Wednesday, March 2, 2016

கலைகளே காலக் கண்ணாடிகள்

கலைகள் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லனவற்றை எடுத்துக் கூறும் பொக்கிஷங்களாகத் திகழ வேண்டும்.  தீய எண்ணங்களுக்கு வித்திடுபவற்றையும் தற்காலத்தில் கலைகள் என்று  பெயரிடுகிறார்கள். அவற்றை உருவாக்குபவர்களைப்   பட்டமளித்துக் கௌரவிப்பது காலத்தின் கொடுமை. ஆலயங்களே பெரும்பாலும் கலைகளுக்கு ஊற்றுக் கால்களாகவும் அவற்றைத் தொடர்ந்து ஆதரிப்பனவாகவும் திகழ்ந்தன. தற்காலத்திலோ கலைச் செல்வங்கள் களவாடப்படுகின்றன. அவற்றின் பெருமை அறிந்து ஆதரிப்போர்  சிலரே!

ஆலயக்கலை  என்பது கட்டிடக் கலை மட்டுமல்ல. இசை, நாட்டியம், சிற்பம் போன்ற அருங் கலைகளின் காப்பகமாகவும் ஆலயங்கள் அமைந்துள்ளன. ஸ்தபதிகளில் தான் எத்தனை வகை! ஆலய நிர்மாணத்தை நன்கு அறிந்தவரே   ஆகம விதிப்படி ஆலயம் அமைக்க இயலும். ஒரு சன்னதி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எத்தனை அங்கங்கள் உண்டு என்பதை அவரே அறிவார்.

விமானங்கள் சதுரமாகவும்,உருண்டையாகவும்,கஜப் பிருஷ்டமாகவும், பல தளங்கள் கொண்டும் விளங்குவதைக் கண்டு வியக்கிறோம்.கருங்கற்களை  இயந்திர வசதிகள் இல்லாத காலத்தில் உயரத்திற்கு ஏற்றி விமானங்கள் அமைத்த ஸ்தபதிகளை எத்தனை பேர் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்?

தற்சமயம் ஒரு சிற்பம் செய்வதற்கே பல மாதம் பிடிக்கும்போது கோயில் முழுவதும் சிற்பக் களஞ்சியங்களைப் படைத்த அக்கரங்களைப் பாராட்ட வேண்டாமா? பாராட்டத் தவறுவதோடு அவர்கள் வியர்வை சிந்தப் படைத்த விமானங்களையும் கோபுரங்களையும் மரங்கள் ஆக்கிரமித்து அழியும் நிலையில் இருப்பதைக் கண்டும் மௌனிகளாகத் தானே இருக்கிறோம்?

ஒரு கல் எவ்வாறு தெய்வ உருப் பெறுகிறது , பிறகு  அவ்வுருவமானது  எவ்வாறு கோயிலில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு சாந்நித்தியம் பெறுகிறது என்பதை  ஆகமங்கள் அறிவிக்கின்றன.

பண்டைக்காலம் போல் தற்காலத்தில் சிற்பங்கள் செய்பவர்கள் குறைந்து விட்டாலும் அந்த வழி முறைகள் இன்னமும் பின்பற்றப்படுகின்றன.  கல்லிலும் ஆண் கல்,பெண் கல்,தேரை இல்லாக் கல் என்று உரிய கற்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவ்வாறு தேர்ந்தெடுத்த  கல்லை பூசித்த பிறகே அதனை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். சிற்பக் கல்லூரிகளில் பயின்றவர்களும் இதில் அடங்குவர். கல்லிலோ மரத்திலோ உலோகத்திலோ உருவாக்கப்படும் ஒவ்வொரு மூர்த்திக்கும்  தியான சுலோகம் உண்டு. அவற்றை மனப்பாடமாகக் கூறும் ஸ்தபதியார்களைக்  கண்டதுண்டு.

சண்டிகேசுவரர் வரலாறு 
கடினமான வேலைப்பாடு கொண்ட சிற்ப வரிசைகளைக் காணும்போது மலைப்பாக இருக்கிறது.  பூத கண வரிசையும் யாளிகளின் வரிசையும் நம்மை அயர வைக்கின்றன. சில ஊர்களில் சுமார் நான்கு அங்குலங் கொண்ட வரிசையில் பல புராணச் செய்திகளை அருமையாகச் செதுக்கியுள்ளார்கள். பெரிய அளவில் அமைந்துள்ள துவார பாலகர்கள், தேவ கோஷ்டங்கள் , ஒரே கல்லாலான மாபெரும் தூண்கள் - அவற்றின் நான்கு புறமும் உள்ள சிற்பங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம் ? ஒரே நாளில் வேன்- பஸ் வைத்துக் கொண்டு பத்து பதினைந்து கோவில்கள் பார்ப்பதில்தானே நமது கவனம் இருக்கிறது!
                                                                                                                      ---கலைகள் வளரும்

4 comments:

  1. Like visiting 10/15 temples in a day I felt guilty I am only able to read ,gaze and listen to your articles and remain mum.Unable to do servicing Hats off to you for atleast realising and making one to realise such important issues
    Sivaya Namaha

    ReplyDelete
  2. Completely agree. Nothing depicts history more than art. However given we are far away from history, it would be good to incorporate strategies to get people's attention towards these sculptures at temples - by having educational boards that describe the sculpture and its dating, etc. This would get more folks curious about things around the temple than just doing a one day trip to check their bucket list.

    ReplyDelete
  3. Thanks for reminding

    உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்
    துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி
    மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
    பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 2.67.8

    Namashivaya

    ReplyDelete
  4. Very good one. Should be made known to all with a wider covrage. We wouold be grateful, if you permit our domain www.thanjavurparampara.com for link to your like posts in your blog.
    sethu.R

    ReplyDelete