள் என்றால் நான் செய்த தவம் போதாது என்று அர்த்தம். . முதலில் நான் மேலும் தவம் செய்து உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வேன்" என்று ஒருமுறை காஞ்சி பெரியவர்கள் சொன்னார்கள்.  

தவத்திற்கும் நெறி உண்டு. அந்த நெறியைக் காட்டி மன இருளை மாய்க்க வல்லவரே சற்குரு. அவரையே, திருமூலர்,  "  குருட்டினை  நீக்கும் குரு"  என்கிறார். அதுவரையில் முகத்தில் கண் கொண்டு காணும்  மூடர்களாக இருந்தவர்களை அகத்தில் கண் கொண்டு காணச் செய்து ஆனந்த மயமாக்கும் சற்குரு நாதர் கிடைக்க  நாமும்  தவம் செய்திருக்க  வேண்டும்.   தாயுமானார் சொல்லியதுபோல, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று முறையாக யாத்திரை செய்யும் போது சற்குரு  வாய்ப்பதும் உண்டு. அருளாளர்களுக்கு  இறைவனே சற்குருநாதனாக  எழுந்தருளுகிறான். திருத் துறையூர் என்ற தலத்தை அடைந்து " தவ நெறி தந்தருள்" என்று வேண்டிய சுந்தரருக்கு அவ்விதமே பெருமான் அருளினான். அங்கு சுவாமிக்கு சிஷ்ட குருநாதர் என்ற பெயர் உண்டு. அதேபோன்று திருப்பெருந்துறையில்(ஆவுடையார் கோயிலில்) மாணிக்க வாசகருக்காகக்  குருந்தமரத்தடியில் ஞானாசிரியனாக அருளினான் சிவபெருமான் .

மலைப் பிரதேசங்களிலும் காடுகளிலும் அவதூதர்களாக இரவில் யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தும், தவம் செய்தும் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அப்படியெல்லாம் இப்போது ஒருவேளை இல்லாமல் போனாலும் துறவறம் ஏற்றவர்கள் கால் நடையாகவே சென்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தங்கி, மக்களை நல்வழிப்படுத்தும் நெறியிலிருந்து மாறிவிட்டால் யார்தான் அவர்களைக் கரை ஏற்றுவார்கள்? நகர வாழ்க்கை வாழ்பவர்களையே சந்திப்பதும் அங்கே தங்குவதும் தவத்திற்கு இடையூறாகவே அமையும். தவத்திற்கு அழகான சிவத்தைப் பேணுவதிலும் சிரத்தை குறைய ஆரம்பித்து விடும். இருவேளை பூஜைகள் ஒரு வேளை  ஆகி விடும். அதர்மத்தில் மூழ்கியுள்ள மக்களைத் திருத்த வழி இல்லாமல் போய் விடும். நாளடைவில் துறவறத்தை ஏற்று மக்களை நன்நெறிப்படுத்துவோர்  எண்ணிக்கையும் குறைந்து விடுமோ என்ற அச்சமும் எழுகிறது. தவநெறி தந்தருளும் தயாபரனாகிய ஞான பரமேசுவரனே இதற்கும் வழி காட்ட வேண்டும்

1 comment:

  1. தற்காலத்தில் தவச்சின்னங்கள் வெறும் காட்சிப் பொருட் களாக மாறிவிட்டன. அவ நெறியாளர்களால் ஊக்கம் பெற்றே இன்று பலர் உருத்திராக்கம் மற்றும் திருனீற்றை அணிகிறார்கள். கடமை வேறு கொள்கை வேறு என்று கொக்கறித்த கயவர்களை அரியணையில் அழுகு பார்த்து சமய நெறியிலிருந்து வழுவினோம். அரிதார புன்னெறியாளர்களால் கவரப்பட்டு நம் சமயச் சின்னங்களை நினைவு கூறுபவர்களாக இழி நிலையில் உள்ளோம். சமுதாயம் உலகம் பழித்ததை ஒழிக்க மறுத்தாலும் பரவாயில்லை தற்போது பழிக்காக உழைக்கிறது. நெறி நில்லாத நய வஞ்சககர்களுக்கு தலைவர்களும் தவனெறியாளர்களும் தரி கெட்டவர்களாக இருப்பது வியப்பு ஒன்றும் இல்லை. தவமும் அவமும் காலத்தடத்தில் சுழன்றோடும் கருங்கற்கள் என்றே ஆறுதல் உறுவோம்.

    ReplyDelete