Wednesday, December 23, 2015

சமூக நீதி

நீதி மன்றங்களில் பல்லாண்டுகளாகக் குவிந்து கிடக்கும் வழக்குகள் முடிவுக்கு வரவே பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழ்நிலையில் அரசு தரப்பிலும்,எதிர் தரப்பிலும் தொடுக்கப்படும் வழக்குகள், சமூக நீதி கேட்டும்,ஊழலுக்கு எதிராகவும், அவதூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதி கேட்கும் வழக்குகள் என்று இப்படிப் பலவகையான வழக்குகளை நீதி மன்றம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வாதங்கள்,பிரதி வாதங்கள்,சாட்சியங்கள் ஆகியவற்றை சீர்தூக்கி ஒரு தீர்ப்பு சொல்வதற்குக் கால அவகாசம் மிகவும் தேவைப்படுகிறது. அப்படிச் சொல்லப்பட்ட தீர்ப்பு சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததால் மேல் மன்றத்திற்கு முறையீடு செய்கிறார்கள். அங்கும் பல ஆண்டுகள் ஆனபிறகு தீர்ப்பு வந்தாலும் உச்ச நீதி மன்றத்தை அணுகுகிறார்கள். அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பையாவது ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா? அதையும் அப்பீல் செய்யத் தொடங்குகிறார்கள். " யார் அர்ச்சகர் ஆகலாம்" என்பது பற்றிய வழக்கை ஒருவகையாக உச்ச நீதி மன்றம் தீர்த்து வைத்துள்ளது. அதைப்பலரும் வரவேற்கும் நிலையில்  ஒரு சிலர்   தீர்ப்பைக் குறை கூறுவதோடு மேல் முறையீடு செய்யவும் எண்ணுகின்றனர்.

இதுபோன்ற சர்ச்சைகளுக்காகவே காத்துக் கொண்டிருக்கும் மீடியாக்களின் காட்டில் மழை. மக்கள் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலத்தான் இதுவும் இருக்கும்போலத் தோன்றுகிறது. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் காலம் இது. கட்டுரை எழுதுவதும் கார்டூன் போடுவதும் ஒரு வரையறைக்குள் இருந்தால் நல்லது. மேலே  உள்ள கார்டூனில் சொல்லப்படும் அரசியல் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எதற்கு எதை உவமானம் காட்டுவது என்ற விவஸ்தை கூட இல்லாமல் போய் விட்டதா? மார்க்கண்டேயன் மீது கால பாசம் வீச எமன் எருமையில் வந்ததும் சிவபெருமான் இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டுக் காலனைக் காலால் உதைத்துத் தனது பக்தனைக்   காப்பாற்றினார் என்ற புராணக் கதையை இங்கு எப்படி சித்தரித்திருகிறார்கள் பாருங்கள்!  மத்திய அரசு எமனாம்!  அவன் கையில் இருப்பது பாசக் கயிறு சி.பி.ஐ யாம்! ஊழல் அதிகாரி மார்க்கண்டேயனாகவும் .டெல்லி  முதல்வர் சிவலிங்கப்பெருமானாகவும்  கார்ட்டூனில்  காட்டப்பட்டிருக்கிறார்.கள்.  இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது? கேட்டால் தமாஷ் பண்ணினோம் என்பார்கள்! கார்டூனை சீரியசாக  எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உபதேசம்பண்ணவும் ஆரம்பித்து விடுவார்கள். இவர்களது கிண்டலுக்கெல்லாம் புராணக் கதைகளும் கடவுளர்களுமா கிடைத்தார்கள்?

மீண்டும் அர்ச்சகர் விஷயத்திகு வருவோம். சில அரசியல் கட்சிகள் செய்யும் சதியால் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. மக்களைத் திசை திருப்பி ஆக்கபூர்வமாகச்  சிந்திக்க விடாமல் ஒட்டு ஒன்றையே குறி வைத்து நடக்கும் துரோகச் செயல் இது. மக்கள் என்று தான்  உணரப்           போகிறார்களோ தெரியவில்லை. மனதைத் தொட்டுச் சொல்லட்டும். கிராமக் கோவில்களில் நானூறு ரூபாய் சம்பளத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் எத்தனை பேர் அர்ச்சகராக முன் வரத் தயாராக இருக்கிறார்கள்? இருக்கும் சிலரை வயிற்றில் அடித்து ஊரை விட்டுத் துரத்துவதில் இவர்களுக்கு என்ன இன்பமோ தெரியவில்லை!கால நிலைமையால் அர்ச்சகர் தொழிலுக்கு ஆள் குறைந்து வரும் கால கட்டத்தில்  நாட்டில் வேறு தொழிலே இல்லாமல் போய் விட்டது போல அர்ச்சகர் தொழிலுக்குக் குறி வைப்பதன் நோக்கம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். பயபக்தியோடு அணுகவேண்டிய தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதன் விளைவை மேலுள்ள படமே விளக்கும். முக நூலில் வெளியான இப் படத்தின்  முழு விவரங்களும் தெரியாவிட்டாலும் படமே ஓரளவு கதையைச் சொல்லி விடுகிறதே!

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வதுண்டு. பத்திரிகைகளைப் படிப்பதையும், சமூக வலைத் தளங்களைப்  பார்ப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்  என்பார். நியாயம்தான். அதனால் மனம் படாத பாடு படுவதுதான் மிச்சம்.. நல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கமோ தெரியவில்லை அப்பழக்கம் தொடர்கிறது. நிறுத்தும்  வழி தெரியவில்லையே!