Tuesday, March 31, 2015

ஆலயங்களை அசுத்தக் கூடங்களாக ஆக்காதீர்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலை ஒட்டிக் கழிப்பறைக்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருவதாக ஒரு அன்பர் முகநூலில் தெரிவித்திருந்தார். சென்னை கபாலீஸ்வரர் கோயில் மேற்புறச் சுவரை ஒட்டி உள்ள கழிப்பறை , அவ்வழியே வருவோரை முகம் சுளிக்க வைத்திருக்கும். போதாக் குறைக்குத்  தெரு  முனையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியால்  ஏழும் துர்நாற்றம். வழி நெடுகிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகள்! இவ்வளவையும் தாண்டிக் கோயிலுக்குள் நுழைபவருக்காக ஆலய நிர்வாகமோ , நகராட்சியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை குப்பை வாரினாலும் ஓரிரு முறை கழிப்பறையைக் கழுவிவிட்டாலும்  அவர்கள் வேலை முடிந்து விடுகிறது.

கோயிலுக்கு உள்ளேயும், மதிலை ஒட்டியும் கழிப்பறைகள் அவசியமா என்று யோசிக்க வேண்டும். கோயில் இடத்தை வெகு சுலபமாகக் கைப்பற்றி, கழிப்பறை , சமூகக் கூடம், உணவுக் கூடம் ஆகியவை கட்டுவது மிகவும் எளிதான படியால் இப்படிச்  செய்கிறார்கள். கோவிலுக்கு வருகை தருபவர்கள் முகம் சுளிப்பதோடு சரி. அதிருப்தியைத் தெரிவிப்பதில்லை. ஏராளமான அமைப்புக்கள் இருந்தும் ஒருவரிடமிருந்தாவது குரல் ஒலிக்கக் காணோம்!
கோயிலுக்கு உள்ளே எந்த புதிய கட்டிடமும் கட்ட அனுமதிக்கக் கூடாது. அது கழிப்பறையோ , உணவுக்கூடமோ  , கல்யாண மண்டபமோ, சமூக நலக் கூடமோ நிர்வாக அதிகாரியின் அலுவலகமோ எதுவானாலும் சரி. இக்கருத்தை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களும் உண்டு. முதலில் அவர்கள் இதன் குறைபாடுகளைப் புரிந்து கொண்டு பின் எதிர்க்கத் தயாராகட்டும்.  அவையாவன:

ஆகம விதிக்கு முரணான கட்டுமானங்கள் இவை

பராமரிப்பு வசதிகள் மிகக் குறைவு.

பராமரிக்கக் கூடுதல் ஆட்கள் நியமிக்க வேண்டும். அச் செலவை  ஏற்கனவே உள்ள ஆலயப்  பணியாளர்களின் நலனுக்குப் பயன் படுத்தலாமே!

கோயில் அலுவலக வாயிலில் கார் நிறுத்தம் 
புத்தகக் கடைகளும், வீடியோ ,ஆடியோ குறுந்தகடுகளும் . வழிபாட்டு நோக்கத்திலிருந்து திசைதிருப்பும் வியாபாரக் கூடங்கள் ஆகின்றன.
ஆலய மண்டபங்கள் நிர்வாக அதிகாரியின் அலுவலகங்களாக மாற்றப்படுகின்றன. சேவார்த்திகளை ஆலய வாசலில்  செருப்பைக் கழற்றி வைக்கச் சொல்லி, டெண்டர் மூலம் காசு பறிக்கும் நிர்வாகம், அதிகாரிகளும் ஆலய சிப்பந்திகளும் தங்கள் வாகனங்களுடன் அலுவலக வாசல் வரை செருப்புக் கால்களுடன் செல்வதை எப்படி  அனுமதிக்கிறது?.  இவர்கள் கழிப்பறைக்காகக் கோயிலுக்கு வெளியில் செல்வார்களா?

ஆலய வளாகத்துள் கல்யாண மண்டபம் அமைத்து, அமைதியைக் கெடுக்கும் ஒலிபெருக்கிகள். சாப்பிட்ட எச்சில் இலைகளைப் பிராகாரத்தில் வீசி எறிந்து விட்டு அங்கேயே கை கழுவும்  சிகாமணிகள் ! நிர்வாகத்திற்கு வேண்டியதெல்லாம் மண்டப வாடகை மட்டும் தானே!  சாப்பிட்ட கூட்டம் கோயிலுக்குள் வந்து பிற பக்தர்களுக்கு விளைவிக்கும் தொல்லைகள்! போகிற போக்கில் ஆலய வளாகத்தில் மல ஜலம் கழித்து விட்டுப் போவோர்கள் வெளியில் உள்ள கழிப்பறையையா பயன் படுத்தப் போகிறார்கள் ?  அப்படியே போனாலும் அது பயன் படுத்தும் நிலையிலா இருக்கும்?

ஆலய மதிலை ஒட்டியும் திருக்குளத்தை ஒட்டியும் அசுத்தப்படுத்தக்கூடாது  என்ற அறிக்கை  எழுதப்பட்டிருந்தால் தவறு செய்வோர் ஒரு நிமிடமாவது யோசிப்பர். ஒருவர் அத்தவற்றைச் செய்யும்போது அதைப் பார்த்து மற்றவர்களும் அவ்விடத்திலேயே செய்கிறார்கள். நமது ஒற்றுமை இதில் தானே இருக்கிறது !! கேவலமானதும் வெட்கித்  தலை  குனிய வேண்டியதுமான விஷயம்.

கழிப்பறை இல்லாவிட்டால் எங்கு போவார்கள் என்று கேட்கலாம். இதற்கான விடையை நகராட்சியே தர வேண்டும். வேறு எங்கும் இடம் கிடைக்காவிட்டால் இவர்களுக்குக் கோயில்தான் கிடைத்ததா? கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளைச் சுகாதாரப் பகுதியாக அறிவித்து விட்டு அவற்றின் வெளியில் தகுந்த இடத்தில் கழிப்பறைகள் அமைக்கலாமே ! இதற்கான விழிப்புணர்வைக் கோயிலுக்கு வரும்  மக்களுக்கு ஏற்படுத்தலாம். இதை விட்டு விட்டுக்  கோயில்களைச்   சுற்றிச் சுற்றியே இவர்கள் அசுத்தக் கூடங்கள் நிறுவுவது வெட்கக் கேடாக இருக்கிறது.   

No comments:

Post a Comment