Saturday, March 10, 2012

மடங்கள் நிர்வாகத்தில் ஆலயங்கள்


இந்து அறநிலையத்துறை துவக்கப்பட்டபோது, வருவாய் இல்லாத கிராமக் கோவில்களும் உபரி வருமானத்தைக் கொண்டு பராமரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உண்டியல் வருமானம் அதிகமாக உள்ள கோயில்களே கவனிக்கப்பட்டு, மற்றவை புறக்கணிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. உண்டியல் வருமானம் சொற்பமாக இருந்தாலும் ஆலயத்திற்குச்  சொந்தமான நிலங்களிலிருந்து வருமானம் வந்தாலே போதும், அவற்றை நன்றாக நிர்வகிக்க முடியும். யாரிடமும் கை எந்த வேண்டிய நிலை ஒருபோதும் இருக்காது. ஆலய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல் படாமல் இருந்தாலே போதும், எல்லா ஆலயங்களும் தங்கள் வருமானத்திலேயே திருப்பணியும் கும்பாபிஷேகமும் செய்துகொள்ள முடியும். இதில் முதலாவதாக, சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் முனைந்து செயல் பட வேண்டும்.

கோயில்களின் விவசாய நிலங்களின் வருமானம் பறிபோன நிலையில் பரிதவிக்கும் போது, கோயில்களுக்கு உள்ளேயே ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. சுற்றுச் சுவர் இடிந்து பல ஆண்டுகள் திரும்பக்கட்டப் படாத நிலையில் உள்ள கிராமக்கோவில்களின் உள்ளே வீடுகளைக் கட்டிக்கொண்டு அக்கிரமம் செய்கிறார்கள். கேட்பார் இல்லை! நிர்வாக அதிகாரிகள் பலர் இதுபோன்ற கோயில்களின் பக்கமே  தலை காட்டுவதில்லை. வந்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா என்ன? கோயில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளிலிருந்து சரிவர வாடகை வசூலிக்கப் படுவதில்லை. அப்படி ஒருக்கால் வசூலித்தாலும் அது பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வாடகையாகத் தான் இருக்கும்.
பல ஊர்களில் உற்சவ மூர்த்திகள் களவு போவதைக் காரணம் காட்டி , பாதுகாப்பு போதுமான அளவு உள்ள கோயில்களும் நமக்கு ஏன் வம்பு என்று அம்மூர்த்திகளை அருகிலுள்ள பெரிய ஊர்க் கோயில்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்துப் பூட்டி விடுகின்றன. இதற்காகவா அவற்றை  அரும் பாடுபட்டுச் செய்து வைத்தார்கள்?  பாதுகாப்பு அறைகளையும் காவலர்களையும் அந்த அந்த ஊர்களிலேயே ஏன்  அமைத்துத் தருவதில்லை? பூஜையும் அபிஷேகமும் இல்லாமல் பாசிபிடித்து ,காற்றுப் புகாத அறைகளில் அடைக்கலம் அடைந்த அவற்றைக் காண்போர் மனம் நிச்சயம் உருகும்.

ஒரு காலத்தில் சுத்தமாகவும் பொலிவாகவும் விளங்கிய ஆலயங்களைக் கண்டால் , இன்ன மடத்தால் நிர்வகிக்கப்படும் ஆலயமாக இருக்கலாம் என்று மக்கள்  நினைத்தனர். ஆனால் அவற்றின் இன்றைய நிலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதில் சுவர்கள் இடிந்தும் ,ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் செய்யப்படாமலும், மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் சன்னதியில் ஒழுகியும் , விமானங்களிலும் கோபுரங்களிலும் மரங்கள் முளைத்தும் பேரழிவுக்கு ஆயத்தமாகிவிட்டன  மடத்துக்குச் "சொந்தமான" ஆலயங்கள். அங்கு பணிபுரியும் சிப்பந்திகளின் சம்பளமோ மிகக் குறைவு. அதை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பத்தை நடத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?

மடங்களின் கோயில்களிலும் நிலவருவாய் குறைந்து விட்டது உண்மைதான். அதேசமயம் அதே மடங்களால் நிர்வகிக்கப் படும் சில கோயில்கள் பரிகாரத்தலங்களாக விளங்குவதால் உண்டியல் மூலமும் , பிற கட்டணங்களின் மூலமும் நல்ல வருவாய் ஈட்டுகின்றன.  அதைக் கொண்டு மற்ற தேவஸ்தானக் கோயில்களைச் செப்பனிடவும் குடமுழுக்கு செய்யவும் முடியாதா? யாரோ செய்கிறார்கள் என்பதற்காக இவர்களும் கல்லூரிகள் கட்டி அவற்றை நிர்வகிக்க வேண்டுமா? இப்படிச் செய்வதால் குருபீடத்தின் பிரதான  நோக்கம் கை விடப்படுகிறது. நித்தியபூஜை,ஆலய பராமரிப்பு, தல  யாத்திரை, சிஷ்யர்களுக்கு நன்னெறி காட்டுதல், வடமொழி-தென்மொழி நூல்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்காகவே ஸ்தாபிக்கப்பட்ட அம்மடங்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிப் போக வேண்டுமா? இப்படிச் சொல்வதால் குருபீடங்களைக் குறை கூறுவதாகக் கருதக் கூடாது. அற  நிலையத்துறை செய்யத் தவறியவற்றை மடாலயங்கள் செய்து , முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற ஆவலால் இப்படி எழுத நேர்ந்தது.

மடாலயங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது இது தான். மடத்துத் தம்பிரான் ஸ்வாமிகள்  அல்லது தகுந்த அலுவலர்களைக் கொண்டு ஒவ்வொரு தேவஸ்தானத்தின் நிதி நிலையையும் பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்பு தேவையான அளவு உள்ளதா, ஆலயக் கட்டமைப்பு நன்கு உள்ளதா,திருவிழாக்களும் விசேஷ தினங்களும் நடைபெறுகின்றனவா, குத்தகைக்காரர்களிடம்  பேசி வருவாயைப் பெருக்க முடியுமா, கட்டளைக் காரர்கள் மூலம் , நின்றுபோன விழாக்களைத்  துவங்க முடியுமா, சேவார்த்திகளின் குறைகள் நிவர்த்தி செய்யப் படுகின்றனவா போன்ற வினாக்களுக்குத் தணிக்கை மூலம் விடை கண்டு உடனே ஆவன செய்ய வேண்டும்.அதேசமயம் சில மடத்துக் கோயில்கள் அவ்வப்போது திருப்பணி செய்யப்பட்டும்,விழாக்கள் நடத்தப்பட்டும்,பணியாற்றிவருவதை மறுக்கமுடியாது.

மேலே சொன்னது எல்லாம்  "எல்லாம் சிவன் செயல்" "சும்மா இரு சொல் அற" என்ற வாக்கியங்களை சாதகமாக எடுத்துக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பவர்களைப் பற்றியே.இதனால்  பாதிக்கப்படப்போவது நிலத்தை மட்டுமே நம்பி இருக்கும் கிராமத்து தேவஸ்தானங்களும் ,அவற்றின் சிப்பந்திகளுமே. விரைந்து செயல் பட்டால் மடத்தின் நற்பெயரும் காப்பாற்றப் பட்டுவிடும். இல்லையேல், மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்க நேரிடும்.

3 comments:

  1. நன்றி நண்பரே உங்களது செய்தி அருமை

    ReplyDelete
  2. தாங்கள் எந்த மடத்தை குறை கூறுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும் நானும் அதே மடத்தில் தீக்கை பெற்றவன் தான். உங்கள் நோக்கம் என்ன ? தவறாக நினைக்க வேண்டாம் உங்களுக்கு எப்படி ஆதங்கமோ எனக்கும் அதே ஆதங்கம் தான் .

    ReplyDelete
  3. I wish we had a few more Sivapathasekarans in Tamil Nadu to awaken not only our people, but also our Saiva Mutts. All I can do is pray for that. Well said Ayyaa! May Sivaperumaan bless you with long life and all riches to contiunue with your Siva Thonndu. Siva Siva

    ReplyDelete