Friday, June 13, 2014

ஆதிகுருவும் வியாழகுருவும்

                                                              

நேற்று ஆன்மீகப்பத்திரிகைகளை அரைகுறையாகப் படித்துவிட்டு இன்று ஆன்மிகம் பற்றித்  தப்பும் தவறுமாகப் பலர்  பேசியும் எழுதியும் வருகிறார்களே என்று அலுத்துக்கொண்டார் நண்பர். அவர்  சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் காலத்தில் யாரையும் யாராலும் திருத்த முடிவதில்லை. தான் சொல்வதே நூற்றுக்கு நூறு உண்மை என்று வாதம் செய்யத் தொடங்கி விடுவார்கள். திரும்பத்திரும்ப அதே தவற்றை மக்களிடையே பரப்பி விடுகிறார்கள்.பத்திரிக்கை ஸ்தாபனங்களே தாங்கள் வெளியிட்ட  தவறான செய்திகளைத்  திருத்திக் கொள்ள முன்வராதபோது, தனி நபர்களிடம் இப்பண்பாட்டை எதிர்பார்க்க முடிவதில்லை.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு மற்றொரு ராசிக்குப் பெயரும் போது குருபெயர்ச்சி வழிபாடுகள் கோயில்களில் நடை பெறுகின்றன. அப்போது குருவுக்கு  அபிஷேக ஆராதனைகள் அர்ச்சனைகள்  நடைபெற்று வருகின்றன. இவர் தேவ குரு எனப்படும் பிரஹஸ்பதி பகவான் ஆவார். நவக் கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவ்வகையில், வியாழனாகிய குருவுக்கு அதி தேவதை தக்ஷிணாமூர்த்தி ஆவார். அதற்காக நவக்கிரக குருவுக்கு சார்த்தப்படும் மஞ்சள் வஸ்திரம் , கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை தக்ஷிணாமூர்த்திக்கு சார்த்தக்கூடாது. பல ஆலயங்களில் சிவாச்சாரியார்களே இத் தவற்றைச் செய்கிறார்கள் என்பது வேதனைக்கு உரியது.

தட்சிணாமூர்த்தியாக பரமேச்வரன் கல்லால் நீழலில் சனகாதியரோடு அமர்ந்ததை ஸ்காந்த புராணத்தில் விரிவாகக் காணலாம். இந்நாளில் ஆதி குருவாகிய பரமேச்வரனுக்கும் நவக்கிரக குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் மயக்கத்திற்கு ஆளாக்கப் படுகிறார்கள்.

இன்று வெளியான தமிழ் செய்தித்தாள் ஒன்றில் " வித்தியாசமான கோலத்தில் தக்ஷிணாமூர்த்தி" என்ற தலைப்பில் தமிழகக் கோயில்களில் உள்ள பல தக்ஷிணாமூர்த்தி  வடிவங்களின் தொகுப்பு தரப்பட்டுள்ளது. குருபெயர்ச்சிக்கும் இதற்கும் இப்படி தொடர்பு படுத்தியிருக்கிறார்கள்! ஏதாவது எழுதிவிட்டுப் போகட்டும் என்று  பார்த்தால் தஞ்சைக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் வித்தியாசமாக ராஜ குருவாக தனிச் சன்னதியில் இருக்கிறார் என்று எழுதியிருக்கிறார்கள். அங்கும் சுவாமி சந்நிதியின் கர்பக்கிருக கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உண்டு. ஆனால் இவர் குறிப்பிடும் தனிச்சன்னதி கொண்டுள்ளவர் நவக்கிரகக் குரு ஆவார்.

இதற்கு மேலேயும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கோவிந்தவாடி சிவாலயத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது " இங்கு சிவனே குருவாக இருப்பதாக ஐதீகம்"  என்று எழுதியுள்ளார்கள். மற்றோர்  தலத்தில் சிவ தக்ஷிணாமூர்த்தி என்று பெயராம்!  இங்கு மட்டுமல்ல. எங்கும் ஆதி சிவனான பரமேச்வரன் தான் சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை  உபதேசிப்பதற்காக ஆதி குருநாதனாகக் கயிலையில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இன்னமும் குழப்பம் உள்ளவர்கள் ஸ்காந்த புராணத்தைப் புர ட்டிப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நண்பர் புன்னகைத்தார். இந்த விளக்கத்தால் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். கேள்வி என்னவோ நியாயம் தான். அதற்காக அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை. நூறு பேருக்குச் சொன்னால் இரண்டு பேராவது ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்!  

Monday, June 9, 2014

அறம் நிலைப்பதோடு தழைக்கவேண்டும்

அறநிலையத் துறை பற்றிப் பத்திரிகைகளில் அண்மையில் வரும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாகவும் கவலை அளிப்பனவாகவும் உள்ளன. " எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்" என்று லஞ்ச ஊழல்கள் தலைவிரித்து ஆடும் தற்காலத்தில் இத்துறையும் அதற்கு ஆளாகி இருப்பதை அறியும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. அதிகாரிகள் கோயில் பணத்தை லஞ்சமாக அள்ளுகிறார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகளும் மோசடிகளும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்  36488 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றுள்  34336 கோயில்களில் ஆண்டுவருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிக்குத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்களைக் "கவனிப்பவர்"களுக்கும் அதிகாரிகள் பணி நியமனம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது சம்பந்தமான தகவல்கள் வெளியாகி உள்ளதாகப் பத்திரிக்கை செய்தி உறுதிப்படுத்துகிறது. எனவே, ஆணையர் உத்தரவின் பேரில் சில அதிகாரிகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு இணை ஆணையர் "சஸ்பெண்ட் " செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த நியமனங்கள் மூலம் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆணையரின் இந்த நடவடிக்கையால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் உரிய தண்டனை பெறுவர் என்று நம்புகிறோம். பிறருக்கும் இது ஓர் எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.

மற்றொரு அதிர்ச்சித் தகவல்: விக்கிரகங்களைப் புகைப்படம் எடுக்கவும் அவற்றை அளவு எடுக்கவும் எடை போடவும் அறநிலையத் துறை உத்தரவு போட்டிருப்பதாகத் தெரிகிறது. வஸ்திரங்கள் இன்றி அவற்றைப் படம் பிடிப்பதும் எடைபோடுவதும் பல ஊர்களில் துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது.இதுபோல எடைபோடுவதற்கு அர்ச்சகர்கள்  சில ஊர்களில் எதிர்ப்புத் தெரிவித்தும் கேட்பதாக இல்லை. களவாடுவதைத் தடுக்கும் வழிகளைச்  செயல் படுத்தாமல் இவ்வாறு தெய்வ விக்கிரகங்களை எடைபோடுவதாலும் படம் பிடிப்பதாலும் கள வாடப்படுவதைத் தடுக்க முடியாது. அவை அயல் நாட்டுக்கு விற்கப்பட்டபின்  அவற்றை மீட்பதற்கு ஆதாரங்களாக மட்டும்  இருக்கும். அப்பொழுதும் அவற்றை மீட்டுக் கொண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும்.  " தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்தானாம்" என்று ஒரு பழ மொழி கூறுவார்கள். அதுபோல, களவாடப் படுவதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, இதுபோன்று தெய்வ சாந்நித்தியத்தைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆணையர் இதற்கும் உடனே ஆவன செய்ய வேண்டும்.

ஆன்மீக அன்பர்களும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதைக் கண்டித்தால்  அதிகாரிகள் தவறு செய்ய அஞ்சுவர். ஆதாரத்துடன் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் ஆணையர் தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். தகவல் அறியும் சட்டமும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. நமக்கு என்ன வந்தது என்று இருந்தால் கோயில் சொத்துக்கள் கொஞ்ச நஞ்சம் பாக்கி இருப்பதும் பறி  போய் விடும். பிறகு புலம்புவதில்  எந்த உபயோகமும் இல்லை.  அற  நிலையத்துறை நிறுவப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் போய் மக்களுக்கு அதன் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனே தக்க நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசின் விழிகளும் செவிகளும் திறக்கப்பட வேண்டும். எந்தத் துறைக்கு மட்டும் அறத்தின் பெயர் இருக்கிறதோ அப்பெயருக்குக் களங்கம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அரசின் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.   அறம் வளத்த நாயகி துணை இருப்பாளாக.

Friday, June 6, 2014

தாராள நிதி விரைவாக ஒதுக்குக

ஒரு பெரிய பணக்காரர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் எப்படி இருக்கும்! பெயருக்கு மட்டுமே சொத்தை வைத்துக் கொண்டு, பிறரிடம் கை ஏந்தும் அவரது பரிதாப நிலையைப் போன்று நமது திருக்கோயில்களும் முன்னோர் எழுதி வைத்த நிலங்களைப் பெயர் அளவுக்கே வைத்துக் கொண்டு இருக்கின்றன.. நகரங்களிலும் பிரபலமான தலங்களிலும் இருக்கும் கோயில்கள் உபயதாரர்களால் பராமரிக்கப்படுகின்றன. அவற்றைத் திருப்பணி செய்து தருவதில் அறநிலையத் துறையும் தாராளமாக நிதி வழங்குகிறது. ஒரு பிரபலமான கோயிலுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுத் திருப்பணிகள் செய்வதற்குப் பத்து கோடி ரூபாய் வழங்குகிறார்களாம். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்ய இருக்கிறார்களாம். இந்த அளவு தாராளத்தைத் திருப்பணி கண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கும் காட்டலாம் அல்லவா?

முதல் கட்டமாகத் திருப்பணிக்கு மதிப்பீடு செய்வதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேண்டும். அதற்கு முன் நின்று நடத்தித் தர வேண்டிய நிர்வாக அதிகாரி அலட்சியமாக இருந்தால் ஊர்க்காரர்களே அறநிலையத்துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டி மன்றாட வேண்டியிருக்கிறது. அவ்வாறு மதிப்பீடு செய்த பிறகு பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சுமார் ஓராண்டு ஆனதும் ஒதுக்கப்பட்ட தொகை இவ்வளவு என்று தெரிவிப்பார்கள். வேலைக்குத் டெண்டர் விடப்பல மாதங்கள் பிடிக்கும். டெண்டர் எடுத்தவர்கள் செய்யும் வேலையின் தரமோ நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். எங்களால் இவ்வளவு மட்டுமே முடியும். மீதியை நன்கொடையாளர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவர். நன்கொடையாளர்களைத்தேடும் படலம் ஆரம்பமாகிறது. இப்படியே போய், பல ஆண்டுகளுக்குப் பின்னரே திருப்பணி நிறைவு அடைகிறது.

திருப்பணி நிறைவு அடைந்து விட்டால் மட்டும் போதுமா? கும்பாபிஷேகச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் எழுகிறது. அற நிலையத்துறையோ அதற்காக உதவித் தொகை எதுவும் வழங்குவதில்லை. திரும்பவும் கை எந்த வேண்டிய நிலை!

 இத்தகைய காலகட்டத்தில் அற  நிலையத் துறை செய்யக்கூடியது ஒன்றுதான். கும்பாபிஷேகம் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆன கோயில்களின் திருப்பணிக்குத் தாராளமாக நிதி வழங்க வேண்டும். கால தாமதம் ஆகாதவாறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு அடைய வேண்டும். திருப்பணி செலவில் பாதிக்குக் குறையாமல் அற நிலையத் துறை ஏற்க வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்குத் தாமதம் ஏற்படாமல் நிதி வழங்கப்பட வேண்டும். பிரபலக் கோயில்களுக்கு எவ்வாறாவது திருப்பணியும் கும்பாபிஷேகமும் அன்பர்கள் ஆதரவோடு நடந்து விடுகிறது. ஏனைய கோயில்கள் தான் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. பல ஆலயங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.

எவ்விதப்பாகுபாடும் இல்லாமல் நடு நிலையோடு புராதனக் கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையேல் பாரபட்ச நிலை நிலவுவதாக மக்கள் குறை கூறுவர். " ஒரு எருதுக்குப் புல்லும்,மற்றொரு எருதுக்கு வைக்கோலும் போடுவது நடு நிலை ஆகுமா "என்று தில்லை அம்பலவாணனிடம் முறை இடுகிறார் திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான வேணாட்டடிகள் என்பவர்.  ".... இடுவது புல் ஓர் எருதுக்கு ; ஒன்றினுக்கு வை இடுதல் ; நடு இதுவோ திருத்தில்லை நடம் பயிலு நம்பானே. " என்பது அப்பாடலின் ஒரு பகுதி.  நாமும் தில்லைக்கூத்தனிடமே முறையிடுவோம்.