Sunday, May 4, 2014

சிவாசார்யர்களுக்கு ஓர் அழைப்பு


சிவாலயங்களில் நித்திய பூஜை செய்வதற்குத் தனி  உரிமை உடையது சிவாசார்யர் குலம். சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் இப்பரம்பரை, ஆதிசைவப் பரம்பரை என்று வழங்கப்படும். இவ்வாறு முப்போதும் திருமேனி தீண்டும் ஆதி சைவர்கள் அரசர்களாலும் மக்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தனர். கோவில் வருமானம் இல்லாமல் போனதாலும், போதிய ஆதரவு இல்லாததாலும் இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதோடு தங்கள் குழந்தைகளையும் கோயில் பூஜைக்கு விடத் தயங்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது..


செலவினங்கள் அதிகரித்து வரும் தற்காலத்தில் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகக் கடினமாகிவிட்டபடியால், அடுத்த தலைமுறையினரைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இவ்வாறு ஒரு சாரார் , தங்கள் பரம்பரைத்தொழிலை விட்டு விட்டுப் பிற வேலைகளுக்குச் செல்வதால் கோயில்களில் பூஜை செய்வோர் குறைந்து பல கோயில்களில்  ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் நிலையும்  ஏற்பட்டுள்ளது.

சிவாகம பாடசாலைகள் பல கற்பார் இன்றி  மூடப்பட்டும், எஞ்சியவைகளில் கற்போர் எண்ணிக்கை குறைந்தும் வருவது கவலை அளிப்பதாக உள்ளது.  பாடசாலைகளில் தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள் பலர் நல்ல ஊதியம் சம்பாதித்த போதிலும் , அவர்களுக்குத் திருமணம் நடப்பது மிகக் கடினமாக ஆகி வருகிறது. காரணம், ஆதிசைவ குலப்பெண்கள் பலர்தங்கள் எதிர் காலம் பற்றிய கவலையினால் வேலைக்குச் செல்லும் தங்கள் குலத்து ஆண்களையே மணம் செய்ய விரும்புவதுதான்! 

உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜைக்குக் குந்தகம் ஏற்படாதவாறு நம்மால் ஆனதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பின் வரும் திட்டம் மூலம் ஆர்த்ரா பவுண்டேஷன்சிவாசார்ய பரம்பரையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி நற்பயனை அளிக்க ஆகமங்களை அளித்த முழு முதற்கடவுளான பரமேச்வரனது பாத கமலங்களைச் சிந்தித்துப் பிரார்த்திக்கிறோம்.
·         + 2 படித்த சிவாசார்ய குல மாணவன் , சிவாலயத்தில் காலையிலும் மாலையிலும் பூஜை செய்யும் பட்சத்தில், PF இணைந்த நல்ல சம்பளத்துடன் , கம்ப்யூடர்  தொடர்பான  வேலை அளிக்கப்படும். இதனால் , கோவிலில் பூஜை நடைபெறுவது பாதிக்கப்படாததோடு, அதிக வருமானம் ஈட்டவும் வகை செய்யப்படுகிறது. இவ்வாறு வேலைக்குச் செல்வதால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடையும் நீங்கப்பெறும்.
·         ஏழ்மையில் வாடும் சிவாசார்யர்களுக்கு ஆதரவாக, அவர்களது குழந்தைகளை சிவாகமப் பள்ளிகளில் சேர்க்கும் பட்சத்தில், ஒவ்வொரு குழந்தைக்காக ரூ 2000 , மாதந்தோறும் அக் குழந்தையின் தந்தைக்கு வழங்கப்படும். உபநயனம் ஆன  8 முதல்  10 வயதுக் குழந்தைகளை இவ்வாறு ஆகம பாடசாலைகளுக்கு அனுப்புவதால், தேர்ச்சி பெற்ற சிவாசார்யர்களை உருவாக்க முடியும்.

சிவாசார்ய குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்  இத்தகைய முயற்சியானது  மேற்கொள்ளப்படுகிறது. அணுகுமுறையில் மாற்றம் ஏதேனும் தெரிவித்தால் அதனை நிச்சயம் பரிசீலிக்கலாம். இதனை ஏற்கும் விருப்பம் உள்ளவர்கள் ஆர்த்ரா பவுண்டேஷனை 9840744337 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.