Sunday, September 23, 2012

கற்றதனால் விளையும் பயன் என்ன ??

கல்வி எல்லோருக்கும் வேண்டியது தான். அதில் எந்தவிதமான அபிப்ராய பேதமும் இருப்பதற்கு இல்லை. கல்வி என்பது கண்ணுக்கு சமம் என்று ஔவையார் சொன்னதை ,("எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ") என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததை நம்மில் சிலர் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கலாம். அந்தக் கல்வி எப்படிப்பட்டதாக இருந்தால் சிறப்பு என்பதே கேள்வி. அதற்கு விடையாகத் திருவள்ளுவர், " இறைவனது திருவடிகளைத் தொழ கல்வி எதுவாகாவிட்டால் கற்றதனால் விளையும் பயன் என்ன என்று கேட்கிறார்
 
என்ன படிப்பு படித்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் காலத்தில் வேத பாடசாலைகளிலும் ஆகம பாடசாலைகளிலும் படித்தவர்களுமே இவ்வாறு சம்பாத்தியத்தைப் பற்றியே நினைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. தாம் கற்றதை வைத்துக்கொண்டு வெளி நாட்டில் போய் சம்பாதிக்க நினைப்பவர்களும் உண்டு. ஒரு வேளை உள் நாட்டில் இருந்தாலும் , பாராயணம் , ஹோமம், கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு "கை நிறைய" சம்பாதிப்பதையே விரும்புகிறார்களே தவிர, கிராமக் கோயில்களில் நித்ய பூஜை செய்ய முன் வருபவர்கள் குறைவாக இருப்பது வருந்தத் தக்கது. அற நிலையத்துறை தரும் சொற்ப சம்பளமும் உள்ளூரில் ஆதரவு இல்லாததும் இந்த எண்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

நாம் கஷ்டப்பட்டது போல நம் குழந்தைகளும் கஷ்டப் படக் கூடாது என்ற எண்ணத்தில் , சிரமப் பட்டாவது தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது முதல் படி. பெண்களையும் படிக்கவைத்துவிட்டு அதற்கு ஏற்ற வரனைத் தேடும் போது கோயில் பூஜை செய்யும் பையன்களை விரும்பாமல் வேலையில் இருக்கும் பையனைத் தேடுகிறார்கள். இதனால் (கோயில் பூஜை செய்யும் பையனுக்குப் பெண் கொடுக்கத் தயங்குவதால்) பையன்களுக்குக் கல்யாணம் ஆவது மிக மிகக் கஷ்டமாகி விடுகிறது. கிராமத்துப் பையனுக்குப் பெண்ணைக் கொடுக்கவும் தயக்கம் காட்டுகிறார்கள்! கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது இரண்டாவது படி. கிராமத்தில் வசிப்பவருக்கும் ,நகரங்களில் வசிப்பவருக்கும் , இக்கால வசதிகளுக்கு ஆசைப் படுவதில் வித்தியாசம் எதுவும் இல்லை. நகரங்களின் நெரிசலையும் பொருட் படுத்தாமல் குடியேறும் கிராமத்தினர் ஏராளம். நகரத்தில் குடியேறினால் வசதிகளும் வருமானமும் பெருகும் என்ற எண்ணமே இருக்கிறது. கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், நகரத்தில் வாடகை வீடுகளில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது மூன்றாவது படி.

வங்கிகள் கல்விக்கடன் தரத் தயாராக இருப்பதால் எல்லோரும் என்ஜினீயர் ஆகத் துடிக்கிறார்கள். இது ஒன்று மட்டுமே கெளரவம் தரும் தொழிலாக நினைக்கிறார்கள். அப்படி எஞ்ஜினியர்களாக ஆன பிறகு கோயில் பூஜை பக்கம் திரும்பிப் பார்ப்பது சாத்தியமா? மற்றத் தொழில்களும் இதே போல் பாதிக்கப் பட்டுள்ளன. விவசாயிகளோ, நெசவாளிகளோ,கொத்தனார்களோ,தச்சர்களோ, எந்தத் தொழில் செய்தவர்களாக இருந்தாலும் , தங்கள் குழந்தைகளை அதே தொழிலைச் செய்வதை விரும்புவதில்லை. மாறாக,அவர்களைக் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் பல இடங்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

இதை எல்லாம் யாரால் சரி செய்ய முடியும்? அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். வோட்டுக்காக மக்களைப் பிரிப்பதை நிறுத்திக்கொண்டு, சமூக சீர்திருத்தம் செய்ய முனைய வேண்டும். பாரபட்சம் பாராமல் நடந்து கொண்டால் அவரவர்கள் தங்கள் தொழிலை மறக்காமல் இருக்க முடியும். என்ஜினீரிங் கல்லூரிகளை நிறுவியது போதும். பிற தொழில்கல்லூரிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.

கோவில் நிலங்களையும் அவற்றின் குத்தகை பாக்கியையும் வசூலித்துத் தராவிட்டால் அறநிலையத் துறை இருந்தும் என்ன பயன்? அவ்வாறு நெல்லும் சம்பளமும் முறையாகக் கொடுக்கப் பட்டால் அர்ச்சகர்கள் வேறு தொழிலுக்குத் தாவாமல் இருப்பார்கள் அல்லவா? இன்னும் எவ்வளவு காலம் தான் நகரங்களில் குடியேற இடம் கிடைக்கும்? அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டும். எதுவும் செய்து கொடுக்காவிட்டால் கிராமங்கள் எப்படி முன்னேறும்? நகரங்களுக்கு இணையாக அங்கு வருமானமும் வசதிகளும் பெருகினால் மட்டுமே நகரங்கள் ஜனத்தொகைப் பெருக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வயல்கள் வானம் பார்த்த பூமியாக ஆகிவிட்ட பிறகு, பிளாட் போட்டு விற்பவர்களுக்கும், நதிகளில் மண்ணை அள்ளுபவர்களுக்கும், மலைப் பாறைகளை உடைத்துக் காசாக்குபவர்களுக்கும் கொண்டாட்டம் தான். இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் எல்லோருக்கும் கல்வி என்று முழங்கிக்கொண்டிருந்தால் , படிப்பை முடித்தவர்கள் கிராமப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை. பணத்தை எண்ணுவது எப்படி என்ற ஆலோசனையில் மூழ்க ஆரம்பித்து விடுவார்கள். கோயில் பூஜைகள் மட்டுமல்ல. நமது பாரம்பர்யத்தையே குழி தோண்டுவதாக அமையும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதைச் சரி செய்ய இதுவே கடைசி சந்தர்ப்பம். செய்யப்போகிறார்களா பார்க்கலாம்.

No comments:

Post a Comment