Thursday, October 1, 2015

எல்லாப் பிழையும் பொறுப்பாய்

பெரியவர்கள் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த காலம் போய் தற்போது ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு புதிய வழியை அமைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இதற்குத் தனி மனிதர் சுதந்திரம் என்று பெயர் இட்டு விடுகிறார்கள்! தற்கால நீதியும் இதற்குத் துணை செய்வதால் எனக்குப் பிடித்ததை நான் செய்வேன் என்ற எண்ணம் தலை தூக்குகிறது. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகளைப் பொறுப்பாயாக என்று இறைவனிடம் வேண்டிய காலம் போய் விட்டது. வேண்டுமென்றே தவறுகள் செய்யும் காலம் இது. என்னைப் பொறுத்தவரையில் அது தவறு அல்ல என்ற எதிர் வாதம் வேறு! ஆகவே யாரும் யாரையும் திருத்த முடியாது என்ற நிலை இப்போது உருவாகி விட்டது.

தான் வேறு வழியில் போவதோடு நிற்காமல் மற்றவரை ஏளனம் செய்வதையும்  குறை  கூறி எழுதுவதையும்  தொழிலாகக் கொண்டவர்களையும்  பார்க்கிறோம். இதனால் பழைய நெறி முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். நாகரீக உலகம் அவர்களை ஏற்பதில்லை. எளிய வாழ்க்கை முறை  நாகரீக வாழ்க்கைக்கு முன் அடி பட்டு விடும் போல் இருக்கிறது. சமூகத்தில் ஒரு அந்தஸ்தை நாடுபவர்கள்  இந்த நாகரீகப் போர்வையைப் போர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எப்பொழுது இந்த நாகரீகம் வீட்டிலேயே ஆரம்பித்து விட்டதோ அப்பொழுதே பழைய வாழ்க்கை முறைகள் திரும்பிப் பார்க்கப் படுவதில்லை.

இந்த மாற்றங்கள் ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. " வேத நெறி தழைத்து ஒங்க " என்று திருமுறை பாடி விட்டு மறுகணமே " புரியாத பாசை நமக்கு எதற்கு? "  என்று கேள்வி எழுப்புகிறார்கள். வடமொழி புரியாத பாஷையாகவே இருக்கட்டும். தமிழை முற்றிலும் பொருள் உணர்ந்து இவர்கள் படிக்கிறார்களா? இந்த மொழி துவேஷம், கோயில் வழிபாட்டிலும் சடங்குகளிலும் காட்டப்பட்டுத் திருமுறைகளை ஓதிக் குடமுழுக்கு செய்வதும் , திருமணங்கள் செய்வதும், இறுதிச் சடங்குகள் செய்வதும் சில இடங்களில் ஆரம்பமாகி இருக்கிறது. இவை எல்லாம் மொழியின் மேல் உள்ள பற்று என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை. தமிழில் செய்து வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களை அல்லவா  பார்க்கிறோம்!

திருவாசக முற்றோதல் , கயிலாய வாத்தியம் ஒலித்தல் என்பன போன்ற மாற்றங்களும் அண்மைக் காலத்தில் அரங்கேறியுள்ளன. திருவாசகத்தை முற்றோதுவது சிறப்பானது தான். அதனை ஒரே மூச்சாக அரை நாளில் வாசிப்பதால் எத்தனை பேருக்கு அதன் பொருள் புரியும்? இதை விடக் கொடுமை என்னவென்றால் உயிர் நீத்தவர்களின் அந்திமக் கிரியைகளுக்கும் திருவாசகம் ஓதப் படுவதுதான். இதுபோன்ற தவறான வழி காட்டுதல்களை மடாதிபதிகள் திருத்த வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தான் நினைத்ததை எல்லாம் செய்வது என்று ஆகி விட்டால் சமயத்திற்கென்று ஒரு  நெறி இல்லாது போய் விடும். ஊர் ஊராக அவர்கள் விஜயம் செய்து மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். கயிலாய வாத்தியக் குழுக்கள் வந்தவுடன் நாதஸ்வரங்கள் உறையில் இடப்படுகின்றன. மந்திர ஒலியோ தேவார இசையோ கேட்பதில்லை. இவையெல்லாம் ஆரம்பத்திலேயே திருத்தப்படாவிட்டால் ஆல  விருட்சம்  ஆகி சமயத்திற்கே ஆபத்து விளைவித்து விடும்.

மாற்றங்கள் கால நிலைமையால் ஏற்படுபவை என்பது உண்மைதான். ஆனால் அவற்றின் மூலம் தலை கீழான மாற்றங்கள் ஏற்படுமானால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக் கூடும். ஆலயங்களை  பயபக்தியுடன் அணுகாவிட்டால்  அதிகாரம்,ஆணவம், ஆகியவை தலைதூக்கி விடும். இறைவனுக்கும் தலை வணங்காதபடி அகம்பாவம் நம்மைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

திருநாவுக்கரசரது  தேவாரப் பாடலின் ஒரு பகுதியை நாம் இங்கு நினைவு கூர்வோம்:
...." எ(ன் )னை  ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய் ; பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்  பிழைத்தனகள்  எத்தனையும் பொறுத்தாய் அன்றே..."

  நாம் அன்றாடம் செய்யும் அக்கிரமங்களை இறைவன் ஒருவனால் மட்டுமே பொறுக்க முடியும். ஆனால்  பிழைகள் நாளடைவில் எல்லையில்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. " எல்லாப்  பிழையும்  பொறுத்து அருள்வாய்" என்று  இப்போதாவது பிழை பொறுத்து மன்னிக்க வேண்டி நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். நம்மைப் பிடித்த ஆணவ மலம் அப்போதுதான் அகலும்.

1 comment:

  1. xlant
    let me know the full song ayya
    thanks and regards
    dharumaidasan

    ReplyDelete