Thursday, July 16, 2015

சிலைத் திருட்டைத் தடுக்காதது ஏன் ?

சுமார் அறுபதாண்டுகள் முன்னர்  தமிழகக் கோயில்கள் ஓரளவு நன்கு பாமரிக்கப்பட்டு வந்தன என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக, ஆதீனங்களால் பராமரிக்கப்பட்டவை நன்கு திருப்பணி செய்யப்பட்டும் ,நிர்வாகிக்கப்பட்டும் நித்திய பூஜைகள், விழாக்கள் முதலியன  நடத்தப்பட்டும் எல்லோரது பாராட்டையும் பெற்று விளங்கின. நாளடைவில், நில வருவாய் குன்றியதால் நிலை சீர்குலைய ஆரம்பித்தது. இருந்தாலும்,பரிகாரம் செய்து கொள்ளவும் , மணிவிழா போன்ற வைபவங்களை நடத்திக் கொள்ளவும் மக்கள் கூட்டம் பெருகி வருவதால் அத்  தலங்களுக்கு  கட்டண வசூலும் உண்டி வசூலும் பெருகி வருவதை மறுக்க இயலாது. இப்படி, வருமானம் உள்ள கோயில் அதே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மற்ற  கோயில்களுக்கு உதவ முடியும்.

துரதிருஷ்ட வசமாக நாம் காணுவது வேறாக இருக்கிறது. ஆதீனக் கட்டுப்பாட்டில் வரும் பல ஆலயங்கள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஐம்பதாண்டுகள் மேலாகப் பொலிவிழந்து இருக்கின்றன. சில இடங்களில் இடிபாடுகளோடு இருப்பதையும் பார்க்கிறோம். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கோயில்களைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது நிச்சயம் அவர்களால் முடியும். அதனைத் திருவாவடுதுறை ஆதீனம் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செய்து காட்டியுள்ளது. அவர்களது ஆலயங்கள் திருப்பணி செய்யப்பெற்றுக் குட முழுக்கு நடத்தப் பட்டுள்ளன. பிற மடங்களில் ஏன் இது சாத்தியமாகவில்லை என்பது தெரியவில்லை.

திருப்பணி நடைபெறாதது ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்குப் பாதுகாப்பாவது போதிய அளவு வழங்கக் கூடாதா?

விக்கிரகங்களும்,கலசங்களும்,ஆபரணங்களும்,உண்டியலும்  திருடப்படும் இக்காலத்தில் முன்னைவிட அதிக விழிப்பாக இருக்கக் காணோமே!! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தால் திருட்டுக்கள் குறைக்கப்படலாம் அல்லவா? மெய்க்காவல் புரியும் சிப்பந்திகள் பெரும்பாலும் முதுமை அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். தகுந்த நபர்களை நியமித்து, தக்க ஊதியம் அளித்து, உறுதியான  கதவுகளும் எச்சரிக்கை மணியும் அமைத்துத் தர வேண்டியது தானே?

சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதீனக் கோயிலில் கொள்ளையர்கள் புகுந்து முக்கியமான மூர்த்தியை எடுத்துச் சென்று விட்டதாகப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. ஆலயத்தின் பாதுகாப்பு குறித்துத் தணிக்கை நடைபெற்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்க முடியாது. வருமானம் அதிகம் இல்லாத தேவஸ்தானம் என்பதால் நிர்வாகமே இப்படி அலட்சியப் படுத்தலாமா? ஆதீன கர்த்தரும்,தம்பிரான்களும்,பிற மடத்து அதிகாரிகளும் ஆண்டுக்கு எத்தனை முறை வருகை தருகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அடியார்களாகிய நாம் செய்யக் கூடியவை என்ன என்பதை சிந்திக்கலாம். விக்கிரகங்களுக்குப் பாதுகாப்பு அறைகள் கட்டித்தர முன் வரலாம். அவற்றில் தொங்கு பூட்டைத் தவிர உள் பூட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். திருடர் அலாரம் அமைத்துத் தரலாம். இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம்.
இறைவன் தன்னை வைதாரையும் வாழ்விப்பவன், குற்றம் பொறுப்பவன்  என்றெல்லாம் புகழப் படுகிறான். அதனால்தான் உரிமையோடு இப் பாதகங்களைச் செய்கிறார்களோ தெரியவில்லை!  காமனைக் கண்ணால் விழித்தவன் இப்பாவியர்களைத் தண்டிக்காதது ஏன் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கேவலம் பணத்திற்காகக்  கோவிலைக் கொள்ளையடிக்கும் கும்பல் முற்றிலும் ஒழிக்கப் படும் வரை இக்குற்றங்கள் நீடிக்கும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அடியார்கள் செய்த பாவம் தான் என்ன?  கண்களும் காதுகளும் செய்த பாவம், இக் கொடுமைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேலும் எங்களுக்குத் தாங்கும் சக்தி இல்லை. நீயே கதி என்று இருக்கும் அடியார்கள் படுவது இதுவேயானால் உமக்கே பழி வந்து சேரும். அதற்காகவாவது,பிரிந்து சென்ற நீர் மீண்டும் திருக் கோயிலுக்கு எழுந்தருளி எங்களை வாழ்விக்க வேண்டும் என்று உனது பொன்னர் திருவடிகளுக்கு விண்ணப்பம் செய்வதைத் தவிர எங்களால் வேறென்ன செய்ய முடியும்? 

2 comments:

  1. Oh! Very sad,our expectation is: GOD shouldn't keep silence,need to take action,,otherwise faith will go down��

    ReplyDelete
  2. Thambiran Swamigal has no time for Kurukkai Temple. He has time only to build unwanted choultries at Chidambaram and visiting Houses and marriages instead of taking care of their own temples.

    Another Gurugnanasambandar has to be born to save Dharmapuram

    ReplyDelete