Friday, November 7, 2014

அன்னாபிஷேகமா அன்னாலங்காரமா ?

அலங்காரம் செய்வது என்பது ஒரு கலை. வரம்புகளுக்கு உட்பட்டு செய்யப்படுவது. சொந்தக் கற்பனை சிறிதளவு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவு மீறப்படும்போது அது பரிமளிக்காததோடு, வரம்புமீறல்கள் அதிகரிக்கவும் வழியாக அமைந்துவிடும். கோயில் வழிபாட்டு முறைகளில் இது எவ்வளவு தூரம் உண்மை என்பது பலருக்குத் தெரியும். வழி வழியாகச் செய்யப்படுவதை மையக் கருத்தாகக் கொண்டு, ஒருசிறிதளவு மட்டும் கற்பனை சேரும்போது பாரம்பர்யத்திற்குக் குந்தகம் நேராதபடி  காப்பாற்றப்படுவதைக் காணலாம்.

திருவிழாக்கள் வரும்போது வழிமுறைகளில் மாற்றங்கள் காணப்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். உதாரணத்திற்கு , சந்தனக்காப்பு என்று எடுத்துக்கொண்டால்  மூல மூர்த்தியின் உருவ அமைப்பில் மாற்றம் செய்யப்படாமல் சந்தனத்தைச் சார்த்தி, அதன்மீது வண்ணக் கலவைகளையும்,ஜரிகைகளையும் உபயோகித்து , அலங்காரம் சோபிக்கும் படி செய்வது வழக்கம்.

 மூலவருக்குக் கை ,கால் முதலியவற்றை இணைத்து, ஆண்டுக்கொரு அலங்காரம் என்று சொல்லிக்கொள்ளும் "அலங்கார ரத்தினங்களும்" இருக்கிறார்கள் . உற்சவருக்கோ இத்தகைய இணைப்புகள் சகஜமாகி விட்டன. " புதிய "கைகளில் சூலம் ஏந்தியபடியும் கால்களை இணைத்து மூர்த்தியை பெரிதாகக் காட்ட முயல்வதும் , மூர்த்தியின் இயற்கை வடிவை அடியோடு மாற்றி , என்ன சுவாமி ஊர்வலம் வருகிறார் என்று கேட்க வைத்து விடுகிறது. நகை சார்த்துவதோ,, மாலைகள் சார்த்துவதோ மூர்த்தியின் உருவ அமைப்பை மறைக்காதபடி இருக்க வேண்டும். பிள்ளையாரையாவது தும்பிக்கையை வைத்துக் கண்டு பிடித்து விடலாம். மற்ற மூர்த்திகளை முகம் மட்டும் தெரிவதை வைத்துக்கொண்டு எவ்வாறு கண்டுபிடிப்பது ???




                                                                                                                                                                                                                                                                                                                                 

மூலஸ்தான மூர்த்திகளுக்கு  அலங்காரம் செய்யப்படும்போது சொந்தக் கற்பனையை கொஞ்சம்  குறைத்துக் கொண்டால் நல்லது. எடுத்துக் காட்டாக, ஐப்பசி மாத அன்னாபீஷேகத்தில், அன்னம் அபிஷேகிக்கப்படுவதைக் காட்டிலும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவகையில் பார்த்தால் தினமும் செய்யப்படும் பல்வேறு அபிஷேகப்பொருள்களில் அன்னமும் ஒன்று என்பதை சிதம்பரம் கோயிலில் நடைபெறும், சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் அறிவார்கள்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீச்வரருக்கு அன்னாபிஷேகம் மணிக்கணக்கில் அனைவரும் காணும்படி அபிஷேகமாகச் செய்யப்படுகிறது.
கண் கொள்ளாக் காட்சி அல்லவா அது

அலங்காரம் என்னும்போது, அன்னத்தை அபிஷேகம் செய்தபின், நிறைவாக அன்னம் கலையாதபடி மாலைகள் சார்த்தலாம் . அப்பம்,வடை ,பட்சணங்கள், காய்கறிகள் ஆகியவைகளைக் கொண்டு சிவலிங்க மூர்த்திக்கு அலங்காரம் செய்யப்படுகியது. இவற்றால் அலங்காரமே பிரதானமாக ஆகிவிடுகிறது அல்லவா/ பிறவற்றை சுவாமிக்கு முன்பு வைத்து நைவைத்தியமாகச் செய்தால், மூலவரை அன்னாபிஷேகத்தில் முழுமையாகத் தரிசிக்கலாமே என்ற ஆசையால் இந்த எண்ணம் தோன்றுகிறது.

இது ஒருபக்கம் இருக்கும்போது, பல இடங்களில், அன்னத்தின் மீது முகம் வரைகிறார்கள். மேலே சொல்லியபடி இது எல்லோ ருக்கும் எளிதில் கைவராத  கலை.இன்னும் சொன்னால் முகத்தை  அழகாக அமைக்கத் தெரியாமல் கோரப்படுத்தி விடுகிறார்கள். அதில் ஒட்டு வேலைகள் வேறு!! சிவாசார்யப் பெருமக்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாபிஷேகத்தில்  அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் தந்து, கற்பனைகள் இல்லாமல், ஆராதித்தாலே, பரமேச்வரனைத் திருப்தி படுத்துவதோடு, சேவார்த்திகளும் மகிழ்வர். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக அலங்காரம் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டம் இந்த வைபவத்தில் தவிர்க்கப் படலாம் அல்லவா?  அன்னத்திற்குப் பதியான பசுபதியை நன்றியுடன் ஆராதனை  செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் சென்று சேர வைப்பது சிவாச்சார்யப் பெருமக்களின் கரங்களில் உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்து நமக்கு வழி காட்டுவார்கள் என நம்புகிறோம்.
  

No comments:

Post a Comment