Thursday, April 14, 2016

அற நிலையத் துறை விளக்கம் தரட்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றை முகநூலில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார்.   தெய்வங்களுக்கு அணிவிக்க  வழங்கப்படும் நகைகள் பல கோயில்களில் களவு போவதும்,போலியாக மாற்றி வைக்கப்படுவதும் நடைபெறுவது தொடர்கதை ஆகி விட்டது. அது மட்டுமல்ல. பல கோயில்களில் கல்லாலும் பஞ்ச லோகத்தாலும் ஆன  மூர்த்திகள்  களவாடப்பட்டுள்ளன. இப்படி நகைகளும் மூர்த்திகளும் எத்தனை களவாடப்பட்டுள்ளன என்றும் எத்தனை மீட்கப்பட்டுள்ளன என்றும் இச்சட்டத்தின் மூலமாகக் கேட்கப்பட்டதற்கு அறநிலையத்துறை தந்துள்ள விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இவ்வளவு நடைபெற்றும் அற நிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

26.7.2010  தேதியிட்ட கடிதத்தில் தந்துள்ள தகவலின்படி 1999 ம் ஆண்டு முதல்  ஜூலை 2010 இடைப்பட்ட காலத்தில் 215 கோயில்களில் நகைத் திருட்டு நடைபெற்றுள்ளது. அதில் 16 கோயில்களின் நகைகளே மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 175 கற்சிலைகள் காணாமல் போனதில் 30  மட்டும் மீட்கப்பட்டுள்ளன. களவாடப்பட்ட 415 பஞ்சலோக விக்கிரகங்களில் 25 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 1999 ம் ஆண்டுக்கு முன்பும், 2010 ம் ஆண்டுக்குப் பிறகும் நாம் இழந்தது எத்தனையோ!!




மேற்கண்ட கடிதத்தின் பெறுநர் விவரம்  முகநூலில் மறைக்கப்பட்டிருக்கிறது. எப்படியானாலும் தரப்பட்ட தகவல் உண்மையானது என்று நம்புவோம்.
அறநிலையத்துறை அமைக்கப்பட்டதன் நோக்கமே ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத்தான். களவாடவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. இந்தத் திருட்டுக்களுக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? துறையின் அமைச்சரா, அல்லது,ஆணையரா, அல்லது இணை/துணை கமிஷனர்களா அல்லது குறைந்த பட்சம் நிர்வாக அதிகாரியா? திருட்டு நடைபெற்றால் ஒருவரும் தண்டிக்கப்படுவதில்லை. இடமாற்றம் கூடச் செய்யப்படுவதில்லை.        " இதெல்லாம் ஆலயங்களில் நடைபெறுவது சாதாரணம் அப்பா.." என்று கூடச் சொல்லிவிட்டு மௌனிகளாகி விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது இந்த அரசுத் துறை தேவையற்றது என்று சட்ட சபையில் எவரும் குரல் எழுப்புவதில்லை.

பஞ்சலோக மூர்த்திகள் களவாடப்படுவதைத் தடுப்பதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை வேறு ஒரு பெரிய கோயிலுக்கு இட மாற்றம் செய்கிறார்கள். எந்தக் கோயிலுக்காக அம்மூர்த்திகள் மன்னர்களால் செய்து வைக்கப்பட்டதோ  அவை இப்போது அங்கு இல்லாமல் போய் விடுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்றால் அவற்றை உரிய கோயிலுக்குக் கொண்டு வர அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. அர்ச்சகரும் ஊராரும் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்து கையெழுத்து இட வேண்டியிருக்கிறது. அதற்கான முழுச் செலவையும் ஊராரே ஏற்க வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரிக்கு வேறு என்னதான் பொறுப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

 ஐம்பொன் மூர்த்திகளை இட மாற்றம் செய்து வீட்டுப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். கற்சிலைகள் பராமரிப்பின்றி அனாதையாக விடப்படுவதை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை? சுற்றுச் சுவர் கூட அமைக்கப் படாமல் , உளுத்துப் போன கதவுகளே காவல் என்று இருக்கும் அவல நிலைக்கு யார் காரணம்?  சில ஊர்களில் அந்தக் கதவுகளுக்கும் வருகை தரும்  சேவார்த்திகளே பூட்டு  வாங்கித்தருகிறார்கள். மின்சார பல்பு பழுதுபட்டால் அதையும் அவர்களே வழங்குகிறார்கள்.  இதெல்லாம் யார் செய்ய வேண்டியது? நில வருவாயைத்தான் மீட்டுத் தர முடியவில்லை. பாதுகாப்பையாவது பலப் படுத்தக் கூடாதா?

இனி உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுற்றுச் சுவர் அமைத்தல், பலமான விக்கிரகப் பாதுகாப்பு அறை , பாதுகாப்பு அலாரம், முழுநேரக் காவலர்கள் , நகைப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.  இவற்றைச்  செய்யாமல் களவு பற்றிப் போலீசாரிடம் தகவல் தந்துவிட்டால் கடமை முடிந்து விடாது.  கடமை தவறும் அரசுத் துறையால்  ஆலயங்கள் இழந்தவை ஏராளம். எஞ்சியவற்றையாவது பாதுகாக்க வேண்டாமா?  

2 comments:

  1. Dear Sekar, Will it do any good to ask the Central Government to take interest in enabling the State Government in recovering the sacred treasures fully?

    ReplyDelete
    Replies
    1. Indeed it should help. It is a pity that the Centre has to intervene when the State has its own Ministry to take care of the Temples. Moreover, thefts are reported at Archaeological sites maintained by the Central Government as well. As in the past the temples should be handed over to God believers without any political interference. A local committee can look after the temple affairs like what is happening in Nataraja Temple,Chidambaram.

      Delete