Tuesday, August 26, 2014

திருச்செந்தூரில் நடந்த அட்டூழியம்

திருச்செந்தூர் தினமும் திருவிழாக்கோலம் கொண்டு விளங்கினாலும், ஸ்கந்த சஷ்டியில் விரதம் மேற்கொண்டு இங்கு வந்து செந்திலாண்டவனைத் தரிசிப்போர் ஏராளம். அதேபோன்று ஆவணிமாதத்தில் வரும் உற்சவ நாட்களில் ஷண்முகப்பெருமான் பிரம்ம,விஷ்ணு,ருத்ர மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி அளித்து வீதிஉலா வருவார். கந்தப்பெருமானைக் கண் கண்டதெய்வமாகத் தினமும் வழிபடுவோர்  இந்த நாட்களில் திருச்செந்தூர் வந்து இறைவனைத் தரிசிப்பர். கயிலை மலை அனைய செந்தில் பதி என்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பதி  தெய்வப்பதி என்பதால் அதன் சாந்தித்தியம் எப்போதும் போற்றப்படவேண்டும்;அது மட்டுமல்ல. காப்பாற்றவும்படவேண்டும்.

தெய்வமே! உன் கோயிலிலா இப்படி??
கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் ஆவணி உற்சவத்தில் நடைபெற்ற முறைகேட்டை  ஒரு முகநூல் பதிவில் காண நேரிட்டது. பெருமான் உலா வரும் பல்லக்கு பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்குள் சில விஷமிகள் நுழைந்து படுத்திருக்கிறார்கள். அதைவிட அதிர்ச்சிதருவது என்னவென்றால், குடித்துவிட்டு ,மது பாட்டில்களைத் தங்களுக்கு  அருகில் வைத்துக்கொண்டு பல்லக்கில் உறங்குவதை முகநூலில் (Facebook) வெளியிட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்களின்  மனத்தைப் புண்படுத்தியுள்ள இச்செயல் சொல்லொணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கித் தலைகுனியவேண்டிய அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம் இது. இதற்கு ஆலய அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்களா? தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா? அறநிலையத்துறை விசாரணை நடத்துமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டாலும் விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிடும். பக்தர்களும் போராடப்போவதில்லை. இதுவே தொடர்கதை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பல ஊர்களில் உற்சவங்கள் நடைபெறும்போது, குடித்துவிட்டு வந்து சுவாமி தூக்குவதைக் கண்டிருக்கிறோம். பல்லக்கிற்குள்ளே போதை மேலிடத் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற அக்கிரமங்கள் எவ்வளவு நடக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. தவறுகள் தண்டிக்கப்படாத போது,  தெய்வமே அப்பாவிகளைத் தண்டிப்பதுதான்  முறை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் தண்டித்தால் தான் உலகம் திருந்தும். செந்திலாண்டவன் சூரனைத் தண்டித்துத் திருத்தியது போல் இவர்களிடத்து இன்னமும் இரக்கம் காட்டாது தண்டித்துத் திருத்தவேண்டும். நடைபெற்ற பாவச்செயலுக்குப் பரிகாரங்களை ஆகம முறைப்படி நிர்வாகத்தினர் உடனே மேற்கொள்ளவேண்டும். என்னதான் பரிகாரம் செய்தாலும், இதனால் முருகபக்தர்களின் மனத்தில் ஏற்பட்ட வடு ஒருபோதும் அழியாது.   

3 comments:

  1. Sir. who can we blame for this and how can stop this ?

    ReplyDelete
  2. பரமேஸ்வரா...!?

    ReplyDelete
  3. நிச்சயமாக முருகபெருமான் இந்த குற்றத்தை புரிந்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்.

    ஓம் சரவண பவ

    ReplyDelete