Thursday, August 16, 2012

கணபதியின் கருணை மழை


சித்தர் பூமியில் அன்றும் இன்றும் அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. வானில் சென்ற சித்தர் பெருமான்  கீழே, மாடுமேயப்பவனான மூலன் என்பவன் இறந்ததால் அவனைச் சுற்றி நின்று கண்ணீர்  வடிக்கும் பசுக்களைக் கண்டு இரங்கி, அவனது உடலுள் புகுந்து பசுக்களின் துயரம் தீர்த்தார்.அதனால் திருமூலர் என்ற பெயரும் பெற்றார். இது நடந்தது சாத்தனூர் என்ற ஊரில். மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சிறிய கிராமம். பழங்காலத்தில் மிகப் பெரிய கிராமமாகத் திகழ்ந்து வந்தது என்பதை இதன் எல்லைக்குட்பட்டதாகக் கொண்டு  திருவாவடுதுறையைப் பாடியிருப்பதை  திருவிசைப்பாவின் மூலம் அறிகிறோம். சாத்தனூர் என்பதைச் சுருக்கமாகச் சாந்தை என்று சேந்தனார் குறிப்பிட்டிருக்கிறார். எனவே,  திருவாவடுதுறை தற்போது 3 கி. மீ. தொலைவில் இருந்தாலும், சாத்தனூரைச் சேர்ந்ததாக  இருந்தது என்று அறிகிறோம். இங்கு தனிக் கோயில் கொண்டுள்ள  சாஸ்தா, பல குடும்பங்களுக்குக்  குல தெய்வமாக விளங்குகிறார். சாத்தன் என்பது சாஸ்தாவைக்  குறிக்கும்.அதுவே சாத்தனூர் என்று ஆயிற்று. இந்த எல்லையில் ஐந்து சிவாலயங்களும், ஒரு விஷ்ணு ஆலயமும், உண்டு. எனவே இதனைப் பஞ்ச லிங்க க்ஷேத்ரம் என்பார்கள்.

திருவாவடுதுறையிலுள்ள கோமுக்தீச்வர ஸ்வாமி ஆலயம் மூவர் தேவாரமும் திருவிசைப்பாவும் பெற்றது. நவகோடி சித்தபுரம்  எனப்படுவது. இங்குள்ள அரச மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை அருளினார் திருமூலர். தனது தந்தை செய்யும் சிவ யாகத்திற்காகப் பொருள் வேண்டி, ஞானசம்பந்தரும் இறைவனிடம் பதிகம் பாடி ,ஆயிரம் பொன் பெற்றார். இந்த ஆலயம், திருவாவடுதுறை ஆதீனத்தால் திருப்பணிகள் அவ்வப்போது செய்யப்பெற்று, மிக நேர்த்தியாகப் பரிபாலிக்கப்படுகிறது.

சாத்தனூரில் உள்ள நான்கு சிவாலயங்களுள் முதலாவது, சித்தீச்வர ஸ்வாமி ஆலயமாகும். இங்கு திருமூலர் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அவரது திருவுருவமும் கோயிலில் இருக்கிறது. ஸ்வாமி நீண்ட பாணத்துடன்காட்சி அளிக்கிறார். அம்பிகை, ஆனந்த கௌரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இக்கோயிலில் உள்ள விமான சுதை வேலைப்பாடு சிறப்பானது.

இதே ஊரின் மறு புறம், காசி விச்வநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இக்கோயிலைச் சென்ற ஆண்டு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். விசாலாக்ஷி சன்னதி தென்முகம் நோக்கியது.

ஊரின் கோடியில் மிகப்பெரிதாக இருந்த ஐராவதீச்வரர் கோயில் ,பாழடைந்து, சுற்றிலும் மரங்களும் புதர்களுமாகக் காட்சி அளித்தது. சுற்றிலும் வயல்கள். சுவாமியின் மிகப்பெரிய பாணம் ஒன்றே எஞ்சிய நிலையில், அதனை ஒரு கொட்டகைக்குள் வைத்திருக்கிறார்கள். அருகிலிருந்த புதர்களை அகற்றி, ஸ்வாமி சன்னதி எழுப்பப் படுகிறது. இம்முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியதொன்றாகும். அன்பர்கள் ஆதரவு இதற்கு மிகவும் தேவைப் படுகிறது.

ஊருக்குள் இருக்கும் மற்றொரு சிவாலயம், கைலாசநாதர் கோயில் எனப்படுகிறது. இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டபிறகே, பிற சிவாலயங்களின் திருப்பணிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் துவக்கப்பட்டன. இக்கோயிலுக்கும் , சித்தீச்வரர், விச்வநாதர் கோயில்களுக்கும் செய்யப்பட திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்களில் நமது சபை முக்கிய பங்கு ஆற்றும் பாக்கியம் பெற்றது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால்  பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.

இந்த வருஷம், ஆடி மாதம் முடிந்தும், காவிரி நீர், மேட்டூர்  அணையிலிருந்து திறக்கப் படவில்லை. நெல் விதைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் சாத்தனூர் வாசிகள் சிலர் மிகவும் கவலையுடன் , தென்னை மரங்களும் கடும் கோடையால் வாடுவதைத் தெரிவித்து, ஆலங்கட்டி விநாயகருக்கு அபிஷேகம் செய்ய அழைப்பு விடுத்தார்கள். இதற்கு நம்மாலான ஒத்துழைப்பை அளிப்பதற்காக , மற்றுமோர் அன்பருடன்  சாத்தனூர் சென்றோம். வாய்க்கால் ,குளங்கள், கிணறுகள் எல்லாம் வறண்டு கிடந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியையே காணோம். வெயிலோ அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. மறு நாள் காலையில் அபிஷேகம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஆகிவிட்டது. மனத்தில் மாத்திரம் கவலை-- மழை  வர வேண்டுமே என்று. அதே நேரத்தில் , விநாயகர் அருள் இருந்தால் மேகங்கள் எப்படியும் வந்து விடும் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது.

காலையில் வழக்கம் போல சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 9 மணி அளவில் ஒருவர் வந்து, கைலாசநாதர்  கோவில் அருகில் ஒரு பெரியவர் மரணமடைந்து விட்டதாகக் கூறினார்.விசாரித்ததில் அந்த இடம் கோயிலுக்கு மிகவும் தள்ளி இருந்தது. இன்னும் ஒருவர், பம்ப் செட் மூலம் ஒரு சில வயல்களில் அன்று காலை விதை விதைத்திருப்பதாகவும், மழை பெய்தால் அவ்வளவும் வீணாகி விடும் என்றும் சொன்னார். நாம் ஆசைப்பட்டபடி சன்னதியை அடைத்து, அபிஷேகம் செய்ய முடியாமல் இவ்வளவு தடைகள் ஏற்பட்டன. இருந்தாலும் பிள்ளையாருக்கு வழக்கமான அபிஷேகத்தையாவது செய்து, மழைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு ஊருக்குத் திரும்புவது என்று முடிவு எடுத்தோம். கணபதி உபநிஷத், ருத்ரம் , திருமுறைப் பாராயணம் ஆகியவற்றோடு விநாயகருக்கு அபிஷேகங்கள் நடை பெற்றன. ஒரு சில மணி நேரத்துக்குப் பின் கரிய மேகங்கள் எங்கிருந்தோ வந்து சாத்தனூரைச் சூழ்ந்து கொண்டன. எங்களுக்கோ மாலையில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மழையில் மாட்டிக கொள்வோமோ என்ற அச்சமும் இருந்தது.  ரயிலடி போய்ச சேரும் வரையில் மழை பெய்யாமல் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். தூறல் மட்டும் பலமாக இருந்தது.

மறுநாள் காலை ஊருக்கு வந்துவிட்டு, மதியம் சாத்தனூருக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, அங்கு அடை மழை பெய்து வருவதாகவும்,  ஊரார் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும்  தெரிவித்தார்கள். இதை விட சந்தோஷம் தரும் செய்தி இருக்க முடியுமா? ஆலங்கட்டி விநாயக மூர்த்தியின் அழகிய திருவுருவம் கண் முன்னே நின்றது.

Thursday, August 2, 2012

"வானங்காள் பெய்க மழை"


காவிரி பொய்த்துவிட்டது. ஆடிப் பெருக்கன்று காவிரியில் நீர் இல்லை என்ற நிலை இதற்கு முன் ஏற்பட்டதாக நினைவில்லை. சிலர் சொல்லலாம் , அணை திறக்காததால் தானே நீர் வரவில்லை என்று. பெய்ய வேண்டிய மழை பெய்திருந்தால் அணையை மூடி வைக்கவா முடியும்? வேண்டுமானால் காவிரி பொய்த்துவிட்டது என்று சொல்வதற்கு பதிலாக, வானம் பொய்த்து விட்டது என்று சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால் மனிதர்கள் பொய்த்து விட்டதால் தான் இந்த நிலை வந்திருக்கிறது எனலாம். வேதமும் வேள்வியும் மிகுந்திருந்த காலத்தில் வான் முகில் வழாது பெய்து மலி வளம் சுரந்தது. செங்கோல் வழியில் அரசனும் ஆட்சி செலுத்தினான். உயிர்கள் யாவும் குறைவில்லாமல் வாழ்ந்தன. மெய்மொழி யாகக் கருதப்பட்ட  நான்மறைகளை  ஓதியவர்கள் "பொய்யாத வேதியர்" என்று சிறப்பிக்கப்பட்டனர். மந்திர மறைகளால் வான் மழை பொழிந்தது.

மழை பொய்த்த காலங்களில் இறைவனிடம் ஊருக்காக, நாட்டிற்காக மனமுருகி வேண்டியதால்  மழை பெய்த வரலாறுகள் உண்டு.  திருப்புன்கூர் என்ற தலத்தில் வயலில் நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்ட போது , மழை வேண்டிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் , ஆறு வேலி நிலம் கோயிலுக்குத் தருவதாகப்ப்ரார்த்தித்தார். கன மழை பெய்தது. வாக்குத் தவறாத நாயனாரும் ஆறு வேலி நிலத்தை சிவலோகநாதருக்கு அர்ப்பணித்தார். மழை விடாது பெய்து வெள்ளம் வந்ததால் , அதனை நிறுத்தினால் மேலும் ஆறு வேலி நிலம் தருவதாக இறைவனிடம் வேண்டினார். வெள்ளம் நின்றவுடன்  சிவார்ப்பணமாக மேலும் ஆறு வேலி நிலத்தை வழங்கினார் என்று திருமுறைகளால் அறிகிறோம். இப்பொழுது ஊருக்காக இறைவனிடம் வேண்டுவோர் இல்லையா? ஆறும் ஆறும் பன்னிரண்டு ரூபாய் தருவதாகக்கூட யாரும் முன்வருவதாகத் தெரியவில்லையே!! தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மட்டும் உண்டியல்களை நிரப்புகிரார்களே தவிர உலக நலன் என்று சொல்வதெல்லாம் வாய் அளவோடு  சரி.

சங்கீத பிரபலங்களும் பெயருக்கும் புகழுக்கும் பணத்துக்குமே நாட்டம் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. சங்கீத மும்மணிகளுள் ஒருவரான  ஸ்ரீ  முத்து ஸ்வாமி தீக்ஷிதர், அம்ருத வர்ஷனி என்ற ராகத்தில் அம்பிகையின் மீது பாடி மழை வரவழைத்தார். விளம்பரம் இல்லாமல் ஆத்மார்த்தமாக அந்தக் கிருதியை உலக நமைக்காகப் பாட முன்வருவோர் எத்தனை பேர்?
திருநெல்வேலி சீமையில் ஸ்தல யாத்திரை செய்து வந்த சைவ மடாதிபதி ஒருவர் , அங்கு மழை இல்லாமல் மக்கள் துயரம் அடைவதைக்  கண்டு, "வானங்காள்  பெய்க மழை " என்ற ஈற்றோடு ஒரு பாடல் பாடியதும் பெரு மழை பொழிந்தது. காஞ்சி காமகோடி பெரியவர்களும் நமக்காகப் பிரார்த்தித்து  மழை வரவழைத்த வரலாறுகளும் உண்டு. குன்றக்குடி முருகனைத் தரிசிக்கச் சென்ற சிருங்கேரி ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒரு சுலோகம் சொல்லி மழை பெய்வித்தார்கள்.

முன்பெல்லாம் சன்யாசிகள் சாதுர் மாஸ விரதத்தை சிறிய ஊர்களிலும் ,கிராமங்களிலும் அனுஷ்டித்து வந்தார்கள். இப்பொழுது பெரும்பாலும் அது நகரங்களிலேயே நடை பெறக்  காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள்  இருக்கலாம். பல அஸௌகர்யங்களும் இருக்கலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் , குறைந்த பக்ஷம் சிறு ஊர்களிலாவது நடத்தி உலக நன்மைக்காகப் பூஜை செய்தால் ஊர் மக்களும் நல்வழிப் பட  ஏதுவாகும் அல்லவா?

ஸ்திரீ தர்மம் நிலைத்திருக்கும் வரை நமது மதத்திற்கு ஆபத்து கிடையாது என்று கூடச்  சொல்லலாம். அதைப் பதிவ்ரதா தர்மம் என்றும் சொல்வர். அதற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொலைக்காட்சி வீடு தேடி வந்து புத்தியைக் கெடுக்கிறது. பெண்கள்  பழி வாங்குபவர்களாகவும், கொலை செய்யவும் அஞ்சாதவர்களாகவும் தொடர்களில் சித்தரிக்கப்படுவதைப் பெண்களும் வயோதிகர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கோயில்களில்  பெண்கள் கூட்டம் இருந்தாலும் இந்த மாயை அவர்களைப் பெரிதும் பாதித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. கோயிலில் இருக்கும் போதுகூட, சீரியல் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்ற நினைப்பு வந்து விட்டால் அப்புறம் வழிபாடாவது ஒன்றாவது!! நேராக வீட்டுக்கு ஓடி வரும் நிலை வந்து விடும். இப்படிப்பட்டவர்கள் "பெய்" என்றால் மழை எப்படிப் பெய்யும். இப்படிச் சொல்வதை , யாரையும் புண் படுத்துவதாகக்   கொள்ளக் கூடாது. நமது கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு முன்னால் சீரழிவதைப் பார்த்து வேதனையோடு எழுத வேண்டியிருக்கிறது.

 விவசாய நிலங்கள்  ஏராளமாகக் கோயில்களுக்கு வழங்கப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து சல்லிக்காசு கூட வருமானம் வராத கோயில்கள் ஏராளம். அற நிலையத்துறை என்ன  செய்து கொண்டிருக்கிறதோ  தெரியவில்லை. சென்ற ஆண்டைப் போல பல ஆண்டுகள்  நல்ல மகசூல் கிடைத்தும் கோயிலுக்கு உரியதைக்  கொடுக்காதவர்கள் ஏராளம். ஓட்டைக் குறி வைப்பவர்களுக்கு இது பற்றிக் கவலை இல்லை. நெல்லை மட்டுமாவது வாங்கிக் கொண்டு அரசாங்கம் தரும் அற்ப சம்பளத்தைப் பற்றி மூச்சு கூட விடாமல் கடமை ஆற்றி வந்த கிராமக் கோயில் அர்ச்சகர்கள் இன்னும் எத்தனை  நாட்கள் அந்த நெல்லும் தரப் படாமல் காலம் தள்ள முடியும்? எப்படி ஐயா நம் ஊரில் மாதம் மும்மாரி பெய்யும்? சிவாலய பூஜைகளுக்குத் தட்டுப்பாடு வந்தால் மழை பெய்யாது என்று திருமூலரும் எச்சரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதில்லை. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நினைப்பில் மிதப்பவர்கள் இவர்கள். அந்தப் பணமும் சிவன் தந்தது என்று அவர்களும் உணரும் காலம் விரைவிலேயே வந்து விடும். பேராசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து இறைவனே அவர்களைத் திருத்தி விடுவான்.
உண்மையான அடியார்கள் என்ன  செய்வார்களாம் தெரியுமா? வானம் பொய்த்தால் என்ன, மண்ணுலகம் ஸ்தம்பித்துவிட்டால் தான் என்ன, எல்லா அரசர்களுமாக ஒன்று சேர்ந்து நம்மைத் தாக்க முற்பட்டால் என்ன, சிவனருள்  இருக்கையில் நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? இப்படிச் சொல்கிறார்  அப்பர் பெருமான் . இதோ அப்பாடல்:

"தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பில் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
செப்பமாம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர்  அஞ்சுவது என்னுக்கே. "

இவ்வாறு அப்பர் சுவாமிகளைப் போன்ற மகான்கள் மட்டுமே சொல்ல முடியும். நமக்கு இன்னும் அப்பக்குவம் வரவில்லையே!என்ன செய்வது?