Tuesday, July 17, 2012

எல்லோரும் இன்புற வேண்டுவோம்


சுமார்  25 ஆண்டுகளுக்கு முன்  சிதம்பரத்தில் நடந்த சம்பவம். மார்கழி திருவாதிரை அபிஷேகம் ஆயிரம் கால் மண்டப முகப்பில் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அமர்ந்த வண்ணம், ஆனந்த நடராஜ மூர்த்தியைக் கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தனர். முன் வரிசையில் இருந்தோர் சற்று உயரமாக இருந்ததால், பின்னால் இருந்த பெண்மணிக்கு அவர்களது தலைகளையே பார்க்க முடிந்தது. இதனால் கோபப்பட்ட அவர், "நடராஜா, இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்க விடாமல் மறைக்கிறார்களே! இவர்களை அழித்துவிடு" என்று வாய் விட்டுக் கூறினார். இதைக் கேட்ட பலருக்கு சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள் ஏராளம். உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மிகச் சிலரே. அத்தனை பரந்த மனப்பாமை வராவிட்டாலும்  நம்முடைய  குடும்பத்தைச்  சேராத ஒருசிலருக்காவது வேண்டிக்கொள்ளலாமே! பிறருக்காக வேண்டும் பொழுது பலன் கைமேல் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

நமது சபையின்  தொண்டுகளில் பங்கேற்கும்  அன்பர்களில் ஒருவர்  அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரது மகன் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும் அதற்கு இறைவனிடம் வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நோயின் கடுமை பற்றி அறிந்தவுடன் அவரை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் பெறலாம் என்று தெரிவிக்கத்திருவருள் கூட்டியது. அவர் நெடுந்தொலைவில் இருப்பதால் நேரில் வர முடியாத சூழ் நிலை.எனவே , அவரது சார்பில் அத்தலத்திற்கு, வரும் 26- ம்  தேதிநேரில்  சென்று அர்ச்சனைகள் செய்துவரத் தீர்மானமாகியது. இதனைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் அன்றையதினம் , தீரா நோய் தீர்த்து அருளவல்ல ஸ்ரீ வைத்யநாதப் பெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்றைய தினம் களையாத உடலோடு கயிலை சென்ற ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூஜை ஆதலால், அதனை, அவரால் பாடப்பெற்ற மண்ணிப்படிக்கரை என்ற தலத்தில் காலை சுமார் 10 மணி அளவில் அபிஷேக ஆராதனைகளுடனும் , வேத- திருமுறைப்பாராயணங்களுடனும் நிகழ்த்த இருப்பதும் திருவருள் உணர்த்தியதால் தான். வைதீஸ்வரன் கோயிலில் இருந்தும் மயிலாடுதுறை , கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும் வருபவர்கள், மணல்மேடு என்ற ஊரில் இறங்கி, சுமார் 1.5 கி.மீ. நடந்து வந்தால், இலுப்பப்பட்டு என்று தற்போது வழங்கப்பெறும் மண்ணிப் படிக்கரையை அடையலாம்.

குருபூஜைகளை அபிஷேக ஆராதனைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் , குருநாதர்களது உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது அன்று கடைப் பிடித்தல் சிறப்பாகும் எனக்கருதி, சுந்தரர்,  சிவபெருமானுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் எல்லார்க்கும் அடியவன் என்று தன்னைப் பாடியதால், நமது சபை கடந்த சில ஆண்டுகளாகக் கோயில்களில் பணி புரியும் சிவாசார்யப் பெருமக்களுக்கு இயன்றவரை உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆடி சுவாதி அன்று (26.7.2012) சிவாலயங்களில் இருக்கும் மடைப்பள்ளிகளில் பல்லாண்டுகளாகப் பணி புரியும் ஐந்து பேருக்கு  மயிலாடுதுறையிலுள்ளஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி கோயிலில் மாலை சுமார் 6.30 மணி அளவில் நடைபெறும் சுந்தரர் குருபூஜைக்குப் பின்னர் , வஸ்திரமும்,சம்பாவனையாகத் தலா ரூ 1000-மும் சபையின் சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வளவு சிவ புண்ணியத்தையும் மேற்படி அன்பர்  நமது சபை மூலம் ஏற்றுப் போற்றுகின்றார். அவரது மகன் விரைவில் நலம் பெறத் திருவருளையும் குருவருளையும் மனமார  வேண்டுவோமாக.  

No comments:

Post a Comment