Monday, January 11, 2016

திருச்சோற்றுத்துறை வழிகாட்டுகிறது

திருச்சோற்றுத்துறை சிவாலயம் 
தற்காலத்தில்  பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாவதைப் பார்க்கிறோம். முதலில் நன்றாகப் படிக்க வேண்டுமே என்ற கவலை. அடுத்தபடியாக மேற் படிப்பு மற்றும் வேலை பற்றிய கவலை . இவை எல்லாவற்றையும் விட அவர்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டுமே என்ற பெருங் கவலை. பெற்றோர் பேச்சை  மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் படுவதோடு, எங்களது எதிர் காலத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்வோம் என்று முகத்தில் அடித்தால் போல் பிள்ளைகள் சொல்லும்போது என்ன  செய்ய முடியும்?  வளர்த்த விதம் சரியில்லை என்று பார்ப்பவர்கள்  முகம் சுளிக்கத்தான் செய்கிறார்கள்.

வளர்க்கும் விதம் என்றால் எதைச் சுட்டிக் காட்டுவது? கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதையா? ஊர் சுற்றினாலும் பார்க்காதது போல் இருந்து விடுவதையா? எப்படி உடை உடுத்தினாலும் வாயைத் திறக்காமல் மௌனம் சாதிப்பதையா? தொலைக் காட்சியே கதி என்று கிடப்பதையா? அதட்டிக் கேட்டால் நிலைமை விபரீதம் ஆகி விடும் என்று பயந்து ஒதுங்குவதையா?  அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்துக் குட்டிச்சுவர் ஆக்குவதையா?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அது தான் இளமையில் குழந்தைகளை நல்வழிப் படுத்தத் தவறுவது. அப்படிச் செய்திருந்தால் தீய வழிக்குச் செல்லுவதற்கு சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம். அதனால் தான் நமது முன்னோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் ஒழுக்கத்தைப் போதித்தார்கள். பள்ளிகளிலும் நீதிக் கதைகளைச் சொல்லி வந்தார்கள்.  நீதி நூல்கள் பல பாட திட்டத்தில் இருந்தன. இதிகாசக் கதைகளைச்  சொல்லுவதால் " கெடுவான் கேடு நினைப்பான்" என்பது மனதில் ஆழமாகப் பதிந்தது.  ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. நினைக்கவே கொடூரமான குற்றங்களைக் குழந்தைகள் செய்வதாகப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

இறை நம்பிக்கையும் பக்தியும் குழந்தைகளது சிறு வயதில் விதைக்கப்படும்போது அதுவே பிற்காலத்தில் நல்  ஒழுக்கமாகிய பயிர் வளர ஏதுவாகிறது. வாழ்க்கையில் முன்னேறப் படிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயத்தில் அது ஒழுக்கத்தைத் தராவிட்டால் அக்கல்வியால் என்ன  பயன்? இறைவனது தாள்  தொழாமல் கல்வி கற்று என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

பூமாலை புனைந்து புகழ்ந்துபாடும் சிறுமியர் 
விதிவிலக்காக இன்றைய சூழ் நிலையிலும் குழந்தைகள் நல்ல நெறியில் வளர்க்கப் படுவதைக்  காணும் போது நமது பாரம்பர்யம் முற்றிலும்  அழிந்துவிடாமல்  சில இடங்களில் பாதுகாக்கப் படுவது பாராட்டுக்குரிய விஷயம். திருவையாற்றுக்கு அருகில் உள்ள திருச் சோற்றுத்துறை என்ற சிறிய கிராமத்துக் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அங்கு உள்ள   ஓதன வநேசுவர சுவாமி ஆலயம் பிரசித்தி பெற்றது. தேவாரப் பதிகங்கள் பெற்றது. திருவையாற்றின் சப்த ஸ்தானங்களில் ஒன்றானதால் ஆண்டுக்கொருமுறை திருவையாற்றிலிருந்து ஐயாரப்பறது பல்லக்கு இங்கு எழுந்தருளுவது வழக்கம். இக்கோயிலில் சிறுவர்களும் சிறுமியர்களும் வழிபாட்டு முறைகளைத் தெளிவாகக் கற்கிறார்கள். நீறு அணிந்த நெற்றி, ருத்திராக்ஷம் அணிந்த கழுத்துடன்  வருகை தருகிறார்கள். திருமுறைப் பாடல்களைக் கற்கிறார்கள்.

மார்கழியில் விடியற்காலை ஐந்து மணிக்குத் திருவெம்பாவை-திருப்பள்ளிஎழுச்சிப் பாடல்களைப் பாடியவாறே திரு வீதிகளை வலமாக வந்து ஆலயத்தை அடைந்து வழிபாடு செய்கிறார்கள். அது மட்டுமல்ல. நந்தவனப் பூக்களைக் கொய்து மாலைகளாகக் கட்டிக் கோயிலுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.   பின்னர் இல்லம் திரும்பித் தங்கள்  பாடங்களைப் படித்து விட்டுப் பள்ளிக் கூடம் சென்று வருகிறார்கள். மற்ற ஊர்களுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறார்கள். இவர்களைப் பார்த்தாவது நாகரீக வாழ்க்கை வாழும் மற்றவர்கள் திருந்த வேண்டும். பள்ளிக்குப் புறப்படப் பத்து நிமிஷங்களே இருக்கும் வரையிலும் தூங்கும் குழந்தைகளைப் பார்த்தும் " இன்னும் கொஞ்சம் தூங்கட்டுமே" என்று செல்லம் கொடுப்பவர்கள்  இக்குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் தங்கள் செயலுக்கு வெட்கப்பட வேண்டும். நம் கோயில், நம் கிராமம் என்று வளர்ந்தால், அதுவே பிற்காலத்தில் நமது கலாசாரத்தைத் தாங்கும் தூணாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். `நாட்டு முன்னேற்றமும் அதில் அடங்கி விடும்.  

1 comment:

  1. ஸனாதனம் தன்னைத் தானே காத்துக் கொள்வது எல்லாக் காலங்களிலும் சாத்தியம் என்பது, திருச்சோற்றுத்துறை கிராம மக்களைப் போல சிலராவது பழைய பழக்க வழக்கங்களை விடாமல் இருப்பதோடு அவ்வாறு இருந்து வருவது அவர்களுக்கே எவ்வளவு ஆனந்தத்தையும் நிம்மதியையும் தருகிறது என்பதை நிதர்சனமாக உலகுக்குத் தெரிய வைப்பதிலிருந்து நன்றாகவே புரிகிறது.

    ReplyDelete