Saturday, December 27, 2014

சக்தி அருள்வாய் சிவனே

மனித உடலில்  எதிர்ப்பு சக்திகள் குறைந்தால்  நோய்கள் தாக்குவது எளிதாகி விடுகிறது என்கிறார்கள். எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே நம்மைக் கவசம் போல் காப்பாற்றும். அதற்காகச்  சத்துள்ள உணவை  உட்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.அது மட்டுமல்ல. நியமம்,விரதம், தியானம்,ஜபம் போன்றவையும் நம்மைக் கவசமாகக் காக்கின்றன என்று பெரியோர் கூறுவர்.  துன்பம் வந்தபிறகு கடவுளைத் தொழுவது, நோய்ப்பட்டபின்பு மருந்தைத் தேடுவது போலத்தான். வருமுன் காப்பதே உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பதால் பிராணாயாமம், தியானம்,ஆலய வழிபாடு  போன்றவற்றை நமது  முன்னோர் கடைப்பிடித்து, நல்வழி காட்டியுள்ளனர்.

 ஒருவகையில் பார்த்தால் ஆலயங்களையும் இவ்வரையறைக்குள் இணைத்துப் பார்க்கலாம். மேற் சொன்ன நியமம் , நெறிமுறை ஆகியவற்றோடு ஆலய பூஜைகள் நடைபெற்றால் மூர்த்தியின் சாந்நித்தியம் அதிகரித்து, வேண்டுவோர் வேண்டிய வரமனைத்தும் கிடைக்கும். . இவ்வளவு நடைபெற்றும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் ஆகமமுறையில் நடத்துவதால் மூர்த்திகரம் அதிகரிக்கிறது.

நம்மை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நோய்கள் மட்டுமல்ல. நம்மையும், நம் ஊராரையும், நம் சமயத்தையும் , நம் நாட்டையும் எதிர்க்கும் சக்திகள் ஒன்று திரண்டு வரும்போது செயலற்றுப் போய் விடுவோம். அதற்குப் பிறரைக் காரணம் காட்டுவதைக் காட்டிலும் நமக்கு எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். எதிர்ப்பு என்றால் மற்றவர்களுடன் சண்டை போடுவது என்று அர்த்தம் அல்ல. நம்மிடம் நியமமோ,மந்திர பலமோ, நம்பிக்கையோ, நித்திய வழிபாடோ  குறைந்தால் இதை எல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். எங்கோ சிலர் இன்னமும் பழைய நெறிகளோடு வாழ்வதால் இந்த அளவாவது நாம் காப்பாற்றப்படுகிறோம் .

உலகம் உய்ய அந்தணர்கள் நித்திய கர்மாவுடன்,அழல் ஓம்பவேண்டியதை, " எரி  ஓம்பிக் கலியை வாராமே  செற்றார் " என்று சம்பந்தர்  அருளுவதால் அறியலாம்.  மூவேளையிலும் காயத்திரி மந்திரத்தால் உபாசிப்பதோடு  விடுமுறை நாட்களில் ஆயிரம் முறை ஜபம் செய்வதால் தனக்கும் ஊருக்கும் நன்மை ஏற்படுவதோடு அதுவே கவசமாகக் காக்கும் என்பதையும் உணர வேண்டும். உலகியலிலிருந்து கொஞ்சமாவது விலகி நியமத்தோடு வாழ முயல வேண்டும். அப்போது எந்த எதிர்ப்புச் சக்தியும் நம்மை நெருங்க அஞ்சும். செய்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கோவில் நடைமுறைகளும் நியமத்தோடு விளங்கினால் ஆலயங்களுக்குள் தவறுகள் நடக்க இடம் தராது. இல்லாவிட்டால் சன்னதிகள் காட்சிக் கூடங்கள் ஆகி விடும். வியாபார நோக்கில்/லாப நோக்கில் செயல் படும். வழிபாட்டு நோக்கமே பாழாகி விடும். ஒரு கால பூஜையே செய்ய முடிகிறது என்னும்போது சாந்நித்தியத்தை எப்படி எதிர் பார்ப்பது ?

திருக்குளங்களைச் சுற்றிலும் சிறுநீர் கழிப்பது, குப்பைகளைக் கொட்டுவது என்று நெறிகெட்டு இருக்கும்போது, திருக்குளத்தின் புனிதத்துவத்தை எப்படிக் காப்பாற்றுவது ? அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? அனைத்து  நதிகளும் வந்து சேரும் புனிதம் வாய்ந்த கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் பாருங்கள் !  இப்படி அதன் சாந்நித்தியம் பறிபோவதால் பிற மதத்தவர்  குளத்தைச் சுற்றித் தங்கள் பிரசார போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் !  இதற்கெல்லாம் மூல காரணம் என்ன ? நம்மை நாம் சுத்தப் படுத்திக் கொள்ளாமல் மனம் அழுக்கேற விட்டிருக்கிறோம் என்பதே. நமது ஆலயம், நமது திருக்குளம் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். இந்த சுய சக்தியை / ஆத்ம சக்தியைத் தான் எதிர்ப்பு சக்தி என்கிறோம். பிரளய  காலத்தில் மீண்டும் சிருஷ்டி பீஜத்தைக் கும்பத்திலிருந்து வெளிக் கொணர்ந்து உலகைத் தோற்றுவித்துக் காத்தருளும் ஆதி கும்பேசுவரப் பெருமானே இந்த ஞானத்தையும் சக்தியையும் அருள வேண்டும். 

1 comment:

  1. மிக ஆழ்ந்த கருத்துக்கள்...நன்றி

    ReplyDelete