Sunday, October 20, 2013

அபயம் தரும் அபயாம்பிகை

யானை, குரங்கு, நாரை போன்ற உயிரினங்கள் சிவபெருமானைப் பூஜித்ததாகப் புராணங்கள் மூலமாக அறிகிறோம். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்வர். வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள பட்டவர்த்திக்குப் பக்கத்தில் அப்பர் ஸ்வாமிகளின் தேவாரம் பெற்ற திருக்குரக்குக்கா(வல்) என்ற ஸ்தலத்தில் இன்றும் ஒரு அதிசயம் நடைபெறுகிறது.ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குரங்கு இக்கோயிலுக்குத் திடீரென வந்து, அங்குள்ள சிப்பந்திகள் வெளியேறும் வரையில் காத்திருந்து விட்டுப் பிறகு நேராக மூலவரி டத்தில் சென்று அமர்ந்து கொண்டு, தான் கொண்டு வந்த இலைகளையும்,பூக்களையும் போட்டுவிட்டுப் பிறகு அமைதியாக ஆலயத்தை விட்டு வெளியே செல்கிறது. ஒரு வருஷம் மகாசிவராத்திரியன்று வந்ததாகக் கூறினார்கள்.  சந்தேகக் கண்ணோடு நோக்குபவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ தெரியவில்லை!

கோயில்களில் பூனைகள் நடமாடுவது நாம் எல்லோரும் பார்த்ததுதான். அதிலும் சற்று வித்தியாசமான காட்சியை மயிலாடுதுறையிலுள்ள மாயூரநாதர் ஆலயத்தில் காண நேர்ந்தது. அந்த ஆலயத்திலுள்ள அம்பிகை மயிலுருவில் ஈசனை வழிபட்டுத் தன் பழைய உருவைப் பெற்றாள் என்கிறது தலபுராணம். பொன்னிற மேனியளாக ஆனதால் கௌரி எனப்படுகிறாள். சுவாமியும் கௌரி மாயூரநாதர்  எனப்படுகிறார். அம்பாளுக்கு அபயாம்பிகை என்றும்      அபயப் ப்ரதாம்பிகை என்றும் வடமொழியில் பெயர்கள் உண்டு. தமிழில் அஞ்சொல் நாயகி எனப்படுகிறாள். "அஞ்சொலாள் உமை" என்று இத்தலத்துத் தேவாரம்  குறிப்பிடுகிறது. இவ்வாறு எல்லாப் பெயர்களும்  அம்பிகைக்குப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கின்றன.

ஜகன்மாதாவான  அம்பிகை , நமக்கெல்லாம் அபயம் தந்து அஞ்சேல் என்று ரக்ஷிப்பதால் அவளை அபயாம்பிகை என்கிறோம். அதேபோல அஞ்சேல் என்று சொல்லும் அவளது குரல் இனிமையை எப்படி வருணிப்பது! அழகிய அந்தச்  சொல்லின் அழகும் , அந்தக் குரலின் அழகும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாக அல்லவா இருக்கின்றன!  அதனால் தான் அஞ்சொல் நாயகி என்ற பெயரும் அழகாகத்தான் இருக்கிறது. அஞ்சேல் என்று தஞ்சம் அளிப்பதை நேரில்      கண்டால்  அது எப்படிப்பட்ட இன்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பிற கோயில்களைப் போல இக்கோயிலிலும்  பூனைகள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்  கொண்டிருக்கும். சமீபத்தில் கண்ட காட்சி சிந்திக்கவும் வைத்துவிட்டது. அபயாம்பிகை சன்னதியில் ஆடிப்பூர  அம்மனுக்கென்று ஒரு தனி சன்னதி உள்ளது. வெளியில் பூட்டப்பட்டிருக்கும் கம்பிக்கதவின் வழியாக அம்பாளைத் தரிசிக்கலாம். அப்படித் தரிசிக்கும்போதுதான் இந்த அபூர்வக் காட்சி கிடைத்தது. ஆடிப்பூர அம்பாளின் பீடத்தில் ஒரு வெள்ளைப் பூனை உட்கார்ந்து கொண்டு இருந்தது. அதன் அருகில் ஒரு குட்டிப்பூனையும் இருந்தது. அது பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருக்கலாம். தாய்ப்பூனை தனது குட்டியை மிகவும் பாதுகாப்பான இடத்திலேயே விட்டு வைக்கும். அம்பாளுடைய பாதத்தைக் காட்டிலும் பாதுகாப்பான இடம் ஏது? சில நிமிடங்களில் குட்டிப்பூனை தனது தாயையும். உலக அன்னையையும் சேர்த்து ஒரு முறை சுற்றி வந்தது.தலையை நிமிர்ந்து அம்பாளின் திருமுகத்தை ஒரு கணம் நோக்கியது. பிறகு தாயிடம் சென்று ஒட்டிக்  கொண்டது. இக்காட்சியைக் கண்டவர்கள்  சிலிர்த்துப்போயினர். பூனைக்குட்டிக்கும் அபயம் அளிக்கும் அபயாம்பிகையின் கருணையைக் கண்டவுடன்  அந்தப் பெயர் எவ்வளவு அர்த்த புஷ்டியானது என்பதும் புரிந்தது. 

No comments:

Post a Comment