Monday, June 9, 2014

அறம் நிலைப்பதோடு தழைக்கவேண்டும்

அறநிலையத் துறை பற்றிப் பத்திரிகைகளில் அண்மையில் வரும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாகவும் கவலை அளிப்பனவாகவும் உள்ளன. " எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்" என்று லஞ்ச ஊழல்கள் தலைவிரித்து ஆடும் தற்காலத்தில் இத்துறையும் அதற்கு ஆளாகி இருப்பதை அறியும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. அதிகாரிகள் கோயில் பணத்தை லஞ்சமாக அள்ளுகிறார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகளும் மோசடிகளும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்  36488 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றுள்  34336 கோயில்களில் ஆண்டுவருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிக்குத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்களைக் "கவனிப்பவர்"களுக்கும் அதிகாரிகள் பணி நியமனம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது சம்பந்தமான தகவல்கள் வெளியாகி உள்ளதாகப் பத்திரிக்கை செய்தி உறுதிப்படுத்துகிறது. எனவே, ஆணையர் உத்தரவின் பேரில் சில அதிகாரிகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு இணை ஆணையர் "சஸ்பெண்ட் " செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த நியமனங்கள் மூலம் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆணையரின் இந்த நடவடிக்கையால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் உரிய தண்டனை பெறுவர் என்று நம்புகிறோம். பிறருக்கும் இது ஓர் எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.

மற்றொரு அதிர்ச்சித் தகவல்: விக்கிரகங்களைப் புகைப்படம் எடுக்கவும் அவற்றை அளவு எடுக்கவும் எடை போடவும் அறநிலையத் துறை உத்தரவு போட்டிருப்பதாகத் தெரிகிறது. வஸ்திரங்கள் இன்றி அவற்றைப் படம் பிடிப்பதும் எடைபோடுவதும் பல ஊர்களில் துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது.இதுபோல எடைபோடுவதற்கு அர்ச்சகர்கள்  சில ஊர்களில் எதிர்ப்புத் தெரிவித்தும் கேட்பதாக இல்லை. களவாடுவதைத் தடுக்கும் வழிகளைச்  செயல் படுத்தாமல் இவ்வாறு தெய்வ விக்கிரகங்களை எடைபோடுவதாலும் படம் பிடிப்பதாலும் கள வாடப்படுவதைத் தடுக்க முடியாது. அவை அயல் நாட்டுக்கு விற்கப்பட்டபின்  அவற்றை மீட்பதற்கு ஆதாரங்களாக மட்டும்  இருக்கும். அப்பொழுதும் அவற்றை மீட்டுக் கொண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும்.  " தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்தானாம்" என்று ஒரு பழ மொழி கூறுவார்கள். அதுபோல, களவாடப் படுவதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, இதுபோன்று தெய்வ சாந்நித்தியத்தைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆணையர் இதற்கும் உடனே ஆவன செய்ய வேண்டும்.

ஆன்மீக அன்பர்களும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதைக் கண்டித்தால்  அதிகாரிகள் தவறு செய்ய அஞ்சுவர். ஆதாரத்துடன் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் ஆணையர் தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். தகவல் அறியும் சட்டமும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. நமக்கு என்ன வந்தது என்று இருந்தால் கோயில் சொத்துக்கள் கொஞ்ச நஞ்சம் பாக்கி இருப்பதும் பறி  போய் விடும். பிறகு புலம்புவதில்  எந்த உபயோகமும் இல்லை.  அற  நிலையத்துறை நிறுவப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் போய் மக்களுக்கு அதன் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனே தக்க நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசின் விழிகளும் செவிகளும் திறக்கப்பட வேண்டும். எந்தத் துறைக்கு மட்டும் அறத்தின் பெயர் இருக்கிறதோ அப்பெயருக்குக் களங்கம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அரசின் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.   அறம் வளத்த நாயகி துணை இருப்பாளாக.

No comments:

Post a Comment