Saturday, August 24, 2013

தமிழ் எழுத்துக்களின் நிலை

தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிப் பேசும்போதுமட்டும் எல்லோருக்கும் தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள் பற்றிய ஞாபகம் வந்துவிடும். தமிழ்  வளர்ச்சிக்குப்   பக்தி இலக்கியங்கள் ஆற்றிய தொண்டைப் பற்றி மட்டும் ஏனோ நினைப்பதில்லை. ஏராளமான  நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் அவற்றைப் போற்றுவார் சிலரே. நல்ல வேளையாகச் சில உயர்ந்த உள்ளங்களின் பெருமுயற்சியால் பல நூல்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுக் காப்பாற்றப் படுகின்றன.

வரலாற்று ஆய்வாளர்களும் யார் காலத்துக் கல்வெட்டு என்பதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர, அம்மன்னர்கள் காட்டிய இறை வழிபாடு, கோயில் பாதுகாப்பு,கோயில் திருப்பணி ஆகியவற்றில் மக்களின் கவனத்தை ஈர்க்க முற்படுவதில்லை. வரலாறு பற்றி இவர்கள் எழுதிய புத்தகங்கள் வரலாற்றைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக அமைகின்றன.

வட்டெழுத்துக் காலம் மாறிய பின்னர்  மக்களின் பயன்பாட்டுக்கான எழுத்துக்கள் ஓரளவு சீரடைந்த காலத்தில் ஆட்சியாளர்களின் விருப்பத்தின் பேரில் எழுத்துக்கள் பல நீக்கப்பட்டும் புது வடிவம் பெற்றும் மாற்றப்பெற்றன.
விஞ்ஞானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி (??) ஆங்கிலச் சொற்கள் பல மொழியாக்கம்  செய்யப்பட்டன.  இருப்பினும் ,பல ஆங்கிலச் சொற்கள் தொடர்ந்து மக்களால் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக," பஸ் " எப்போது வரும் என்று பாமரன் கூடக் கேட்கும் போது, "பேருந்து" எப்போது வரும் என்று கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், " பஸ்" என்று சொல்லிவிட்டதால் தமிழின் மீது ஆர்வம்  இல்லாதவன் என்ற முடிவுக்கும் வந்து விடக் கூடாது.

பிற மொழிகளில் இருந்து சொற்களைத் தமிழாக்கம் செய்ய முனைகிறார்கள். சமீபத்தில் 35 வார்த்தைகள் அவ்வாறு  மொழிபெயர்க்கப்பட்டதாகப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது. அயல் நாட்டவர்கள் புகுத்தும் சொற்கள் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே. அவற்றை அப்படியே வழங்குவதே குழப்பத்தைத் தவிர்க்கும். "பேஸ்புக் " என்பதை "முக நூல்" என்று கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். இன்னும் பார்த்தால்,அதில் வரும் "பே" என்ற எழுத்துக்கு முன்  ஆயுத எழுத்து பயன் படுத்த வேண்டும். ஆனால் இப்பொழுது ஆயுத எழுத்து போன இடம் தெரியவில்லை. பயன் படுத்துவாரும் இல்லை.
ஆயுத எழுத்தின் உபயோகத்தைத் தமிழ் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சிலவற்றையாவது காண்போம்:( துரதிருஷ்ட வசமாக கூகுளிலும், ஆயுத எழுத்தைக் காணோம். எனவே ஆயுத எழுத்து வருமிடத்தில் இடைவெளி விட்டிருப்பதைக் காண்க)

 ௧)திருக்குறளில் அறத்துப்பாலில் திருவள்ளுவர், "வெ    காமை" என்ற ஒரு அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களிலும் ஆயுத எழுத்தைக் கையாண்டிருக்கிறார்.
௨) " அ    தாஅன்று..."   _ நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
௩) "  கண்ணில் நல்ல    துறும் கழுமல வள நகர்.."  - தேவாரம்
௪) " யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு  அ     திலான்" --- திருவாசகம்
௫)  திரு வெ      கா -   காஞ்சியில் உள்ள ஒரு வைணவத்தலத்தின் பெயர்.

"ஔவையார்"  என்பதை அவ்வையார் என்று எழுதுகிறார்கள். "ஔ" என்ற எழுத்தும் "அவ்"  என்ற  எழுத்தும்  உச்சரிப்பில் ஒன்று இல்லாத போது எதற்காக " ஔ " நீக்கப்படுகிறது என்று புரியவில்லை.

எழுத்துக்களைக் குறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பல எழுத்துக்களைக் கால் வாங்கி நம் உயிரையும் சேர்த்து வாங்குகிறார்கள். திருவண்ணாமலை என்பதில் ணகரமும் லகரமும் மாற்றம் பெற்றதால் கை ஓடிவதுதான் மிச்சம்! தமிழில் தேர்வு எழுதும் குழந்தைகள் இப்படிக் கால் வாங்குவதால் , எழுதும் நேரம்  வீணடிக்கப்படுகிறது. யாராவது  சிந்திக்கப்போகிறார்களா  தெரியவில்லை.  வேறு வழி இல்லாமல் நாமும் அதையே பின்பற்ற வேண்டியிருக்கிறது.

தமிழில் வழக்கத்தில் இல்லாத சொற்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் காணோம்! " மச்சி" போன்ற சொற்கள் தான் புகுத்தப்படுகின்றன. வெட்கப்பட வேண்டிய விஷயம் இது.

வழக்கத்தில் இருந்த "ஷ" "ஸ" "ஹ" "க்ஷ" "ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை நீக்கினார்கள். கவனம் என்ற சொல்லில் இருக்கும் "க" வும் கல்வி என்ற சொல்லில் உள்ள "க"வும் ஒரே மாதிரியா உச்சரிக்கப்படுகின்றன?

"அழித்துப் பிறக்க வொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழை இன்றிக் கற்கிலீர்.. "
என்று இதனால் தான்  அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடினாரோ?

 பிற திராவிட மொழிகளில் இப்படி இல்லையே! தமிழ் அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். எழுத்தைக் குறைப்பதில் உள்ள ஆர்வம் , இருக்கும் சொற்களை ஆழப் படுத்துவதில் இல்லையே!  அப்போது தான் நமக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து கற்கும் பழக்கம் வரும்.  அது வரையில் "தமிழ் வாழ்க" என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சாகவே  முடியும். 

No comments:

Post a Comment