Tuesday, November 19, 2013

காவிரித் தாயைப் போற்றுவோம்

நெடு நாட்களாகவே ஒரு ஆசை. ஹரித்வார்,காசி போன்ற ஊர்களில் கங்கை நதிக்குத் தினமும் மாலையில் ஆரத்தி எடுப்பதுபோல் நாமும் காவிரித் தாய்க்கு வழிபாடு செய்யலாமே என்பதுவே அது . கங்கைக் கரையில் பெருந்திரளான  மக்கள் இந்த ஆரத்தியைக் காண வருகிறார்கள். அடுக்குத் தீபங்கள் ஏற்றப்படுவதும் கங்கை ஆற்றில் தீபங்களை மிதக்க விடுவதும் கண் கொள்ளாக் காட்சி . கங்கா மாதா என்று அன்போடும் பக்தியோடும் அவர்கள் அந் நதியை அழைக்கிறார்கள்.  நம் ஊரில் ஏன் அதுபோல் இல்லை என்பது குறையாகவே இருக்கிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட த் தினமும்  ஆரத்தி எடுக்கப்படாவிடினும், காவிரியைப் பயபக்தியோடு வழிபாட்டு வந்தார்கள். காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது தம் ஊருக்கு வருவதைக் காண்பதில் அக்காலத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார்கள். சில சமயங்களில் இரவு நேரங்களிலும் அப்படி வரும். பக்கத்து ஊரில் காவிரி நீர் வந்து விட்டது என்ற தகவல் வந்தவுடன், காவிரிக் கரையில் நீர் வருவதைக் காணக் காத்திருப்பார்கள்.  பள்ளங்களை நிரப்பியவாறு மெதுவாகத் தவழ்ந்து வரும் அழகே அழகு ! அப்படி வரும்போது, காவிரி மணலில் நின்றவாறு, காவிரித் தாயை அம்மணலில் விழுந்து வணங்குவார்கள். சிறிது சிறிதாக நீர் மட்டம் உயர ஆரம்பித்தவுடன் கரைக்கு வந்து விடுவார்கள். நொங்கும் நுரையுமாகக் காவிரி ஆறு செல்ல ஆரம்பிப்பதைப் பார்த்துச் சிறுவர்கள் குதூகலிப்பார்கள். மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பெரியவர்கள் படிக்கரையில் தேங்காய் உடைத்து காவேரி அம்மனுக்குப் பூஜை செய்வார்கள். சில வாரங்களில் வரும் ஆடிப் பெருக்கன்று வீடுகளில் செய்யப்பட்ட சிறிய சப்பரங்களைச் சிறுவர்கள் காவேரிக் கரைக்குக் கொண்டு வருவார்கள். பூஜை முடிந்ததும் அவரவர்கள் தாங்கள் கொண்டு வந்த பலவகை உணவு வகைகளைக் காவேரிக்கு நைவேத்தியம் செய்து விட்டுக் கரையில் அமர்ந்தபடியே சாப்பிடுவார்கள்.

மாசி மாதம் முதலாகவே நீர் வரத்து குறைந்து விடுவதால், மக்கள் அதில் இறங்கி அக்கரைக்குப் போவார்கள். சித்திரை வந்து விட்டாலோ மணல் பரப்பே இருக்கும். அப்போது காவேரிப் படுகையைக் கடப்பவர்கள், வெயிலாக இருந்தாலும் அந்தச் சுடு மணலில் காலணிகளைக் கையில் ஏந்தியபடியே நடப்பார்கள். நமக்கு உணவுக்கு ஆதாரமான அந்தத் தெய்வ நதியை   செருப்புக் காலோடு கடப்பது பாவம் எனக் கருதி வந்தார்கள். நாளடைவில் இந்த நம்பிக்கைகள் குறைவதோடு, கழிவு நீர் ,குப்பை போன்ற அசுத்தங்களையும் கலக்கத் துணிந்து விட்டார்கள் ! போதாக் குறைக்குத் தொழிற்சாலைகளின் பங்கு வேறு ! ஐப்பசி மாதத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் கண்ட கண்களால் முழங்கால் அளவு நீரைக் காணும்போது வேதனைப் படத்தான் முடிகிறது. பாட்டில்களும் ப்ளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்து கிடக்கும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

காவிரி டெல்டாவில் ஏராளமான விளைச்சல் நிலங்கள் தரிசாகவோ , மனைப்பிரிவுகளாகவோ காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீரும் கீழ் நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. ஐப்பசி மாதத்தில் கிணற்றில் கையால் நீரை எடுத்த காலம் போய் ஆழ துளைக்  குழாய்களை நம்ப வேண்டியிருக்கிறது.  ஆறு வற்றிவிட்டாலோ மணல்  எடுப்பவர்களுக்குக் கொண்டாட்டம். நாடு நலம் பெற வேண்டும் என்ற எண்ணம் போய் சுயநலம் தலை விரித்து ஆடுகிறது.
இவ்வளவுக்கும் நடுவில் காவிரி ஆற்றைத் தெய்வ ஆற்றல் உடையதாகக் கருதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கும்பகோணம் போன்ற ஊர்களில் காவிரிக்கு வழிபாடுகள் நடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்தியத்  துறவிகள் அமைப்பின் சார்பில் தலைக்காவிரியில் துவங்கி , காவேரி அம்மனின் திருவுருவச் சிலையை பொன்னி நதி ஓடும் வழியிலுள்ள முக்கியத் தலங்களுக்கு எடுத்துச் சென்று நதிக் கரையில் அபிஷேக ஆராதனைகள் செய்து, அதன் புனிதத்தைக் காப்பாற்றும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். மயிலாடுதுறைக்குக் கடை முக உற்சவம் காணச் சென்றிருந்தபோது , நல்வினைப்பயனாக அன்றைய தினம் அக்குழுவினர் அம்மனின் திருவுருவச் சிலையோடு அங்கு எழுந்தருளியிருந்ததைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அதற்கு முன்னதாக அருகிலுள்ள வதான்யேச்வர சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டு வந்தார்கள்.

காவிரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பல துறவிகளும் பிரமுகர்களும் உரை ஆற்றினார்கள். தலைமை உரை ஆற்றிய திருவாவடுதுறை குரு மகா சந்நிதானம் அவர்கள் , காவிரியின் புனிதம் பற்றியும் அதன் தூய்மையைக் காக்கவேண்டியது பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். படித்துறையில் காவேரி அம்மன் விக்கிரகத்திற்கு அபிஷேகங்கள் செயவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் ஆரத்தி நடைபெற்றது. பெண்மணிகள், விளக்கேற்றி வழிபாட்டு, அவற்றை நதியில் மிதக்க விட்டார்கள். அவை மிதந்து செல்லும் காட்சி இருளை அகற்ற வல்ல தெய்வீக ஒளியாக அமைந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை வழிபடுவதோடு நிறுத்தி விடாமல் வட இந்தியாவில் நடப்பதுபோல் தினமும் வழிபாடு நடை பெற வேண்டும். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்பது அப்போது மெய்யாகும். இவ்வாறு ஆண்டுக்கொருமுறை நடப்பதைக் காண  ஊர் மக்கள் தவறாது வந்து கலந்து கொள்ளவேண்டும். கழிவுகள் கலக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த கூவம் நதி  தற்போது சாக்கடைக் கால்வாய் ஆகி விட்டது போல ஆகி விடும். இப்போதாவது மக்களும் அரசாங்கமும் விழித்துக் கொள்வார்களா?  

Friday, November 1, 2013

வாழ்வு வளம்பெற வடவம்பலம் வாருங்கள்

தேசீய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் பயணிப்போர்களுக்கு சில சமயங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும். சாலை விபத்துக்கள், பயணிக்கும் வாகனம் நடுவழியில் நின்று விடுதல் போன்ற எவ்வளவோ சோதனைகள் , வேதனைகள்....  ஆனால் விக்ரவாண்டியிலிருந்து பண்ருட்டி,வடலூர் மார்க்கமாகக் கும்பகோணம் செல்லும் பாதைக்கு மட்டும் எப்போது விமோசனம் கிடைக்குமோ தெரியவில்லை! வழி நெடுகிலும் சுங்கச் சாவடிகள் நம்மைப் பிழிந்து எடுத்து விடுகின்றன. குறிப்பிட்ட காலம் ஆன பிறகும் சில இடங்களில் வசூல் செய்கிறார்கள். கேட்பதற்கு நாதி இல்லை! அதிலும் விக்கிரவாண்டி சாவடியில் கார்களுக்கு ஒரு வழிப் பயணத்திற்கு எழுபது ரூபாய் வசூலிக்கிறார்கள். இதை எல்லாம் பத்திரிகைகள்தான் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். விக்கிரவாண்டி சாவடியை சாமர்த்தியமாக,த் தஞ்சை செல்லும் பிரிவுப் பாதைக்கு முன்பாக அமைத்திருக்கிறார்கள். இத்தனை வரியையும் வழி நெடுகிலும் செலுத்தி விட்டு, தஞ்சைச் சாலையில் நுழைந்தால் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கும்! NH 45 C  என்று குறிக்கப்படும் இச் சாலை , வடலூர் வரை பல்லாங்குழியாகக் காட்சி அளிக்கிறது. பெரிய பள்ளங்களில் ஏறி இறங்கி வாகனங்கள் செல்வதைப் பார்க்கும்போது, இவ்வளவு அலட்சியமும் எங்கிருந்து அதிகாரிகளுக்கு வருகிறது என்று நினைக்கத் தோன்றும். எப்போதாவது பயணிப்பவர்களாவது சபித்துக் கொண்டே சென்று விடுகிறார்கள். ஒரு நாளில் பலமுறைகள் பயணிப்போர்களையும்  அரசுப் பேருந்துகளை ஓட்டுபவர்களையும்  நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.  கொஞ்சம் நகர்ந்தால் வயலிலோ ஆற்றிலோ தலை குப்புற விழ வேண்டியது தான். டயர்கள் பஞ்சர் ஆவதும் வெடித்து விடுவதும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த தேசீய சாலையில் பயணித்தால் ஒரு வழியாக கோலியனூர் கூட்டு ரோடை அடையலாம். இங்கு இடப்புறம் (கிழக்கே) திரும்பினால் பாண்டிச்சேரியும், வலப்புறம் (மேற்கே) திரும்பினால் விழுப்புரமும் நேராகத் (தெற்கில்) சென்றால் பண்ருட்டியும் வரும். இந்த இடத்திலிருந்து பண்ருட்டி சாலையில் சுமா நான்கு கி. மீ. சென்று, இடது புறம் திரும்பினால் வடவம்பலம் செல்லும் சாலையை அடையலாம். நெடுஞ்சாலையில் தகவல் பலகை அமைத்திருக்கிறார்கள். இந்த சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் சாலையை ஒட்டியபடி, ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதைக் காணலாம்.

இந்த இடத்தில் தான் ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடத்தின்  58 வது ஆச்சார்யாராக 52 ஆண்டுகள் இருந்த ஸ்ரீ  ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்திருக்கிறார். இந்த இடத்தைக் காஞ்சி மகா  பெரியவர்கள்  கண்டு பிடித்ததே அதிசயமான ஒரு நிகழ்ச்சி. அதுவரையில் அந்த இடம் யாருக்கும் தெரியாமல் வயல் வெளிகளுக்கு இடையில் இருந்தது. இப்போழுதும்கூட, வயலுக்கும் சாலைக்கும் இடையில்தான் இருக்கிறது. அங்கு சென்ற பெரியவர்கள் குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் என்பவரை அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்குமாறு சொன்னார்கள். அப்படித் தோண்டும்போது, சாஸ்திரிகள்  மயக்கம் அடைந்து விட்டார். பிறகு சுய நினைவு பெற்றவுடன் தான் கண்ட காட்சியை விவரித்தார். ஒரு சந்நியாசியின் வடிவையும், அவரைச் சுற்றிலும் பண்டிதர்கள் வேதம் சொல்லிக் கொண்டிருந்ததையும் தான் கண்டதாக அவர் கூறினார்.  அந்த இடம் தான் சுவாமிகள் ஸித்தி அடைந்த இடம் என்று தீர்மானிக்கப்பட்டு, அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்தது, 1927 ம் வருடம்,ஜனவரி 17 ம் தேதி. பின்னர், 1981 ம் வருடம்  ஜனவரி 17 ம் தேதி ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தேறியது.

விருத்தாசலத்தில் விச்வமுகி என்பவருக்குக் குமாரராக ஸ்ரீ  ஆத்ம போதேந்திரர் அவதரித்தார். அவரது இயற்பெயர்  விச்வேச்வரர் என்பது. இந்திய நாடு முழுவதும் யாத்திரையாகச் சென்றுள்ள இம்மகான் , ஸ்ரீ ருத்ர பாஷ்யம் இயற்றியுள்ளதோடு,  சதா சிவ ப்ரம்மேந்திரரை  குரு கிரந்த மாலை இயற்றும்படிப் பணித்து அருளினார். போதேந்திரருடன்  ராமேஸ்வர யாத்திரை செய்ததாகச்  சொல்லப்படுகிறது. காசியிலும் நெடுங்காலம் தங்கியிருந்தார்கள்.நிறைவாகத் தக்ஷிண பினாகினி என்று வடமொழியில் அழைக்கப்படும் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள வடவம்பலத்தை அடைந்து, சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டே  ஈச்வர வருஷம் (1638) துலா (ஐப்பசி) மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியன்று ஸித்தி அடைந்தார்கள்.

அமைதியாக வயல் அருகில் தோற்றமளிக்கும்  அதிஷ்டானம் மன  அமைதியை வாரி வழங்குவதாக அமைந்திருக்கிறது. ஸ்ரீ  ராஜ சேகர சர்மா என்பவர் ( 04146- 236410 ; 09442068232) இங்கு பூஜைகளைச் செய்து வருகிறார்.    பிருந்தாவனத்தருகில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சுவற்றில் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு எழுதப்பட்டுள்ளது. வடவம்பல வாசிகள்  கொடுத்து வைத்தவர்கள். இழந்த செல்வத்தை மீண்டும் திரும்பப் பெற்றது போலத்தானே இதுவும்! அதற்கு மூல காரணராக இருந்த காஞ்சிப் பெரியவர்களின் குரு பக்தியை என்னென்பது! இவ்விரு ஆச்சார்யர்களின் அருளால் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற நாமும் பிரார்த்திப்போம்.