Sunday, July 29, 2012

ஆகமமும் தமிழும்


                               
                                " அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
                                   பெம்மானே  பேரருளாளன் பிடவூரன்
                                   தம்மானே  தண்டமிழ்  நூற் புலவாணர்க்கு ஓர்  
                                  அம்மானே பரவையுண்  மண்டளி  அம்மானே."

என்பது, திருவாரூரில் உள்ள பரவையுண் மண்டளி என்ற தலத்து இறைவன் மீது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகத்தில் ஒரு பாடல். இப்பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சிவாகமத்தால் தன்னை ஆராதிப்பவர்களுக்கும் ,தெய்வத் தீந்தமிழ்ப்  பாடல்களால் தன்னைத் துதிப்பவர்களுக்கும் அருள் புரியும் பெருமான் இவன் என்பார்  சுந்தரர். காலத்தின் கோளாறினால் , ஆகமம் என்று திருமுறைகள் குறிப்பது தமிழில் இருந்து மறைந்து போனவையே என்றும், இப்போது வடமொழியில் இருப்பவை  தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப் பெற்றவை என்றும் ஒரு சாரார்  பிரசாரம் செய்து வருவது விந்தையாக உள்ளது. ஆகமம், தமிழிலேயே இருந்திருந்தால், மேற்கண்ட பாடலில் தனித்தனியாக ஆகமம், தமிழ்நூல் என்று பாடியிருக்க நியாயமே இல்லை. வட மொழியின் மீதுள்ள தேவையற்ற  துவேஷமே இவ்வாறு அவர்களைப் பேச வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. வேத நெறி என்று குறிக்கப் பெறுவது தமிழ் வேதமே என்று அடிப்படை அற்ற வாதம் செய்கிறார்கள். ஒரு சில மடங்களின்  ஆதரவைப் பெற்றுக்கொண்டு, திருமுறை வேள்வி, சிலை நிறுவுதல், குட நன்னீராட்டு (யாகம், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் என்றெல்லாம் சொல்லக்கூடாதாம்!) என்றெல்லாம் சில ஊர்களில் செய்து வருகிறார்கள். இதற்கு உடன்படாத சைவ ஆதீனங்கள் இந்நிகழ்ச்சிகள் ஆதரிப்பதில்லை. இருப்பினும் , இந்த துஷ்ப்ரசாரம் தொடர்கிறது.

ஆகமங்கள் கிரியைகளைச் செய்யும் மந்திரங்கள். அவற்றிற்குக் கற்சிலைகளில் இறைவனை  எழுந்தருளுவிக்கும் ஆற்றல்  உண்டு. இதற்குப் பதிலாகத் தமிழில் அக்கிரியைகளைச் செய்தால் அந்த ஆற்றலைப் பெற இயலுமா. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவனுக்கே செய்யும் குற்றம் அல்லவா  இது? ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு என்ன தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்? நம: என்பதைப் போற்றி என்பதும்  பொருத்தமற்ற மொழிபெயர்ப்பே ஆகும். திருமுறைகள் அனைத்தும் தோத்திரங்கள். தோத்திரங்கள் வேறு , கிரியைகள் வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.தோத்திரங்கள், கிரியைகளுக்குப் பதிலாக அருளப் பட்டவை அல்ல. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று எது உயர்ந்தது அல்லது எது தாழ்ந்தது என்று ஆராய்வது தாழ்வு மனப்பான்மையால் ஏற்படுவதே ஆகும். பரமேச்வரனே ஆகமங்களைத் தோற்றுவித்து  அருளினான் என்பதை ,"சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற திருவாசக வரிகளைப் பன்முறை ஓதியும் குருநாதரின் பெயரால் சிவப்பணிகள் செய்பவர்களும் அவரது வாக்கிற்கு மாறாக நடந்துகொள்வது துரதிருஷ்டமே.

நகரத்தார்கள் பல ஆகம நூல்களையும், தல புராணங்களையும்  வெளியிட்டு சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்துள்ளார்கள். பல தலங்களில் வேத,சிவாகம, தேவார பாட சாலைகளை நிறுவியுள்ளார்கள். அதே போன்று, சைவ ஆதீனங்களும் பாட சாலைகளை அமைத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார்கள். அண்மையில் மயிலாடுதுறையில் , சிவாகம பாடசாலை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் அவர்கள் எழுந்தருளி ஆசி வழங்கினார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் பாடசாலை அமைக்க இடம் வழங்கிய இக் குருமூர்த்திகளின் வருகை , பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அன்று ஆடி சுவாதி ஆதலால் நமது சபை , சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அபிஷேக ஆராதனைகளை, அவரால் பாடல் பெற்ற மண்ணிப்படிக்கரை (இலுப்பப்பட்டு)என்ற தலத்தில் செய்துவிட்டு, மாலையில்,மாயூரம்  பெரிய கோவிலில் நடந்த மேற்கண்ட விழாவில் கலந்து கொண்டு . வறுமைக்கோட்டில் வாடும் மடைப்பள்ளி ஊழியர்கள் ஐவருக்கு உதவியாகத் தலா ஆயிரமும், ஆடைகளும்  வழங்க முன்வந்தபோது, ஸ்ரீ சந்நிதானம் அவர்கள், மடத்தின் சார்பில் இருவருக்கு உதவுவதாகக்கூறவே, அவர்களது திருக்கரத்தாலேயே இவ்வுதவிகள் வழங்கப் பெறும் பேறு பெற்றோம்.

இது போன்ற சர்ச்சைகளுக்குச் சில ஆண்டுகளாகச்  சைவம் உட்படுத்தப்படுவது வேதனைக்குரியது. இதனால் சமய வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆலயவழிபாடு,மற்றும் விழாக்கள் எல்லாம் பல்வேறு பிரிவுபட்ட மக்களை ஒன்று சேர்ப்பதாக அமைந்துள்ளதை  இவ்வாறு துவேஷம் பாராட்டுவதால் அவ்வொற்றுமை பிளவு படும் என்பதில் ஐயமில்லை. இது தேவைதானா என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும். சிவனுக்குத் தொண்டாற்றிய நாயன்மார்கள் சரித்திரத்தைப் பயின்றவர்களுக்கு அடியார்க்கு அடியனாகும் சிந்தையே மேலோங்கியிருக்க வேண்டுமே தவிர , காழ்ப்புணர்ச்சி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது.

எனவே , தவறான பாதையைக் காட்டுபவர்களைப் புறக்கணித்துவிட்டு, "எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசன் தொண்டே பற்றுக்கோடாகக் கொண்டு தொண்டு செய்ய வேண்டும். வேதம், ஆகமம் பயின்றவர்கள், ஆதரிப்போர் இன்றி கிராமக் கோவில்களில் இருந்து வெளியேறும் நிலையில் , இவ்விதம் வெறுப்பை உமிழ்ந்தால் அவர்கள் எங்கே  போவார்கள் என்று சிந்திக்க வேண்டும். குறைகள் எங்கும்  இருக்கக்கூடும். குறை இல்லாதவன் இறைவன் ஒருவனே. ஒரு சில நிறைகளையாவது எடுத்துக்கொண்டு பிழை பொறுத்தல் பெரியோர் கடனாகும். சிறிது சிறிதாக அப்பிழைகள் களைய வழி வகைகள் செய்ய வேண்டுமே தவிர , மரபையே மாற்ற முற்படுவது, மரக் கிளையின்  மீது அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவதற்கு ஒப்பாகும்.

Tuesday, July 17, 2012

எல்லோரும் இன்புற வேண்டுவோம்


சுமார்  25 ஆண்டுகளுக்கு முன்  சிதம்பரத்தில் நடந்த சம்பவம். மார்கழி திருவாதிரை அபிஷேகம் ஆயிரம் கால் மண்டப முகப்பில் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அமர்ந்த வண்ணம், ஆனந்த நடராஜ மூர்த்தியைக் கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தனர். முன் வரிசையில் இருந்தோர் சற்று உயரமாக இருந்ததால், பின்னால் இருந்த பெண்மணிக்கு அவர்களது தலைகளையே பார்க்க முடிந்தது. இதனால் கோபப்பட்ட அவர், "நடராஜா, இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்க விடாமல் மறைக்கிறார்களே! இவர்களை அழித்துவிடு" என்று வாய் விட்டுக் கூறினார். இதைக் கேட்ட பலருக்கு சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள் ஏராளம். உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மிகச் சிலரே. அத்தனை பரந்த மனப்பாமை வராவிட்டாலும்  நம்முடைய  குடும்பத்தைச்  சேராத ஒருசிலருக்காவது வேண்டிக்கொள்ளலாமே! பிறருக்காக வேண்டும் பொழுது பலன் கைமேல் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

நமது சபையின்  தொண்டுகளில் பங்கேற்கும்  அன்பர்களில் ஒருவர்  அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரது மகன் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும் அதற்கு இறைவனிடம் வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நோயின் கடுமை பற்றி அறிந்தவுடன் அவரை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் பெறலாம் என்று தெரிவிக்கத்திருவருள் கூட்டியது. அவர் நெடுந்தொலைவில் இருப்பதால் நேரில் வர முடியாத சூழ் நிலை.எனவே , அவரது சார்பில் அத்தலத்திற்கு, வரும் 26- ம்  தேதிநேரில்  சென்று அர்ச்சனைகள் செய்துவரத் தீர்மானமாகியது. இதனைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் அன்றையதினம் , தீரா நோய் தீர்த்து அருளவல்ல ஸ்ரீ வைத்யநாதப் பெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்றைய தினம் களையாத உடலோடு கயிலை சென்ற ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூஜை ஆதலால், அதனை, அவரால் பாடப்பெற்ற மண்ணிப்படிக்கரை என்ற தலத்தில் காலை சுமார் 10 மணி அளவில் அபிஷேக ஆராதனைகளுடனும் , வேத- திருமுறைப்பாராயணங்களுடனும் நிகழ்த்த இருப்பதும் திருவருள் உணர்த்தியதால் தான். வைதீஸ்வரன் கோயிலில் இருந்தும் மயிலாடுதுறை , கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும் வருபவர்கள், மணல்மேடு என்ற ஊரில் இறங்கி, சுமார் 1.5 கி.மீ. நடந்து வந்தால், இலுப்பப்பட்டு என்று தற்போது வழங்கப்பெறும் மண்ணிப் படிக்கரையை அடையலாம்.

குருபூஜைகளை அபிஷேக ஆராதனைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் , குருநாதர்களது உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது அன்று கடைப் பிடித்தல் சிறப்பாகும் எனக்கருதி, சுந்தரர்,  சிவபெருமானுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் எல்லார்க்கும் அடியவன் என்று தன்னைப் பாடியதால், நமது சபை கடந்த சில ஆண்டுகளாகக் கோயில்களில் பணி புரியும் சிவாசார்யப் பெருமக்களுக்கு இயன்றவரை உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆடி சுவாதி அன்று (26.7.2012) சிவாலயங்களில் இருக்கும் மடைப்பள்ளிகளில் பல்லாண்டுகளாகப் பணி புரியும் ஐந்து பேருக்கு  மயிலாடுதுறையிலுள்ளஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி கோயிலில் மாலை சுமார் 6.30 மணி அளவில் நடைபெறும் சுந்தரர் குருபூஜைக்குப் பின்னர் , வஸ்திரமும்,சம்பாவனையாகத் தலா ரூ 1000-மும் சபையின் சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வளவு சிவ புண்ணியத்தையும் மேற்படி அன்பர்  நமது சபை மூலம் ஏற்றுப் போற்றுகின்றார். அவரது மகன் விரைவில் நலம் பெறத் திருவருளையும் குருவருளையும் மனமார  வேண்டுவோமாக.  

Thursday, July 12, 2012

இரு வைபவங்கள்


"அவன் அன்றி ஓர் அணுவும்  அசையாது " என்பது சத்தியமான வார்த்தை. இதை அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வையும் அவனே வழங்கி அருள வேண்டும். "உன்னை உன்னும் உணர்வை நல்காய்" என்று திருவொற்றியூர் பெருமானிடம் வரம் வேண்டுகிறார்  திருநாவுக்கரசர். "உணர்வித்தால் ஆர் ஒருவர் உணராதாரே ? " என்று அவரே வேறு ஓர் பாடலில் பாடுவார். அப்படி உணர்ந்துவிட்டால் இறை தொண்டு ஆற்றும் பேறும் கிடைத்து விடுகிறது. அத்தொண்டர்களுக்குத் தூய நெறியாகத் தானே முன்னின்று வழி காட்டுகிறான் சிவபெருமான்.

 அப்பர் பெருமானால் பாடப்பெற்ற திருத்தலையாலங்காடு ஆலயத் திருப்பணியிலும் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கும் அரிய பேற்றினை நமது சபை பெற்றது. ஆலய மடப்பள்ளி,திருக்குளம்,நந்தவனம் ஆகியவை திருத்தம் பெறவும், சுப்பிரமணியர்,துர்க்கை ஆகிய நூதன விக்ரகங்கள் அமைக்கவும், சபாபதிக்கு ந்ருத்த சபை அமைக்கவும்,சபை அன்பர்கள் உதவி புரிந்தனர். தவிரவும் நண்பர்கள் மூலமாக யாகசாலை வஸ்திரங்களுக்கும், கட்டுமானப் பொருளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 திருவாவடுதுறை ஆதீன கர்த்தரும், கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தும்,அதனை இடிக்க ஆட்களும் தந்தருளியதோடு, தாமே மூன்றாம் கால பூஜைக்கு எழுந்தருளினார்கள். நாம் விண்ணப்பித்ததற்கு செவி சாய்த்து, ஆதீன சார்பில் ஆடல் வல்லானின்  திருவுருவத்தைக் கோயிலுக்கு அமைத்துத் தருவதாகக் கருணை பாலித்தார்கள். ஆண்டுதோறும் செய்யப்படும் ஆறு அபிஷேகங்களையும் ஆதீன உபயமாகச் செய்து தருவதாக அருளியுள்ளார்கள். அவர்களது கருணைத்திறம் அளவிட ற்கு அரியது . கும்பாபிஷேக வைபவம் 8.7.2012 ஞாயிறன்று மிகச் சிறப்பாக நடந்தது.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியாக ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பெற்றது.கும்பாபீஷேகத்திற்குப் பிறகு ஆசார்யஉற்சவமும் , மாலையில் திருக்கல்யாணமும் ,திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இவற்றை ஏற்ற இறைவனும் மழை பொழிந்து ஊரையும் உள்ளத்தையும் குளிர்வித்தான்.

இறை பணிசெய்வதோடு இறைவனுக்குப் பணி செய்பவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவுடன் நமது சபை , கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. கடந்த 9.7.2012 திங்களன்று திருக்கடவூருக்கு அருகில் உள்ள ஆக்கூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வயம்புநாத ஸ்வாமி ஆலயத்தில் , ஹோமம், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை நிகழ்த்தப்பெற்று, ஆக்கூர், செம்பனார்கோயில், மா(மா)குடி, திருப்பறியலூர்,திருவிடைக்கழி ஆகிய தலங்களின் சிவாசார்யர்கள் கௌரவிக்கப்பெற்றனர்.
 ஒவ்வொரு சிவாசார்யதம்பதிக்கும் பாத பூஜை, அர்ச்சனை, ஆகியவை செய்யப்பெற்று,புது வஸ்திரங்களும்,சௌபாக்ய திரவியங்களும் தலா ரூ 2000 மும் அளிக்கப்பெற்றன. திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்  கருணையுடன் வழங்கிய வஸ்திரமும் உதவித்தொகையும் ஒரு சிவாசார்ய தம்பதிக்கு வழங்கப்பெற்றது. ஆதீனத்திலிருந்து கட்டளைத் தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து நிகழ்ச்சியைச்  சிறப்பித்தார்கள்.  அனைவருக்கும் அன்னம் பாலிப்பு செய்விக்கப் பெற்ற பின்னர் விழா  இனிதே நிறைவேறியது. " முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்ற சுந்தரர் வாக்கை நமக்கு உணர்வித்த இறையருளுக்கு என்ன கைம்மாறு செய்ய  முடியும்?